பத்தாண்டு கால நாவல்கள் குறித்த வாசகக் குறிப்புகள் - 4

 

sedal-wrapper ரசவாதத்தால் மண்ணைப் பொன்னாக்கும் மாயவித்தையை கைக்குள் கொண்டிருக்கும் நிலமிது என வந்திறங்கிய கடலோடிகளும், பயணிகளும் இம்மண்ணில் நிறைந்திருந்த சடங்குகளையும், நம்பிக்கைகளையும் கண்டு ஆச்சர்யமும் அதிர்ச்சியும் அடைந்தனர். அவர்களை அதிர்ச்சியுறச் செய்ததால்தான் தொகை நூல்களாக அவற்றை உருவாக்கினர். உலகின் புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களில் எல்லாம் இந்தியாவின் வாழ்வியல் அடையாளமாக வீற்றிருக்கும் இத்தொகுப்பு நூல்களுக்கு வெளியே எண்ணற்ற வாழ்வியல் ஒழுங்குகள் நிறைந்திருப்பதை கண்டறியத் தொடங்கி கதையாடலாக்கிட வேண்டிய அவசியத்தை காலம் எழுத்தாளர்களுக்கு நிர்பந்தித்துக் கொண்டிருக்கிறது.

தமிழகத்திலும்கூட தொல்சடங்குகளும், பழக்க வழக்கங்களும் அதிகாரத்தை தன் கைக்குள் வைத்திருக்க விரும்புபவர்களின் விருப்பத்தை நிறைவேற்றும் கருவிகளாகத்தான் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. கடவுள்களுக்கும், மதநிறுவனங்களுக்கும் ஐதீகங்களையும், குலமரபு வழக்கங்களையும் நிறைவேற்ற வேண்டிய கடமைகளையே அதிகாரவர்க்கம் அளித்திருக்கிறது. நிறுவனமயமான பெருந்தெய்வ கோவில்களுக்கு மட்டும் அல்ல, இந்திய நிலத்தின் சாதிய வரைபடமான கிராமக்குலத்தெய்வ வழிபாட்டிலும் கூட இதன் அடையாளத்தைக் காணமுடிகிறது.

தஞ்சைப் பெரியகோயிலின் கலாச்சார நீட்சி அதன் சுற்றளவில் பல நூறு மைல்களுக்குள்ளும் கடந்து ஊடுருவும் வல்லமை கொண்டிருந்தது. இசை வேளாளர் குலத்தில் பிறந்த பெண்களை பெருங்கோயில்களுக்கு பொட்டுக் கட்டி தேவதாசிகளாக்கிடும் வழக்கம் நீண்ட காலம் தமிழகத்தில் இருந்து வந்தது. அதைப் போலவே தாங்களும் செய்துபார்க்கும் வழக்கம் கிராமங்களிலும் இருந்திருக்கிறது என்பதற்கான சாட்சியமே செடல் எனும் நாவல். நகரங்களில் நட்டுவனார் குலத்தில் பிறந்த பெண்கள் என்றால், கிராமங்களில் கூத்தாடும் சாதியில் பிறந்த பெண்கள் என அதிகாரம் தன்னை எழுதிப் பார்த்திடும் விரிந்த புத்தகமாக பெண் உடலே இருந்திருக்கிறது.

பஞ்சமும், பசியும், மழையின்மையும், வறட்சியால் பிளவுண்டுகிடக்கிற நிலங்களும் மனித மனங்களுக்குள் நிகழ்த்துகிற கொடுஞ்செயலை புரிந்து கொள்வது ஒன்றும் எளிதான விஷயமில்லை. “வேறு எதுக்குய்யா இப்பிடிச் செய்யிறோம்? எல்லாம் இந்த உசுர புடிச்சு வைக்கிறதுக்காகத்தான. உசுரப் புடிச்சு வைக்கனும்னா எதையாவது திங்கனும்ல” என்கிற மனிதநியாயமே நாவலைப் புரட்டி, புரட்டி அடுத்தடுத்த பக்கங்களுக்கும் கொண்டு செல்கிறது.

