புத்தகக் கண்காட்சி குறித்த செய்திகளும், கண்காட்சிக்கு சென்று வந்தவர்களின் அனுபவங்களும் படித்தும், கேட்டும் பெருமூச்சு வருகிறது. நினைத்த மாத்திரத்தில் சட்டென்று சாத்தூரில் இருந்து மறைந்து சென்னையில் புத்தகக்கண்காட்சிக்குள் நடமாடுகிற வித்தையோ, விந்தையோ வசப்படவில்லையே என்றெல்லாம் கூட தோன்றுகிறது. எந்தப் புத்தகமெல்லாம் வாங்கவேண்டும் என்றோ, எவ்வளவு புத்தகங்கள் வாங்க வேண்டுமென்றோ திட்டமிடுதல்கள் எதுவும் கிடையாது. முதலில் அங்கு செல்ல வேண்டும். அவ்வளவுதான். அப்புறம் ஒவ்வொரு புத்தகமாக பார்க்க வேண்டும். பிறகு முன்னுரை படித்தோ, நண்பர்கள் மூலம் கேள்விப்பட்டோ, பிடித்த புத்தகங்களை வாங்க வேண்டும். பதிவுலகின் நண்பர்கள் சிலர், சென்னைக்கு எப்போது வருவீர்களென்றும், சந்திக்க வேண்டும் எனவும் கேட்டிருக்கிறார்கள்.
பாண்டியன் கிராம வங்கி நிர்வாகம் 51 பேரை சஸ்பெண்ட் செய்ததோடு இல்லாமல், புத்தாண்டுச் செய்தியாக ஜனவரி 2ம் தேதி 250க்கும் மேற்பட்டவர்களுக்கு சார்ஜ் ஷீட் வழங்கியிருக்கிறது. ஜனவரி 11ம் தேதி மாலையில் விருதுநகரில் பெரும் பேரணி நடத்தத் திட்டமிட்டுக் கொண்டு இருக்கிறோம். இந்த நிலையில் சென்னைக்குச் செல்ல நாட்களை ஒதுக்குவது சிரமமே. சக தோழர்களின் கடுமையான விமர்சனங்களுக்கும் ஆளாக வேண்டி வரும். இருப்பினும் இந்த வார சனி, ஞாயிறு (ஜனவரி, 9, 10) கிழமைகளில் புத்தகக் கண்காட்சிக்கு சென்று விடுவது முடிவு செய்திருக்கிறேன். ஜனவரி 9ம் தேதி காலையில் வம்சியிலோ, பாரதி புத்தகாலயத்திலேயோ நண்பர்கள் வந்தால் சந்திக்கலாம். எனது தொலைபேசி எண்: 9443866719. பார்ப்போம்.
அழகுவேல் என்னோடு ஊரில் ஒன்பது வரை படித்துவிட்டு, பிறகு சென்னையில் தொழில் செய்ய அவனது அண்ணனோடு சென்றுவிட்டான். எபோதாவது அவனைப் பார்ப்பேன். மூன்று நாட்களுக்கு முன்பு எனது இன்னொரு நண்பனிடம் தொலை பேசி எண்ணைக் கேட்டு வாங்கி, இரவு 10 மணிக்கு மேல் போன் செய்தான். ஆச்சரியமாயிருந்தது. “என்னடா” என்றேன். “மாது, கொன்னுட்டே...” என்றான். புரியவில்லை. அன்று அவன் குடும்பத்தோடு புத்தகக் கண்காட்சிக்கு சென்றதையும் அங்கு, நான் தொகுத்திருந்த வலைப்பதிவர்களின் படைப்புகள் அடங்கிய புத்தகங்களை வாங்கியதையும், அதில் குழந்தைகளைப் பற்றிய சொற்சித்திரத்தைப் படித்ததையும் திரும்பத் திரும்பச் சொன்னான். “நீயாடா, நீயாடா..” என்று இடையிடையே கேட்டுக் கொண்டான் (அவை நானும் சொல்ல வேண்டியவை). போதையிலிருந்தான் என்பது குரலில் தெரிந்தது. அவன் போனை வைத்த பிறகு ஊர் நினைவுகள் எனக்குள் போதைகொண்டு இறங்கின. சந்தோஷமாய்த்தான் இருந்தது.
