கம்யூனிஸ்டுகள் ஏன் ஜெயலலிதாவிடம் போய் நிற்கிறார்கள்?



இந்த 101வது சர்வதேச மகளிர் தினத்தன்று, இரண்டு பெண் தலைவர்கள் இறங்கி வருவதற்காக தமிழகத்தின் அரசியல் கட்சிகள் தவமிருந்தன. சோனியா காந்தியின் சம்மதம் கிடைக்க டெல்லியில்  உடன்பிறப்புக்கள் காத்திருந்தனர். ஜெயலலிதாவின் அழைப்புக்கு தோழர்கள் சென்னையில் காத்திருந்தனர். தேர்தல் என்னும் ஜனநாயக ஹம்பக்கில் மான, ரோஷங்களுக்கு சற்றும் இடம் கிடையாது போலும். இதெல்லாம் சகஜம் என்று மடிப்புக்கலையாத சட்டைகளில் உடன்பிறப்புக்கள் தங்கள் அரசியல் குறித்து பெருமிதம் கொள்ளவும் செய்வார்கள். வருத்தமானது,  கம்யூனிஸ்டுகளுக்கு ஏற்பட்ட நிலைதான்.

சர்வதேச பாட்டாளி வர்க்கத்தின் சிந்தனைகளைப் பெற்று, ஒட்டு மொத்த மானுட விடுதலைக்காக தங்களை அர்ப்பணித்துக்கொண்டவர்களை இப்படிப் பார்க்க சங்கடமாக இருக்கிறது. ஒடுக்கப்பட்ட, வஞ்சிக்கப்பட்ட மக்களுக்காக அல்லும் பகலுமாய் இயக்கங்கள் நடத்தி, அரசுக்கு எதிராகத் தொடர்ந்து குரல் எழுப்பும் ஒரு மகத்தான இயக்கத்திற்கு நேரும் கதி சகிக்க முடியாததாய் இருக்கிறது.  தனிப்பட்ட வாழ்விலும், பொது வாழ்விலும்  எளிமையும், நேர்மையும் கொண்டவர்களுக்கு எப்பேர்ப்பட்ட சோதனை இது. வரலாற்றின் நெடிய பக்கங்களில் முக்கியமான பாத்திரம் வகிப்பவர்களுக்கு ஏற்பட்டு இருக்கிற அவலக் காட்சி இது.

மற்ற கட்சிகளைப் போல,  ‘ஐந்து வருடங்களுக்கான மக்களின்  இறுதித் தீர்ப்பாக’ கம்யூனிஸ்டுகள் ஒருபோதும் தேர்தலை பார்ப்பதில்லை. இந்த அமைப்பின் அவலட்சணங்களையும்,, அரசின் அநியாயங்களையும் மக்களிடம் கொண்டு செல்வதற்கான ஒரு மேடையாகவே  தேர்தலை பார்க்கிறார்கள். அதிகாரத்திலிருப்பவர்களுக்கு எதிராகத் திரள்பவர்களோடு கைகோர்த்து, பிரச்சாரம் செய்து  தங்கள் கருத்துக்களுக்கு பௌதீக சக்தி சேர்க்க  முயல்கிறார்கள். மக்களின் எதிர்ப்பை ஆட்சியாளர்களுக்கு உணர்த்த பயன்படுத்துகிறார்கள். தேர்தல் கூட்டணி என்பதன் பொருளை இப்படித்தான்  புரிந்தும், செயல்படுத்தியும் வருகின்றனர் கம்யூனிஸ்டுகள். 

