வேட்டைக்களமாகும் மூன்றாம் உலக நாடுகள் (உலகமயமாக்கல் - 4ம் பகுதி)

சோவியத்தின் வீழ்ச்சி எவ்வளவு பெரிய மகிழ்ச்சியாக முதலாளித்துவ ஆதரவாளர்களால் கொண்டாடப்பட்டது. தடைகள் எல்லாம் தகர்ந்துவிட்டன, இனி சுதந்திரக் காற்றுதான் என ஆர்ப்பரிக்கப்பட்டது. பூமியெங்கும் மனித உரிமைகள் நிலை நாட்டப்பட்டுவிட்டது என்று வாய்ச்சவடால்கள் அடிக்கப்பட்டன. 'சித்தாந்தத்தின் முடிவு' என்றும், 'வரலாற்றின் முடிவு' என்றும் அடித்துச் சொல்லப்பட்டது.

நடந்ததென்ன?  கோடிக்கணக்கான மக்களின் வாழ்வையும், கனவையும் சூறையாடியிருக்கிறது. நிலங்களிலிருந்தும், ஆலைகளிலிருந்தும் மக்களை தூக்கி வீசியிருக்கிறது. தேசங்களின் சுதந்திரத்தையும், தன்னாட்சி உரிமைகளையும் கிழித்து எறிந்திருக்கிறது. வேர்வையையும், இரத்தத்தையும் உறிஞ்சும் மிருக வன்முறையை நிலைநாட்டியிருக்கிறது.  உலகமயத்தின் பலிபீடங்களாக  ஏழை நாடுகளும், மூன்றாம் உலக நாடுகளும் வெறிச்சிட்டு காட்சியளிக்கின்றன.

இரக்கமற்ற ஒரு உலகத்திற்கு நாகரீகத்தின் சொர்க்கம் எனச் சொல்லி அழைத்துச் செல்கிறார்கள்.  பொருளாதாரத் துறையிலும், அரசியல் துறையிலும் நாடுகளுக்கு முதுகெலும்பு இருக்கக் கூடாதென  முன்நிபந்தனை விதிக்கிறார்கள். ஏகாதிபத்தியத்தின் இத்தகைய அராஜக செயல்களால் பாதிப்புக்குள்ளாகி சீர்குலைக்கப்பட்ட அனுபவம் இந்தியாவிற்கு அதிகம்.

பதினாறாம் நூற்றாண்டில் மூலதனத்தின் அகோரப்பசிக்கு பரிமாறப்பட்ட செழிப்புமிக்க உணவு 'இந்தியா'. நமது தாய்நாட்டின் உற்பத்தி சக்திகளின் நாடி நரம்புகளையெல்லாம் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் கொடூரப் பற்கள் கடித்துக் குதறின. வெறிபிடித்த ஒநாய்களுக்கு நடுவே மாட்டிக் கொண்ட பச்சைக் குழந்தை போல இந்தியச் சமூகம் மாட்டிக் கொண்டது. வர்ணிக்க முடியாத, வேதனைமிக்க, அந்த நானூறு ஆண்டு கால தாக்குதல்களின் வலியும் வடுவும் இன்னும் நீங்கவில்லை. கிழக்கிந்தியக் கம்பெனியின் கப்பல்கள் வந்த தடம் இன்னும் அழியவில்லை. ஜாலியன் வாலாபாக்கிலும், சிட்டகாங்கிலும் கேட்ட மரண ஓலம் நெஞ்சை விட்டு அகலவில்லை. கள்ளிக் கோட்டையில் வந்திறங்கியவர்களின் பாதச்சுவடு கொஞ்சம், கொஞ்சமாக பெரிதாகி இன்று தேச எல்லைகளின் பரப்பளவுகளைத் தாண்டி அதன் பெருவிரல் நீண்டு வளர்ந்திருக்கிறது.

