மாதவராஜ் பக்கங்கள் 17

பூக்களிலிருந்து புத்தகங்களுக்கு ஏறத்தாழ இருநூற்று ஐம்பதுக்கும் மேற்பட்ட சுட்டிகள் பரிந்துரை செய்யப்பட்டு மெயிலுக்கு வந்திருந்தன. அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.முக்கியப் பதிவர்கள் பலரது சுட்டிகள் வரவில்லை.

ஒருநாளைக்கு இரண்டு அல்லது மூன்று மணி நேரம் செலவழித்து படித்து, ஓரளவுக்கு பதிவுகளை அறிந்து வைத்திருந்தேன். வம்சி புக்ஸிலிருந்து எழுத்தாளர் பவா செல்லத்துரை பேசினார். சினிமா குறித்து வந்த விமர்சனங்களையும், செய்திகளையும் புத்தகங்களாக்குவதில் சிரமங்கள் இருப்பதாகச் சொன்னார். அரசியல் கட்டுரைகளைத் தவிர்த்து இலக்கிய நயம் கொண்டதாய் இருந்தால் நலம் என்றார். அனுபவங்கள், சமூகப்பார்வை கொண்ட கட்டுரைகள், கவிதைகள், சிறுகதைகள் என பிரித்துக் கொள்ளலாம் என்றார். அனுபவங்களும், கவிதைகளும்தாம் அற்புதமாக வலைப்பக்கங்களில் கொட்டிக்கிடக்கின்றன. சிறுகதைகள் அதிக அளவில் தேறுமா எனத் தெரியவில்லை. பார்ப்போம்.  இந்த ஒரு வாரமாய் “பூக்களிலிருந்து புத்தகப் பணியும்’ நின்று போயிருக்கிறது. நேரமில்லை.

 

முன்னைப் போல பிளாக் பக்கம் வர முடியவில்லை. விருப்பமான பதிவர்களின் எழுத்துக்களை கொஞ்சநாளாய் வாசிக்க முடியவில்லை. எழுதவும் முடியவில்ல. இடையிடையே கார்ட்டூன்கள்,  மீள் பதிவுகள் என பதிவுகள் போட்டு ஒப்பேற்றிப் பார்த்தேன். இந்த ஆக்கத்தில், உங்கள் “பிளாக்கில் malware இருக்கிறது” என்று ஒரு தகவலை கூகிள் குரோமும், நண்பர்களும் நான்கு நாட்களுக்கு முன்பு சொன்னார்கள். இரண்டு நாட்களுக்கு முன்பு இரவில் நேரம் வாய்த்தது. சரிசெய்து புதிய templateக்கு மாறினேன். பதிவுகள் எழுதமுடியவில்லை. நேரமில்லை.

 

ன் நேரமில்லை என்பதையும் உங்களுக்குச் சொல்ல வேண்டும். அதற்கு முன் இரண்டு நிகழ்வுகளை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும்.

எங்கள் வங்கியில், ஏழுமாத கர்ப்பிணிப் பெண் ஊழியருக்கு மாவட்டம் விட்டு மாவட்டம், திடுமென டிரான்ஸ்பர். “இது மோசமானது” என்று நாங்கள் சங்கத்திலிருந்து சொன்னோம். அந்தப் பெண் ஊழியரோ, “பரவாயில்ல. நான் போகிறேன். ஆனால் மருத்துவர்கள் ஆலோசனைப்படி, குழந்தை பிறந்த பிறகு பிப்ரவரி மாதம் செல்கிறேன்” என்று நிர்வாகத்திற்கு கடிதம் எழுதினார். நிர்வாகம் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. பேச்சுவார்த்தைக்குச் சென்ற எங்களிடம் “கர்ப்பமடைவதும், பிள்ளை பெறுவதும் வாழ்வின் ஒரு பகுதி. இதற்கெல்லாமா வங்கி உதவ முடியும்” என்றது.