இப்படித்  தேர்தலில் நின்று கம்யூனிஸ்டு எம்.எல்.ஏக்களும், எம்பிக்களும் மற்ற கட்சியினரைபோல்  நாலு காசு பார்க்கப் போவதில்லை. எந்தக் கோட்டையையும் கட்டப் போவதில்லை (அப்படி கட்டுகிறவர்களுக்கு இயக்கத்தில் இடமிருப்பதில்லை). பஸ்ஸிலும், மொபெட்டிலுமே  வாழ்நாள் முழுவதும் பயணம் செய்து கொண்டு இருப்பார்கள். தெருவோரக் கடைகளில் டீயும் பன்னையும் சாப்பிட்டுவிட்டு. “தோழர்” என  உற்சாகமாய்ச் சிரிப்பார்கள். அவ்வளவுதான். இப்படித் தேர்தலில் நிற்பதன் மூலம்  முடிந்த வரையில்,  சட்டசபைகளிலும், பாராளுமன்றங்களிலும் தங்கள் எண்ணிக்கையை அதிகரித்து, மக்களின் குரலை கூடுதல் சக்தியோடு பிரதிபலிக்கிறார்கள். அரசின் மக்கள் விரோத கொள்கைகளை அம்பலப்படுத்துகிறார்கள்.  சாத்தியமானவைகளில், தலையீடு செய்து தடுத்து நிறுத்தவும் செய்கிறார்கள். ஆனால் அதுமட்டுமே  தங்கள் முக்கியமான நடவடிக்கையாகக்  கருதுவதில்லை.

எல்லாவற்றையும், மக்களிடம்  கொண்டு செல்ல வீதியில் இறங்கி பிரச்சாரம் செய்கிறார்கள். போராடுகிறார்கள். ஒரு ஊரின் தெருவில் சாக்கடையை சுத்தம் செய்வதிலிருந்து,  ஒரு தேசத்தின் மிகப்பெரும் பிரச்சினையான ஸ்பெக்ட்ரம்  ஊழல் வரை அவர்கள் இயக்கங்கள் நடத்திக்கொண்டே இருக்கிறார்கள்.  சாலைகளில்,  தெருவோரங்களில் பத்துப்பதினைந்து பேர் சிவப்புக் கொடிகளோடு  மறியலும், ஆர்ப்பாட்டமும் செய்துகொண்டேதான் இருக்கிறார்கள்.    அவ்வழியே போகும்  மக்கள் இன்று அவர்களைக் கவனிக்காமல் இருக்கலாம். ஒருநாள் அவர்கள் திரும்பிப் பார்ப்பார்கள், ஒருநாள் அவர்கள் அணி திரள்வார்கள், ஒருநாள் தங்கள் துயரங்களுக்கான விடியலைக் கொண்டு வருவார்கள் என்னும் மகத்தான கனவோடு கம்யூனிஸ்டுகள் முஷ்டி உயர்த்தி குரல் கொடுத்துக்கொண்டே இருக்கிறார்கள்.  மக்கள் மேல் இருக்கிற நம்பிக்கை இது.

இதுதான் கம்யூனிஸ்டுகளின்  பாதையும் பயணமும் . இதன் போக்கில் கம்யூனிஸ்டுகள் அடையும்  துன்ப துயரங்களில் ஒன்றுதான், ஜெயலலிதா போன்றவர்களுக்காக காத்திருப்பது.  அவர்  போன்றவர்கள் தேர்தலில்  ஒதுக்கும் சீட்டுகளுக்காக  பேச்சுவார்த்தை நடத்துவது.  கருணாநிதி, ஜெயலலிதாக்களின் பின்னால் மக்கள் அணி திரண்டு நிற்பதால், இந்த அவமானங்களை கம்யூனிஸ்டுகள் பொறுத்தாக வேண்டி இருக்கிறது. அரசியல் மாற்றங்களை ஏற்படுத்தும் நடைமுறை தந்திரமாக, இந்த அழுத்தங்களை சுமக்க வேண்டி இருக்கிறது.

இந்த இடத்தில்தான் கம்யூனிஸ்டுகள் கேலிக்குரியவர்களாகவும், தரமிறங்கி நிற்பவர்களாகவும், பத்தோடு பதினொன்றாகவும்  சித்தரிக்கப்படுகிறார்கள். முந்தையப் பதிவில் கூட ரம்மி என்னும் நண்பர்  “ கதவு எப்போது திறக்கும், சுண்டல் எவ்வளவு கிடைக்கும் என செம்படை வீரர்கள் காத்திருப்பதாக” கிண்டலடித்திருக்கிறார்.  அந்த நண்பர்களுக்கெல்லாம் என் கேள்வியும், என் பதிலும் மிக எளியது, நேரிடையானது. “கம்யூனிஸ்டுகள் யாருக்காக, எதற்காக இப்படிஜெயலலிதாவிடம் போய் நிற்கிறார்கள்?”  இதில் தனிப்பட்ட சுயநல அரசியல் ஏதும் இருக்கிறதா, இல்லை பொதுநலம் சார்ந்த பொறுப்பு இருக்கிறதா?

