“30.3.2021 தேதியிட்ட சார்ஜ் ஷீட்டிற்கு மிஸ்டர் மாதவராஜ் அனுப்பிய கடிதம் என் பார்வைக்கு வைக்கப்பட்டு இருந்தது. சார்ஜ் ஷீட்டில் கூறப்பட்டிருந்த குற்றச்சாட்டுகளையும், அந்த குற்றச்சாட்டிற்கு அடிப்படையான அனைத்து ஆவணங்களையும் கவனமாக படித்தேன். குற்றச்சாட்டுகளையும் அதற்குரிய பதிலையும் ஆராய்ந்து பார்த்ததில், அந்த பதில் ஒப்புக்கொள்ளும்படியாக இல்லை. எனவே தமிழ்நாடு கிராம வங்கி பணியாளர் விதிகளின்படி, துறை ரீதியான விசாரணை நடத்த உத்தரவிடுகிறேன்.”
முதலில் குற்றச்சாட்டுகளே ஒப்புக் கொள்ளும்படியாய் இல்லையே. சார்ஜ் ஷீட் என்பது குழப்பமில்லாமல் தெளிவாகவும், தேவையான விபரங்களோடு இருக்க வேண்டும் என்பதுதான் விதி. (In Disciplinary proceedings, a charge sheet should not be vague. It should be clear and specific with all relevant details.) அப்படி எந்த விபரங்களும் சார்ஜ் ஷீட்டில் இல்லை.
முதலாவதாக, 1.3.2021 அன்று ஓய்வு பெற்றவர்கள் மற்றும் சிலரோடு நான் தலைமையலுவலகத்தில் முரட்டுத்தனமாகவும் அநாகரீகமாகவும் நுழைந்ததாக குற்றச்சாட்டு சொல்லப்பட்டுள்ளது. இதில் எத்தனை பேர் நுழைந்தார்கள் என்ற விபரம் இல்லை. யார் யார் என்று பெயர்கள் இல்லை. முரட்டுத்தனமாக என்றால் எப்படி? யாரையாவது தள்ளிவிட்டு அல்லது எதையாவது போட்டு உடைத்துவிட்டு நுழைந்தோமா? அது குறித்த விபரம் இல்லை. அப்புறம் அநாகரீகமாக என்றால்? சட்டை கிட்டை போடாமலா உள்ளே நுழைந்தோம்? குழப்பமாக இருக்கிறதா இல்லையா?
இரண்டாவதாக, அலுவலகத்திற்குரிய ஒழுக்கத்தை கடைப்பிடிக்காமல் நிறுவனத்தின் கண்ணியத்தை சீரழித்து விட்டீர்கள் என்று குற்றச்சாட்டு. என்னய்யா அந்த அலுவலகத்திற்குரிய ஒழுக்கம்? அதை முதலில் சொல்ல வேண்டாமா? அதில் எதை கடைப்பிடிக்கவில்லை, எப்படி மீறினார்கள் என்று சொல்ல வேண்டாமா? ஒரு மண்ணாங்கட்டியும் சொல்லாமல் நிறுவனத்தின் கண்ணியத்தை குலைத்து விட்டீர்கள் என்றால் எப்படி புரிந்து கொள்வது?
மூன்றாவது தலைமையலுவலகதிற்குள் சத்தம் போட்டு, சேர்மன் கேபின் முன்னால் சலசலப்பை ஏற்படுத்தினோம் என்று குற்றச்சாட்டு. என்ன சொல்லி சத்தம் போட்டார்கள், என்ன வார்த்தைகளை உபயோகித்தார்கள் என்று சொல்லப்பட வேண்டாமா? அந்த விபரங்களைச் சொன்னால்தான் மனிதர்களைக் குறிப்பதாக அர்த்தம். வெறுமனே சத்தம் போட்டார்கள், சலசலப்பை ஏற்படுத்தினார்கள் என்றால் உள்ளே சென்றவர்கள் எல்லாம் ஆடு மாடுகளா?
கடைசியாக தலைமையலுவலகத்தில் சேர்மன் வெளியே செல்லும்போது வழி விடாமல் தடுத்தீர்கள் என்றும் தலைமையலுவலக ஊழியர்களின் நடமாட்டங்களுக்கு இடையூறு செய்தீர்கள் என்றும் குற்றச்சாட்டு. வழி விடவில்லை என்றால் எந்த வழி என்று குறிப்பிட வேண்டும். யார் யாரெல்லாம் வழிவிடவில்லை என பெயர்களை தெரிவிக்க வேண்டும். எந்த தலைமையலுவலக ஊழியர்கள் நடமாடமுடியாமல் இடையூறு செய்யப்பட்டார்கள் என்று அவர்களது பெயர்களையும் தெரிவிக்க வேண்டும். எல்லோரும் பெயரற்ற அநாமதேயங்களா?
