அயோத்தி திரைப்படம் : மாதவராஜ் எழுத்துக்களை திருடிய எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன்!

அயோத்தி படத்திற்காக அதன் இயக்குனர் மந்திரமூர்த்தியிடம்  2018ல் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் கொடுத்த  கதையை, - அந்தப் படத்திற்கு முதலில் திரைக்கதை எழுதிய சங்கரதாஸ் அவர்கள் தனது ஃபேஸ்புக்கில் வெளியிட்டு இருக்கிறார். அவருக்கு எனது நன்றிகள்.  

அந்தக் கதைக்கு ஆதாரமான உண்மைச் சம்பவத்தை 2011ம் ஆண்டு நான்  (மாதவராஜ் ) தீராத பக்கங்களில் எழுதி இருந்தேன் 

இரண்டின் நகல்களும் இங்கே தரப்பட்டு இருக்கின்றன. படித்து அறிந்து கொள்ளலாம்.  

உண்மைகள் ஆவணப்படுத்தப்பட வேண்டும்.

2011ல் மாதவராஜ் எழுதிய பதிவு : 

 “உ.பி மாநிலத்தின் லக்னோவைச் சேர்ந்தவர். மத்திய பீகார் கிராம வங்கியில் பணிபுரிபவர். பெயர் வினோத் ஸ்ரீவத்சவா. இராமேஸ்வரத்துக்கு டூர் சென்றபோது விபத்து நடந்திருக்கிறது. அவரது மனைவி அங்கேயே இறந்துவிட்டார். இரண்டு மகள்களும், ஒரு மகனும் அவரும் இப்போது மதுரை ஏர்போர்ட்டில் இருக்கிறார்கள்.  உடனடியாகச் சென்று அவர்களுக்கு உதவி செய்யுங்கள்” இதுதான்   31.8.2011 காலை 8 மணிவாக்கில், பீகார் மாநிலத்தைச் சேர்ந்த அர்விந்த் சின்ஹா எங்களிடம் சொன்ன தகவல். 

 

அவர்,  எங்கள் All India regional Rural Bank Employees Association (AIRRBEA பீகார் மாநிலக்குழுவின் முக்கிய தோழர். திருச்சியில் நடந்த எங்கள் சங்கத்தின் மாநிலக்குழு  கூட்டத்திற்கு நாங்கள் சென்று கொண்டு இருந்த வேளை அது. மதுரையில் வசிக்கும் எங்கள்  சங்கத்தோழர்கள் தோழர்.சுரேஷ்பாபுவிடமும்,  சாமுவேல் ஜோதிக்குமாரிடமும் உடனடியாக இந்த விஷயத்தைச் சொன்னோம்.

 

தோழர்கள் இருவரும் ஏர்போர்ட்டுக்கு சென்றபோது பெரும் துயரத்தில் அலைக்கழிந்தவர்களாய் அவர்கள் இருந்திருக்கிறார்கள். வினோத் ஸ்ரீவத்சவாவுக்கு ஐம்பது வயதுக்கு மேலிருந்திருக்கிறது.  இருபது வயதையொட்டி இரண்டு பெண்களும், ஒரு பையனும் கூடவே என்ன செய்வதென்று தெரியாமல் பரிதாபமாய்த் தவித்தபடி காட்சியளித்திருக்கிறார்கள். எல்லோர் உடலிலும், தலையிலும் ரத்தக் காயங்களும்,  மருத்துவக் கட்டுக்களுமாய் இருந்திருக்கின்றன. கொஞ்சம் தள்ளி ஆம்புலன்சில் அவரது அருமை மனைவியின் உடல்.  ஏர்போர்ட்டில் இருந்தவர்கள் அங்கங்கே நின்று ‘ஐயோ’வென பார்த்துக்கொண்டு மட்டும் இருந்திருக்கிறார்கள். ஆம்புலன்ஸ் டிரைவர்தான் எல்லாவற்றையும் சொல்லியிருக்கிறார்.

 

30.8.2011 அதிகாலையில் இராமநாதபுரம் அருகே சத்திரக்குடியில் விபத்து நடந்திருக்கிறது. அங்கிருந்து இராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, அவசர சிகிச்சை பெற்று, இறந்த மனைவியின் உடலை வாங்கிக் கொண்டு லக்னோ செல்ல ஏர்போர்ட்டுக்கு வந்திருந்தார்கள். “பைத்தியம் பிடிச்ச மாரி இருக்காங்க. ஒண்ணும் சாப்பிடக்கூட இல்ல சார் அவங்க” என்று சொன்னாராம் டிரைவர்.

 

பாஷை தெரியாத, பழகிய முகங்கள் அற்ற உலகில் அவர்கள் தங்கள் ஆற்ற முடியாத வலிகளோடு அழக்கூட திராணியற்றவர்களாய் தனித்து விடப்பட்டிருக்கின்றனர். அருகில் சென்று,  “நாங்க பாண்டியன் கிராம வங்கியில் பணிபுரிகிறோம். AIRRBEA ஆட்கள். அர்விந்த சின்ஹா சொன்னார்” என்று சாமுவேல் ஜோதிக்குமாரும், சுரேஷ் பாபுவும் அறிமுகப்படுத்திக் கொண்டபோது, எழுந்து நின்றிருக்கிறார் வினோத் ஸ்ரீவத்சவா.  கைகளைப் பற்றிக்கொண்டு, அதற்கு மேல் ஒன்றும் பேச முடியாமல் இருந்திருக்கிறார்.  அவருக்கு ஒரு கண் அருகே சிதைந்து வீங்கியிருந்திருக்கிறது. அவரது மகள்களும், மகனும் ஏறிட்டுப் பார்த்துவிட்டு நிலைகுத்திப்போய் இருந்திருக்கிறார்கள். மகனுக்கு நெற்றிப் பொட்டில் காயம்.  மூத்த மகளுக்கும் தலையில் காயம். அங்கங்கே ரத்தத் திட்டுக்கள்.  சுரேஷ்பாபு காண்டீன் சென்று டீக்களும், வடைகளும் வாங்கிக் கொண்டு வந்து, முதலில் இதைச் சாப்பிடுங்கள் என்று சொல்லியிருக்கிறார். அவர்களால் அந்த வடையை மெல்ல முடியவில்லை. தாடைகளை சரியாக அசைக்க முடியாமல் வலித்திருக்க வேண்டும். 

