காந்தி புன்னகைக்கிறார்- இரண்டாம் அத்தியாயம்


அவனது பரிமாணம் என்பது இருளில் நடந்தது. அவனது பயணத்தின் தடயங்கள் யாருக்கும் தெரியாமல் ரகசியமாக வைக்கப்பட்டிருக்கின்றன. சாத்தானின் பிரவேசம் என்பது இப்படித்தான் இருக்கும் போலும்.

நாதுராம் கோட்சே!

பூனா அருகில் ஒரு கிராமத்தில் 1908ம் வருடம் ஒரு இந்து சனாதன பிராமண குடும்பத்தில் போஸ்ட் மாஸ்டருக்கு இரண்டாவது மகனாக பிறந்தான். கூடப்பிறந்தவர்கள் ஆறு சகோதரர்களும், இரண்டு சகோதரிகளும். அவன் பிறந்த காலமும் இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில் பிரிட்டிஷ் அரசு மத ரீதியாக மக்களை பிரிப்பதற்கு ஏற்பாடு செய்த காலமும் ஒன்றாகவே இருந்தது.


காங்கிரஸ் தலைமையில் பெருகி வரும் மக்களின் ஒற்றுமை மிக்க போராட்டங்களை நீர்த்துப் போகச் செய்வதற்கு பிரிட்டிஷ் அரசு மிண்டோ மார்லி சீர்திருத்தங்களை கொண்டு வந்திருந்தது. அதன்படி குறைந்த அளவில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளும், நிலப்பிரபுக்களும் , பிரிட்டிஷ் வியாபாரிகளும் கொண்ட மாகாண சட்டசபைகளை அறிமுகப்படுத்தினார்கள். தங்கள் பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்கிற உரிமை கிடைப்பதனால் மக்களின் ஆத்திரங்கள் உதிர்ந்துவிடும் என்று ஆங்கிலேயர்கள் கணக்குப் போட்டனர். இதில் மோசமான அம்சம் மதரீதியில் பிரதிநிதித்துவம் கொடுப்பதற்கும்
வழிசெய்யப்பட்டிருந்ததுதான். மூஸ்லீம் லீக் ஆரம்பிப்பதற்கு இதுவே காரணமாயிற்று. இந்துமகாசபையும் தொடர்ந்து ஆர்.எஸ்.எஸூம் ஆரம்பிக்கப்பட்டது இதற்குப் பிறகுதான்.


அவரது வாழ்வு என்பது ஒளி நிறைந்தது. அவர் எடுத்து வைத்த ஒவ்வொரு அடியையும் உலகமே அறிந்திருந்தது.


மகாத்மா காந்தி!
இந்தப் பெயர் இந்திய வாழ்க்கையின் ஒரு சாத்வீகமான, அதுவாகவே நிறைந்திருக்கிற உணர்வாக இருக்கிறது. படபடக்காமல் நின்றிருக்கும் அகல்விளக்கின் சுடர் அமைதியை ஏற்படுத்துகிறது. ஒரு எளிய மனிதன் எல்லா வீடுகளுக்குள்ளும் இயல்பாக பிரவேசித்து விடுவதைப் போல அவரது பயணம் இருந்தது.


தென்னாப்பிரிக்கா பயணம் முடித்து இந்திய அரசியலுக்குள் அவரது பிரவேசம் அப்படித்தான் நிகழ்ந்தது. அப்போது திலகர் தலைமையில் ஹோம் ரூல் இயக்கம் நடந்து கொண்டிருந்தது. மகாத்மா இந்தியா முழுவதும் பயணம் செய்து தேசத்தின் ஆன்மாவை தேடிக்கொண்டு இருந்தார். நீண்ட நெடிய வரலாறு கொண்ட இந்தியாவின் மனித சமூகத்தின் துயரங்கள் புகைவண்டியின் ஒசையோடு அவருள் ஓடிக் கொண்டிருந்தது. மலைகளும், ஆறுகளும், பசும்புல்வெளிகளும், வயல்களும், காடுகளும், வறண்ட நிலங்களும், அங்கு வசித்த மக்களும் அவரது உள்மனத்தோடு பேசிக்கொண்டு இருந்தார்கள்.


