பத்தாண்டு கால நாவல்கள் குறித்த வாசகக் குறிப்புகள் – 12

irandam jamam ஆண்களற்ற சுதந்திரமானவெளியில் கட்டுண்டு கிடந்த பெண் மனதின் உரையாடல் தடைகளற்று சுதந்திரமாக வெளிப்படுகிறது. அப்படித்தான் வெளிப்படும். ஆண்வாசனை தொலைவிலிருக்கும் மரணவீட்டில் கூடியிருக்கும் பெண்களின் உரையாடலுக்குள் முகிழ்த்து வரும் பாலியல் கிளர்ச்சியும்,  உடலின் அளவு குறித்த பதிவுகளும் இதுவரை தமிழ்ப் புனைவுலகம் சந் தித்திராதவை என்று தான் சொல்ல வேண்டும்.

********

என்றைக்கும் தீராத பாடுபொருளாக ஆண் மனதினில் நீடித்து நிலைத்திருக்கிறது பெண் உடல். அதன் புறத்தோற்றத்தில் மையல் கொண்டு லயித்த வார்த்தைகளால் உருவான கவிதைகளும், காவியங்களும், இலக்கியங்களும் கணக்கிலடங்காதவை. தான் புரிந்து கொள்ளப்படாமலே வெளிப்படுத்தப்பட்டு வருவதைக் கண்ணுற்ற பெண் மனம் எரிச்சல் கொண்டது மட்டுமல்ல, தன்னை எழுதிக்கொள்ள தனக்கான எழுத் தாளர்களையும் கண்டடைந்தது. காலம் சிலவற்றை நிர்பந்தித்தே பெற்றுக் கொள்ளும் என்பதை அறிவோம் நாம். காலத்தின் தீராத கேள்விகளைத் தன் கவிதைகளின் அர்த்தமிகு சொற்களின் வழியாக விவாதப் பொருளாக்கினர் கவிதாயினிகள். கடந்த பத்தாண்டுகளில் நிகழ்ந்திருக்கிற மிகக் காத்திரமான செயலை நிகழ்த்திய கவிஞர்களில் முக்கியமானவர் சல்மா.

சிலம்பு, மணிமேகலையென பெண்களின் துயரத்தைக் காப்பியமாக்கிய தமிழின் தொடர்ச்சி அறுபட்டுக் கிடக்கிறது. எனவே தான் சல்மா இதுவரை தமிழ்ப்புனைவுலகின் எந்தப் பக்கங் களிலும் வெளிப்பட்டிருக்காத இஸ்லாமியப் பெண் உலகின் மொழியை இரண்டாம் ஜாமங்களின் கதையாக்கியிருக்கிறார். நாவலெங்கும் பெண் உடல் குறித்த பிரக்ஞை ஞாபகமூட்டப்பட்டுக் கொண்டேயிருக்கிறது. மழையில் நனைவது பிடிக்கும் வயதில் பெண்ணிடம் உடல் குறித்த கவனத்தை ஏற்படுத்தத் துடிக்கும் ராபியாவின் தாய் இஸ்லாமியச் சமூகத்தின் வார்ப்பு. மௌத் தான வீட்டிற்குச் செல்கிற போதும் தன் மகள் பெண்களோடுதான் இருக்க வேண்டும் என்கிறாள். கார் ஓட்டி வரும் டிரைவரைப் பார்த்து எதிர் வீட்டுப் பெண் தலையை உள்ளிழுத்துக் கொள்வதன் மூலம் ராபியாவிற்கு மட்டுமல்ல, சகல பெண்களுக்கும் உடல் மீதான அச்சம் மூளைகளில் ஏற்றப்படுவதை நாவல் முதல் அத்தியாயத்தில் துவக்குகிறது. அதற்கு பிறகு நாவல் முழுக்க சல்மாவின் சொற்களால் மிதக்கின்றன பெண் உடல்கள்.