(இன்னும் யோசிப்போம். ... விவாதிப்போம்...)

கருத்துகள்

23 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
  1. மிக நியாயமான வகையில் கருத்துக்களை எடுத்துரைத்துள்ளிர்கள் தோழரே. நம்முடைய சூழ்நிலை இன்று சிலரை சார்ந்து அரசியல் அரங்கில் போட்டி போட வேண்டியுள்ளது. நம்மை பழிப்பவர்கள் மற்றும் நையாண்டி செய்பவர்கள் ஒன்றை உணர்ந்து கொள்ள வேண்டும், நாம் என்றைக்கும் மக்கள் பிரச்னைக்கு மற்ற கட்சிகளை கூட்டு சேர்ந்து போராடுவதில்லை. மற்றவர்கள் வந்தாலும் வராவிட்டாலும் நாம் நம் போரட்டத்தை தொடருகிறோம். தொடருவோம்.

    பதிலளிநீக்கு
  2. ஈன்றாள் பசி காண்பாளாயினும் செய்யற்க சான்றோர் பழிக்கும் வினை என்ற குறளுக்கொப்ப நமது மக்களுக்காக கூட இந்த நாலாந்தர பேர்வழிகளிடம் போய் நமது தன்னலமற்ற தோழர்கள் நிற்ககூடாது என்பது நமது அவா.கருணாநிதியை தோற்கடிக்க mgr உடன் கூட்டு சேரவில்லை காமராஜ் என்பது இங்கு நினைவு கூற தக்கது.

    பதிலளிநீக்கு
  3. புறக்கணிப்பை புறக்கணித்து போராடுவோம் தோழரே.

    பதிலளிநீக்கு
  4. //பாரதம் விடுதலை பெற்றபோது, இரண்டாவது பெரிய கட்சி கம்யூனிஸ்ட் தான்!தற்போது சட்டம் இயற்றும் சபைகளில், பிரதினிதிதுத்துவம் பெறவே, சட்டி எடுக்கும் சூழல்! எங்கே பிழை? //


    அதற்கு முந்தைய உமது பதிவின் பின்னூட்டத்தில், கம்யுனிஸ்ட்களின் இன்றைய நிலை குறித்து எனது ஆதங்கம், மேலே! அதனையும் தாங்கள் குறிப்பிட்டிருக்கலாம், இப்பதிவில்!

    காங்கிரஸ்-தி.மு.க, பற்றிய உமது நையாண்டிக்கு, சுவை சேர்க்க விரும்பியே , எனது குறிப்பு! என்னுடையது நையாண்டி அல்ல! ஆதங்கமே!

    பதிலளிநீக்கு
  5. மிக நியாயமான வகையில் கருத்துக்களை எடுத்துரைத்துள்ளிர்கள்...

    தனி முடிவு எடுக்காமல் திராவிடக்கட்சிகளின் மீது சவாரி செய்வதையும் வாளி தூக்கி வசூலிப்பதையும் விட்டு இன்னும் தீவிரம் காட்டினால் சாதிக்க இயலுமே?

    பதிலளிநீக்கு
  6. மீதிஉள்ள பின்னூட்டப் பகுதியிலிருந்து!

    //காரத் போன்ற தலைவர்கள், அம்மாவின் வீட்டிற்கு காவடி எடுப்பது, எந்தத் தேவைகளின் அடிப்படையில்?

    சிறந்த கொள்கை, தன்னலமற்ற தலைவர்கள்/தொண்டர்கள் இருந்தும் எடுபடாமல் போனதன் காரணங்கள் எவை!?//



    விகிதாச்சார வோட்டின் அடிப்படையில், மக்கள் பிரதிநிதிகள், சட்டம் இயற்றும் சபைகளுக்கு தேர்ந்தெடுக்கப்படின், இது போன்ற, அவமானங்கள், தகுதிஉள்ளவர்களுக்கு நேராது!