இந்திய விடுதலையின் கடைசி தருணங்களில் மதவெறியின் விதைகள் விதைக்கப்பட்டன. 400 ஆண்டு காலத்திற்கும் மேலாக நீடித்த வீரஞ்செறிந்த போராட்டத்தில் கடைசி 30 வருடங்களே இந்த சதிவலைகள் விரிக்கப்பட்டன. 1857ல் முதல் இந்திய சுதந்திரப் போரில் எந்த பேதமுமில்லாமல் ஒன்றுபட்டிருந்த இந்துக்களும் முஸ்லீம்களும் மெல்ல மெல்ல ஒருவர் மீது ஒருவர் வெறுப்பை உணர பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டன. 1906ல் வங்காளத்தை இரண்டு மாநிலமாக பிரிப்பதற்கே ஒத்துக் கொள்ளாமல் ஒன்றாக போராடிய இந்துக்களும், முஸ்லீம்களும் தேசத்தையே இரண்டாக பிரிப்பதற்கு எதிர்ப்பின்றி போனது இயல்பானது அல்ல.


இந்து ராஷ்டிரம் என்றும், 1400 ஆண்டுகளாக நமது மேன்மைகளை அந்நியப் படையெடுப்புகளால் இழந்துவிட்டோம் என்றும் பிரச்சாரம் செய்யப்பட்டன. உண்மையில் ஆங்கில வரலாற்றாசிரியர் ஜேம்ஸ் மில் என்பவர் இந்திய வரலாற்றை, இந்துக்களின் காலம், மூஸ்லீம்களின் காலம், பிரிட்டிஷ் காலம் என்று பிரித்ததிலிருந்து எடுத்துக் கொண்ட சங்கதியே 'இந்து' என்பது. சிந்து நதிக்கரையில் வேத காலத்திலிருந்து தொடர்ந்து வந்த வர்ணாசிரமச் சித்தாந்தமான- பிரம்மாவின் தலையிலிருந்து பிறந்தவன் பிராமணன், தோள்களிலிருந்து பிறந்தவன் ஷத்திரியன், தொடையிலிருந்து பிறந்தவன் வைசியன், காலிலிருந்து பிறந்தவன் சூத்திரன் என்ற வர்ணப் பிரிவுகளை-பாதுகாக்கிற நோக்கில்தான் நாம் நமது புனிதத் தன்மையை இழந்து விட்டோம் என்று அங்கலாய்த்துக கொண்டு இந்த அமைப்புகள் மக்களின் உணர்ச்சிகளை தூண்டிவிடும் வேலைகளைச் செய்தன. மகாத்மா தாழ்த்தப்பட்டவர்களுக்கு ஆதரவான சமூக போராட்டங்களை நடத்தியது மட்டுமில்லாமல் காங்கிரசும் அறைகூவல் விடுத்திருந்தது இந்த சமயத்தில்தான் என்பதை கால அறிவோடு பார்த்தால் உண்மை புரியும்.


இந்த சூழல் தந்த எதிர்ச்சிந்தனைகளால் வளர்ந்தவன் தான் நாதுராம் வினாயக் கோட்சே. மெட்ரிக்குலேசன் கூட படிக்காமல் ஒரு துணிக்கடை ஆரம்பித்து நடத்தினான். அது லாபம் ஒன்றும் தராததால் தையல் நிறுவனத்தில் சேர்ந்தான்.துடிப்புமிக்க தனது இருபத்திரண்டாவது வயதில் ஆர்.எஸ்.எஸ்ஸில் சேர்ந்து அதன் கொள்கைகளை உணர்ச்சி மேலீட பிரச்சாரம் செய்தான்.