“நான்கு வயதையொட்டிய குழந்தைகள் வாசித்துப் புழங்குவதற்கான புத்தகங்கள் இவை. எப்போதுமே எந்த ஒரு பொருளையும் பெரியவர்கள் எதற்காக பயன்படுத்துகிறார்களோ, அதற்காக மட்டுமே குழந்தைகள் பயன்படுத்துவதில்லை. நாற்காலிகள் கார்களாகி வீடே ரோடாகிப் போகும். அதே போலப் புத்தகங்கள் வாசிக்க மட்டுந்தான் என்று குழந்தைகள் நினைப்பதில்லை. புத்தகத்தை ஒரு குழம்புச் சட்டியாக்கி மூடியைத் திறந்து கரண்டியை உள்ளே விட்டுக் குழம்பு ஊற்றுவதைப் போல ஒரு குழந்தை நடிப்பதைப் பார்த்தேன். நம் மூளைக்கு ஒரு போதும் எட்டாத கற்பனை இது. இந்தக் குழந்தைகளுக்கு புத்தகம் எழுதும் அருகதை நமக்கு ஒருபோதும் கிடையாது என அந்த நிமிடத்தில் தோன்றியது. அவர்களுக்கு நீதிக்கதைகள் எழுதும் நமக்கெல்லாம் என்ன தண்டனை கொடுத்தாலும் குறைவுதான் என்று நினைத்தேன். ‘தம் தம் தம்பி புத்தகங்கள்’ என்னும் இவ்வரிசை அந்தக் கொடுமையிலிருந்து குழந்தைகளைக் காப்பாற்றுகிறது”
இப்படி பாரதி புத்தகாலயம் வெளியிட்டிருக்கும் குழந்தைகளுக்கான புத்தகங்கள் குறித்த ஒரு அறிமுகத்தை நேர்மையாகச் செய்திருக்கிறார் எழுத்தாளர் தமிழ்ச்செல்வன். புத்தகக் கண்காட்சியில் பாரதி புத்தகாலயத்தின் கடை எண்:140
பவா செல்லத்துரை உற்சாகமாய் நேற்று பேசினார். புத்தகக் கண்காட்சியில், வம்சி ஸ்டாலில், நான் தொகுத்த வலைப்பதிவர்களின் படைப்புகள் அடங்கிய நான்கு புத்தகங்களும், அய்யனார் (தனிமையின் இசை) அவர்களின் புத்தகங்களும் அதிகமாக வாங்கப்பட்டிருப்பதாய் தெரிவித்தார். சென்னையில் வைத்து புத்தகங்களை வெளியிடும் ஏற்பாடு உடனடியாகச் செய்ய வேண்டுமெனவும் தொடர்ந்து வலியுறுத்திக் கொண்டு இருக்கிறார். யோசனை மட்டும் சொன்னால் போதுமானது, மற்ற ஏற்பாடுகள் அனைத்தையும் வம்சி பார்த்துக் கொள்ளும் என்கிறார். உங்களுக்கு எதாவது தோன்றினால் சொல்லுங்களேன்.
மாதவராஜ்,
பதிலளிநீக்குஇந்த வார சனியன்று மீண்டும் புத்தக கண்காட்சி செல்ல திட்டமிட்டுள்ளேன்.
உங்கள் வருகை மிக்க மகிழ்ச்சி தருவதாய் உள்ளது.
நான் பார்க்க விரும்பும் எழுத்தாளர்களில் ஒருவர் நீங்கள்.
//யோசனை மட்டும் சொன்னால் போதுமானது, மற்ற ஏற்பாடுகள் அனைத்தையும் வம்சி பார்த்துக் கொள்ளும் என்கிறார். உங்களுக்கு எதாவது தோன்றினால் சொல்லுங்களேன்.//
பதிலளிநீக்குதேவநேய பாவாணர் உள் அரங்கில் வெளியீடு நடத்த குறைந்த கட்டணம்தான் என்றெண்ணுகிறேன்.
விருதுநகரில் நடைபெறவிருக்கும் பேரணி வெற்றிபெற என் எண்ணங்கள்.
பதிலளிநீக்குதங்களின் புத்தகங்கள் நல்ல வரவேற்பைப் பெற்றுவருவது பற்றி மகிழ்ச்சி!
புத்தகக் கண்காட்சி 10ஆம் தேதி நிறைவடைவதால் 9 அல்லது 10ஆம் தேதியில் புத்தக வெளியீட்டுவிழா நடத்துவது சாத்தியப்படுமா எனத் தெரியவில்லை. இரண்டு நாள்களும் நிச்சயம் கூட்டமும் விற்பனையும் அதிகமாக இருக்கும். இதனால் புத்தக வெளியீட்டுவிழாவில் கவனத்தைச் செலுத்த இயலாது என நினைக்கிறேன். (முன்பெல்லாம் கண்காட்சி அரங்கிலேயே புத்தக வெளியீட்டு விழாக்கள் நடைபெற்றதாகவும் குறிப்பிட்ட அளவில் தான் பார்வையாளர்கள் இருந்ததாகவும் ஞாபகம். இப்போதும் அப்படி யாரேனும் செய்கிறார்களா/அனுமதி உண்டா எனத் தெரியவில்லை.)
வாய்ப்பிருப்பின் நீங்கள் சென்னையில் இருக்கும் 9,10 தேதியிலோ அல்லது அடுத்து வரும் விடுமுறை நாள்களிலோ புத்தக வெளியீட்டுவிழாவை நடத்தலாம் என நினைக்கிறேன்.
நானும் இந்த வாரம் சென்னை வருகிறேன்.புத்தக கண்காட்சியில் உங்களை சந்திக்கிறேன்.
பதிலளிநீக்குமுதலில் பேரணியும், தொடர் போராட்டங்களும் தமது நோக்கங்களை வென்றெடுக்க வாழ்த்துக்கள் தோழர்...