ராபியா, வஹிது, பிர்தௌஸ், றைமா, சொஹ்ரா, மும்தாஜ், நபிஸா, மதினா என முழுக்க பெண்களின் ராச்சியமே நிகழ்கிறது. காதர், கரீம், சுலைமான், சையது என ஆண்கள் நாவலுக்குள் அவ்வப்போது தலைகாட்டுகிறார்கள். காதர் இறை நம்பிக்கை கொண்டவன். நஸியின் (தலை எழுத்து) படியே யாவும் என நம்புவதோடு, வீட்டுப் பெண்களுக்கு அவர்கள் பின்பற்ற வேண்டிய இஸ்லாமிய மார்க்கங்களை நினைவூட்டிக் கொண்டேயிருக்கிறான். பள்ளி வாசல், ஜமாத்தை விட வீடு மதக்கோட்பாடுகளை கட்டிக் காத்திடும் இடமென வாசகனை உணரச் செய்கிறவனாக காதரின் வருகை நாவலுக்குள் நிகழ்ந்து கொண்டேயிருக்கிறது.

சுலைமான் நாவலுக்குள் வருகிற இடங்களிலும், அவன் பெயர் ஞாபக மூட்டப்படும் இடங்களிலும் இறுகிய அரபு வழி மதக்கோட்பாடுகளை தன்னுடைய வாழ்விடத்தில் நிறுவிட முயற்சிக்கிறான். அவனுடைய சட்ட திட்டங்கள் யாவும் பெண்ணை நோக்கியே குவிகின்றன. சினிமாவிற்கு போகாதே, புத்தகம் படிக்காதே, வேண்டுமானால் மத நம்பிக்கைகளை மனதிற்குள் ஆழப்படுத்திட குரானைப் படியுங்கள். நபிவழியில் நடந்திட முயற்சியுங்கள் என்று சொல்கிறதாக வெளிப்படுகிறான். மதம் அவனுக்குள் கட்டி வைத்து இறுக்கியிருக்கும் ஆண் மனது வெளிப்படும் இடங்கள் வாசகனுக்கு முக்கியமானவை.

நாவலில் உடல்கள் குறித்த மரபான பார்வையும், அதன் புறத்தோற்றத்தின் மீது மனிதர்களுக்கு இருக்கும் ஏக்கமும், பெருமிதமும் எந்தவிதமான விமர்சனத்திற்கும் இடமின்றி அப்படி அப்படியே பதிவாகியிருக்கிறது. தனக்கு கணவனாக வந்தவனிடமிருந்து மணவிலக்கம் பெறுவதற்கு அவனுடைய காணச் சகிக்காத உடலைத் தவிர வேறு எந்தக் காரணமும் பிர்தௌஸ்க்கு இல்லை. அழகும், பொலிவும் நிறத்தின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுவதை நாவலின் பல இடங்களில் பெண்கள் உரையாடலின் மூலமாக வெளிப்படுத்திக் கொண்டேயிருக்கிறார்கள். நாவலுக்குள் இரண்டு இஸ்லாமியரல்லாத பெண்கள் வருகிறார்கள். ஒருத்தி மாரியாயி. தலித்தாக பிறந்த மாரியாயி கரீமின் பண்ணையில் வேலை பார்க்க வந்து அவனுக்கே தன்னைப் பலியெனத் தந்தவள். தங்களுடைய சாதிப் பெண்களை பிறசாதி ஆண்கள் எப்படியெல்லாம் வஞ்சித்து வன்கலவி செய்கிறார்கள். தான் கரீமின் ஆள் என்பதால் எவனும் நெருங்க மாட்டான் என்று தனக்குள் நிம்மதி தேடிக் கொள்கிறாள். அது மட்டுமல்ல கரீமின் மனைவியும் கூட தனக்கு ரம்ஜானுக்கும், தீபாவளிக்கும் புதுச்சேலை எடுத்துத் தருகிறாள். தங்களில் ஒருத்தியாகத் தான் நாம் பார்க்கப்படுகிறோம் என்றே நினைக்கிறாள். ஆனாலும் கூட வாசகனுக்கு அவளின் நிறமும், அவள் புழங்கிக் கொள்ளத் தனிப்பாத்திரங்கள் வீட்டில் இருப்பதும் ஞாபகமூட்டப்படுவதன் வழியாக தமிழ் இஸ்லாமிய வாழ்வில் இருந்தும் கூட அகலாத சாதிய மனம் வெளிப்படுகிறது.