திலகரின் மறைவுக்குப் பிறகு மகாத்மா தலைமையில் காங்கிரஸ் செயல்பட்டது. ரௌலட் சட்டம், ஜாலியன் வாலாபாக் படுகொலை, பகத்சிங்கின் வீரத்தியாகம், வட்ட மேஜை மகாநாடுகள், ஒத்துழையாமை இயக்கம், இரண்டாம் உலகப் போர், வெள்ளையனே வெளியேறு இயக்கம் என்று சரித்திரத்தின் பக்கங்கள் எழுச்சியோடு நகர்ந்த காலங்கள் இவை. தீவிரவாத இயக்கங்களும், தொழிலாளர் இயக்கங்களும் தோன்றி தேசப் போராட்டத்தில் பங்கு கொண்டது இந்த சமயத்தில்தான்.


இந்தியா என்றும், அகண்ட பாரதம் என்றும், 'பாரத மாதாகீ ஜெய்' என்றும் அடி வயிற்றிலிருந்து கத்தும் இவர்கள் தேச விடுதலைப் போராட்டத்தில் எந்த பங்கேற்பும் இல்லாமல் வேடிக்கை பார்த்தார்கள் என்பது அருவருப்பான உண்மை. ஒத்துழையாமை இயக்கத்தில் மூஸ்லீம்கள் அதிகமாக பங்கு பெற்றதால் "யவனப் பாம்புகள் ஒத்துழையாமை இயக்கத்தின் மூலம் பாலருந்தி, விஷம் கக்கும் சத்தங்கள் எழுப்பி தேசத்தில் கலகங்களை உருவாக்குகின்றன" என்று ஹெக்டேவார் சொன்னார். 1929 ஜனவரி 26ல் சுதந்திர தின உறுதி எடுத்துக் கொண்டு மகாத்மாவோடு 90000பேர் நாடு முழுவதும் கைது ஆகினர். ஆர்.எஸ்.எஸ் அப்போதும் மௌனம் சாதித்தது. 1940ல் ஹெக்டவாருக்குப் பிறகு பொதுச்செயலாளரான கோல்வார்கர் நாடு முழுவதும் ஒரு லட்சம் ஆர்.எஸ்.எஸ் இருப்பதாக பெருமையோடு சொன்னார். 1940ல் நடந்த சட்ட மறுப்பு இயக்கத்தில் 20000 பேர் கைதாகினர். அதில் குறிப்பிடும்படியான ஒரு ஆர்.எஸ்.எஸ் தலைவர் கூட இல்லாதது தற்செயல் அல்ல. 1942ல் நடந்த சட்ட மறுப்பு இயக்கத்தில் 1060 பேர் நாடு முழுவதும் பிரிட்டிஷ் போலீஸின் கொடுமைக்கும், சித்திரவதைக்கும் ஆளாகி இறந்து தியாகிகளானார்கள். அவர்களில் ஒரு ஆர்.எஸ்.எஸ் ஊழியரும் இல்லாதது அவர்களது புரையோடிய தேசபக்திக்கு காலத்தின் வாக்குமூலம். கோட்சே என்னும் இந்துத்வா அமைப்புகளின் வீர புருஷன், ஒப்பற்ற தியாகி எங்கே போயிருந்தார் அப்போது என்று தெரியவில்லை. ஆர்.எஸ்.எஸ்ஸின் குருவாகிய சவார்க்கர் வெளிப்படையாக அரசு அதிகாரத்தில் இருக்கும் இந்துக்கள் பிரிட்டிஷ் அரசோடு ஒத்துழைக்க வேண்டும் என அறைகூவல் விடுத்தார்.


இதற்கு பல காரணங்கள் இருந்த போதிலும் மிக முக்கியமான- மனோரீதியான ஒரு காரணம் இருந்தது. ஒரு போராட்டத்தில் எல்லோரும் இறங்குகிற போது ஜாதி, மதம், மொழி போன்ற அத்தனை பாகுபாடுகளையும் மறந்து ஒன்றாகி விடுவர். கடந்த காலத்தில் அதுதான் நிகழ்ந்திருந்தது. திரும்பவும் அது நிகழ ஆர்.எஸ்.எஸ்ஸும், இந்து மகா சபையும் விரும்பவில்லை.