இன்னொரு பெண் ஊழியர் விருதுநகர் மாவட்டத்தில் பணி புரிகிறார். திருமணம் ஆகி இரண்டு மாதங்களே ஆகின்றன. அவரது கணவர் திண்டுக்கல் அருகே பணி புரிகிறார். எங்கள் வங்கியின் வத்தலக்குண்டு கிளைக்கு ஆள் தேவைப்படுகிறது. அந்த இடத்திற்கு நாங்கள் அந்தப் பெண் ஊழியருக்கு டிரான்ஸ்பர் கேட்டோம். அதற்கு நிர்வாகம் சொன்ன பதில் கொடூரமானது! “ஓஹோ...! இரண்டு பேரையும் வங்கிச் செலவில் சேர்த்து வைக்க வேண்டும். அந்தம்மா conceive ஆவாங்க. அதுக்கும் வங்கிச் செலவில்  maternity leave கொடுக்க வேண்டுமோ” என்று சொன்னது. கடுமையாக கண்டித்து பேச்சுவார்த்தையை முடித்துக்கொண்டு  வெளியே வந்தோம்.

எங்கள் நிர்வாகத்தின் கோர முகத்தை இப்போது நீங்கள் அறிந்து கொண்டு இருக்க முடியும். 

ஏற்கனவே எங்கள் வங்கியில் அவுட்சோர்சிங் மூலம் பணிபுரிந்து கொண்டு இருக்கிற தற்காலிக ஊழியர்களை நிரந்தரப்படுத்த வேண்டும் எனக் கோரிக்கை வைத்து, அதில் தோழர்கள் காமராஜ், அண்டோ ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டு, பெரும் போராட்டத்துக்குப் பின் அவர்கள் இருவரும் மீண்டும் பணியலமர்த்தப்பட்ட விபரங்களை இங்கே பதிவிட்டு தெரியப்படுத்தி இருந்தேன். நிர்வாகம் மெல்ல மெல்ல தற்காலிக ஊழியர்களை கிளைகளிலிருந்து வெளியே அனுப்பத் தொடங்கியது. லேபர் கமிஷனர் முன்பு தாவா ஏற்படுத்தி, அதை உயர்நீதிமன்றத்தில் சுட்டிக் காட்டி, தொழில்தாவா முடியும் வரை தற்காலிக பணியாளர்கள் யாரையும் வெளியேற்றக் கூடாது என முறையிட்டோம். எங்கள் வேண்டுதலில் உள்ள நியாயத்தை ஏற்று Status quo நிலைநிறுத்தப்பட வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக் கொள்வதற்குள் நிர்வாகத்தின் வன்மம் மிகுந்த தாக்குதல்கள் இப்படி அரங்கேறுகின்றன.

வங்கி நிர்வாகத்தின் உயர் பொறுப்பிலிருப்பவர் இங்கு ஊழியர்களையும், அலுவலர்களையும் தொடர்ந்து மரியாதையில்லாமல் பேசுவது நீடிக்கிறது. பெண் ஊழியர்கள் மீது நிர்வாக ரீதியான வன்முறைகள் தொடர்ந்து நடக்கின்றன. நட்பு ரீதியான மனோபாவம் கொஞ்சமும் இல்லாமல், அனைவர் மீதும் வெறுப்பை மட்டுமே காட்டுகிற மனிதர்கள் உயர் பொறுப்புக்கு வந்தால் இப்படியெல்லாம் ஆகும் போலும்.

வங்கியில் இதரக் கடன்கள் எதையும் ஊக்குவிக்காமல், ஏறத்தாழ எங்கள் வங்கியை  ’நகைக்கடன் வங்கியாக’ மாற்றி விட்டது. வங்கியின் நலன் மற்றும் வளர்ச்சியின் மீது அக்கறை கொண்டு விமர்சனம் செய்கிற சங்கத்தின் மீது பாய்கிறது.

