ஆறரை வருடங்கள் கழித்து....




வணக்கம்.

2008 செப்டம்பர் 25ம் தேதி  தீராத பக்கங்களில் எனது முதல் பதிவை எழுதி இருந்தேன். ஐந்தரை வருடங்கள் தொடர்ந்து இந்த பக்கங்களிலேயே என் சிந்தனைகளை பகிர்ந்திருந்தேன். 2014 மே 1ம் தேதி எழுதியதற்கு பின் இங்கு வரவில்லை.

பனிரெண்டு வருடங்களுக்கு முன்பு இருந்தது போல blog இல்லை. வெறிச்சோடித் தெரிகிறது. சமூக வலைத்தளங்கள் வெவ்வெறு வடிவங்களில், தன்மைகளில்  நிறைந்து இருக்கின்றன. உடனடியாக, சின்னச் சின்னச் சின்னதாய், சட் சட்டென்று உரையாடுவதாய், பகிர்வதாய் பெருகி விட்டன.

இருந்தாலும் பிளாக்கர் உலகம் போல் சுவாரசியமும், ஒரு நிறைவும், பரந்த வெளியும் கொண்டவைகளாய் மற்றவை இல்லை என்றே தோன்றுகிறது.

எவ்வளவோ நண்பர்கள், எவ்வளவோ அரட்டைகள், விவாதங்கள் என கடந்த காலம் ததும்பி கிடக்கிறது இங்கு.  மற்றவர்களை மட்டுமல்ல நம்மையும் அறியவும் பகிரவுமாய் இருந்த ஒரு வசந்த காலம் அது.

நிறைய நினைவுகளோடு அங்கங்கு உலவிப் பார்த்தேன். பக்கங்கள் எதுவும் பழையதாய் இல்லை. புதுசாகவே இருக்கின்றன.

முதன் முதலில் பிளாக் எழுத ஆரம்பித்த அதே செப்டம்பரில் அதே நாட்களில் - 12 வருடம் கழித்து  மீண்டும் இங்கு வரத் தோன்றியதும், வாய்த்ததும் எதோ ஒரு காரணத்துக்காக என்றுதான் நினைக்கிறேன்.

இன்னும் சரியாக ஏழு மாதங்களில் வங்கிப் பணியில் இருந்து ஓய்வு பெற்ற பின், இங்கு கொஞ்சம் ஆசுவாசமாக வர வாய்ப்பிருக்கிறது.

மீண்டும் இங்கு எழுத ஆரம்பிக்க வேண்டும்.

கருத்துகள்

5 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
  1. உங்கள் எழுத்துக்களை மீண்டும் காண ஆவல்.

    நா. கணேசன்
    http://nganesan.blogspot.com

    பதிலளிநீக்கு
  2. அன்பின் மாதவ் 
    எனக்குமே ஆகப்பெரிய வருத்தம் உண்டு, நீங்கள் வலைப்பூவில் எழுதுவது இல்லை என்பது... இந்த மறு நுழைவு உற்சாகம் அளிக்கிறது. தனிப்பட்ட விதத்தில், எனது எத்தனை படைப்புகளை இந்த வலைப்பூவில் கொண்டாடி நீங்கள் வெளியிட்டு வந்தீர்கள், தர்ப்பணசுந்தரி எனும் என் சிறுகதைக்குத் தான் எத்தனை பின்னூட்டங்கள், மூத்த எழுத்தாளர் காஸ்யபன் அவர்கள் தொடங்கி...... வாருங்கள் தோழா...மீண்டும் எழுதுங்கள், உங்களது அன்றாடத் தொடக்கப் புகைப்படங்கள் இணைந்த பதிவுகள், சக ஊழியர் பற்றிய வரைவுகள், உங்கள் அன்னை பற்றிய உள்ளத்தை நெகிழ்த்திய கட்டுரைகள்....போன்ற போன்ற போன்ற ஆக்கங்களுக்கான ஓர் எளிய வாசகர் காத்திருக்கிறேன், எண்ணற்ற புதிய வாசகர்கள் என்னைவிட ஆர்வமாக இருப்பார்கள், உங்கள் வங்கியில் மட்டுமல்ல, அதற்கும் வெளியே பரந்த உலகிலும்...
    எஸ் வி வேணுகோபாலன் 

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!