முஸ்லீம் லீகாவது இந்த தேசீய போராட்டங்களில் ஓரளவுக்கு பங்குபெற்றுக் கொண்டு பிரிவினை கோஷத்தை முன் வைத்தது. ஆனால் இந்து மகா சபையும். ஆர்.எஸ்.எஸ்ஸூம் தேசவிடுதலை குறித்து அக்கறையேதுமின்றி- பிரிட்டிஷ் அரசுக்கு ஆதரவாகச் செயல்பட்டுக் கொண்டு பிரிவினை கோஷத்தை உரக்க எழுப்பிக் கொண்டிருந்தது.1929ல் இந்து மகாசபையை சார்ந்த பாய்பரமானந்தா "இந்துக்களும்,முஸ்லீம்களும் சேர்ந்து ஓட்டளித்தால் அவர்களது அரசியல் வேறுபாடுகள் மதம் சார்ந்ததாக இருக்கும். இது இரண்டு சமுகத்திற்கும் நல்லதல்ல; இன்னும் சொல்லப்போனால் இந்துக்களுக்கே அதிக பாதிப்பு உண்டாகும்" என்று சொன்னார்.(Hindu national movement, lahore, 1929) 1938ல் கோல்வார்கர் எழுதி வெளியிட்ட- we our nationhood, defined- என்னும் புத்தகத்தில் இரண்டு தேசங்கள் வேண்டும் என்கிற விஷயம் முன்வைக்கப்பட்டிருக்கிறது. இதைத் தொடர்ந்து 1940ல் லாகூரில் நடந்த முஸ்லீம் லீக் மாநாட்டில் "இரண்டு தேசங்கள் வேண்டும்" என்று முஸ்லீம் லீகும் தீர்மானம் நிறைவேற்றியது.


அடிப்படையில் ஒன்றையொன்று பரம எதிரிகளாக கருதினாலும் தேசப் பிரிவினையில் இந்த இரண்டு மதவாத அமைப்புகளும் ஒன்றுபட்டு நின்றன என்பது ஒரு விசித்திரமான இயல்பு. ஆகஸ்ட் 15, 1943ல் சவார்க்கர் "கடந்த 30 ஆண்டுகளாக பூகோள ரீதியிலான ஒற்றுமைக்கு நாம் பழக்கப்பட்டிருக்கிறோம். காங்கிரஸ் இதையே பலமாக ஆதரிக்கிறது. ஒவ்வொரு சலுகையாக தங்களுக்கு கேட்டு அனுபவித்து வரும் முஸ்லீம் சிறுபான்மையினர் திடீரென தனி நாடு வேண்டுமென்று கேட்கின்றனர். ஜின்னாவுடன் எனக்கு இதில் எந்த பேதமும் இல்லை. இந்துக்களாகிய நாங்கள் ஒரு தேசமாகவே இருக்கிறோம். இந்துக்களும் முஸ்லீம்களும் இரண்டு தேசங்கள் என்பது வரலாற்று உண்மை' என்று சொன்னார். பிரித்தாளும் சூழ்ச்சி கொண்ட பிரிட்டிஷ்காரனுக்கு ஆர்.எஸ்.எஸ் செய்த அரிய சேவைகளில் ஒன்று இது. மகாத்மா பிரிவினைக்கு ஒத்துக் கொள்ளவேயில்லை. "இந்தப் பிரச்சினை பத்து நிமிடத்தில் தீர்ந்துவிடும். காந்தி மட்டும் சம்மதிக்க வேண்டும்" என்றார் மவுண்ட்பேட்டன்.