இப்போது பொருளாதாரச் சலுகைகள் எதையும் கோரிக்கை வைக்காமல், வங்கியைக் காப்பாற்றவும்,  ஊழியர்கள் சுயமரியாதையை நிலைநிறுத்தவும் போராடத் துவங்கியுள்ளோம். பழிவாங்கும் மாறுதல்கள் போடப்படுகின்றன. ’போஸ்டர் ஒட்டினோம்’ என்றெல்லாம் கூட சங்கத் தலைவர்கள் மீது சார்ஜ் ஷீட்கள் வினியோகிக்கப்படுகின்றன. சஸ்பன்ஷன், டிஸ்மிஸ் என அடக்குமுறையின் குரல்கள் ஒலிக்கின்றன. வரட்டும்.

இருள் நிறைந்த காலத்தில்
பாடல் எதைப் பற்றியதாக இருக்கும்?
“இருட்டைப் பற்றி இருக்கும்”

என்றொரு கவிதைதான் எங்கள் நிலையைச் சரியாய்ச் சொல்லும் என நினைக்கிறேன். சிந்தனைகள், செயல்கள் எல்லாம் தொழிற்சங்க நடவடிக்கைகள் குறித்தே இருக்கின்றன. கோரிக்கைகள், கூட்டங்கள், பிரயாணங்கள், பிரச்சாரங்கள் என நாட்கள் சென்று கொண்டு இருக்கின்றன. ’சுற்றி வெளியே நடக்கும் கொடுமைகளின் முன்னால் உங்களின் இந்தப் பிரச்சினையெல்லாம் ஒரு பெரிய விஷயமா’ என்று கேட்கும் குரல்களில் நியாயம் இருக்கலாம். என்ன செய்ய? இந்த  சங்கத்தின் தலைவராக நான் இருக்கிறேன். இந்தப் பொறுப்பை தட்டிக் கழிக்க முடியாது. கூடாது.

எனவே-
சிறிது காலத்துக்கு இங்கு அவ்வப்போதுதான் வரமுடியும். சின்னச் சின்ன இடைவெளிகள்.  அவ்வளவே. புரிந்து கொள்வீர்கள் என நம்புகிறேன்.

*

கருத்துகள்

15 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
  1. நீங்கள் முன் வைத்த இரண்டு நிகழ்வுகளிலும் வங்கி நிர்வாகம் நடந்து கொண்டிருக்கும் விதம் வருந்தத்தக்கது. எத்தனையோ நிறுவனங்களில் ஊழியர்களின் உடல்நலம் குடும்பநலம் கருதி அவர்களுக்கு வேண்டிய துறை, டிரான்ஸ்ஃபர் தந்து ஆவன செய்கிறார்கள். ஊழியர்கள் நலனில் அக்கறை காட்டும் நிறுவனங்கள் உயர்ந்தபடியேதான் இருக்கும் என்பதையும் வங்கி நிர்வாகம் உணர வேண்டும்.

    பதிலளிநீக்கு
  2. தங்களின் போராட்டம் வெற்றி பெற வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  3. //அந்தம்மா conceive ஆவாங்க. அதுக்கும் வங்கிச் செலவில் maternity leave கொடுக்க வேண்டுமோ//

    வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு இருக்கும் பிரச்சனைகளில் முக்கியமானது இது. ஊழியர்களிடமிருந்து முழு உழைப்பையும் எதிர்பார்ப்பது நிறுவனங்களின் பக்கமிருந்து பார்த்தால் தவறாகப்படவில்லை. என்ன செய்யலாம்?

    பதிலளிநீக்கு
  4. வெற்றியடைய வாழ்த்துக்கள் சார்

    பதிலளிநீக்கு
  5. தங்களின் போராட்டம் வெற்றி பெற வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  6. பெரிய விஷயம்.

    என்னுடைய வாழ்த்துக்களும்

    பதிலளிநீக்கு
  7. தங்களின் போராட்டம் வெற்றி பெற வாழ்த்துகள். நீங்கள் கூறியுள்ள் இரண்டு நிகழ்வுகளிலும் வங்கி நடந்து கொண்டிருக்கும் விதம் வருத்தமளிக்கிறது. வேலைக்குச் செல்லும் பெண்கள் எதிர்கொள்ளும் ஒரு பிரச்னை இது. சில சமயம் “வேலை செய்யாமல் சம்பளம் ஜாலி தானே” என்ற பேச்சுக்களும் கேட்கும் பொழுது அந்த புரியாத்தனத்தை என்னென்பது?