 

தங்களைப் பிடித்து உலுக்கி, கட்டியழுது, அவர்களின் கைகளையும், உடலையும் தாங்கிப் பிடித்து, கூடவே இருந்து ஆதரவு தரக்கூடிய சொந்த மனிதர்களும், மண்ணுமே அவர்களுக்கு அப்போது தேவை. “லக்னோவுக்கு போகவேண்டும் ஹெல்ப் செய்யுங்கள்” என்றிருக்கிறார் வினோத். அவரது இரண்டாவது பெண் பூஜா அடிக்கடி ஆம்புலன்ஸ் அருகே சென்று, தனது அம்மாவைப் பார்த்துக்கொண்டு இருந்திருக்கிறாள்.

 

சாமுவேல் ஜோதிக்குமாரும், சுரேஷ் பாபுவும் ஆக வேண்டிய காரியங்களைப் பார்க்க ஆரம்பித்திருக்கின்றனர். பெராமவுண்ட், கிங் ஃபிஷ்ஷர் போன்ற தனியார் நிறுவனங்கள் எதுவும் இறந்த உடலைக் கொண்டு செல்ல முடியாது என கைவிரித்து விட்டன. இந்தியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் கார்கோவில் கொண்டு செல்ல முடியும் என்றனர். கூட இருப்பவர்கள் யாரென்று கேட்டனர். “நான்கு பேர்” என்று சொல்லி அவர்களை சாமுவேல் அழைத்துக் காட்டியிருக்கிறார்.

 

அவர்களது ரத்தக் காயங்களைப் பார்த்ததும், விமான நிலையத்தில் பயந்து விட்டனர்.  “மேலே விமானம் செல்லும்போது, காற்று அழுத்தம் கூடும். இவர்களின் உயிர்களுக்கு ஆபத்து வந்துவிடக் கூடாது” என்று சொல்லி, மெடிக்கல் ஃபிட்னஸ் சர்டிபிகேட் வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்கள்.  “மதியம் ஒண்ணே கால் மணிக்கு ஃபிளைட்.  பனிரெண்டரைக்குள் வாருங்கள்” என அவசரப்படுத்தியிருக்கின்றனர். அப்போதே மணி பதினொன்றை நெருங்கியிருந்தது.

 

ஏர்போர்ட்டிலேயே ஆஸ்பத்திரி ஒன்று இருந்திருக்கிறது. அங்கு சென்று விசாரித்திருக்கிறார்கள். ஸ்கேனிங் வசதி இல்லையெனச் சொல்லி, சர்டிபிகேட் தர முடியாது என்று கைவிரித்துவிட்டார்கள். மதுரைக்குள் செல்ல வேண்டுமென்றால் பல கி.மீக்கள் செல்ல வேண்டும். சாமுவேல் தனக்குத் தெரிந்த டாக்டர் ஒருவருக்கு போன் செய்து பேசிவிட்டு, அந்த ஆம்புலன்சில் அனைவரையும் அழைத்துக்கொண்டு சென்றிருக்கிறார். 

 

மங்காத்தா ரசிகர்களும், ரம்ஜான் கொண்டாட்டங்களுமாய் இயங்கிக் கொண்டு இருந்த சாலைகளில் சென்ற மூடப்பட்ட ஆம்புலன்சுக்குள் அந்தக் குடும்பம் நிலைகுலைந்து உட்கார்ந்திருக்கிறது. தேவையான பரிசோதனைகள் செய்து, ரத்தக் காயங்களைத் துடைத்து, சிகிச்சையளித்து, சர்டிபிகேட் தந்திருக்கிறார் டாக்டர். ஏர்போர்ட்டுக்குத் திரும்பியபோது மணி பனிரெண்டரையை தாண்டிவிட்டதாம். வழியிலேயே, சாமுவேல் ஜோதிக்குமார் ஏர்லைன்சுக்குப் போன் செய்து, தாங்கள் வருவதாகவும், நான்கு டிக்கெட்டுகள் வேண்டும் என்பதையும் திரும்ப ஒருமுறை நினைவுபடுத்தி இருந்திருக்கிறார்.

 

சர்டிபிகேட்களை சரிபார்த்த பிறகு,  ஏர்லைன்ஸில் சொன்ன டிக்கெட்டுகளின் விலை தாறுமாறாயிருந்திருக்கிறது. சென்னக்கு செல்ல மட்டுமே ஏறத்தாழ ரூ.65000! ரம்ஜான் என்றதால் இதர டிக்கெட்டுகள் புக்காகியிருக்க,  எமர்ஜென்ஸியில்தான் புக் செய்ய முடியும் எனவும், ஒரு டிக்கெட்டின் விலை ரூ.11000 எனவும், கார்கோவில் உடலைக் கொண்டு செல்ல தனி சார்ஜ் எனவும் ஏதேதோ கணக்குகள் சொல்லியிருக்கிறார்கள்.

 

வினோத் ஸ்ரீவத்சவா தன்னிடம் எவ்வளவு இருக்கிறது என்றால் சொல்லத் தயங்கியிருக்கிறார். எவ்வளவு பணம் தேவைப்படும் என்று சொன்னால், தான் ஏற்பாடு செய்வதாகவும் சாமுவேல் ஜோதிக்குமார் அவரிடம் சொன்னலும்,  அவர் விழிபிதுங்கி செய்வதறியாமல் நின்றிருக்கிறார். பிறகு மெல்ல ரூ.60000 போல இருப்பதாகச் சொன்னாராம். அவரது குழந்தைகள் கண்கள் கலங்கி அப்படியே உட்கார்ந்திருக்கிறார்கள்.

 

இறந்த அம்மாவின் உடலோடு, இரண்டாவது மகள் பூஜா உடனடியாக லக்னோ செல்வது எனவும், மற்ற மூவரும் அடுத்த ஃபிளைட்டில் டெல்லி சென்று, அங்கிருந்து லக்னோ செல்வது எனவும் சாமுவேல் ஜோதிக்குமாரும், சுரேஷ்பாபுவும் சொல்லிப் பார்த்திருக்கிறார்கள். “நான்கு பேர் வருவதாகச் சொன்னதால்தான் நிலைமை கருதி, விமானத்தை நிறுத்தி வைத்ததாகவும், சொன்னபடி நான்கு பேரும் ஒரே ஃபிளைட்டில் செல்ல வேண்டுமென அதிகாரிகள் பிடிவாதம் பிடிக்க, சாமுவேல் அவர்களோடு கடுமையான வாக்குவாதம் செய்ய ஆரம்பித்திருக்கிறார்.  கூடி நின்று பார்த்துக்கொண்டு இருந்தவர்களும் ஆதரவு தெரிவிக்க, கடைசியில் அதிகாரிகள் ஒப்புக்கொண்டு இருக்கின்றனர்.

