புதிய தலைமுறையும் புதிய சவாலும்!


ஞாயிற்றுக்கிழமை நடந்த பொது மாநாட்டில் எழுத்தாளர்.தமிழ்ச்செல்வன் சிறப்புரையாற்றினார். “ஒரு தொழிற்சங்க மாநாட்டில், எழுத்தாளனை ஏன் பேச அழைத்தீர்கள்?” என்ற கேள்வியுடன் துவங்கி, அதற்கு பதிலும் அவரேச் சொல்வதாக மொத்தப் பேச்சும் இருந்தது.  மெனக்கெடும் முன் தயாரிப்பு இல்லாமலும், இயல்பாகவும்  இருக்கும் அவருடைய மேடைப் பேச்சு எனக்குப் பிடிக்கும். நகைச்சுவையும், சுயவிமர்சனங்களும் தன்போக்கில் கலந்திருக்கும். “நாம் எல்லோரும் குரங்கிலிருந்துதான் வந்தோம் என்பதை எப்போதும் நினைவில் வைத்திருந்தால் உலகத்தின்  பல பிரச்சினைகள் தீர்ந்துவிடும்” என்று சொல்லிவிட்டு அவர் அடுத்தடுத்து பேசிக்கொண்டே இருந்தார். அந்த வார்த்தைகளைக் கடக்க முடியாமல் நான் ரொம்ப நேரம் சிரித்துக்கொண்டு இருந்தேன்.  “நம்முடைய நிலத்த யாரோ ஒருத்தன் வந்து  culture செய்வதை நாம் அனுமதிப்போமா? வெட்டுக்குத்து, பஞ்சாயத்து என அவ்வளவு அலப்பரை செய்வோம். ஆனா நம்ம மூளைய மட்டும் காலகாலமா எவன் எவனோ cultureசெய்றானே, அதுபத்தி யோசிக்கவாவது செய்றோமா?” என்பது போல பல கேள்விகளை விதைத்துவிட்டு விடைபெற்றுக்கொண்டார். மாநாட்டின் நிகழ்வுகள் தொடர்ந்து இருந்ததால், சில சம்பிரதாயமான வார்த்தைகளைத் தவிர அவரோடு பேசிக்கொள்ள முடியாமல் போனது. மீண்டும்  சங்கத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கிறேன்.  இது தமிழ்ச்செல்வனுக்கு நிச்சயம் பிடிக்காது. “எழுத வாருமய்யா” என எப்போதும் அவரது குரல் இழுத்துக்கொண்டே இருக்கும். பார்ப்போம். 

1989க்குப் பிறகு எங்கள் வங்கியில் புதிய பணி நியமனங்களே இல்லை. அதற்குப்பிறகு  2009ல் தான் புதிதாக நூற்றுச் சொச்சம் பேர் பணிக்கு வந்தார்கள். இந்த வருடம் இருநூற்றுச் சொச்சம் பேர் வர இருக்கிறார்கள்.  இந்த இருபது வருட இடைவெளியில் நூற்றுக்கும் மேற்பட்ட கிளைகள் திறக்கப்பட்டு இருக்கின்றன. பல ஊழியர்கள்  ஓய்வு பெற்றிருக்கிறார்கள். இறந்து போயிருக்கிறார்கள். இவைகளோடு கணக்கிட்டால் இப்போது வரும் பணி நியமனங்கள் மிக மிகக் குறைவே. இன்னும் ஐந்தாறு வருடங்களில்  பழையவர்களில் 90 சதவீதம் பேர் ஓய்வு பெற்றிருப்பார்கள். புதியவர்களே எங்கும் நிறைந்திருப்பார்கள். அவர்களுக்கு தொழிற்சங்கம் குறித்த பார்வையும், சிந்தனைகளும் வேறாக இருக்கின்றன. தங்களை முன்னிறுத்திக் கொள்வதில்  மட்டுமே வேகம் கொண்டு இருக்கிறார்கள். ஒரு பெரும் இடைவெளியோடு உருவாகி இருக்கும் புதிய தலைமுறையினை  சந்திக்க வேண்டி இருக்கிறது.  இது எங்கள் வங்கியில் மட்டுமில்லை,  இன்றைக்கு இந்தியாவில் உள்ள பல தொழிற்சங்கங்கள் எதிர்கொண்டு வருகிற முக்கியமான பிரச்சினை . பழைய முறைகளும், வழக்கமான நடவடிக்கைகளும் இனி கதைக்கு ஆகாது. புதிய திசைகளையும், வழிமுறைகளையும் ஆராய்ந்து தொழிற்சங்கங்கள் தங்களை புதுப்பித்துக் கொள்ள வேண்டிய நிர்ப்பந்தத்தில் இருக்கின்றன. பார்ப்போம்.

