பிச்சைப் பாத்திரம்

begger

 

கோவில் வாசலில் வரிசையாக உட்கார்ந்திருந்த பிச்சைக்காரர்களில் அந்த வயோதிகர் பொருத்தமானவராகத் தெரிந்தார் ஓவியக்கல்லூரி மாணவர்களுக்கு. கிழிந்த சட்டையும், வற்றிய தேகமும், குழி விழிந்த கண்களும் பெரும் இரக்கத்தைக் கோருவதாக இருந்தன. தாங்கள் வரையப் போகும் ஓவியம் ஒன்றிற்கு மாதிரியாக இருக்க நூறு ருபாயும், சாப்பாடும் தருவதாகச் சொன்னதும், ஒன்றும் பேசாமல் அவர்களைத் தொடர்ந்தார் அவர்.

 

கதவு, ஜன்னல்கள், சுவர்கள் கொண்ட ஒரு அறைக்குள் வாழ்வில் முதல்முறையாக அவர் நுழைந்தார். யாரிடமோ யாசகம் கேட்டு எதிர்பார்த்திருப்பது போல சற்றுத் தலையைத் தூக்கி உட்கார வைத்தார்கள். ஒரே இடத்தில் அப்படியே உட்கார்ந்திருப்பது ஒன்றும் அவருக்கு சிரமமாயிருக்கவில்லை ஆரம்பத்தில். அவர்கள் எல்லோரின் கண்களும் அவரைப் பார்த்துப் பார்த்துத் தாழ்ந்த வண்ணமிருந்தன. அவரது சுவாசம் அவருக்கேக் கேட்கும்படியாயிருந்த அமைதி தாங்கிக்கொள்ள முடியவில்லை. பெருஞ்சிரிப்பாய் கலைக்க வேண்டும் போலிருந்தது. சுவர்க் கடிகாரத்தின் பின்பக்கமிருந்து ஒரு பல்லி வெளியே வந்து மெல்ல மெல்ல ஊர்ந்து கொண்டு இருப்பதை அப்போது பார்த்தார். ஒருவன் அருகில் வந்து அவரது முகவாயை லேசாகத் திருப்பி, கொஞ்சம் தள்ளி நின்று பார்த்து திருப்தியாகிப் போய் திரும்பவும் வரைய ஆரம்பித்தான். அவருக்கு தூக்கம் வரும்போல இருந்தது.

 

வேகு நேரம் கழித்து அவர்கள் கலைந்தார்கள். முகத்தை எப்போதும் போல வைத்துக் கொண்டார். மூச்சை இழுத்து விட்டுக்கொண்டார். தாங்கள் வரைந்தவைகளை அவர்கள் ஒருவருக்கொருவர் காண்பித்துப் பேசிக்கொண்டிருந்தார்கள் . அவரைத் திரும்பிப் பார்க்கவில்லை. ஆசிரியர் வந்து, ஓவியங்களைப் பார்த்து ஆலோசனைகள் சொல்லிக்கொண்டு இருந்தார்.

 

அந்தப் பிச்சைக்காரர் அவர்கள் அருகில் போய் நின்றார்.  தாங்கள் வரைந்தவைகளை அவரிடம் காண்பித்தார்கள். கோடுகளால் ஒரு ஓவியம் இருந்தது. கறுப்பு வெள்ளையாய் அடர்ந்து ஒன்று இருந்தது. வண்ணங்கள் சிந்தி இன்னொன்று. எல்லாம் அவரது முகங்கள். அவரது கண்கள். அவரது தேகங்கள்.  பார்த்துக்கொண்டு வந்தவருக்கு தொடர்ந்து பார்க்க முடியாமல் போனது. எதுவும் சொல்லாமல் அங்கிருந்து வெளியேற ஆரம்பித்தார். பல்லியொன்று சுவரிலிருந்து தொப்பென விழுந்து அப்படியேக் கிடந்ததை அப்போது பார்த்தார். பணம் கொடுக்கப் பின்னால் சென்றவர்கள் ஒன்றும் புரியாமல் போனார்கள்.

கருத்துகள்

3 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
  1. நிறைய குறியீடுகளை உட்செலுத்தி ஒரு கட்டுரை.. அருமையான நேரேஷன்..

    பதிலளிநீக்கு
  2. அன்பு மாதவராஜ்,

    அருமையான கட்டுரை மாதவராஜ்.

    பொங்கல் வாழ்த்துக்கள் குயில் தோப்பில் ஒவ்வொருவருக்கும்,ஒவ்வொன்றுக்கும்.

    அன்புடன்
    ராகவன்

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!