    பதிலளிநீக்கு
  7. அரசியல் சண்டையில் உள்ளாடை கிழிவது சகஜம்!
    எங்களிடம் இன்னமும் நிறைய கோவணங்கள் உண்டு

    பதிலளிநீக்கு
  8. இந்த ஆதங்கம் இன்னும் எத்தனை நாளைக்கு மாதவராஜ்?

    பழைய பெருமையிலேயே இன்னும் எத்தனை காலம் தள்ளுவது?

    இவ்வளவு தோழர்களும் தொண்டர்களும் போதும் அடுத்த கட்டத்துக்கு கம்யூனிஸ்டுகள் செல்வதற்கு.

    எதற்கு எதிராக கம்யூனிஸ்ட்டுகளின் போராட்டம் இருக்கிறதோ அவற்றைப் பற்றிய அக்கறை இல்லாதவர்களோடேயே இன்னும் எத்தனை நாள் கூட்டு வைப்பதும் மரியாதையின்றி நடத்தப் படுவதை வழியின்றிச் சகிப்பதும்?

    எடுத்த எடுப்பில் விஜயகாந்துக்கு 41 இடங்கள் ஒதுக்கி முக்கியத்துவம் கொடுக்கும் அதிமுகவோடு உறவு வைத்துக் கொள்வது தங்கள் மீதே நம்பிக்கையற்ற தோற்றத்தைத்தான் தருகிறது.

    இன்னுமொரு பத்தாண்டுகளுக்குத் தேர்தல்களில் போட்டியிடாமல் அரசியலமைப்புச் சட்டமாற்றம் தொடர்பானவற்றில் தேசிய அளவில் விழிப்புணர்வையும் மாற்றங்கலையும் கொண்டுவரப் போராடினால் நிச்சயமாக ஆளும் இடத்திற்கும் இவர்களால் வர முடியும்.

    காலங்கள் மாறும்போது நம்மையும் மாற்றிக்கொள்வது அவசியம்.

    கொள்கைகள் மாறத்தேவையில்லை.அவற்றை எடுத்துச் செல்லும் முறை மாறத்தான் வேண்டும்.

    பதிலளிநீக்கு
  9. மக்களுக்காக போராடும் இயக்கம் தேர்தலில் தனித்துவம் இல்லாமல் போவது வருத்தத்திற்குரியது.

    பதிலளிநீக்கு
  10. இன்றுகூட சரத்குமார் கட்சிக்கு இடம் ஒதுக்கப்பட்டது, இடதுசாரிகளை இப்போதே மதிக்கத்தவறிய ஜெவுக்கு ஒரு பாடம் நிச்சயம் கற்றுத்தரவேண்டும். ஜெயோ கருணாநிதியோ இடதுசாரிகளை நன்றாக எடை போட்டு வைத்துள்ளனர். இவர்கள் சீட்டுக்காக கூட்டனி மாறமாட்டார்கள் என்று. அதிக இடங்களை இடதுசாரிகள் பெற்றால் இரு அணிகளுக்குமே பிடிக்காது.
    இதை அனுபவப்பாடமாக்க் கொண்டு அணுகுமுறையில் மாற்றம் வேண்டும்.

    பதிலளிநீக்கு
  11. தமிழகத்தை பொறுத்தவரை கம்யூனிஸ்டுகள் தங்களின் உழைப்பை கூட்டணி தலைவர்களுக்கு தான் கொடுத்து கொண்டிருக்கிறார்கள். விதைப்பது இவர்கள் என்றாலும் அறுப்பது இவர்கள் இல்லை.