காந்தியோ " என்னை வேண்டுமானால் இரண்டாக வெட்டிப் போடுங்கள். இந்த தேசத்தை இரண்டாக கூறு போடாதீர்கள்" என்று கோபமாக சொல்லி விட்டார். மன்னன் சாலமன் சபையில் தனது குழந்தையை வெட்டுவதற்கு ஒப்புக்கொள்ளாமல் கதறி அழுத உண்மையான தாய் உணர்வின் வெளிப்பாடாக இருந்தது.


இந்த இடைப்பட்ட காலத்தில் கோட்சே ஆர்.எஸ்.எஸ்ஸிலிருந்து விலகி இந்து மகாசபா என்னும் ஆர்.எஸ்.எஸ்ஸோடு தொடர்புடைய இன்னொரு இந்துத்துவா அமைப்பில் சேர்ந்ததாக சொல்லப்படுகிறது. இந்துமகாசபையின் தலைவராயிருந்த வீரசவார்க்கரோடு நெருங்கிய தொடர்பு கொண்டவனாகிறான். மிகச் சரியாக இந்த நேரத்தில்தான் 'இந்து ராஷ்டிரா' என்று ஒரு பத்திரிக்கை பூனாவில் இருந்து ஆரம்பிக்கப்பட்டு கோட்சே அதன் ஆசிரியராக பணிபுரிகிறான். இந்த பத்திரிக்கைக்கு ரூ.15000/- முன் தொகையாக நிதி அளித்தது வீரசவார்க்கர்.


மாறி மாறி பிரச்சாரம் செய்யப்பட்டது. "முஸ்லீம்களை எப்படி இந்தியர்கள் என ஏற்றுக் கொள்ள முடியும்?" "முஸ்லீம்கள் இந்த நாட்டில் இந்துக்களுக்கு அடங்கிப் போக வேண்டும். அவர்களுக்கென்று எந்த சலுகையும் அளிக்கக் கூடாது. பிரஜா உரிமை கூட அளிக்கக் கூடாது" என ஒருபுறமும் "சுதந்திர இந்தியாவில் மூஸ்லீம்களாகிய நமக்கு வேலைவாய்ப்பு, அதிகாரத்தில் இடம் இருக்காது" "அவர்கள் நம்மையும் தீண்டத்தகாதவர்களாகவே நடத்துகிறார்கள்" என இன்னொரு புறமும் ஆதிக்க வெறியும், அச்ச உணர்வும் மக்கள் மனதில் விதைக்கப்பட்டன.


நவகாளியில் மதக் கலவரங்கள் வெடித்து, பீகார்,பம்பாய், பஞ்சாப் என்று பரவ ஆரம்பித்தன. பிரிவினை இல்லாமல் நாட்டின் சுதந்திரம் சாத்தியமில்லை என்ற நிலைமைக்கு காங்கிரஸ் வந்தது. காந்தி வேறு வழியில்லாமல், தார்மீகத் தோல்வியோடு அந்த பிரிவினைக்கு ஒத்துக் கொண்டார். இடைக்கால அரசாங்கம் ஏற்படுத்தப்பட்டு சுதந்திர இந்தியாவின் அரசியலமைப்பை உருவாக்கும் பணி நடந்து கொண்டிருக்க வெட்டுண்ட மனித உடல்களும், எரிந்த வீடுகளின் புகையுமாக மதவெறி நாட்டை ரணகளமாக்கிக் கொண்டிருந்தது.


நடுவில் கோடு கிழித்து இரண்டு தேசமாக்கிவிட்டால் இந்த பகைமையின் வேகம் தணிந்துவிடும் என்ற நம்பிக்கையும் உடைந்து போனது. காந்தி காற்றில் படபடக்கும் சுடரை அணையாமல் பாதுகாக்கும் முயற்சியாக நவகாளியில் யாத்திரை செய்தார். அவர் சென்ற இடங்களில் அமைதி திரும்பிக் கொண்டிருந்தது.


