மாதவராஜ் பக்கங்கள் - 18

வாசிப்பு அனுபவங்கள் பற்றி முன்னர் ஒருமுறை பதிவர் லேகா அவர்கள் அழைத்த தொடர் பதிவில் ‘பாட்டியில் குரலில் இருந்து விரியும் கதையுலகம்’ என தொடர்ச்சியான இரு பதிவுகள் எழுதியிருந்தேன். அதன் இறுதியில் இப்படி முடித்திருந்தேன்.

என்னோடு பால்ய காலத்தில் கதைகளை நோக்கி ஓடிவந்த என் தங்கை, இதே நேரம் தன் பையனின் அல்லது கணவனின் துணிமணிகளைத் துவைத்துக்  கொண்டிருப்பாள். இரண்டு மாதங்களுக்கு முன்பு "இப்பல்லாம் புத்தகங்கள் படிக்கிறியா" என்று கேட்டபோது, சிரித்துக் கொண்டே "காபி சாப்பிடுறியா" என்று அவள்  என்னிடம் கேட்டாள்.

இதைப்படித்துவிட்டு, உஷா அவர்கள் பின்னூட்டத்தில் வருத்தப்பட்டு கீழ்க்கண்டவாறு எழுதியிருந்தார்கள்.

இந்த வரிகள் மிகவும் வேதனையை தந்தன. உங்கள் தங்கை என்னும்பொழுது வயது நாற்பதுக்குள் இருக்கும் என்று நினைக்கிறேன். முன்பு போல இப்பொழுது வீட்டுவேலை சுமைகள் குறைவு. செல்வியும், கோலங்களும் பார்க்க நேரம் இருக்கும்பொழுது, தினசரியை புரட்ட ஆகும் பத்து நிமிட நேரமின்மை என்னால் ஒத்துக் கொள்ள இயலவில்லை. விலங்குகளை யாரும் போடவில்லை. விரும்பி அணிந்துக் கொண்டு பெருமைப்பட்டுக் கொண்டு இருக்கிறோம்.

உஷா அவர்களுக்கு பதிலாக எழுதியது இது:

வாய்ப்புகளையும், சூழலையும் நீங்கள் முதலில் புரிந்து கொள்ள வேண்டும். ஒரு சிற்றூரில் வசிக்கும் அவளுக்கு, வீட்டிற்குள் புத்தகங்கள் எப்படி வரும்? ஆனந்தவிகடனும், குமுதமும்தான் அவளுக்கு மிஞ்சிப் போனால் வாய்க்கின்றன.வாசிக்கிறவர்கள், அதைப் பகிர்ந்து கொள்கிறவர்கள் கூட இருக்கும்போது, அது குறித்த ரசனையும், விருப்பமும் இயல்பாக ஏற்படும். இருபது வருடங்களுக்கு மேலாக வேறொரு உலகத்தில் வாழ்ந்துவிட்டு, திரும்பவும், தனது விருப்பமான உலகத்தை மீட்டெடுப்பது, குடும்பத்தில் நமது பெண்களுக்கு மிகவும் அரிதான காரியம். விலங்குகளை யாரும் போடவில்லை, நாமே விரும்பி அணிந்து கொள்கிறோம். இதில் 'விரும்பி' என்பதை ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. தவிர்க்க முடியாமல் அணிந்து கொள்கிறோம் என்பது வேண்டுமானால் சரியாக இருக்கும்.

இதெல்லாம் நடந்து ஒரு வருடமாகிவிட்டது. இப்போது அதே தங்கை ‘சொல்லத்தான் நினைக்கிறேன்’ என வலைப்பக்கம் தொடங்கி எழுதவும் ஆரம்பித்து விட்டாள். இந்த காலத்திற்குள் என் வலைப்பக்கங்களை படித்து, கொஞ்சநாளில் பின்னூட்டமிடப் பழகி, இப்போது தனிப்பதிவுகளே எழுதிடும் அளவுக்கு முன்னேறிவிட்டாள். சந்தோஷமாகவும், ஆச்சரியமாகவும் இருக்கிறது.

 

தெலுங்கானா புயல் மையம் கொண்டு விட்டது. திருச்செந்தூரில் பண மழை பெய்து ஓய்ந்திருக்கிறது.  நோபல் பரிசு வாங்கிய கையால், ஆப்கனுக்கு கூடுதல் படையனுப்ப ஒபாமா உத்தரவிட்டிருக்கிறார். சுற்றிப்படரும் செய்திகளில் கவனமற்று, எங்கள் வங்கி, எங்கள் பிரச்சினைகள், அதையொட்டிய தொழிற்சங்க நடவடிக்கைகள் என சுழன்று கொண்டு இருந்திருக்கிறேன்.  

இப்போது கொஞ்சம் நிதானத்துக்கு வந்த மாதிரி இருக்கிறது. மொத்தம் சஸ்பெண்ட் செய்யப்பட்ட 50 பேர்களில், 46 பேருக்கு ஸ்டே ஆர்டர் கிடைத்திருக்கிறது. கோர்ட்டிலிருந்து ஆர்டர் கிடைக்கப்பெற்றவர்கள் பணிகளில் சேர ஆரம்பித்திருக்கிறார்கள். நிர்வாகம் அடுத்து என்ன செய்யக் காத்திருக்கிறதோ தெரியவில்லை. பதற்றமில்லாமல், எதிர்கொள்வது என சித்தமாயிருக்கிறோம்.

ரொம்ப நாளைக்குப் பிறகு நேற்று முழுவதும் வீட்டிலேயே இருந்தேன். போன்களின் அழைப்புகளும் பெரிதாய் இல்லை. எப்போதும் படிக்கிற  வலைப்பக்கங்களை எட்டிப் பார்க்க முடிந்தது. நிறைய எழுதியிருக்கிறார்கள். நேரம் கண்டுபிடித்து படிக்க வேண்டும்.