1990களில்  புதிய பொருளாதாரக் கொள்கைகள் என்ற பெயரில் பன்னாட்டுக் கம்பெனியின் வேட்டைக்காக இந்தியாவின் எல்லைகள் திறக்கப்பட்டன. 12 ஆண்டுகளுக்குள் நாம் 55 ஆண்டுகள் உழைத்து சேகரித்து  உருவாக்கிய பொருளாதாரத் துறை கட்டுமானங்கள் எல்லாம் அரிக்கப்பட்டு விட்டன. தேசத்தின் மதிப்பு மிக்க சொத்துக்களான பொதுத்துறை எல்லாம் அடிமாட்டு விலைக்கு தாரை வார்க்கப்படுகின்றன. ஆட்குறைப்பு எல்லா மட்டத்திலும் அமல்படுத்தப்படுகிறது.

வேலையின்மையின் கொடூர  தாக்குதல்களால் வாழ்க்கை நிலைகுலைந்து போயிருக்கிறது. ஒளியிழந்த கண்களோடு கோடிக்கணக்கில் இளைஞர்கள் தவிக்கிறார்கள். ஒருபுறம் வேலை வாய்ப்பு குறைந்து கொண்டே போகிறது. இன்னொரு புறம் வேலையின்மை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. ஏற்கனவே இருந்த தொழில்கள் அழிந்து வருகின்றன. ஆலைகள் மூடப்படுகின்றன. பிறகு எப்படி வேலை வாய்ப்பு அதிகரிக்கும். விருப்ப ஓய்வூதியத் திட்டத்தின் மூலம் இன்றுவரை கோடிக் கணக்கில் வெளியே அனுப்பப் பட்டிருக்கின்றனர். ஆனால் அந்த இடங்களுக்கு எங்கும் புதிய பணிநியமனங்கள் இல்லை. பன்னாட்டுக் கம்பெனிகள் இங்கு பெரும் தொழில் நுட்பத்தோடு வருகின்றன.  அங்கு புதிய வேலை நியமனம் என்பது சுத்தமாக இல்லை. இந்த சந்தை உலகத்திலிருந்து நாடு கடத்தப்பட்டவர்களாய் தேசத்தின் எதிர்காலக் கனவுமைந்தர்கள் நின்று கொண்டிருக்கிறார்கள்.
விவசாயம், தொழில் வணிகம் அனைத்தின் மீதும் உச்சக்கட்ட தாக்குதல்கள் தொடுக்கப்பட்டுள்ளது. 2700 பொருட்களின் மீதான தடைகள் தகர்க்கப்பட்டதன் மூலம் பாதுகாப்பு அரண்களை பகல் கொள்ளையர்களுக்கு காணிக்கையாக்கிய அதிபுத்திசாலிகளாய் நமது ஆட்சியாளர்கள் விளங்குகிறார்கள். மஞ்சள், பாசுமதி, வேம்பு போன்ற நமது தாவர வகைகளுக்கான காப்புரிமையைக் கூட அவர்களிடம்  மண்டியிட்டு கேட்க வேண்டிய நிலைக்கு நாம் தள்ளப்பட்டு இருக்கிறோம். சித்தார்த்தன் ஞானம் பெற்ற போதி மரத்து இலை கூட இனி பிரெட்டன்வுட்ஸ் அமைப்புகளின் காப்புரிமைகளுக்கு கீழேதான். அதற்கும்  கீழேதான் ஞானம் பெற வேண்டியவர்கள்.

இந்திய அரசின் மாபெரும் பொதுத் துறையான வி.எஸ்.என்.எல் டாட்டாவின் கட்டுப்பாட்டிற்குள் போயுள்ளது. இந்தியன் பெட்ரோ கெமிக்கல்ஸ்  லிமிட்டெட் , ரிலையன்ஸ் கம்பெனியின் கட்டுப்பாட்டிற்குள் போகின்றது. பால்கோ நிறுவனத்தையும், ஹெச்.இசட்.எல். நிறுவனத்தையும் கையகப்படுத்தி துத்தநாக உற்பத்தியில் ஏகபோக நிலையை எட்டிய ஸ்டெர்லைட் நிறுவனத்திற்கு இப்போது இந்துஸ்தான் சிங்க் லிமிட்டெட் நிறுவனமும் தாரை வார்க்கப்பட்டுவிட்டது. இந்திய ஆயில் கார்ப்பரேஷன், இந்துஸ்தான் பெட்ரோலியம், பாரத் பெட்ரோலியம், பெல், எம்.டி.என்.எல், ஒ.என்.ஜி.சி, என்.டி.பி.சி, செய்ல், கெய்ல் உள்ளிட்ட அனைத்து அரசு நிறுவனப் பங்குகளும் தாரை வார்க்கப்படுகின்றன.