Comments

4 Comments

வருகைக்கு நன்றி.

கமெண்ட் செய்கிறவர்கள் Anonymous, Name/Url, Google Account, Name/Url, Google Account மூலம் கமெண்ட் செய்யலாம்.

1) முடிந்தவரை Google Account மூலம் கமெண்ட் செய்யுங்கள்.

2) இல்லையென்றால் Name/Url மூலம், பேரை மட்டுமாவது குறிப்பிட்டு கமெண்ட் செய்யுங்கள்.

3) Anonymous மூலம்தான் கமெண்ட் செய்ய முடியுமென்றால், கமெண்ட்டில் கீழே உங்கள் பேரை தயவு செய்து குறிப்பிடுங்கள்.

நன்றி.

- தீராத பக்கங்கள்
  1. புதிய தோழர்கள் தொழிற்சங்க உறுப்பினர்களாக இணைவதற்கு முன் வருகின்ற அளவிற்கு இயக்கங்களில் பங்கேற்க முன்வருவதில்லை.
    இயக்கங்களில் பங்கேற்க வருபவர்கள் பொறுப்பாளர்களாக வருவதற்கு ஏராளமான
    தயக்கம் காண்பிக்கின்றனர்.

    1986 ல் 1993 ல்
    எல்.ஐ.சி யில் புதிதாய் பணியில் சேர்ந்த தோழர்களில் பலருமே அடுத்தாண்டே கிளைப் பொறுப்பாளர்களான அதிசயமும் நிகழ்ந்திருக்கிறது.

    ஏன் தோழர், ஜிந்தாபாத்,ஜிந்தாபாத் எழுதிய தோழர் தமிழ்ச்செல்வனை ஏன் ஒரு எழுத்தாளர் என்ற சிறையில் அடைக்கப்
    பார்க்கின்றீர்கள் ?

    ReplyDelete
  2. http://powrnamy.blogspot.com/2011/03/blog-post_9252.htmlகொங்கு இளைஞர் பேரவையுடன் மார்க்சிஸ்டுகள் திருப்பூரில் போட்டுள்ள ஊழல் கூட்டணி

    ReplyDelete
  3. அன்று இயல்பாகப்பேசுகிற மனநிலை சற்று நேரத்தில் தொலைந்துவிட்டது.

    ReplyDelete
  4. அன்புத் தோழர் மாதவராஜ்,
    வணக்கம். எப்படி இருக்கிறீர்கள்? த மு எ க ச மாநாட்டில் பார்க்க முடியவில்லை. முன்பொரு முறை நான் த மு எ க ச இலக்கியக் குழு வேலையாக சாத்தூர் வந்த போது உங்கள் கண்களில் மின்னிய பாசம் இன்னும் மறக்க முடியாததாக இருக்கிறது. தொழிற்சங்கத் தலைவர் ஆனதற்கு வாழ்த்துகள். ஒரு பக்கம் தொழிற்சங்கத் தலைமைப் பொறுப்பு. மறு மக்கம் தீவிர எழுத்து. எப்படி சாத்தியம்? இயக்கப் பம்பரம் தமிழ் மாதிரிதான் நீங்களும். எஸ் வி வி கூட அப்படித்தான்.

    எழுத்தாளர் சங்கத்தில் ஏறக்குறைய எல்லோரும் அப்படித்தான்.
    நீங்கள் அனைவரும் என் ஆச்சரியக் குறிகள்.

    வாழ்க வளமுடன், வாழ்க வையகம் என்பதைத் தவிர வேறென்ன சொல்லத் தோன்றுகிறது?

    நா வே அருள்

    ReplyDelete

You can comment here