 

இறந்த உடலையும், மற்ற நான்கு பேரையும், அவர்களது சிதறிக்கிடந்த லக்கேஜ்களையும் அதிகாரிகள் சோதனை செய்ய ஆரம்பித்திருக்கிறார்கள். “நீங்க யாரும் சாப்பிடல. தயவு செய்து விமானத்தில் கொடுக்கும் ஸ்னாக்ஸையும், டீயையும் சாப்பிட வேண்டும்” என தோழர்.சுரேஷ்பாபு கேட்டுக்கொண்டிருக்கிறார் . அதற்கு மேல் விருந்தினர்கள் செல்ல முடியாத பகுதி வந்ததும், 

 

மூத்த மகள் மோனிகா சட்டென்று சாமுவேல் ஜோதிக்குமாரின் கால்களில் விழுந்து ஓவென்று வெடித்து குலுங்கியிருக்கிறார்.  வினோத் ஸ்ரீவத்சவா சுரேஷ்பாபுவைக் கட்டிப்பிடித்துக்கொண்டு “நீங்க எல்லாம் யார் சார். எங்கிருந்து வந்தீங்க சார். எங்களுக்கு ஏன் சார் ஹெல்ப் பண்ணனும் ?  நீங்க வரவில்லையென்றால் எங்கள் நிலமை என்ன சார்” என்று கதறி அழுதிருக்கிறார். ஏர்போர்ட்டில் இருந்த அனைவரும் இந்தக் காட்சியைப் பார்த்து உறைந்துபோக, சாமுவேல் ஜோதிக்குமார் சுதாரித்து, அவர்களை எழுப்பி, “இதுல என்ன இருக்கு சார். எங்களால் இதுதான் முடியும். உங்க துயரம் அவ்வளவு பெரியது. நாம எல்லாம் மனுஷங்கதானே. ” என்று சொன்னாராம். வினோத் ஸ்ரீவத்சவா கண்ணீர் பெருக விடைபெற்றிருக்கிறார்.

 

சாமுவேல் ஜோதிக்குமாரும், சுரேஷ் பாபுவும் வெளியே வந்து காண்டீனில் டீக்குடித்து அமைதியாக நின்றிருக்கிறார்கள். ஒரு விமானம் புறப்பட்டதைப் பார்த்த பிறகு,  திருச்சியில்  இருந்த எங்களுக்குப் போன் செய்து, “அவர்களை லக்னோ அனுப்ப ஏற்பாடு செய்துவிட்டோம். இறந்த அம்மாவின் உடலோடு இரண்டாவது மகள் பூஜாவை ஏற்றிக்கொண்டு ஒரு விமானம் சென்றுவிட்டது. அடுத்த விமானத்தில் வினோத் ஸ்ரீவத்சவாவும், அவரது மூத்த மகளும், பையனும் செல்ல இருக்கிறார்கள்.” என்று சொல்லியவர், “தோழா! தாங்க முடியல” என்று குரல் உடைந்து போனார்.

 

 

2018ல் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் ‘திருநாள்’ என அயோத்தி படத்திற்கு கொடுத்த கதை இது: -

 

தீபாவளி அன்று காலை மதுரை ரயில் நிலையத்தில் அதிகாலை 4மணிக்கு கன்னியாகுமாரி எக்ஸ்பிரஸ் வந்து நிற்கிறது.அதிலிருந்து பாட்னாவை சேர்ந்த ஷியாம் பிரசாத் அவரது மனைவி பிதிபா மகள் பாலிகா.வயது 16.மகன் ஆதவ் வயது 9 ஆகியோர் இறங்குகிறார்கள்.வாசல் வந்தவர்கள் ஒரு கார் புக் செய்கிறார்கள்.அப்பொழுது பாலிகா  பாத்ரூம் போக வேண்டும் என்று கேட்கிறாள்..சூரிய உதயத்தை காண விரைந்து செல்ல வேண்டுமென்று பிரசாத் அதை மறுக்கிறார். மனைவி பிரசாத்தை திட்டுகிறாள் எதையும் கண்டுகொள்ளாமல் காரில் ஏறுகிறார்.தீபாவளி என்பதால் அதிகாலையிலேயே மக்கள் இயக்கம் துவங்கியிருக்கிது. கார் மதுரையை விட்டு கிளம்பி ராமநாதபுரம் சாலையில் செல்ல துவங்குகிறது.

நீண்ட காலமாக ராமேஸ்வரம் போக வேண்டும் என்ற ஆசையில் பிரதீபா தான் சேர்த்து வைத்த பணம் உள்ள உண்டியல் பெட்டியை மடியில் வைத்தபடியே உட்கார்ந்திருக்கிறாள்.சாலையோரம் ஒரு சிறுவன் வெடி போடுவதை பாலிகா பார்த்தபடியே வருகிறாள்.பிரசாத் காரை வேகமாக ஓட்ட சொல்லி  டிரைவரை திட்டுகிறார்.கார் வேகமாக செல்கிறது.

கார் எதிர்பாராத விதமாக பால் வேன் ஒன்றின் மீது  மோதி  விபத்துக்குள்ளாகிறது. கார் சாலையை விட்டு சரிந்து கீழே உருண்டு விழுகிறது. பிரதீபாவுக்கு  தலையில் அடிபட்டு ரத்தம் கொட்டுகிறது.பிள்ளைகள் காயத்துடன் தப்பியிருக்கிறார்கள்.ஷியாம் கையில் அடிபட்டு ரத்தம் வழிகிறது.சாலையில் நின்று உதவி கேட்கிறார் யாரும் உதவி செய்யவில்லை.அம்மாவை பார்த்து குழந்தைகள் அழுகிறார்கள்.குடும்பமே சாலை நடுவில் நின்று உதவி கேட்கிறது.

காலை 6 மணி.கதிர் வீட்டில் அரை தூக்கத்தில் படுத்துகிடக்கிறான்.பலகாரம் சுட்டபடியே அம்மா அவனை எழுந்திருக்க சொல்லி  சத்தம் போடுகிறாள்.அப்பொழுது கதிருக்கு சுஜாவிடமிருந்து போன் வருகிறது.அவள் புத்தாடை அணிந்துவிட்டதாகவும் அவனிடம்தான் முதலில் காண்பிக்கவேண்டுமென்றும் உடனே தன்னை பார்க்க வரும்படி  அழைக்கிறாள்.கதிர் பரபரப்பாக எழுந்து  குளிக்க செல்கிறான்.அம்மா ஆச்சர்யமாக பார்க்கிறாள்.