கரீமின் அண்ணன் மகளான வஹிதாவின் திருமண ஏற்பாட்டை ஏன் தன்னிடம் சொல்லவில்லை என்று மாரியாயி கோபித்துக் கொள்கிறாள். அப்போது ஒரு விவாதம் நடக்கிறது. விவாதத்தின் முடிவில் மாரியாயி இப்படி நினைத்துக் கொள்கிறாள். அவன் சொல்வது உண்மைதான். தன்னைக் காட்டிலும் தன் இடத்தை “அவன் சரியாகவே தெரிந்து வைத்திருக்கிறான். இது ஏன் தனக்குப் புரியவே மாட்டேனென்கிறது என்று மனதில் நினைத்தபடி முகத்தை சேலை முந்தானையால் அழுத்தி துடைத்துக் கொண்டாள்".... இம் மன உணர்வில் வாசகன் அடையும் இடம் எது? தன் மீது சுமத்தப்பட்டிருக்கும் இழிவை விரும்பி ஏற்றுக் கொள்ளும் மனோபாவத்தைக் கட்டமைத்து தலித்களை யும், பெண்களையும் தன்னுடைய கோட்பாட்டு அடிப்படைக்குள் நெறிப்படுத்திடும் கலாச்சாரப் பணி செய்யும் இதுவரையிலான எழுத்துப் பிரதிகளின் நிலையிலிருந்து இரண்டாம் ஜாமங்களின் கதையும் மீளவில்லை என்பதை அவசியம் சொல்ல வேண்டியிருக்கிறது.

தனித்த இஸ்லாமிய வாழ்வியல் கலாச்சார அடையாளங்களைக் கொண்டதாக ரமலான் மாதத்து இஸ்லாமிய தெருக்களும், வீடுகளும் அடையும் பெரும் கொண்டாட்ட மன நிலை அபூர்வமாக நாவலில் பதிவு பெற்றுள்ளது. வஹிதாவின் திருமண ஏற்பாடுகளின் வழியாக இஸ்லாமியர் களின் நிக்காஹ் சடங்குகள், நபிவழித் திருமணம் குறித்த தர்க்கங்கள், விவாதங்கள், மஹர் கொடுத்திடும் பழக்கம் மட்டுமே கொண்டிருந்த இஸ்லாமியர் களின் வீடுகளுக்குள் வரதட்சணை வந்த விதமும், வரதட்சணையில் குறிப்பிட்ட சதவீதத்தை ஜமா-அத் தார்கள் பெற்றுக்கொண்டு பிரியாணி மணக்க நிக்காவை நடத்தித் தருவதும் நாவலுக்குள் பதிவாகியுள்ளது. மற்ற விஷயங்களில் மார்க்கத்தின் அடிப்படையை வலியுறுத்துபவர்கள் இவை யாவும் நபிவழித் திருமணத்தில் கிடையாது என்றோ, ஹராம் எனவோ விவாதிக்கப்படவில்லையே ஏன் என சாதாரண வாசக மனத்தில் கூட கேள்வியை எழுப்புகிறது நாவல்.

சாரா அபுபக்கர் எழுதிய "சந்திரகிரி ஆற்றங்கரையில்" எனும் நாவல், நான் வாசித்தறிந்தவரை தான் பிறக்க நேர்ந்திட்ட சமூகத்தின் அழுக்குகளை பூச்சின்றி வெளிப்படுத்திய முக்கியமான நாவலாகும். தமிழில், அதுவும் மூடுண்டு கிடக்கிற இஸ்லாமிய பெண் உலகம் குறித்து இவ்வளவு வெளிப் படையாக விவாதித்த எழுத்துப் பிரதியாக "இரண்டாம் ஜாமங்களின் கதை"யைத் தவிர வேறு ஒன்றும் இருப்பதாகத் தெரியவில்லை.