செல்லியம்மனுக்கு பொட்டுக்கட்டி விடப்பட்டிருந்த ராஜம்மாள் இறந்து போனபிறகு பெரும் வறட்சிக்கு உள்ளாகிறது கிராமம். அவரவர் தரப்பில் நின்று இதற்கான காரணத்தை தேடிக் கண்டடைகிறார்கள். புராணங்களும், இதிகாசங்களும் சொல்லியே உருவேற்றப்பட்டிருக்கிறது கிராமத்தின் நம்பிக்கைகள். யாவற்றிற்கும் சாமிக்குத்தம் என்பதைத் தாண்டி வேறு எதையும் இவர்கள் கண்டடைவதில்லை. எனவேதான் செடலை செல்லியம்மனுக்கு பொட்டுக் கட்டி விடுகிறார்கள். கிராமத்தின் கடைக் கோடியில் இருக்கும் பறத்தெருவில் கடைசிவீடாக ஐந்தாறு குடிசைகள் கூத்தாடிகளுக்குச் சொந்தம். அந்த கூத்தாடிக் குடும்பத்தின் பிள்ளையே செடல்.

செல்லியம்மனுக்குச் செல்லப்பிள்ளை பாட, ஊர்த்திருவிழாவில் பாட்டுப்பாட, சுத்துப்பட்டுக் கிராமங்களுக்கெல்லாம் சென்று கோவில் திருவிழாவில் பாடி ஆடும் சாமி புள்ளையாகிறாள் செடல் - தனக்கு என்ன நேர்கிறது என்பது கூட அறியாமல். நாவல் காலத்தின் கண்ணாடி என்று நம்புகிற வாசகன் புரிந்து கொள்கிறான் நாவலுக்குள் இயங்குகிற காலத்தை, பஞ்சமும், பசியும், வாட்டி வதைக்கும் நாளில் மலையகத்து தொழிலாளிகளாக சமதளத்திலிருந்து கண்டிக்கும், மூணாறுக்கும் பிழைத்திடக் கிளம்பிய குடும்பங்களின் கதையிது. சொந்த மகளை விருப்பமின்றி ஊரின் அதிகாரத்திற்கு கட்டுப்பட்டு சாமி புள்ளையாக்கிய செடலின் பெற்றோர்களின் மலையகத்து மனநிலையை இமையம் இனிமேல்தான் எழுத வேண்டும்.

தலித் அழகியல், தலித்கோட்பாடு போன்றவை மிகக் காத்திரமாக விவாதிக்கப்பட்டுக் கொண்டிருந்த தொண்ணூறுகளின் மத்தியில் இமையம் தன்னுடைய கோவேறு கழுதைகள் எனும் முதல் நாவலின் மூலம் சிற்றிதழ் சார் வாசகர்களின் பெரும் கவனிப்பை பெற்றவர். செடல் இவருடைய மூன்றாவது நாவல். தமிழ் நாவல்களுக்கென உருவாகி நிலைபெற்றிருக்கிற மரபான கதைசொல்லலை மீறாதவர் இமையம். பிரதாப முதலியார் சரித்திரத்தில் துவங்கி வாசக கவனம் பெற்ற நாவல்கள் யாவும் மையக் கதாபாத்திரங்களின் வழியாகத்தான் கதைத்தளத்தை கட்டமைத்துக் கடந்திருக்கின்றன. இமையத்தின் மூன்று நாவல்களும் மூன்று கதாபாத்திரங்களின் கதைதான்.

 

 புதிய பதிவர்கள்

அறிமுகம் - 42

 kaathalkaaraa

காதல்காரா என்னும் இந்த வலைப்பக்கத்தில் காதலும் காதல் சார்ந்த உளறல்களும் என கவிதைகள் எழுதி வருகிறார் அழகன். உருக உருகக் காதலிக்கத் தயாராயிருக்கும் இவர், ஆகஸ்டு 2010லிருந்து 12 பதிவுகள் எழுதியிருக்கிறார்.