பதிலளிநீக்குஇங்கு நியாயங்கள் முக்கியமல்ல...
தனி மனித அதிகார துவேஷமே இத்தனை போராட்டங்களுக்கு காரணம் என்பதையும், அதிகார உச்சங்களுக்கெதிரான எந்த போக்கினையும் கண்டு கொள்ளாமல், என்னவிதமான மூர்கத்துடன் நிர்வாகம் செயல்பட்டு வருகிறது என அறிகையில் நமது அமைப்பின் மீது கடுங்கோபம் வருகிறது தோழர்..
சனிக்கிழமை அல்லது ஞாயிற்றுக்கிழமைகளில் சென்னையில் சந்திக்க வாய்ப்பு உண்டு தோழர்...பேசுவோம்.
nice that people from all over Tamilnadu visiting Book exhibition.
பதிலளிநீக்குIn various bloggers meet too, we can display Ayyanar, vamsi books.
In Ulaga Tamil maanaadu too let us try to display these books.
அன்பு மாதவராஜ்,
பதிலளிநீக்குபுத்தககண்காட்சிக்குப் போக முடியாதது ரொம்ப வருத்தமாக இருக்கிறது. வேலையில் இருந்து மீள முடியவில்லை... நேரத்தைத் தின்றுவிட்டு சத்தமாய் ஏப்பம் விடுகிறது. கொஞ்சம் கண் அயரும் நேரம் மட்டுமே வலைப்பக்கமே வர முடிகிறது.
உங்கள் போராட்டங்கள் மேலும் கவலையைத் தருகிறது. நல்லவை நடக்கும்போது பிறக்கும் புதுவருஷம். தற்காலிகமாய் வேலை இழந்தவர்களின் பட்டியல் நிரம்பிக் கொண்டே இருப்பதும், அவர்களின் குடும்ப நிலைமையும் மனசுக்குள் வந்து செல்கிறது.
எல்லாம் நல்லபடியாக நடக்கவேண்டும். புத்தகங்கள் நன்றாக விற்பது சந்தோஷமான விஷயம், மாதவராஜின் தேர்வுகள் பற்றி நிறைய பேருக்குத் தெரியும் என்பதால் இது எதிர்பார்த்த ஒரு விஷயம் தான். எனக்கு இதைப்பற்றிய அனுபவம் இல்லாததால் எப்படி யோசனை சொல்வது என்று தெரியவில்லை...
நீங்கள் நினைப்பது நல்லவிதமாக நடந்தேற என் வாழ்த்துக்கள்
அன்புடன்
ராகவன்
நிச்சயம் ஏற்பாடு செய்யுஙக்ள் மாதவராஜ்
பதிலளிநீக்குவேற்று மாநிலத்தில் உள்ளவர்களும் பெருமூச்சு விடுகிறோம்...
பதிலளிநீக்குவாங்க, வாங்க, வாங்க அங்கிள்!
பதிலளிநீக்கு:)
லேகா!
பதிலளிநீக்குநிலாரசிகன்!
உம மஹேஸ்வரன்!
கிரகம்!
கும்க்கி!
குப்பன் யாஹு!
ராகவன்!
கேபிள் சங்கர்!
வெற்றிமகள்!
தீபா!
அனைவருக்கும் நன்றி.
சனிக்கிழமை சென்னை வந்து புத்தகக் கண்காட்சிக்கும் சென்று வந்துவிட்டேன். உமா மஹேஸ்வரன், கும்க்கி, மணிகண்டன் ஆகிய பதிவர்களை சந்திக்க முடிந்தது. வெளியெ முன்றரை மணிக்கு மேல் வந்த பிற்கு நிலா ரசிகன் போன் செய்தார். சந்திக முடியாமல் போனது.
/வேற்று மாநிலத்தில் உள்ளவர்களும் பெருமூச்சு விடுகிறோம்.../
பதிலளிநீக்குகொஞ்சம் பொறாமையாகவும் இருந்தது!
//
பதிலளிநீக்குநான் தொகுத்திருந்த வலைப்பதிவர்களின் படைப்புகள் அடங்கிய புத்தகங்களை
//
ஆஹா, பெங்களூர்-ல இருந்ததால புத்தகக் கண்காட்சிக்குப் போய் அந்த புத்தகத்தை வாங்க முடியலையே?
நம்ம படைப்பு எதுவும் வந்திருக்குமோன்னு ஒரு நப்பாசை தான்? ;-)
Pongal-முன்னர் விவசாயத்தை கொண்டாடினோம். விவசாயிகளைக் கொண்டாடினோம். இப்போது விவசாயிகளை யார் கொண்டாடுகிறார்கள். மாடுகள் எல்லாம் போய் டிராக்டரும் இன்னும் கதிர் அறுக்கும் மெஷின்களும் வந்து விட்டன. மாட்டுப் பொங்கலில் என்ன அர்த்தம் இருக்கிறது-Very fine argument and you showed the true pictures.Agricultural lands are being converted into PLOTS/FLATS---VIMALAVIDYA
பதிலளிநீக்கு