பெண்களின் வெளியை எவர் திட்டமிட்டு வடித்திருப்பார்கள்?. வீட்டிற்குள்ளும், வெளியேயும் கூட அவர்களின் இருப்பைத் தீர்மானிப்பதில் மதச் சடங்குகளுக்கு பெரும் பங்கிருக்கிறது. அது இஸ்லாமிய சமூகத்துப்பெண் என்றால் நிலைமையே வேறு. நான் முதலில் இஸ்லாமிய நண்பரின் வீட்டிற்கு விருந்தாளியாகச் சென்ற பொழுதினில் நிகழ்ந்த சம்பவம் வாசகனுடைய புரிதலுக்கு உதவும் என்பதால் பதிவு செய்கிறேன்.

சாப்பாட்டு மேசையில் எல்லாவற்றையும் எடுத்து வைத்ததில் இருந்து பரிமாறுவது வரை அந்த வீட்டின் ஆண்களே எல்லாவற்றையும் செய்தார்கள். அதைப் பார்த்து மகிழ்ந்தது என் முற்போக்கு மனம். விடை பெற்றுச் செல்வது வரை அந்த வீட்டின் பெண்கள் என் கண்களுக்குத் தட்டுப்படவேயில்லை என்பது எனக்கு காலதாமதமாகத்தான் உரைத்தது. அவர்களுக்கு மட்டுமேயான தனித்த உடல்சார் அவஸ்தைகளின் உச்சத்தை பிர்தௌஸின் மூலமாக, பாத்திமாவின் மூலமாக, மும்தாஜின் வழியாக நான் இரண்டாம் ஜாமங்களின் கதையில் வாசித்துக் கடக்க முடியாத நொடியில் நான் எப்போதோ எங்கோ பார்த்திருந்த காட்சிகள் மனத்திரையில் நகர்ந்தன. எழுதியவற்றிலிருந்து எழுதாத வேறொன்றுக்கு வாசகனை நகர்த்திடும் இலக்கிய வடிவமே நாவல் என்று இங்கும் ஒரு முறை நான் உறுதி செய்து கொள்கிறேன்.

ரமலான் மாதத்திற்கு முந்தைய வாரங்களிலேயே நோன்பிற்கான முன் வாசனையை வீட்டிற்குள் நிறைப்பவர்களாக பெண்கள் இருக்கிறார்கள். ஆம்பிளைகள் தின்று தீர்ப்பதற்கான இடியாப்பமாவு, அரிசிமாவு இடித்து தயாரிப்பது என்பது ஒரு திருவிழாவைப் போல நடந்தேறுகிறது. ஆண்களற்ற சுதந்திரமானவெளியில் கட்டுண்டு கிடந்த பெண் மனதின் உரையாடல் தடைகளற்று சுதந்திரமாக வெளிப்படுகிறது. அப்படித்தான் வெளிப்படும். ஆண்வாசனை தொலைவிலிருக்கும் மரணவீட்டில் கூடியிருக்கும் பெண்களின் உரையாடலுக்குள் முகிழ்த்து வரும் பாலியல் கிளர்ச்சியும், உடலின் அளவு குறித்த பதிவுகளும் இதுவரை தமிழ்ப் புனைவுலகம் சந் தித்திராதவை என்றுதான் சொல்ல வேண்டும். பாலியல் கிளர்ச்சியை பரவ விடுபவளாக கசாப்புக் கடைக்காரரின் மகள் இருப்பதும், என்ன இப்படி பேசுகிறாள் என மேட்டுக்குடி சொஹ்ரா பேசுவதும், இழிசினர் வழக்கு என்றே எழுத்தாளர் நினைக்கிறாரோ. .