  அழகனை வாழ்த்தி வரவேற்போம்.

செடலின் கதை செல்லியம்மன் கோவிலிக்குப் பொட்டுக்கட்டி விடப்பட்ட கூத்தாடிச் சாதியில் பிறந்த பெண்ணின் கதையா? அவளின் கதைச் சரடைப் பிடித்தபடி அந்நாட்களில் தென்னாற்காடு மாவட்டத்துக் கிராமத் தின் சமூகவியலை எழுதிப் பார்த்திருக்கிறார் இமையம் என்று எடுத்துக் கொள்ளலாமா?. ஊரின் கதை என்றால், இந்த ஊர் யாருடைய ஊராக இருக்கிறது. நாவலுக்குள் இயங்கும் சமூக அடையாளங்களும், நாவலின் எதார்த்த மான மக்கள் மொழியும் நாவலை வாசகனுக்கு மனநெருக்கமாக்குகிறது.

செடலோடு பயணப்படும் சில பக்கங்களில் மட்டுமே வந்து செல்லும் பொட்டுக்கட்டி விடப்பட்ட லட்சுமியும், கொலை சிந்து அருணாச்சலமும், செடலின் பிள்ளைப்பிராயத்தில் அவளோடு கோவில் வீட்டுக்குள் கிடக்கிற கிழவியும், கூத்தாட்டக் கலைஞரான பாஞ்சாலியும் வாசகனுக்கு மிக முக்கியமானவர்கள். லட்சுமி செடலுக்கு வாத்தியாரா, சிநேகிதியா அல்லது யாவற்றையும் எளிதாக்கிட வந்த சிறுதெய்வமா என அறியாது செடல் பிரமிக்கிறாள். லட்சுமியின் வழியாகத்தான் தனக்கு நிகழ்ந்து கொண்டிருக்கிற சாமிபுள்ள எனும் வாழ்வை எளிதாக்கி கடக்கும் நம்பிக்கையையும் பெறுகிறாள். இந்த நம்பிக்கைதான் செடலை ஊர் முழுக்க புறக்கணித்துத் துப்பிய மழை நாளில் வழியில் தென்பட்ட கூத்தாட்டக் கலைஞருடன் உடன்போகச் செய்கிறது. கூத்துக் கலைஞன் பொன்னன் இறந்த பிறகு மிகத்தைரியமாக பிறந்த ஊருக்கு வந்து ஊராரிடம் நியாயம் கேட்கச் செய்ததும் கூட லட்சுமி வாழ்க்கையை கொண்டாட்டமாக நிகழ்த்த வேண்டும் என அவளுக்குச் சொல்லிச் சென்ற பாலபாடம் தான்.

பள்ளுப் பாடப் போற எடத்திலெ சிரிச்ச மொகமா இருக்கணும். கோவக் குறியே மொகத்தில இருக்கக் கூடாது, இடிச்சாலும், கிள்ளுனாலும் சிரிக்கணும். ஆம்பளக்கிட்டதான் பேசணும், சிரிக்கணும், சிரிச்சுப்பேசியே சரக்க எறக்கணும். ஓரக்கண்ணால பார்க்கணும், ஒதட்டக் கடிக்கணும், சடயத் தூக்கி முன்னால போட்டுக்கணும்..... இவையே லட்சுமி தன் வாழ்வின் நியாயமாக செடலுக்குள் கடத்தியவை. இவற்றைப் புரிந்து கொண்ட செடல் நாவலுக்குள் தன் உடலைப் புனிதமானதாக அதுவும் சாமிக்குரியதாக மட்டுமே நம்புகிறாள். செடல் இருப்பதை அப்படியே ஏற்றுக்கொள்பவள், எதிர்க்கதையாடல் நிகழ்த்துபவள் அல்ல.