விவசாயம் மற்றும் சேவைத் துறையிலான அரசின் மானியம் கொடூரமாக வெட்டப்பட்டு வருகிறது. இன்னொரு பக்கம் பன்னாட்டுக் கம்பெனிகளுக்கு சலுகைகள் வாரி வாரி  வழங்கப்படுகின்றன. உடல் நலத் திட்டங்களுக்கான ஒதுக்கீட்டை கடந்த பத்தாண்டுகளில் ஆறு சதவீதம் குறைத்த அரசு அதைவிட அதிக சலுகைகளை என்ரான் நிறுவனத்திற்கு வழங்கியுள்ளது. இந்திய உணவுக்கழகங்களின் தேங்கிக் கிடக்கும் ஆறு கோடியே ஐம்பது லட்சம் டன் உணவு தானியங்களை உச்ச நீதிமன்ற அறிவுறுத்தலின் பிறகு கூட வறுமைக் கோட்டிற்கு கீழே வாழும் மக்களுக்கு சலுகை விலையில் தராமல் அவர்களுக்கு விற்கப்படும் ரேஷன் விலைக்கும்  குறைவாக அமெரிக்க உள்ளிட்ட நாடுகளுக்கு அரசு ஏற்றுமதி செய்கிறது.

"உலகமயம் பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் உள்ள இடைவெளியை குறைக்கிறது" என்று பிம்பங்களும், பிரமைகளும் திட்டமிடப்பட்டு காற்று வெளியெங்கும் தூவப்படுகின்றன. பத்துவருடங்களுக்கு முன்பு உலகின் மிகப் பெரிய கோடிசுவரர்களாக 147 பேர் இருந்தனர். இப்போது  இந்த எண்ணிக்கை 447! இந்த 447 பேரின் மொத்த வருமானம், இந்த பூமியில் வாழும் மொத்த ஜனத்தொகையில் பாதி மக்களின் மொத்த வருமானத்தை விட அதிகமானது. இதுதான் உலகமயமாக்கலின் திருவிளையாடல்.

டைட்டானிக் படத்தில் வரும் கப்பலாய் உலகம் பயணம் செய்கிறது. 'உலகமயமாக்கல்' ஒரே கப்பலில் கனவான்களுக்கு கப்பலின் மேல் தளத்திலும், சாதாரணமானவர்களுக்கு கப்பலின் அடித்தளத்திலுமாக இடம் அமைத்திருக்கிறது. பொருளாதார நெருக்கடிகள் பனிப்பாறைகளாய் மோதும் போது சாதாரணமானவர்களே குளிர் உறைந்த கடலில் மூழ்கிப் போக வேண்டியிருக்கும்.

காப்புரிமைச் சட்டம் என்னும் அபாயகரமான வலைப்பின்னலில் மூன்றாம் உலக நாடுகளின் விவசாயம் சிக்கவைக்கப்பட்டுள்ளது.  சிங்கங்களின் விருந்துகளுக்காக ஆடுகளைக் கட்டிப் போடுவதைப் போல பன்னாட்டுக் கம்பெனி களின் முன்பு மூன்றாம் உலக நாடுகளை நிறுத்தி வைத்திருக்கிறது காப்புரிமைச் சட்டம். பன்னாட்டுக் கம்பெனிகள் புதிய ரக விதைகளை அறிமுகம் செய்கின்றன. அதை வாங்கி பயன் படுத்தும் விவசாயிகள் அவற்றை சேகரித்து மீண்டும் பயிர் செய்ய முடியாது. விதைகளுக்கு அந்த பன்னாட்டு நிறுவனத்தைத்தான் அணுக வேண்டும். அவர்களின் கைகளில்தான் மரபணு வங்கிகள் இருக்கின்றன. நாம் அத்தகைய முயற்சிகளில் ஈடுபடுவதை காப்புரிமைச் சட்டம் அனுமதிப்பதில்லை.