ஆகஸ்ட் 15 என்னும் அந்த விடுதலை நாள் அதிர்ச்சியோடும், இரத்தக்கறையோடும் வந்தது. பாகிஸ்தான் ஒரு நாடாகவும், இந்தியா ஒரு நாடாகவும் பிரிந்தன. காந்தி கல்கத்தாவின் ஒரு ஏழை முஸ்லீம் வீட்டில் ராட்டையில் நூல் நூற்றுக் கொண்டிருந்தார். அவரது நம்பிக்கைகள் காயப்படுத்தப் பட்டிருந்தன. அவர் கனவு கண்ட தேசம், அவர் நேசித்த மக்கள் இன்று வேறேதுவோ ஆகியிருந்தார்கள். சகிப்புத்தன்மையையும், அன்பையும் உலகிற்கு தந்து உலகத்தின் ஒளியாக திகழ்வார்கள் என்பது இப்போதைக்கு இல்லை என்பதை புரிந்து கொண்ட தவிப்புதான் அது. ஆனால் நம்பிக்கையோடு அவரது ராட்டை சுழன்று கொண்டிருந்தது.


'புதிய அரசு அமைக்க பிரிட்டிஷ் காங்கிரஸை மட்டும் அழைக்காது. தங்களையும் சேர்த்துக் கொண்டு ஒரு தேசீய அரசு அமைக்கப்படும' என்று இந்து மகாசபையும், ஆர்.எஸ்.எஸ்ஸூம் உறுதியாக நம்பினர். ஆனால் காங்கிரஸே புதிய அரசை அமைத்தது. சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமராக ஜவஹர்லால் நேரு பொறுப்பேற்கிறார். இது குறித்து சவார்க்கர் முதற்கொண்டு அனைவருக்கும் ஏமாற்றமும், கோபமும் இருந்தது. இந்துக்கள் அவர்களது வீடுகளில் ஆகஸ்ட் 15ம் தேதி மூவர்ண தேசியக் கொடியை ஏற்ற வேண்டாம் எனவும், பகவா கொடியை ஏற்றி வைக்க வேண்டுமென இந்து மகாசபை அறைகூவல் விடுத்தது. கோட்சே துப்பாக்கியோடு காத்திருக்கும் இந்த நாளுக்கான இருட்டு இந்தப் புள்ளியிலிருந்துதான் உருவெடுக்கிறது.


இங்கிருந்து பாகிஸ்தானுக்கு சென்ற முஸ்லீம்கள் போகும் வழியில் கடுமையாக தாக்கப்பட்டனர். அங்கிருந்து இந்தியாவுக்கு வந்த இந்துக்கள் அதுபோலவே ஈவிரக்கமில்லாமல் தாக்கப்பட்டனர். மதவெறி இரண்டு பக்கமும் சர்வ நாசத்தை ஏற்படுத்தியிருந்தது. பாகிஸ்தானுக்கு செல்ல முடியாத முஸ்லீம்களும் இங்கு சித்திரவதை செய்யப்பட்டனர். டெல்லி ஏறத்தாழ அழிவின் விளிம்பிலிருந்தது. அகதிகள் முகாம்களில் முஸ்லீம்கள் தங்க வைக்கப்பட்டிருந்தனர். எதிர்காலம் குறித்து யோசிப்பதற்கு அவர்களுக்கு எதுவுமில்லை.


டெல்லி திரும்பியிருந்த காந்தி ஜனவரி 13ம் தேதி உன்ணாவிரதம் இருப்பதாக அறிவித்தார். சுதந்திர இந்தியாவில் அவர் மேற்கொண்ட உண்ணாவிரதம். நாடு முழுவதும் கொப்பளித்த பகைமையின் வேகத்தை தணிக்க அவரிடம் அப்போது அவர் உயிர்தான் ஆயுதமாக இருந்தது. நாடு மகாத்மாவின் பலவீனமான நாடித்துடிப்பை கவலையோடு பார்க்க ஆரம்பித்தது. கலவரங்கள் நடந்த இடங்களில் மெல்ல அமைதி திரும்பியது. பழிக்குப் பழி வாங்க வேண்டும் என்று பாதிக்கப்பட்டவர்கள் கொண்டிருந்த வன்மம் மகாத்மாவின் மீது திரும்பியது. அவருக்கு அதுகுறித்து கொஞ்சம்தான் கவலை. அவர் வேண்டியதெல்லாம் இந்த மண்ணில் அமைதியும், மக்களிடம் அன்பும்தான்.