காட்டுராஜா தனது வீட்டில் தீபாவளி பலகாரங்களை உண்டபடி பேப்பரை புரட்டுகிறார்.நாளிதழில் அவரது ராசி பலனில் வீண் அலைச்சல் என்று எழுதியிருப்பதை பார்க்கிறார்.அவரது மனைவி கூடையை அவரிடம் நீட்டி இறைச்சி வாங்கி வரும்படி கூறுகிறாள்.அதான பார்த்தேன்  பேப்பர்ல வீண் அலைச்சல்னு போட்டருந்தான்  இந்தா வேலை சொல்ல வந்துட்டியா என்று அலுத்துக்கொண்டு அவளிடம் கூடையை வாங்கியபடி  வீட்டிலிருந்து வெளியேறுகிறார்.

கதிர் சுஜா வீட்டின் எதிரே போனில் பேசியபடி நிற்கிறான்.சுஜா மாடியில் நின்றபடி  கதிரிடம் பேசுகிறாள்.அவளது அப்பா வாசலில் பட்டாசு வெடிக்கிறார்..தீபாவளி மகிழ்ச்சி தெருவெங்கும் தெரிகிறது.அடுத்த தீபாவளி நமக்கு  தலை தீபாவளி என்கிறான்.அவள் சிரிக்கிறாள்.அப்பொழுது கதிருக்கு மாமா காட்டுராஜாவிடமிருந்து போன் வருகிறது. நமது வண்டி விபத்துக்குள்ளாயிருப்பதாகவும் நமக்கு தீபாவளி கொண்டாட்டம்தான் முக்கியம்.இப்போதைக்கு வாகனத்தை மட்டும்  பாதுகாப்பாக விட்டுவிட்டு நாளை பார்த்துக்கொள்ளலாம். என்று கூறுகிறார்.கதிர் மாமாவை தேடி கறி கடைக்கு செல்கிறான்.இருவரும் விபத்து நடந்த இடத்தை நோக்கி போகிறார்கள்.  

காட்டுராஜா கதிர் இருவரும் விபத்து நடந்த பகுதிக்கு வருகிறார்கள். அங்கே பிரதீபா பலத்த காயங்களுடன்  இறந்தநிலையில் கிடக்கிறாள்.அவளின் உடலை சுற்றி கணவன் மற்றும் குழந்தைகள் செய்வதறியாது கதறி அழுது கொண்டிருக்கிறார்கள்.கதிர் காட்டுராஜா இருவரும் அவர்களது நிலையை எண்ணி வருந்துகிறார்கள்.பிரதீபாவின் கணவர்  இறந்த உடலை லக்னோ எடுத்து செல்ல உதவி செய்ய வேண்டுமென்று அழுதபடியே கேட்டுகொள்ளவே. கதிர் காட்டுராஜா இருவரும் உதவ முடிவு செய்கிறார்கள்.வேன் ஒன்றை ஏற்பாடு செய்து இறந்த உடலை பிரேத பரிசோதனை செய்ய ராமநாதபுரம் மருத்துவமனைக்கு ஏற்றி அனுப்புகிறார்கள்.காட்டுராஜா கதிரிடம் சில மணி நேரங்களில் வேலை முடிந்துவிடும் பின் தீபாவளியை கொண்டாடலாம் என்று கூறி வண்டியை பின் தொடர்கிறார்.

வேன் அரசு மருத்துவமனைக்குள் நுழைகிறது.தீபாவளி விடுப்பில் டாக்டர்கள் யாருமின்றி மருத்துவமனை காலியாக இருக்கிறது.அங்குள்ள கம்பவுண்டரிடம் தன் நிலையை கூறி ஷியாம் அழுகிறார்..கம்பவுண்டர் விடுமுறை தினம் முடிந்து டாக்டர்கள் வந்து பிரேத பரிசோதனை செய்ய இரண்டு தினங்கள் ஆகுமென்றும் அதுமட்டுமில்லாமல் .இறந்த உடலை வெட்டி சிதைக்காமல் கொண்டு சென்று நல்லடக்கம் செய்யுமாறு தனது யோசனையை  கூறுகிறான்.ஷியாம்  அழுகிறார்.அப்பொழுது அங்கு வந்த மருத்துவமனை யில் வேலை செய்யும் பெண்மணி பிரதீபாவின் இறந்த உடலை பார்த்து இப்படியா ரத்த கறையோடு வைத்திருப்பீர்கள். என்று கடிந்து  எந்த பிரதிபலனும் பாராமல் சுத்தம் செய்து தீபாவளி அன்று அவள் உடுத்த வைத்திருந்த  புதிய சேலையை கட்டிவிட்டு இப்பொழுது எடுத்து செல்லுங்கள் என்கிறார்கள்.ஷியாம் அவளை நெகிழ்ந்து  போய் பார்க்கிறார்.லக்னோ செல்ல முடிவெடுத்து இறந்த உடலை எடுத்துக்கொண்டு  மதுரை விமானநிலையம் செல்கிறார்கள்.

இதற்கிடையில்  காட்டுராஜாவிற்கு அவன் வீட்டில் இருந்து கறி வாங்கி வந்துவிட்டானா என்று போன் வந்தபடியே இருக்கிறது.அவன் கறி இன்னமும் கிடைக்கவில்லை என்று பொய் சொல்கிறான்.

.காட்டுராஜா  இறந்த உடலோடு அழுதபடியே வரும் பிள்ளைகளை ஆறுதல் படுத்துகிறான் .அம்மாவோடு வந்த நினைவுகள் பிள்ளைகளுக்கு பீறிடுகின்றன.பாலிகா அழுதபடியே வண்டியை வேகமாக போகச் சொல்லி விபத்தை உண்டாக்கி அம்மாவை  கொன்றுவிட்டதாக அப்பாவை கோபமுடன் திட்டிகொண்டே இருக்கிறாள். 

விமானநிலையம் நோக்கி வேன் கிளம்பி போகிறது.கதிர் பைக்கில் பின் தொடர்கிறான்  வெடி சப்தம்  புத்தாடை சந்தோஷம் என்று ஊரே தீபாவளி கொண்டாடிக்கொண்டிருக்கிறது.