இதையெல்லாம் விட மிகப் பெரிய கூத்து ஒன்றும் நடந்திருந்தது. ’கீழ்கண்ட ஆவணங்களின் அடிப்படையில் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. அவைகளை இங்கே இணைத்திருக்கிறோம்’ என்று சார்ஜ் ஷீட்டோடு இரண்டு ஆவணங்களை இணைத்திருந்தார்கள். ஒன்று, இதே குற்றச்சாட்டுகளோடு நிர்வாகத்திலிருந்து 10.3.2021 அன்று எனக்கு விளக்கம் கேட்டு பொதுமேலாளரிடம் இருந்து வந்த கடிதம்! இரண்டாவது, அந்த குற்றச்சாட்டுகளை மறுத்து 16.3.2021 அன்று நான் எழுதிய பதில் கடிதம்! அவைகளா அடிப்படை ஆவணங்கள் (basic documents)? எதாவது அடிப்படை அறிவு இருக்கிறதா இதில்?
1.3.2021 அன்று தலைமையலுவலகத்தில் நடந்த விஷயங்கள் குறித்து யாராவது புகார் அளித்திருந்தால் அந்த ஆவணத்தை இணைக்கலாம். அல்லது எதாவது விசாரணக்கு உத்தரவிடப்பட்டு, அப்படியொரு விசாரணை நடந்திருந்தால் அதன் அறிக்கையை ஒரு அடிப்படை ஆவணமாக இணைக்கலாம். அதை விட்டு விட்டு ஏற்கனவே விளக்கம் கேட்டு நிர்வாகம் அனுப்பிய கடிதத்தையும், அதற்கு நான் கொடுத்த பதிலையுமே அடிப்படை ஆவணங்களாக தாக்கல் செய்வதெல்லாம் ’செக்குன்னு தெரியாம, சிவலிங்கம்னு தெரியாம நக்குன நாய்’ கதைதான்.
இப்படியெல்லாம் சட்ட விதிகளுக்கும், ஒழுங்கு நடவடிக்கை நெறிமுறைகளுக்கும் முற்றிலும் விரோதமாக குற்றச்சாட்டுகளை சுமத்திவிட்டு, ’கவனமாக படித்தேன்’, ’எல்லாவற்றையும் ஆராய்ந்தேன்’, ‘பதில் ஒப்புக் கொள்ளும்படியாய் இல்லை’ என்று யோக்கிய சிகாமணியாய் எழுதுவதற்கு ஒரு தனித்திறமை வேண்டும். நாடி நரம்பெல்லாம் பொய்யும் பித்தாலாட்டமும் நிறைந்தவர்களால்தான் அது முடியும்.
நான் ரிடையர் ஆவதற்கு சரியாக ஒரு மாதத்திற்கு முன்பு சேலத்தில் தலைமையலுவலகத்தில் உயர் அதிகாரிகளாகப் பணிபுரிந்த தோழர்கள் வரதராஜப் பெருமாளும், சௌந்திர நாகேஸ்வரனும் பணி ஓய்வு பெற்றார்கள். மார்ச் 28, ஞாயிறு அன்று அவர்கள் இருவரும் தலைமையலுவலகத்தில் பணிபுரியும் அனைவருக்கும் மதிய விருந்தொன்றை ஏற்பாடு செய்திருந்தார்கள். பாண்டியன் கிராம வங்கியிலிருந்தே நல்ல பழக்கம் என்பதால் என்னையும் அழைத்து இருந்தார்கள். இருவரின் அன்பிற்காக கலந்து கொண்டேன். சேர்மன் உட்பட அனைவரும் வந்திருந்தனர். நம் சங்கத் தோழர்களுடன் பேசிக்கொண்டு இருந்தேன். அப்போது மிஸ்டர் ஜெயக்குமார் என்னருகில் வந்து ”அடுத்த மாதம் உங்கள் பணி ஓய்வையும் கொண்டாடிவிடுவோம்” என்று சிரித்தார். அதற்கு இரண்டு நாள் கழித்து 30.3.2021 அன்று எனக்கு சார்ஜ் ஷீட் கையெழுத்திட்டு அனுப்பி இருந்தார். அப்பேர்ப்பட்டவர் அவர்!