காஷ்மீர் இந்தியாவுடன் இணைய விருப்பம் தெரிவித்தும், பாகிஸ்தான் காஷ்மீரை இழக்க சம்மதியாமல் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தது. நாட்டை பிரிக்கும்போது அப்போது ரிசர்வ் வங்கியின் இருப்பில் இருந்த 375 கோடியில் இந்தியாவுக்கு 300 கோடி எனவும், பாகிஸ்தானுக்கு 75 கோடி எனவும் பேசி முடிவு செய்யப்பட்டிருந்தது. முன் தொகையாக விடுதலைக்கு முன்பே 20 கோடி கொடுக்கப்பட்டிருந்தது. மீதித்தொகை 55 கோடி கொடுக்கப்படவில்லை. அந்தத் தொகையை கேட்டு பாகிஸ்தான் ஜனவரி முதல் வாரத்தில் இந்தியாவுக்கு கடிதம் எழுதியது. காந்தி அந்த தொகையை கொடுக்க வேண்டியது இந்தியாவின் தார்மீகக் கடமை எனக் கருதினார். உண்ணாவிரதம் துவக்கும் போது அதை ஒரு காரணமாக வலியுறுத்தவில்லை என்றாலும், உண்ணாவிரதத்தின் போது
வலியுறுத்தினார். மந்திரி சபையும் ஒத்துக் கொள்ள வேண்டும், அனைத்து தலைவர்களும் ஒப்புக் கொள்ள வேண்டும் என மகாத்மா வலியுறுத்தினார்.


இந்து மகாசபை,ஆர்.எஸ்.எஸ் எல்லாமே அந்த 55 கோடி கொடுக்க வேண்டாம் என அங்கங்கு ஆர்ப்பாட்டங்கள் நடத்தின. முதலில் கையெழுத்திட மறுத்த ஆர்.எஸ்.எஸ் பிறகு ஒப்புக்கொண்டது இறுதியில் அரசு 55 கோடி ருபாயை கொடுக்க வேண்டியதாயிற்று. காந்தியைக் கொல்ல இப்போது அவர்களுக்கு ஒரு காரணம் கிடைத்து விட்டது. இந்தியாவில் அமைதி திரும்புவதை அவர்கள் எப்போதும் விரும்பியிருக்கவில்லை. இந்தியாவின் இரத்தம் அனைத்தையும் உறிஞ்சி இந்து ராஷ்டிரா அமைக்க வேண்டும் என துடித்துக் கொண்டிருந்தனர். ஒரு காலத்தில் புத்தர் அவர்களது சதிகளை உடைத்து மக்களை அன்பினால் வென்றார். புத்தபிட்சுகளையும், சமணர்களயும் ஆயிரக் கணக்கில் கொன்று திரும்ப தங்கள் ஆதிக்கத்தை நிறுவ வேண்டியிருந்தது.


இப்போது மகாத்மா காந்தி!

(அடுத்த அத்தியாயம் நாளை)

முன்பக்கம்

கருத்துகள்

9 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
  1. /இதில் மோசமான அம்சம் மதரீதியில் பிரதிநிதித்துவம் கொடுப்பதற்கும்
    வழிசெய்யப்பட்டிருந்ததுதான்./

    By asking for 15% allocation in budget of each department to muslims CPI(M) is doing a similar
    thing today.CPI(M) is all out to appease muslims by asking for allocation for them in bank loans.

    பதிலளிநீக்கு
  2. Mr. Anonymous,

    Allocation in bank loans has got nothing to do with "representation in eloctorates", which was what done by the British, as the author points out.