    பதிலளிநீக்கு
  8. இரு நிகழ்வுகளும் வருத்தமாகத்ஹான் இருக்கின்றன. ஆனால் எதார்த்தம் இன்று இப்படித்தான் உள்ளது.

    கடந்த பதினைந்து வருடங்களாகவே (உலகமயமமக்கலுக்கு , சந்தை மயமாக்கலுக்கு பிறகு) எல்லா நிறுவனங்களிலும் ஊழியர் நலம் என்பது எல்லாம் காணாமல் போய் விட்டது.

    முதலாளிகளை , உயர் அதிகாரிகளை, நிர்வாகத்தை மட்டும் குறை சொல்ல முடியாது . உயர் அதிகாரிகள் லாபத்தை அதிகம் ஆகினால்தான் அவர்களுக்கும் ஊதிய உயர்வு, அங்கீகாரம். பொது மக்களும் முதலீட்டாளர்களும் கூட லாபம் ஈட்டும் நிறுவனத்தில் தான் இன்று முதலீடு செய்ய விரும்புகிறார்கள்.

    சாமனிய சிறு முடலீட்டலர்களாகியா நாமும் (நான் நீங்கள் போன்றோர் ) கூட இன்று ஆன் லைன் பங்கு வர்த்தகத்தில் ஈடுபடும் போது எந்த நிறுவனம் அதிக லாபம் ஈட்டுகிறது என்றே பார்க்கிறோம். எவ்வளவு சீக்கிரம் போட்ட பணத்தை திருப்பி எடுக்கலாம் என்றே யோசிக்கிறோம்.
    எந்த நிறுவனம் ஊழியர் நலன் பேணுகிற நிறுவனம் என்பது எல்லாம் நாம் கணக்கில் எடுப்பதே இல்லை.


    ஊழியர்களும் இன்று எந்த வித ஈடுபாடும், நன்றயுனர்வும் அற்றவர்களாகவே உள்ளனர். இன்று நடக்கும் கல்லூரி வளாக வேலை வாய்ப்பு முகாம்களில் எந்த நிறுவனம் அதிக சம்பளம் தருகிறதோ அந்த வேலையை தேர்ந்து எடுக்கின்றனர்.

    உதாரணம்: இன்று எம் பீ எ , பீ ஈ படித்த மாணவரிடம் இந்தியன் வங்கி அருப்புகோட்டை கிளையில் வேலை உள்ளது, மற்றும் சிட்டி வங்கி தேனாம்பேட்டை கிளையில் வேலை உள்ளது, எது வேண்டும் என்றால் சிட்டி வங்கியைத்தான் தேர்வு செய்கிறார். அங்கு வேலை சேர்ந்து ஆர் மாதத்தில் BARCLAYS வங்கி அண்ணா சாலையில் சம்பளம் கூட பத்தாயிரம் தருகிறோம் என்றால் உடனே வேலை மாறுகிறார்.

    வாக்காளர்களாகிய நாமும் சந்தை மயமாக்கல், முதலாளித்துவ கொள்கை உடைய காங்கிரஸ், திமுக கூட்டணிக்கே வாக்கு அளிக்க விரும்புகிறோம்.

    பதிலளிநீக்கு
  9. //முக்கியப் பதிவர்கள் பலரது சுட்டிகள் வரவில்லை. //

    நீங்க யாரை சொல்றிங்கன்னு தெரியல!
    ஆனா நான் கொடுக்காத காரணம் எனது மொக்கை அவ்வளவு வொர்த்திருக்காது என்ற நம்பிக்கையே!

    பதிலளிநீக்கு
  10. என்னடா முன்பு போல ஆளை காணோம் என தேடலாகவே இருந்தது...பாருங்கள் மாதவன்.வாழ்வாதார பிரச்சினைகளோடு போராடி கொண்டிருக்கிறீர்கள்.மிக முக்கியம் அது.வெற்றி பெற வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  11. உங்கள் வங்கி நிர்வாகம் சொல்லிய பதில்களில் மனித நேயம் இல்லை என்பது ஒப்புக்கொள்ள வேண்டியதே.