மீண்டும் கடிதத்தை தொடர்ந்து படிக்க ஆரம்பித்தேன். என் மீது விசாரணை நடத்த, அப்போதைய நாமக்கல் மண்டல மேலாளர் மிஸ்டர் சந்திரனை விசாரணை அதிகாரியாக (Enquiry Officer) நியமித்திருந்தார். நிர்வாகத்தரப்பில் குற்றச்சாட்டை முன்வைக்கும் அதிகாரியாக (Presenting Officer) மிஸ்டர் திருமூர்த்தியை நியமித்திருந்தார்.
இனி மிஸ்டர் சந்திரனிடமிருந்து விரைவில் ஒரு கடிதம் வரும். எந்த தேதியில் எங்கு வைத்து விசாரணை என்பதைக் குறிப்பிட்டு அதில் அழைப்பு விடுக்கப்படும்.
நமது இரு சங்கத் தலைமைக்கும், பெஃபி தமிழ்நாடு தலைவர்கள் தோழர் சி.பி.கிருஷ்ணன், தோழர் ராஜகோபால் ஆகியோருக்கும் தெரிவித்தேன். அட்வகேட் கீதா அவர்களுக்கு மெயில் அனுப்பினேன். சென்னை ஹைகோர்ட்டில் வழக்குத் தொடுக்க அஃபிடவேட் நகலை கீதா மேடம் மெயிலில் அனுப்பி்யிருந்தார்கள். அதை இறுதிப்படுத்தியாகி விட்டது. ஓரிரு நாட்களில் தாக்கல் செய்யப்பட்டு விடும் என்று தெரிவித்திருந்தார்கள். ஆன்-லைனில்தான் ஹியரிங் நடைபெற்றுக் கொண்டிருந்தது.
விரைவில் தளர்வுகளற்ற ஊரடங்கு அறிவிக்கப்படும் என்றொரு பேச்சு எழுந்து கொண்டிருந்தது. அப்போது ஆன்–லைனில் வழக்கு நடைபெறுமா எனத் தெரியவில்லை. 2020ல் இருந்ததை விடவும் 2021ல் தொற்று தீவீரமாக இருப்பதாக டிவிகளில் கவலையோடு பகிர்ந்து கொண்டிருந்தனர். கிட்டத்தட்ட்ட தெரிந்தவர்கள் அனைவருக்கும் தொற்றின் பாதிப்பு வந்து போய்க்கொண்டிருந்தது. நெருங்கிய உறவினர்கள், நம்மோடு பணிபுரிந்த தோழர் வேதமுத்து, தோழர் அந்தோணி மரியராஜ், தற்காலிக ஊழியர் பிரசாத், ஆகியோரின் உயிரிழப்புகள் சூழலின் தீவீரத்தை உணர்த்தின. கொரோனா பாதிக்கப்பட்ட நிலையிலும் லீவு கிடைக்காமல் வேலை பார்த்து இறந்து போன புதுவை பாரதியார் கிராம வங்கி ஆபிஸர் சங்கத்தைச் சேர்ந்த 37 வயதனான தோழர் நாகலிங்கத்தின் சிரித்த முகம் இன்னும் எதையோ சொல்லிக்கொண்டே இருக்கிறது. துயரங்களைக் கூட வெளிப்படுத்த முடியாமல் முடங்கிப் போயிருந்த காலம். எப்போது மனிதர்களின் முகங்களை மீண்டும் புன்னகையோடு பார்க்கப் போகிறோம் என ஏக்கங்கள் அடர்ந்தன.
நிர்வாகம் வழக்கம் போல் ஈவிரக்கமில்லாமல் இருந்தது. ஊழியர்களுக்கு பாதுகாப்பு உணர்வை ஏற்படுத்தாமல் பழிவாங்கும் போக்கை தீவீரப்படுத்திக் கொண்டிருந்தது. 1.3.2021 அன்றைய சம்பவத்திற்காக நிர்வாகம் ஓய்வு பெற்ற தோழர்கள் மீதும் பாய்ந்திருந்தது. சோலைமாணிக்கம், கிருஷ்ணன், சுப்பாராமன் ஆகியோருக்கும் குற்றச்சாட்டுகளை அனுப்பி விளக்கம் கேட்டிருந்தது. பென்ஷனை நிறுத்த வேண்டும் என்ற வெறி சேர்மன் செல்வராஜ் தலைமையிலான நிர்வாகத்துக்கு இருந்திருக்க வேண்டும். தோழர்கள் சோலைமாணிக்கமும், கிருஷ்ணனும் அதற்கு பதில் கொடுத்து விட்டனர். உடல்நலம் இல்லாத உறவினரைக் கவனித்துக் கொண்டிருந்த தோழர் சுப்பாராமன் உரிய நேரத்தில் பதில் அளிக்கவில்லை. அவருக்கு மாறி மாறி கடிதங்களை நிர்வாகம் அனுப்பிக் கொண்டிருந்தது. தங்கள் பாதுகாப்பு கருதி கிளைகளில் இருந்து ஊழியர்கள் அனுப்பும் கடிதங்களின் மீது உரிய நேரத்தில் பதில் அளிக்காத நிர்வாகம், பழிவாங்கும் நடவடிக்கைகளில் மட்டும் வேகத்தைக் காட்டிக் கொண்டிருந்தது.