ஜென்மபுத்தி செருப்பாலடித் தாலும் போகாது என்று, குணநலன்களை பிறப்பின் அடிப்படையிலும் கட்டமைக்கும் கதையாடல்களும் நாவலுக்குள் நிரவிக்கிடக்கின்றன. தன்னுடைய சித்தி மைமூன், கெட்டுச் சீரழிந்து கருவைக் கலைத்திருக்கிறாள். தன்னுடைய தங்கை பிர்தௌஸ் புருஷனை ஒதுக்கி தனித்து இருந்தவள். சிவா என்கிற காபிரான அய்யருடன் கூடியதால் தற்கொலைக்கு நிர்பந்திக்கப்படுகிறாள். எனவே தன் மகள் ராபியாவும் அப்படி வந்து விடக்கூடாதேயென சொஹ்ரா எப்போதும் அவளை உடலாக மட்டும் பார்த்து அச்சமூட்டிக் கொண்டேயிருக்கிறாள். நூரம்மா உடலை விற்றுப் பிழைக்கும் பெண்ணாக இருந்தவள். அதனால்தான் பாத்திமா உடல்தரும் அச்சத்தில் இருந்து மீள முடியாது, வேட்கையைத் தணிக்க முருகனுடன் போய் மதுரையில் குடும்பம் நடத்துகிறாள் என்ற பதிவின் மூலமாகவும் குணநலன்களை கட்டமைப்பதில் பிறப்பிற்கு பங்கு இருக்கிறதென்ற சனாதனதர்மத்தின் குரலே இதுவென வாசகனை யோசிக்கச் சொல்கிறது.

பிர்தௌஸ் தற்கொலைக்கு நிர்பந்திக்கப்படுவதும் பாத்திமா விபத்தில் பலியாவதும் மரபுகளைத் தாண்டும் பெண்களுக்கு ‘அல்லா வாழும் காலத்திலேயே கூலியைக் கொடுத்து விடு வான். இம்மை நாள் வரும் வரை காத்திருக்க மாட்டான்’ என்கிற வைதீகக் குரலுக்கு இடமளிக்க கூடியதாகத்தான் அமைந்திருக்கிறது. நாவலாசிரியர் மிகுந்த கவனத்துடன் செயல்பட்டிருப்பதை நாவலின் ஒவ்வொரு கட்டத்திலும் வாசக மனம் உணர்கிறது. மத நிறுவனங்களுக்கு எதிரான சல்மாவின் கட்டமைப்பை அவருடைய மற்றொரு கதாபாத்திரம் அழித்து எழுதி விடுவதை நீங்கள் உணரமுடியும்.

எழுத்தாளர்தன் உள்ளங்கைக்குள் வைத்திருந்த கதையை ஒருவரிடம் தர, அங்கிருந்து அது மற்றொருத்தியின் கதையை வாசக மனதிற்குள் கடத்துகிறது. கனவுகள் பெருகித் துன்புறுத்தும் இரண்டாம் சாமங்களின் கதைக்குள் காட்சியுறும் பெண் உலகம் இது வரையிலான தமிழ் எழுத்துப் பிரதி கண்டிராத அதிர்ச்சியூட்டும் எதார்த்த வடிவிலானவை என்பதால் நேர்க்கோட்டு வாசிப்பில் வாசக மனதினுள் பாய்ந்துசெல்லும் சாத்தியம் கொண்டதாக இருக்கிறது.

ம.மணிமாறன்

கருத்துகள்

2 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
  1. நல்லா எழுதியிருக்கிங்க... படிக்கும் ஆர்வம் இருந்தும் இங்கு (அபுதாபி) படிக்க நேரமில்லை என்பதைவிட நல்ல புத்தகங்கள் கிடைக்கவில்லை. இந்த முறை ஊருக்கு வரும்போது நிறைய வாங்கி வரவேண்டும். உங்களைப் போன்றோரின் எழுத்துக்களைப் படிப்பதில் ஒரு சந்தோஷம்.

    பதிலளிநீக்கு
  2. இந்நாவலை படிக்கவேண்டும் என ஆவல் தூண்டுகிறது..

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!