கூத்தாடிப் பெண்தானே என நாவலெங்கும் அவளை யாவரும் பாலியல் இச்சையுடன் அணுகுகிறார்கள். எல்லோரையும் புறக்கணிக்கிறாள். சக கூத்தாட்டக் கலைஞர்களிடமிருந்து தன்னை வெகுவாக விலக்கி வைத்துக் கொள்கிறாள். எட்டுத்திசையெங்கும் செடல் செட்டு எனப் பெயர் பெற்றிருப்பதற்கு அவளின் வேஷத்தோடும், ஆட்டத்தோடும் கூட அவளின் உடலின் மீதான மயக்கமும் காரணம் என்று அறிந்துதான் வைத்திருக்கிறாள். ஆனாலும் தன்னை நெருங்கும் ஆண்களைப் புறக்கணிப்பதற்கு தனக்குள் அவள் வரித்துக் கொள்ளும் காரணம் சாமிபுள்ள நானு; என் உடலும், மனமும் சுத்தமாக இருக்கணும் என்பது தான். தன்னை இச்சையுடன் நெருங்கும் உடையாருடன் அவள் நிகழ்த்தும் உரையாடலே இதற்கு சாட்சியாக நாவலில் பதிவு பெற்றுள்ளது.

நான் முன் சென்மாந்தரத்துல என்னா பாவம் செஞ்சியிருந்தா, இந்தப் பொறவியில இந்தக் கெதிக்கு ஆளாயிருப்பன்? எனக்கு இன்னமா வேணும்? ஒங்க வூட்டு மாட்டுச் சாணிய வாரி வவுறு வளர்க்கிற சாதி நான். பறச்சிய விட மட்டி ஒங்களத் தொட்டு தீட்டாக்கி நான் இன்னுமா பாவத்தச் சேத்துக்கணும்? ஒங்க சாதிக்கேத்தத் தொயிலா இது? ...... எல்லாத்தயுங்காட்டியும் நான் பொட்டுக்கட்டி வுட்டவ. எனக்கு அந்த மாரியான கொடுப்பன எல்லாம் கெடயாது. வேற ஏதாச்சும் சொல் லுங்க....” அட எங் கடவுள, என்னால ஒங்க சாதி மானம் கெடணுமா? சாதி கலப்பு வாண்டாம் சாமி, மாடு திங்கிற பொலச்சியத் தேடி வரலாமா?..... என இதுபோன்று நாவலின் பல பக்கங்களில் செடலின் சொற்கள் இருப்பதை நியாயப்படுத்தும் குரலாகத்தான் பதிவாகியுள்ளது.

இமையம் ஒரு வேளை என்னுடைய செடல் இப்படித்தான் வாழ்ந்தாள் என்று சொல்லக்கூடும். இருப்பதை அப்படி அப்படியே பதிவு செய்வது எழுத்தாளனின் வேலை அல்ல. நான் உண்மையைத்தான் எழுதுகிறேன் என்று சொல்வதால் யாதொரு பயனும் இல்லை. உண்மை என்றால் அது யாருக்கான உண்மை, எவரின் அதிகாரத்தை நீடித்து நிலைத்திருக்கச் செய்யும் உண்மை என்பதை யெல்லாம் கூட நாம் யோசிக்க வேண்டியிருக்கிறது. நிகழ்ந்தவற்றை அழித்து எழுதி வேறு ஒன்றாக ஆக்கிப் பார்த்திடும் வல்லமை பெற்றவர்கள் புனை கதையாளர்கள். அப்படி எழுதிப்பார்த்த புனைகதைகளையும் கூட மொழி எனும் கூட்டிற்குள் நின்று செம்மொழி மாநாட்டில் இமையம் புறக்கணித் திருந்ததையும் நாம் கவனப்படுத்த வேண்டியுள்ளது.