கணுவாய் கிளையில் பணிபுரிந்து கொண்டிருந்த தற்காலிக ஊழியர் முத்து லட்சுமியின் மரணம் தாங்க முடியாத துயரத்தைத் தந்தது. கோவிட் தொற்று தீவீரமாய் இருந்த 2020ம் ஆண்டு ஜூலை மாதம் 3ம் தேதி அவரை வேலைக்கு வர வேண்டாம் என அந்தக் கிளையின் மேலாளர் வெளியே அனுப்பி விட்டார். சங்கத்திலிருந்து மிஸ்டர் ஜெயக்குமாரிடம் பேசினோம். கண்டு கொள்ளவே இல்லை. நாம் ரீஜினல் லேபர் கமிஷனரிடம் முறையிட்டோம். சேலத்தில் ரெயில்வே ஊழியர்கள் குடியிருப்பு பகுதியில் உள்ள அலுவலகத்தில் வைத்து இரண்டு முறை பேச்சுவார்த்தை நடந்தது. நானும் தோழர் அறிவுடைநம்பியும் சங்கத்தரப்பில் சென்றோம். மிஸ்டர் ஜெயக்குமார் நிர்வாகத்தரப்பில் வந்தார். ”இந்த கொரோனா நேரத்தில் வெளியே அனுப்பினால் அந்த ஊழியர் என்ன செய்வார், அவரை பணிக்கு சேர்த்துக் கொள்ளுங்கள்” என ரீஜினல் லேபர் கமிஷனர் சொல்லிப் பார்த்தார். மிஸ்டர் ஜெயக்குமார் கேட்கவே இல்லை. பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது. அதன் மீது மத்திய அரசின் தொழிலாளர் நலத்துறை அமைச்சகம் முடிவெடுத்து லேபர் கோர்ட்டில் விசாரணை ஆரம்பிக்க சாதாரண காலங்களிலேயே நான்கைந்து மாதங்கள் ஆகும். கொரோனா நேரத்தில் கேட்கவா வேண்டும்? தோழர் முத்து லட்சுமி அவ்வப்போது போன் செய்து கேட்பார்கள். நான் எதாவது நம்பிக்கையளித்து பொறுமையாய் இருக்கும்படிச் சொல்லிக்கொண்டு இருந்தேன். நெஞ்சடைத்துப் போய் ஒருநாள் அவரும் காலமானார். ”மாதவராஜ் சார்” என அழைக்கும் அந்தக் குரல் நினைவிலேயே இருந்தது. நம்பிக்கையான செய்தி என்னிடம் இருந்து வரும் என காத்திருந்து காத்திருந்து காணாமலேயே போய்விட்டது. நிர்வாகத்துக்கும், மிஸ்டர் ஜெயக்குமாருக்கும் அந்த வலி என்னவென்று தெரியுமா?
யோசித்துப் பார்க்கும்போது உலகில் எல்லோருமே தங்களுக்கு ஒரு நாள் நீதி கிடைக்கும் என எதிர்பார்த்திருப்பது போலவே தெரிந்தது.
எனக்கு அந்த நாள் 2021 ஜூன் 24ம் தேதியாக வந்தது போலிருந்தது.
(தொடரும்)
சிறப்பு
ReplyDelete//சிறப்பு// நன்றி நண்பரே. தங்கள் பெயரைக் குறிப்பிட்டிருக்கலாமே.
DeleteVery interesting sir..informative too.pl.continue..( I am BalasubramanIan ex.BOB)
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றி தோழர் பாலசுப்பிரமணியன். உங்கள் வார்த்தைகள் உற்சாகமளிக்கின்றன.
DeleteExcellent
ReplyDeleteஎங்கள் அன்புத் தோழர் சி.பி.கே! சரியாகத்தான் எழுதி வருகிறேன் என்பதற்கான பச்சைக்கொடி தங்கள் வார்த்தை. அன்பும், நன்றியும்.
Delete