 

பூக்களிலிருந்து வெளிவரும் புத்தகங்களுக்கு சென்னையில் வெளியீட்டு விழா நடத்த வேண்டும் என பவா செல்லத்துரை தொடர்ந்து சொல்லிக்கொண்டு இருக்கிறார். எழுத்தாளர்கள் ஜெயகாந்தன், எஸ்.ராமகிருஷ்ணன், பாலுமகேந்திரா போன்றவர்களோடு பதிவர்களையும் இணைத்து ஒரு நிகழ்ச்சிக்கு திட்டமிடலாம் என்று யோசனை தந்திருக்கிறார். மற்றவற்றையெல்லாம் வம்சி புக்ஸ் பார்த்துக் கொள்ளும் எனவும் உற்சாகப்படுத்துகிறார். பார்ப்போம்.

கருத்துகள்

10 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
  1. சென்னையில் விழாவா..?

    வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  2. திருசெந்தூரில் பண மலை என்பதை நான் ஒத்துக் கொள்ள மாட்டேன்.

    ஆர்கூட்டில் ஒரு நண்பர் சொன்னது போல், எம்ஜீஆர் ஆட்சியில் ஒரு லட்சம் ரூபாய் கொடுத்தால் கூட வாக்களர் பணத்தை வாங்குவார் ஆனால் இரட்டை இலைக்கே வாக்கு அளிப்பார் .

    அப்படி இருந்த அதிமுக சார்ந்த வாக்காளர்களை திமுக பக்கம் திரும்ப வைத்த ஜெயலலிதாவின் தவறான நடவடிக்கைகளை நாம் ஒடுக்கி விட்டு, தவறாக பேசி கொண்டு இருக்கிறோம்.

    ஒரு எதிர்கட்சியாக கூட தன பணியை சரி வர செயாத அதிமுக தலைமை மீது உள்ள குறைகளை நிவர்த்தி செயாமல், கண்மூடி தனமாக ஆசாகிரி மீது குறை கொண்டு இருக்கிறோம் நாம்.

    பதிலளிநீக்கு
  3. உங்கள் ஷோபா என்னும் அழியாத கோலம் பதிவு எனது blog-ல் இந்த வருடத்தின் சிறந்த பதிவுகள் வரிசையில் இடம் பெறுகிறது . விபரங்களுக்கு எனது blog பாருங்கள் நண்பரே

    பதிலளிநீக்கு
  4. அண்ணா, உன்னுடைய அந்த பதிவுக்கு பின் தான் படிப்பது பற்றிய சிந்தனையே வந்தது. வலையுலகை வாசிக்க ஆரம்பித்தேன். இப்போது எழுதவும்...
    இப்போதுதான் `அ, ஆ ‘ ஆரம்பித்து இருக்கிறேன். நிறைய கற்றுக் கொள்ள வேண்டும்.
    எனக்கும் சந்தோஷமாகவே இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  5. மாதவராஜ், மிக மகிழ்ச்சியாய் இருக்கிறது. உங்கள் தங்கைக்கு வாழ்த்துச் சொல்லிவிட்டேன். தயக்கங்களை உதறிவிட்டு எழுத சொல்லுங்க.

    பதிலளிநீக்கு
  6. வாசித்தேன் தோழா..
    மற்றவை பின்பு.

    பதிலளிநீக்கு
  7. நல்லா இருக்கீங்களா மாதவன்?

    எழுத்துக்களில் வியர்வை வாசனை.தொழிற்சங்க வியர்வை.

    தாண்டி மணக்கிறது,நம் குட்டீஸ்களின் பரிணாமம்.

    மீண்டு வரட்டும் என்பதற்காகவே நீங்கள் தெரிய படுத்திய இரு தேர்வுகளையும் இன்னும் தளத்தில் பேசவில்லை.பேசணும்.பேசலாம்.

    அம்பிகா வரவு சந்தோசமாக இருக்கிறது.நல்ல ஜாலியான எழுத்து.உங்களை போலான க.பூனை எழுத்தல்ல.தொழிற்சங்கம் நம் சகோதரிகளுக்கு குடும்பமே.அவர்கள் அதை பேசட்டும்.

    என்னவோ பெரிய குறை மக்கா..வாங்க பேசலாம்.தற்சமையம் உங்களுக்கு தர ஒரு விஷயம் உள்ளது.அது..

    "போராட்டம் வெல்லட்டும்!" என்பதே!

    பதிலளிநீக்கு
  8. அருமையான இடுகை வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  9. butterfly surya!
    பவா வலியுறுத்திக்கொண்டு இருக்கிறார். நாந்தான் இன்னும் பதில் சொல்லாமல் இருக்கிறேன்.

    குபன் யாஹூ!
    அதிமுகவை ஆதரித்து நான் எழுதவில்லை. அதே நேரம் ஜனநாயக நெறிகளை துச்சமாக மதிக்கும் திமுகவை என்ன செய்ய?

    சென்ஷி!
    நன்றி.


    மோகன்குமார்!
    மிக்க நன்றி.


    அம்பிகா!
    நன்றி.


    உஷா!
    சந்தோஷமாக இருந்தது உங்கள் பின்னூட்டம் பார்த்து. மிக்க நன்றி.


    கும்க்கி!
    நன்றி.


    பா.ராஜாராம்!
    எப்படியிருக்கீங்க. நிறைய எழுதியிருக்கிறீர்கள். மொத்தமாக உட்கார்ந்து அனைத்தையும் ஆற அமர படிக்க வேண்டும். நன்றி.


    தியாவின் பேனா!
    நன்றி.

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!