    ஆனால் எனக்குத் தெரிந்த இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மேலாளர் என்னிடம் வருத்ததுடன் சொல்லியது “பெண்களுக்கு சம உரிமை வேண்டும் என்றெல்லாம் பேசுகிறார்கள். ஆனால் வட இந்தியாவுக்குப் பணி மாற்றம் என்று சொல்லும்போது மட்டும் அடுத்த ஆணை கைகாட்டி விடுகிறார்கள்” என்றார். ”பெண்கள் புகைபிடிப்பதை மட்டும் பெரிய விஷயமாகச் சொல்கிறார்கள்.ஆண்கள் புகைபிடிப்பதைப் சாதாரணமாக எடுத்துக் கொள்கிறார்கள்” என்று பேசும் பெண்கள் ஏன் தனிச் சலுகைகள் எதிர்பார்க்கிறார்கள்?

    அரசாங்கத்திலும், நாட்டுடமை ஆக்கப்பட்ட வங்கிகளிலும் பணி புரிபவர்களுக்குத்தான், இப்படி கேட்கவாவது முடிகிறது. தனியார் வங்கிகளில் வேலை செய்பவர்களுக்கு?

    எங்கள் கிராமத்தில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் படிக்காத விவசாயிகளை, வங்கி ஊழியர்கள் மனிதர்களாகக் கூட மதிப்பதில்லை. போன மாதம் எனது மாமியார் வங்கியில் செலுத்திய பணத்தை பாஸ் புத்தகத்தில் எழுதித் தரக் கூட மூன்று முறை (வீட்டிலிருந்து 3 கி.மீ தூரம்) இழுத்தடித்தார்கள்.

    மனித நேயம் என்பது எல்லாத் தரப்பிலும் கடைபிடிக்கப்பட வேண்டிய ஒன்று!

    பதிலளிநீக்கு
  12. தோழர், வெளியே ஆயிரம் அநியாயங்கள் நடந்தாலும், தொழிற்சங்க நடவடிக்கைகள் மிகவும் முக்கியமானவை. நன்றாக தோழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடும் ஒருவர் சுணக்கமடைந்தால், அந்த தொழிற்சங்கமே தொய்வடையும் என்பதை நீண்ட கால அனுபவமுள்ள தாங்கள் அறிவீர்கள். ஆகையால், தொழிற்சங்க நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை கொடுத்து, பதிவு இடுவதை இரண்டாவதாக வைத்துக் கொள்ளுங்கள். உங்களைப் போன்ற நபர்கள் மட்டுமே, நிர்வாகத்தை எதிர்த்து நிற்கும் வல்லமையை ஊழியர்களுக்கு ஊட்ட முடியும். இல்லையென்றால், தொழிற்சங்கம், நிர்வாகத்தின் கைப்பாவையாகிவிடும்.

    பதிலளிநீக்கு
  13. எப்போதும் போல் உங்களை நினைத்தால் பெருமையாகவும் இருக்கிறது; கவலையாகவும் இருக்கிறது.

    போராட்டங்களுக்கு இடையே உங்களையும் (அம்மு குழந்தைகளையும்) கவனித்துக் கொள்ளுங்கள் அங்கிள்.

    பதிலளிநீக்கு
  14. புரிந்து கொஇண்டவர்களுக்கும்,பகிர்ந்து கொண்டவர்களுக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  15. கண்ணின் மணி கண்ணின் மணி நிஜம் கேளம்மா ... கங்கை நதி வைகை நதி பெண் தானம்மா மலை நதி என்பது முள்ளில் கல்லில் மோதி வரும் .பெண் நதி என்பது துன்பம் துயரம் தங்கி வரும் வருத்தப்பட தேவை இல்லை எல்லாம் நலமாக நடக்க வேண்டும் ...

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!