ஷியாமிற்கு ஒரு கண் அருகே சிதைந்து வீங்கியிருக்கிறது.அவரது மகளும் மகனும் ஏறிட்டுப் பார்த்துவிட்டு நிலை குத்திப்போய்  இருக்கிறார்கள். மகனுக்கு நெற்றிப்பொட்டில் காயம் மகளுக்கு தலையில் காயம் அங்கங்கே ரத்தத் திட்டுக்கள்.

விமானநிலையம் முன்பாக வேன் போய் நிற்கிறது. லக்னோவிற்கு விமான ம் இருக்கிறதா என்று விசாரிக்கிறான் கதிர்.நேரடி விமானம் இல்லை என்கிறார்கள்.பொராமவுண்ட் , கிங் பிஃஷ்ஷர் போன்ற தனியார் நிறுவனங்கள் எதுவும்  இறந்த உடலைக் கொண்டு செல்ல முடியாது என கை விரித்து விட்டது .இந்தியன் ஏர்லைன்ஸ்    விமானத்தில் கார்கோவில் கொண்டுசெல்முடியும் என்கின்றனர்.

டெல்லி விமானம் ஒன்று மதியம் போகிறது. அங்கிருந்து பாட்னா பக்கம் என்றுசொல்கிறார்கள்.அந்த விமானத்தில்.இறந்த உடலை ஏற்றி போக முடியாது என்று மறுக்கிறார்கள்.

கெஞ்சி கூத்தாடி அவர்கள் விமானத்தில் எற்ற அனுமதி வாங்குகிறான்.ஆனால் இறந்த உடலோடு ஒருவர் போவதற்கு மட்டும் டிக்கெட் இருப்பதாக சொல்கிறார்கள்.யார் இறந்த உடலோடு போவது என்று பிரச்சனை வருகிறது.

பாலிகாவை போகச் சொன்னால் அவள் மறுக்கிறான்.அப்பா கிளம்பி போய்விட்டால் பிள்ளைகள் தனியே போக முடியாது என்று அவர் சொல்கிறார்.வேறுவழியில்லாமல் பாலிகாவை  இறந்த உடலோடு அனுப்பிவிட  அப்பா முடிவு செய்கிறார்..   

காயம்பட்ட  அவர்கள் அவர்களது ரத்தக் காயங்களை பார்த்ததும் விமான நிலையத்தில் பயந்து விடுகிறார்கள்..”மேலே விமானம் செல்லும்போது காற்று அழுத்தம் கூடும் இவர்கள் உயிருக்கு ஆபத்து வந்து விடக்கூடாதுஎன்று சொல்லி  மெடிக்கல் ஃபிட்னஸ் சர்டிஃபிகேட் வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்கள்.மதியம் ஒண்ணே கால் மணிக்கு ஃபிளைட் பனிரெண்டரைக்குள் வாருங்கள்  என அவசரப்படுத்துகிறார்கள்..அப்போதே மணி பதினொன்றை நெருங்கியிருந்தது..

ஏர்போர்டிலேயே ஆஸ்பத்திரி ஒன்று இருக்கிறது.அங்கு சென்று விசாரிக்கிறார்கள்.ஸ்கேனிங் வசதி இல்லையெனச் சொல்லி சர்டிஃபிகேட் தர முடியாது என்று  கை விரித்துவிட்டார்கள்.மதுரைக்குள் செல்லவேண்டுமென்றாள் பல கிலோ மீட்டர் செல்ல வேண்டும்.கதிர்  தனக்கு தெரிந்த டாக்டர் ஒருவருக்கு போன் செய்து பேசிவிட்டு அந்த ஆம்புலன்ஸில் அனைவரையும் அழைத்துக்கொண்டு செல்கிறான்.

 தீபாவளி கொண்டாட்டங்கள் இயங்கி கொண்டிருந்த  சாலைகளில் சென்ற மூடப்பட்ட வேனிற்குள் அந்தக் குடும்பம் நிலை குலைந்து உட்கார்ந்திருக்கிறது.

தேவையான பரிசோதனைகள் செய்து  ரத்தக் காயங்களை துடைத்து சிகிச்சையளித்து சர்டிபிகேட் தந்திருக்கிறார் டாக்டர். ஏர்போர்ட்டுக்கு திரும்பியபோது மணி பனிரெண்டரையை தாண்டிவிடுகிறது.டிக்கெட் புக் செய்ய முடியாது என்கிறார்கள்.தெரிந்த ஆளிடம் சொல்லி டிக்கெட்டிற்கு ஏற்பாடு செய்வதாக உள்ளுர் கட்சிக்காரர் ஒருவரை தேடி அவர் வீட்டிற்கு போகிறான்.

ராமசாமி பாண்டியன் என்ற அந்த அரசியல் பிரமுகரை பார்த்து பேசி அவர் சொன்னபடியே  ஏஜென்டை  பிடித்து முடிவாக டிக்கெட் கிடைக்க ஏற்பாடு செய்கிறான் கதிர். 

விமான நிலையத்தில் சர்டிபிகேட்களை சரி பார்த்த பிறகு ஏர்லைன்ஸில் சொன்ன டிக்கெட்டுகளின் விலை தாறுமாறாயிருந்திருக்கிறது.சென்னைக்கு செல்ல மட்டுமே  எறத்தாழ ரூபாய்6500. தீபாவளி என்பதால் எமர்ஜென்ஸியில்தான் புக் செய்ய முடியும் எனவும் ஒரு டிக்கெட்டின் விலை ரூபாய்11000 எனவும் கார்கோவில் உடலைக் கொண்டு செல்ல தனி சார்ஜ் எனவும் ஏதேதோ கணக்குகள் சொல்லியிருக்கிறார்கள்.ஷியாம் தன்னிடம் அவ்வளவு பணம் இல்லை என்கிறார்

இருக்கும் உண்டியலை உடைத்து பணம் எடுத்துவிடலாம் என்று காட்டுராஜா  முயற்சிக்க அதை மறுக்கிறார்  ஷியாம். ஆத்திரமான காட்டுராஜா மனுசன் உசிரே போயிருச்சி. சாமி காசு இதுக்கு உதவாம எதுக்கு என்று உடைத்து பணத்தை திரட்டுகிறான்.மொத்தம் நாற்பத்தைந்தாயிரம் . தேவைப்படுகிறது.