    பதிலளிநீக்கு
  12. "எல்லாவற்றையும், மக்களிடம் கொண்டு செல்ல வீதியில் இறங்கி பிரச்சாரம் செய்கிறார்கள். போராடுகிறார்கள். ஒரு ஊரின் தெருவில் சாக்கடையை சுத்தம் செய்வதிலிருந்து, ஒரு தேசத்தின் மிகப்பெரும் பிரச்சினையான ஸ்பெக்ட்ரம் ஊழல் வரை அவர்கள் இயக்கங்கள் நடத்திக்கொண்டே இருக்கிறார்கள். சாலைகளில், தெருவோரங்களில் பத்துப்பதினைந்து பேர் சிவப்புக் கொடிகளோடு மறியலும், ஆர்ப்பாட்டமும் செய்துகொண்டேதான் இருக்கிறார்கள். அவ்வழியே போகும் மக்கள் இன்று அவர்களைக் கவனிக்காமல் இருக்கலாம். ஒருநாள் அவர்கள் திரும்பிப் பார்ப்பார்கள், ஒருநாள் அவர்கள் அணி திரள்வார்கள், ஒருநாள் தங்கள் துயரங்களுக்கான விடியலைக் கொண்டு வருவார்கள் என்னும் மகத்தான கனவோடு கம்யூனிஸ்டுகள் முஷ்டி உயர்த்தி குரல் கொடுத்துக்கொண்டே இருக்கிறார்கள். மக்கள் மேல் இருக்கிற நம்பிக்கை இது.

    பிறகு ஏன் ஜெயலலிதா பின்னால் செல்ல வேண்டும்?

    கேப்டன் கேடட் ஆன கதையையும் கொஞ்சம் படியுங்களேன்!
    http://hooraan.blogspot.com/2011/03/blog-post_06.html

    ஊரான்.

    பதிலளிநீக்கு
  13. ஏன் மேற்கு வ‌ங்க‌த்திலும், கேராளாவிலும் இவர்க‌ளின் ஆட்சி,
    அஸ்ஸாமில் நிதீஸ் குமாரின் ஆளுமை, குஸ‌ராத்தில்
    நரேந்திர‌ மோடியின் வ‌ள‌ர்ச்சியைப் போன்று த‌னித்து சிற‌க்க‌வில்லை?

    இரண்டு சீட்டுக்க‌ளில் இருந்த‌ பிஜேபி, இவ்வ‌ள‌வு வ‌ள‌ர்ந்திருக்கும் போது,
    சுத‌ந்திர‌ இந்தியாவின் மிகப் பெரிய‌ எதிர்க‌ட்சி ஏன் இன்று இந்த‌ நிலைக்கு வந்த‌து?

    பதிலளிநீக்கு
  14. மிக சரியாகவே சொல்லியிருக்கிறீர்கள். செங்கொடி கையில் ஏந்தி தெருவில் ஒரு பத்து பேரோடு கோஷம் போடும்போது வேடிக்கை பார்த்து கிண்டல் செய்பவர்களை கண்டு நொந்து போகாமல் காப்பது அந்த கொள்கையே. தளராமல் காப்பது அந்த திட்டமே. மிக்க நன்றி தோழர், சுற்றி இருப்பவர்களின் நையாண்டியில் மனம் சோர்வுற்றிருக்கும் என்னைப் போன்றோர்கள் கண்ணில் நீர் வார்த்த பதிவு. பிரதி எடுத்துவிட்டேன். இனி காணும், கேட்கும், நக்கல் செய்யும் ஒவ்வொருவரிடமும் நான் காட்டி அவர்களையும் இணைத்து செல்வேன். மீண்டும் நன்றி தோழர்.

    பதிலளிநீக்கு
  15. //. “கம்யூனிஸ்டுகள் யாருக்காக, எதற்காக இப்படிஜெயலலிதாவிடம் போய் நிற்கிறார்கள்?” இதில் தனிப்பட்ட சுயநல அரசியல் ஏதும் இருக்கிறதா, இல்லை பொதுநலம் சார்ந்த பொறுப்பு இருக்கிறதா?