    And why hide anonymously if your comment is true and comes straight from your heart?

    பதிலளிநீக்கு
  3. தீபா!

    நானும் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறேன்.
    எப்போதெல்லாம் இந்துத்துவா பற்றி நான் எழுதுகிறேனோ, அப்போதெல்லாம்
    இப்படிப்பட்ட அனாமதேயங்கள் உள்ளே வந்து தத்து பித்தென்று உளற ஆரம்பிக்கின்றன.

    பதிலளிநீக்கு
  4. Gandhi---It is a hot topic to day-
    If you put your legs in side the topic, you will have to go many miles ,disputes and rejoinders..careful in topics,
    --vimala vidya

    பதிலளிநீக்கு
  5. விமலவித்யா அவர்களுக்கு!

    தாங்கள் என் மீது காட்டி வருகிற அக்கறைக்கு தலை வணங்குகிறேன்.
    இது போன்ற உரையாடல்கள் தொடர்வது அவசியம் என நினக்கிறேன்.
    மறந்து விடுவது மக்கள் இயல்பு. அதை நினைவு படுத்திக் கொண்டிருக்க வேண்டிய கடமை நமக்கு இருப்பதாக உணர்கிறேன்.
    விவாதங்கள் வரட்டும். அதில் எப்படியும் உண்மை மேலும் தெளிவாகும் என்றே நம்புகிறேன்.

    பதிலளிநீக்கு
  6. "இதைத் தொடர்ந்து 1940ல் லாகூரில் நடந்த முஸ்லீம் லீக் மாநாட்டில் "இரண்டு தேசங்கள் வேண்டும்" என்று முஸ்லீம் லீகும் தீர்மானம் நிறைவேற்றியது.


    அடிப்படையில் ஒன்றையொன்று பரம எதிரிகளாக கருதினாலும் தேசப் பிரிவினையில் இந்த இரண்டு மதவாத அமைப்புகளும் ஒன்றுபட்டு நின்றன என்பது ஒரு விசித்திரமான இயல்பு. ஆகஸ்ட் 15, 1943ல் சவார்க்கர் "கடந்த 30 ஆண்டுகளாக பூகோள ரீதியிலான ஒற்றுமைக்கு நாம் பழக்கப்பட்டிருக்கிறோம். காங்கிரஸ் இதையே பலமாக ஆதரிக்கிறது. ஒவ்வொரு சலுகையாக தங்களுக்கு கேட்டு அனுபவித்து வரும் முஸ்லீம் சிறுபான்மையினர் திடீரென தனி நாடு வேண்டுமென்று கேட்கின்றனர். ஜின்னாவுடன் எனக்கு இதில் எந்த பேதமும் இல்லை. இந்துக்களாகிய நாங்கள் ஒரு தேசமாகவே இருக்கிறோம். இந்துக்களும் முஸ்லீம்களும் இரண்டு தேசங்கள் என்பது வரலாற்று உண்மை' என்று சொன்னார். பிரித்தாளும் சூழ்ச்சி கொண்ட பிரிட்டிஷ்காரனுக்கு ஆர்.எஸ்.எஸ் செய்த அரிய சேவைகளில் ஒன்று இது"
    In 1940 when musim asked to separate the country, they did not help Bristish govt to separate us. But in 1943, it became a help Because it was said by hindu maha sabai. What is this? If you are really writing a article with out supporting hindu or muslim. You should write about all. But you started this article only to put RSS in the black list. Not to tell about he real story. For writing all these things, i am not from RSS or any other hindu group.
    I have seen most of the writers (including karunanithi) if they support muslims or other minorities, they think they are reaching to a higher position.
    It is not true

    பதிலளிநீக்கு
  7. 1929 ஜனவரி 26ல் சுதந்திர தின உறுதி எடுத்துக் கொண்டு // Purna Swaraj declaration < January 26, 1930 > http://en.wikipedia.org/wiki/Purna_Swaraj

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!