அவ்வளவு  பணமில்லை  அந்த பெண் கழுத்தில் உள்ள நகையை கழட்டி அடமானம் வைக்க போகிறான் கதிர் .காட்டுராஜா தெரிந்தவர்களிடம் கேட்டு பணம் வசூல் செய்கிறான்.ஒரு வழியாக பணம் கிடைக்கிறது.

பணம் கொண்டுவருவதற்குள் நேரம் முடிந்துவிட்டது என்று விமான டிக்கெட்டை தர மறுக்கிறார்கள். குழந்தைகள் கதறி அழுகிறார்கள்.கதிர் கோவப்பட்டு சண்டை போடுகிறான்.

விமானநிலையம் முன்பாக உண்ணாவிரதம் இருக்க போவதாக  மிரட்டுகிறான் காட்டுராஜா. வேறு வழியில்லாமல் டிக்கெட் கிடைக்கிறது.ஆனால் அவர்கள் .இறந்த உடலை கொண்டு போக பெட்டி ஏற்பாடு செய்ய வேண்டும் என்கிறார்கள்..இதற்காக  ஒரு பெட்டி வாங்க அலைகிறான் அழகர். பெட்டி கிடைக்கிறது.அது சரியான அளவு இல்லை.வேறு ஒரு பெட்டி கொண்டு வாருங்கள் என்று அலைக்கழிக்கிறது விமானநிலையம்.

மாற்றுப் பெட்டி தேடி கொண்டுவருகிறார்கள்  .விமானத்தில் இறந்த உடல் கொண்ட பெட்டியை ஏற்ற கடுமையான வாக்குவாதம் செய்கிறான் கதிர்.கூடி நின்று பார்த்துக்கொண்டு இருந்தவர்களும் ஆதரவு தெரிவிக்க கடைசியில் அதிகாரிகள் ஒப்புக்கொள்கிறார்கள்.

அதற்குள் ஷியாமின் இரண்டாவது மகள் மயங்கி விழுகிறாள்.மகளை தூக்கி கொண்டு ஓடுகிறான் காட்டுராஜா.டிரிப்ஸ் ஏற்றும் மருத்தவர்கள் சாப்பிட ஏதாவது வாங்கி தரும்படியாக சொல்கிறார்.

வேறு வழியில்லாமல் டீக்களும் வடைகளும் கொண்டு வந்து முதலில் இதைச் சாப்பிடுங்கள் என்று சொல்கிறான் காட்டுராஜா. அவர்களால் அந்த வடையை மெல்ல முடியவில்லை .தாடைகளை சரியாக அசைக்க முடியாமல் வலித்திருக்க வேண்டும்.தாடை கட்டிக் கொள்கிறது.அப்பா அதைக் கண்டு அழுகிறார்.சிறுவன் பசியில் வேகவேகமாக சாப்பிடுவதை கண்டு அப்பா கதறி அழுகிறார்.

தாங்கள் ஊரில் இருந்து எப்படி வேண்டுதலுக்காக கிளம்பி வந்தோம் என்ற கதையை சொல்கிறார் ஷியாம்.ரயிலில் மற்றவர்களோடு பழக மறுப்பது.மனைவி நட்பாக பழகுவது. பிள்ளைகளின் கனவு அவர்களின் பயணம் பாடல் என்று அவர்களது கடந்த காலம் விவரிக்கப்படுகிறது.

இதற்கிடையில் அழகருக்கும் காட்டுராஜாவிற்கும் போன் வந்தபடியே இருக்கிறது.அவர்கள் பொய்யாக சமாதானம் சொல்லிக்கொண்டேயிருக்கிறார்கள்.

ஒரு வழியாக விமாநிலையத்தில் மகளையும் இறந்த மனைவியின் உடலையும் ஏற்றிவிடுகிறார்கள்.மகள் அம்மாவின் இறந்த உடலுடன் செக்கிங் நோக்கி நடக்கிறாள்.விமானநிலையத்தினுள் சென்றவள் ஓடிவந்து கதிரின் கால்களில் விழுந்து அண்ணாவென்று வெடித்து அழுகிறாள்.கதிர் சமாதானபடுத்துகிறான்.நீங்கதான் என் அண்ணா .மொதல்ல ஒரு பையன் பொறந்திருந்தா உங்க அப்பாவ திட்டி திருத்திருப்பானு அம்மா எப்பவுமே சொல்லும்ணா.அவுங்க ஆத்மாதாண்ணா உங்கள கூப்பிட்ட்டு வந்திருக்கு என்று தேம்பி அழுகிறாள்..   அந்த துக்கத்தை தாங்கமுடியாமல்  ஷியாம் அழுகிறார்.கதிரின் கண்களில் கண்ணீர் பொங்கி வழிகிறது. விமானத்தில் உடல் எற்றப்பட்ட விபரத்தை சின்ஹாவிற்கு போன்செய்து சொல்கிறான் கதிர். ஷியாம் ஹார்ட்  பேஷண்ட் அவர் நலமடைவதற்காகவே இந்த பிரார்த்தனை செய்வதற்காக வந்தாகள்.அவரை கொஞ்சம் கவனமாக பார்த்துக் கொள்ளுங்கள் என்கிறார் சின்ஹா.

ஷியாம் பிள்ளைகளின் கையை பற்றிக் கொண்டு குழந்தை போல் உட்கார்ந்திருக்கிறார்.அவரது சட்டையில் ரத்தக்கறையாக உள்ளது  என்று மாற்று சட்டை ஒன்றினை வாங்கி வருவதாக போகிறான் அழகர்.இவன் வாங்கி வந்த சட்டையை  போட்டுக்கொள்ள மறுக்கிறார்.இப்படியே போனால் எப்படி என்று சமாதானபடுத்த பொண்டாட்டியே போய்விட்டால் இனி எப்படி இருந்தால் என்ன என்று அதை வாங்கி ஓரமாக போடுகிறார்.

ராமேஸ்வரத்துக்கு வர வேண்டும் என்ற மனைவியின் ஆசை நிறைவேறவேயில்லை என்று புலம்புகிறார் ஷியாம்.இதற்கிடையில் தகவல் கேள்விபட்டு போலீஸ் வந்து அவர்களை விசாரனை செய்கிறது. போலீஸாருக்கு விவரங்களை சொல்கிறார்கள்.விபத்து பற்றி செய்தி ஒளிபரப்பாகிறது. அதில் மோதிகிடந்த டாக்ஸி காட்டப்படுகிறது.விசாரணை முடியாமல் அவர்களை விமானத்தில் அனுப்ப முடியாது  என்று பிடிவாதம் செய்கிறான் இன்ஸ்பெக்டர்.அவனை காட்டுராஜா கோவப்பட்டு திட்டிவிடுகிறான்.முடிவில் அவரை சமாதானம் செய்து அனுப்பி வைக்கிறான். 