"அமெரிக்காவின் காப்புரிமைச் சட்டத்தை ஏற்றுக்கொள்ளவில்லையென்றால் அது பாதுகாப்பு அபாயமாகக் கொள்ளவேண்டும்" என ஐக்கிய அமெரிக்க பிரதிநிதிகளின் சபையில் எடுக்கப்பட்ட முடிவானது மூன்றாம் உலக நாடுகள் எவ்வளவு பெரிய ஆபத்தில் சிக்கியுள்ளன என்பதை விளக்கும். சில பன்னாட்டு நிறுவனங்கள் அறிவுத்துறையில் ஏகபோகமாக விளங்குகின்றது. விவசாய ஆராய்ச்சியின் தலைமையிடமாக அந்நிறுவனங்கள் இருக்கின்றன.

சந்தையில் நிலவும் லாபமே இந்நிறுவனங்களின் செயல்பாடுகளைத் தீர்மானிக்கிறது. சந்தையில் எந்த பொருளுக்கு அதிக லாபம் கிடைக்குமோ அதை நோக்கியே விவசாயமும், விவசாயிகளும் திருப்பி விடப்படும் அபாயம் உள்ளது. விவசாயிகளின் தேவைகளைப் பொறுத்து ஆராய்ச்சி என்பதும், நமது மண்ணுக்கும், மக்களின் தேவைக்கும் ஏற்ற பயிர் வகைகள் என்பதும் போய் எதோ ஒரு மேற்கத்திய நாட்டிற்கு தேவையான, நொறுக்குத் தீனிக்கான விளைநிலங்களாக வாடிப்பட்டி மண்ணும், வடுகப்பட்டி மண்ணும் மாற்றப்படும் அபாயம் உள்ளது.

இப்போது எல்லாம் மிகத் தெளிவாகத்  தெரிகிறது. நமது மண்ணையும் மக்களையும் வஞ்சிக்கிற மிகப்பெரிய துரோகம் அரங்கேறப் போகிறது. வியாபாரப் பயிர்கள் என்ற பெயரில்  உணவுப்பயிர்களை பயிரிடாமல் நம் வயிற்றலடிக்கும் முதலாளித்துவ உலகின் இரக்கமற்ற மூர்க்கத்தனம் நம் வாசல் கதவுகளைத் தட்டப்போகிறது. இந்த மண்ணுக்கு சொந்தமான பயிர்கள் காணாமல் போகும். உணவுப் பயிர்களுக்கு நாம் பிறகு வெளிநாட்டை நம்பி இருக்க வேண்டிய அவலம் நேரும்.

உலக வங்கியும், சர்வதேச நிதி நிறுவனமும், தற்போது  GATTன் அடுத்த அவதாரமாக உருவாகியுள்ள World Trade Organisationம் வறுமையை போக்குவதாக எப்போதும் சொல்லுகின்றன. ஆனால் கடந்த பத்து ஆண்டுகளில் வறுமையில் வாடுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. தினமும் 130 கோடி மக்கள் ஒரு டாலருக்கும் குறைவான சம்பளத்தில் வாழ்ந்து வருகின்றனர். இன்னொரு 160 கோடி மக்கள் இரண்டு டாலர் ஊதியத்தில்  மூச்சுத் திணறுகின்றனர். உலகமக்களில் 5ல் ஒரு குழந்தை பசியால் துடிதுடித்து அழுது கொண்டிருக்கிறது.  மூன்றில் ஒரு பகுதியினர் அடிப்படை மருத்துவ வசதி இல்லாமல் இறந்து கொண்டிருக்கிறார்கள்.  ஒவ்வொரு வருடமும் 5 வயதுக்கு குறைவான 12 கோடி குழந்தைகள் இறந்து கொண்டிருக்கிறார்கள். இதை வெளியிட்டு இருப்பது உலக ஆரோக்கிய மையம்.(World health organisation).