எப்போதும் தன்னையும், தன் உடலையும் ஞாபகமூட்டிக் கொண்டி ருக்கும் தலைவாசல் கிராமத்துச் சம்பவம் குறித்த பெருத்த இடைவெளி நாவலில் வாசகனுக்காக உருவாக்கி விடப்பட்டிருக்கிறது. நாவல் முழுவதும் செடலின் வழியாக வாசகனுக்கு ஞாபகமூட்டப்பட்டுக் கொண்டேயிருக்கிறது. அந்த சம்பவத்தை நினைத்ததுமே அவளுக்கு அழுகை பீறிட்டுக் கொண்டு வருகிறது. இதுவரை அவளுடைய உடலைக் கொண்டாளவும் கொண்டாடவும் வெளிச்சத்தில் எவன் வந்திருக்கிறான் என்று நினைத்துக் கொள்கிறாள். அவளின் உடலும், மனமும் தவிக்கும் இந்தக் காட்சியும் கூட நாவலில் பதிவாகியுள்ளது.   

நாவலுக்குள் பாஞ்சாலியும், செடலும் சந்தித்துக் கொள்ளும் இடங்களில் நடைபெறும் உரையாடலின் வழி இது மதுர மீனாட்சியோட சாபம் என காலம், காலமாக தேவதாசிகளின் மீதான வன்முறைக்கு நியாயம் கற்பிக்கும் ஆதிக்க சாதிகளின் முயற்சி குறித்த புனைகதையும் பதிவாகியுள்ளது. இக்கதையின் நடுவிலான உரையாடலில் அவ என்னா பண்ணுவா, சாதியோட புத்தியாச்சே, ஆதியிலிருந்து வந்தது பாதியில போவுமா? எனும் பதம் உரைப்பது சாதியின் நியமங்களை நியாயப்படுத்தும் குரலாகவும் வாசகனுக்கு தென்படவும் வழியுண்டு.

நாவலின் துவக்கத்தில் நடராஜ பிள்ளையின் உத்தரவுக்கு கீழ்ப்படிகிறவராக ராமலிங்க ஐயரை காட்டுவதும், அதிலும் அவர் கட்டளையிட்ட மறுநொடியில் துண்டை எடுத்து இடுப்பில் கட்டி மிகவிரைவாக ஊர்க்கூட்டத்தில் பறையக் கூட்டத்திற்கும் பின்னால் போய் பவ்யமாக அமர்ந்தார் என கட்டமைப்பது பொருத்தமானதில்லை. அதைவிட அடுத்தபடி மேலே போய் ராமலிங்க ஐயரின் மகன் பெயர் கருப்பசாமி ஐயர். தமிழகத்தின் எந்த அக்ரகாரத்திற்குள்ளும் கருப்பசாமி அய்யர் இருக்க யாதொரு சாத்தியமும் இல்லை என்பதையும் பெயர்களுக்குள்ளும் சாதி இருக்கிறது என்கிற உண்மையையும் நாம் மறந்து விடலாகாது.

இவை எல்லாவற்றையும் கடந்து செடலை கடந்த பத்தாண்டு கால நாவல்களில் பொருட்படுத்தி வாசிக்க வேண்டிய புத்தகமாக்கியிருப்பது நாவலின் மையப் பகுதிக்குள் விரவியிருக்கும் கூத்துக்கலை குறித்த தகவல்களும், விவரணைகளும்தான். தமிழகத்தின் வடமாவட்டத்தின் தொன்மையான கலையான கூத்தின் நுட்பங்கள், அடவுகள், அவர்களின் துயர்மிகு வாழ்வு, தன் கண் எதிரே தான் விரும்பி வளர்த்தெடுத்த கலையின் சிதைவை காணச் சகிக்காத அவர்களின் மனம் என யாவும் பதிவு பெற்றுள்ளதால் தான் செடல் தமிழின் மிக முக்கியமான நாவல்களில் ஒன்றாகியுள்ளது.

 

-ம.மணிமாறன்

கருத்துகள்

2 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
  1. அருமையான பதிவு!!!!


    நேரம் கிடைத்தால் என் பதிவை பார்கலாமே..

    உங்கள் கருத்தை கூறுங்கள்.

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!