இரவு ஏழுமணிக்கு ஒரு விமானம் டெல்லி போகிறது.அங்கிருந்து மாறி போய்கொள்வது என்று அவர்கள் முடிவு செய்கிறார்கள்.

டாக்சிக்காரனை அனுப்பிவிடுவது என்று முடிவு செய்து காசு கொடுக்கும் போது அவன் தனக்கு காசு வேண்டாம் என்று கையெடுத்து கும்பிட்டுவிட்டு அவர்களை விமானத்தில் எற்றிவிட்டு தான் கிளம்புவதாக சொல்கிறான்.

ஷியாம் அவரது பிள்ளைகளுடன் விமானநிலைய செக்கிங் நோக்கி நடக்கிறார்.கதிரும் காட்டுராஜாவும் அவர்களை விடை கொடுத்து  அனுப்பி வைக்கிறார்கள்..ஷியாம் கதிரை கட்டிக்கொண்டு நீங்களெல்லாம் யார் சார் எங்கிருந்து வந்தீங்க சார்.எங்களுக்கு ஏன் சார் உதவி செய்யனும்.நீங்க வரவில்லையென்றால் எங்கள் நிலைமை என்ன சார் என்று கதறி அழுகிறார்.

ஏர்போர்ரடில் இருந்த அனைவரும் இந்தக் காட்சியை  பார்த்து உறைந்து போகிறார்கள்.

கதிர் இதுல என்ன இருக்கு சார் எங்களால் இதுதான் முடியும் உங்க துயரம் அவ்வளவு  பெரியது நாம எல்லாம் மனுஷங்கதானே  ஒரே ரத்தம தானே ஓடுது. என்று சொல்கிறான்.

விமானம் கிளம்புகிறது.வெளியே வெடி சப்தம் கேட்கிறது. வெளியே வந்த கதிரும் காட்டுராஜாவும் வண்டியில் செல்கிறார்கள் காட்டுராஜா காலைல பேப்பர் பாத்தேன் மாப்ள வீண் அலைச்சல்னு போட்டிருந்தது . ஆனா நாம வீணாவா அலைஞ்சோம் உருப்பிடியாதான அலைஞ்சோம். என்கிறார்..வண்டி ஊரை நோக்கி செல்கிறது.அவர்களின் தலைக்கு மேலே ஆகாயத்தில் ஒருவிமானம் பறந்து கொண்டிருக்கிறது.

வார்த்தைக்கு வார்த்தை, வரிக்கு வரி அப்படியே காப்பி அடித்திருக்கும்  எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன்:-

திரைப்படம் ஆக்குவதற்காக அங்கங்கு கதையை சேர்த்து வளர்த்திருக்கிறார் என்பது தெரிகிறது. எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் எழுதிய கதையிலும் அவர்கள் பீகாரைச் சேர்ந்தவர்கள் என்பதும் என்றுதான் இருக்கிறது. கணவன், மனைவி, இரண்டு மகள்கள், ஒரு மகன் என்றுதான் அந்தக் குடும்பத்தைப் பற்றி குறிப்பிடப்படுகிறது. இதுபோல பல பொதுவான அம்சங்கள் இருக்கின்றன. அதே நேரத்தில் பல இடங்கள் அப்படியே ஈயடிச்சான் காப்பி அடித்திருக்கிறார் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன். அவைகள் கீழே கொடுக்கப்படு இருக்கின்றன.

*****

லக்னோவிற்கு விமானம் இருக்கிறதா என்று விசாரிக்கிறான் கதிர்.நேரடி விமானம் இல்லை என்கிறார்கள்.பொராமவுண்ட் , கிங் பிஃஷ்ஷர் போன்ற தனியார் நிறுவனங்கள் எதுவும் இறந்த உடலைக் கொண்டு செல்ல முடியாது என கை விரித்து விட்டது .இந்தியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் கார்கோவில் கொண்டுசெல்ல முடியும் என்கின்றனர். (எஸ்.ரா எழுதியது)

சாமுவேல் ஜோதிக்குமாரும், சுரேஷ் பாபுவும் ஆக வேண்டிய காரியங்களைப் பார்க்க ஆரம்பித்திருக்கின்றனர். பெராமவுண்ட், கிங் ஃபிஷ்ஷர் போன்ற தனியார் நிறுவனங்கள் எதுவும் இறந்த உடலைக் கொண்டு செல்ல முடியாது என கைவிரித்து விட்டன. இந்தியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் கார்கோவில் கொண்டு செல்ல முடியும் என்றனர். (மாதவராஜ் எழுதியது)

*****

அவர்களது ரத்தக் காயங்களை பார்த்ததும் விமான நிலையத்தில் பயந்து விடுகிறார்கள்..”மேலே விமானம் செல்லும்போது காற்று அழுத்தம் கூடும் இவர்கள் உயிருக்கு ஆபத்து வந்து விடக்கூடாது “என்று சொல்லி மெடிக்கல் ஃபிட்னஸ் சர்டிஃபிகேட் வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்கள்.மதியம் ஒண்ணே கால் மணிக்கு ஃபிளைட் பனிரெண்டரைக்குள் வாருங்கள் என அவசரப்படுத்துகிறார்கள்..அப்போதே மணி பதினொன்றை நெருங்கியிருந்தது. (எஸ்.ரா எழுதியது)

அவர்களது ரத்தக் காயங்களைப் பார்த்ததும், விமான நிலையத்தில் பயந்து விட்டனர். “மேலே விமானம் செல்லும்போது, காற்று அழுத்தம் கூடும். இவர்களின் உயிர்களுக்கு ஆபத்து வந்துவிடக் கூடாது” என்று சொல்லி, மெடிக்கல் ஃபிட்னஸ் சர்டிபிகேட் வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்கள். “மதியம் ஒண்ணே கால் மணிக்கு ஃபிளைட். பனிரெண்டரைக்குள் வாருங்கள்” என அவசரப்படுத்தியிருக்கின்றனர். அப்போதே மணி பதினொன்றை நெருங்கியிருந்தது. (மாதவராஜ் எழுதியது )