    //

    மிகமிகச் சரியான கேள்வி அண்ணா

    பதிலளிநீக்கு
  16. நீங்கள் கம்யூனிஸ்டுகள் ஜெ.விடம் போய் நிற்பதற்கான காரணங்களை மார்க்சிய காவிய நயத்தின் பின்ணனியில் இருந்து பேசுகிறீர்கள்.சட்டசபையில் நாலு சீட்டு இல்லாவிட்டாலும் இடதுசாரி இயக்கங்கள் தன்மை மாறாமலிருக்கும் என்று நான் நம்பத் தலைப்பட்டால் என் அடுத்த கேள்வி தோழரே என் திமுக .க...அதிமுக என மாறி மாறி இடதுசாரிகள் போகவேண்டும்? சில அடிப்படையான விஷயங்களில் இடதுசாரிகள் உறுதியாக இருக்கிறார்கள் என்பதை நான் மறுக்கவில்லை.( நீங்கள் சொல்வது போல டீக்கடையில் தோழரே என்று இன்னும் விளிப்பதைப் போல) 91-96 காலகட்டம் அந்தக் காலத்தில் வாழ்ந்தவர்களிடம் மரணம் வரை மறையப்போவதில்லை..மானுடத்தின் மீப்பெரும் வேள்வியாளர்களான வலது மற்றும் இடது கம்யூனிஸ்டுகள் அதை மறந்துவிட்டார்களா?இதை நாம் திமுகவுக்கும் தாராளமாக பொருத்தலாம்.இடதுசாரிகளுக்கு தேர்தல் அரசியலில் தெளிவு கிடையாது.அமெரிகாவுடன் அணுசக்தி ஒப்பந்தத்தை எதிர்த்தவர்கள் என்னவானர்கள்?.மேலும் அப்போது இடதுசாரிகள் காங்கிரசுக்கு கடிவாளம் போடும் நிலையில்தான் இருந்தார்கள்.இந்திய மார்க்சியர்கள் வலது மற்றும் இடது கம்யூனிஸ்டுகளுக்கு சப்பை கட்டு கட்டுவதுதான் வரலாற்றின் துயரம்.அது அவர்களின் துயரம் கூட...

    பதிலளிநீக்கு
  17. சிபிஎம் ஐ கழற்றி விடுகிறார் ஜெயலலிதா http://powrnamy.blogspot.com/2011/03/blog-post_10.html

    பதிலளிநீக்கு
  18. மிக நியாயமான வகையில் கருத்துக்களை எடுத்துரைத்துள்ளிர்கள் தோழரே.

    பதிலளிநீக்கு
  19. The CPM itself admits that parliamentarism is plaguing the party. After the last Assembly poll, the CPM should have distanced from the DMK. Insted, its leaders visited Gopalapuram almost every week. They failed to project themselves as an independent political force.
    Vijayakant's popularity comes mainly from his attack on two major Dravidian parties. The Left parties could have done this in a far more effective way and created a space for themselves in Tamil Nadu.
    The two left parties should come together and contest elections. There may not be any immediate gain. But in the long term, people will definitely respect them
    The CPM was once the biggest party in parliament after the Congress. This status was not the result of any seat-sharing talks. It was the result of their work among the people.
    A more basic question: How relevant are parliament and assembly when politics is decided by money power? Whey should the Left run after parties for seats? The energies and money they spend on elections could be diverted to building people's movement on specific issue. The NGOs have occupied the space left empty by the Left.

    பதிலளிநீக்கு
  20. நியாயமான கருத்து..
    இதற்காக இடது சாரி கட்சியினரை குறை சொல்லும் யாரும், மாற்று வழிகளை முன் வைப்பதில்லை என்பது குறிப்பட தக்கது

    பதிலளிநீக்கு
  21. sorry iam not accepting your argument..
    it is partially true..the true communist is taking tea...leaders
    enjoying all on the burden of thondan
    hitech karath is example...

    பதிலளிநீக்கு
  22. இது முழுக்க முழுக்க போலிக் கம்யூனிசத்தின முகமூடி நண்பரே!
    வர்க்க எதிரி யார் என்பதை யாருக்கு போய் சொல்லிக் கொடுக்கபோகிறீர்கள்?

    பதிலளிநீக்கு
  23. All must protest and thwart evil designs of Taminadu Govt in closing down the House of Treasure of knowledge
    p.Sermuga Pandian

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!