"பி2ஜேடிஎம் ரக விமானங்களும் அவை  வீசக்கூடிய சக்திமிக்க குண்டுகளுமாய் சேர்த்தால் ஒரு விமானத்தின் விலை 220 கோடி டாலராகிறது என்பதை வாஷிங்டன் செய்தியாளரே  சொல்கிறார்.  ஆனால் 25 செண்ட் மதிப்புள்ள தடுப்பூசி இல்லாமல் குழ்ந்தைகள் இறக்கின்றன. நீர்ச்சத்து இல்லாமல் எத்தனையோ குழந்தைகள் இறக்கின்றன. எனவே ஒரு குழந்தையை மரணத்தின் பிடியிலிருந்து மீட்க 500 டாலர் என்பது கூட  அதிகமான தொகைதான். தேவையான மருத்துவர் களும், மருந்துகளும் இருக்கும் பட்சத்தில் 5 கோடி டாலர்களைக் கொண்டு 10லட்சம் குழந்தைகளை காப்பாற்ற முடியும். முதலில் சொன்ன ஒரு பி2ஜேடிஎம் ரக விமானத்தின் விலையான 220 கோடி டாலர்களைக் கொண்டு நாற்பத்து நான்கு லட்சம் குழந்தைகளக் காப்பாற்ற முடியும் " என்று மனித உயிர்களை மதிக்கத் தெரியாத முதலாளித் துவத்தின்  கோர முகத்தை தோலுரித்துக் காட்டுகிறார்  பிடல் காஸ்ட்ரோ. சேவை என்கிற புனிதமான வார்த்தையை குப்பைத் தொட்டியில் வீசிவிட்டு எப்போது லாபம் என்கிற பிசாசின் மொழி பேசப்பட்டதோ அப்போது  மனிதாபிமானம் செத்துப்போய்விடுகிறது. மார்க்சும், ஏங்கெல்ஸும்  குறிப்பிட்டதைப் போன்று 'முதலாளித்துவ வர்க்கம் வெட்க உணர்ச்சியற்ற, அம்மணமான, நேரடியான, மிருகத்தனமான' சுரண்டலை நிலைநாட்டுகிறது.

உலகத்தின் ரொட்டி தேவையை 13 கம்பெனிகள் பூர்த்தி செய்து வருகின்றன. செயற்கையாக ரொட்டிக்குள் வைட்டமின்களும். இதர புரதச்சத்துக்களையும் செலுத்தி விற்று வருகின்றன. அந்த வெள்ளை நிற ரொட்டிகள் குளோரின் டை ஆக்ஸைடினால் துவைக்கப் பட்டு நமக்கு வந்து சேருகின்றன என்பதை யாரும் எண்ணிப் பார்ப்பதில்லை. பிரம்மாண்டமான விளம்பரங்கள் மக்களை முட்டாளாக்கி அவைகளை நோக்கி  இழுக்கின்றன. புழுதியும் புகையும் நிறைந்த நமது சாலைகளில் பல நூறு மைல்கள் லாரிகளில் பயணம் செய்து ரொட்டிகள் கடைகளை வந்து அடைகின்றன. மலிவான விலை என நம் மக்களும் வாங்கிச் செல்கின்றனர். ஆனால் சுகாதாரம், ஆரோக்கியம் ஆகியவற்றை கணக்கிட்டால் நாம் அந்த ரொட்டிக்கு கொடுக்கும் விலை மிக அதிகமானது என்பது  தெரியவரும். இதில் அந்த ரொட்டிகளுக்கு விளம்பரம் 'தாயின் பெருமை'(Mothers pride). யார் நமது தாய்.? எது நமக்கு பெருமை?

மனிதர்களுக்கு இணக்கமான சந்தை இங்கு தேவையில்லை. சந்தைக்கு இணக்கமான மனிதர்களே அவர்களுக்குத் தேவை. அதுதான் சுதந்திரச் சந்தை. நம்முடைய சம்மதம், ஒப்புதலைப் பெற்றே யாவும் நடப்பதைப்போல இந்த இணக்கம் இங்கு ஏற்படுத்தப்படுவதுதான்  முதலாளித்துவத்தின் உச்சக்கட்டமான உலகமயத்தின் மாயவித்தை. நமது கலாச்சாரம், பண்பாடுகளில் அதன் புற்றுநோய் போன்ற  ஊடுருவல்தான் நம்மை இணக்கமானவர்களாக ஆட்டுவிக்கிறது. நமது  கைகளாலேயே நமது கண்களை குத்த வைக்கிறது.

உலக மயமாக்கல் முதல் பகுதி
உலகமயமாக்கல் இரண்டாம் பகுதி

உலகமயமாக்கல் மூன்றாம் பகுதி

*

கருத்துகள்

5 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!