*****

ஏர்போர்டிலேயே ஆஸ்பத்திரி ஒன்று இருக்கிறது.அங்கு சென்று விசாரிக்கிறார்கள்.ஸ்கேனிங் வசதி இல்லையெனச் சொல்லி சர்டிஃபிகேட் தர முடியாது என்று கை விரித்துவிட்டார்கள்.மதுரைக்குள் செல்லவேண்டுமென்றாள் பல கிலோ மீட்டர் செல்ல வேண்டும்.கதிர் தனக்கு தெரிந்த டாக்டர் ஒருவருக்கு போன் செய்து பேசிவிட்டு அந்த ஆம்புலன்ஸில் அனைவரையும் அழைத்துக்கொண்டு செல்கிறான். (எஸ்.ரா எழுதியது )

ஏர்போர்ட்டிலேயே ஆஸ்பத்திரி ஒன்று இருந்திருக்கிறது. அங்கு சென்று விசாரித்திருக்கிறார்கள். ஸ்கேனிங் வசதி இல்லையெனச் சொல்லி, சர்டிபிகேட் தர முடியாது என்று கைவிரித்துவிட்டார்கள். மதுரைக்குள் செல்ல வேண்டுமென்றால் பல கி.மீக்கள் செல்ல வேண்டும். சாமுவேல் தனக்குத் தெரிந்த டாக்டர் ஒருவருக்கு போன் செய்து பேசிவிட்டு, அந்த ஆம்புலன்சில் அனைவரையும் அழைத்துக்கொண்டு சென்றிருக்கிறார். (மாதவராஜ் எழுதியது )

*****

தீபாவளி கொண்டாட்டங்கள் இயங்கி கொண்டிருந்த சாலைகளில் சென்ற மூடப்பட்ட வேனிற்குள் அந்தக் குடும்பம் நிலை குலைந்து உட்கார்ந்திருக்கிறது. தேவையான பரிசோதனைகள் செய்து ரத்தக் காயங்களை துடைத்து சிகிச்சையளித்து சர்டிபிகேட் தந்திருக்கிறார் (எஸ்.ரா எழுதியது )

மங்காத்தா ரசிகர்களும், ரம்ஜான் கொண்டாட்டங்களுமாய் இயங்கிக் கொண்டு இருந்த சாலைகளில் சென்ற மூடப்பட்ட ஆம்புலன்சுக்குள் அந்தக் குடும்பம் நிலைகுலைந்து உட்கார்ந்திருக்கிறது. தேவையான பரிசோதனைகள் செய்து, ரத்தக் காயங்களைத் துடைத்து, சிகிச்சையளித்து, சர்டிபிகேட் தந்திருக்கிறார் டாக்டர். (மாதவராஜ் எழுதியது )

*****

தீபாவளி என்பதால் எமர்ஜென்ஸியில்தான் புக் செய்ய முடியும் எனவும் ஒரு டிக்கெட்டின் விலை ரூபாய்11000 எனவும் கார்கோவில் உடலைக் கொண்டு செல்ல தனி சார்ஜ் எனவும் ஏதேதோ கணக்குகள் சொல்லியிருக்கிறார்கள்.ஷியாம் தன்னிடம் அவ்வளவு பணம் இல்லை என்கிறார் (எஸ்.ரா எழுதியது )

ஒரு டிக்கெட்டின் விலை ரூ.11000 எனவும், கார்கோவில் உடலைக் கொண்டு செல்ல தனி சார்ஜ் எனவும் ஏதேதோ கணக்குகள் சொல்லியிருக்கிறார்கள். வினோத் ஸ்ரீவத்சவா தன்னிடம்எவ்வளவு இருக்கிறது என்றால் சொல்லத் தயங்கியிருக்கிறார். எவ்வளவு பணம் தேவைப்படும் என்று சொன்னால், தான் ஏற்பாடு செய்வதாகவும் சாமுவேல் ஜோதிக்குமார் அவரிடம் சொன்னலும், அவர் விழிபிதுங்கி செய்வதறியாமல் நின்றிருக்கிறார்.  (மாதவராஜ் எழுதியது )

 

*****

நீங்களெல்லாம் யார் சார் எங்கிருந்து வந்தீங்க சார்.எங்களுக்கு ஏன் சார் உதவி செய்யனும்.நீங்க வரவில்லையென்றால் எங்கள் நிலைமை என்ன சார்? (எஸ் ரா எழுதியது )

“நீங்க எல்லாம் யார் சார். எங்கிருந்து வந்தீங்க சார். எங்களுக்கு ஏன் சார் ஹெல்ப் பண்ணனும் ? நீங்க வரவில்லையென்றால் எங்கள் நிலமை என்ன சார்” (மாதவராஜ் எழுதியது )

மாதவராஜ் பதிவுக்கும், அயோத்தி திரைப்படத்துக்கும் இருக்கும் பொதுவான அம்சங்கள்:

திரைக்கதையில் மாற்றம் செய்திருக்கிறார்கள். பெயர்களில் மாற்றங்கள் இருக்கின்றன. பீகாரில் இருந்து வந்தவர்களாக குறிப்பிட்டு இருந்தேன். அதை அயோத்தியாக மாற்றி இருக்கிறார்கள்.

ஒரு கிராம வங்கி ஊழியராக பாதிக்கப்பட்டவரைச் சொல்லி இருந்தேன். சடங்கு சம்பிரதாயங்களில் ஊறிய ஒரு சங்கியாக அந்த வட இந்திய மனிதரை காட்சிப்படுத்தி இருக்கிறார்கள்.

இரண்டு மகள்களும், ஒரு மகனும் என பதிவு செய்திருந்தேன். ஒரு மகளும், மகனும் என காட்டி இருக்கிறார்கள்.

அவர்களுக்கு உதவிய தமிழ்நாட்டு மனிதர்களாக எங்கள் வங்கியின் தொழிற்சங்கத்தைச் சேர்ந்த சாமுவேல் ஜோதிக்குமாரையும் , சுரேஷ் பாபுவையும் குறிப்பிட்டு இருந்தேன். இதில் விபத்துக்குள்ளான கார் டிரைவரின் நண்பனான சசிக்குமாரும் இன்னொருவரும் உதவுவதாக சித்தரித்து இருக்கிறார்கள்.

ரம்ஜான் பண்டிகை மற்றும் மங்காத்தா பட ரிலீசை ஒட்டிய ரசிகர்களின் கொண்டாட்டங்களாய் வெளியுலகம் இருந்ததை குறிப்பிட்டு இருந்தேன். இதில் தீபாவளி கொண்டாட்டங்களாய் காட்டி இருக்கிறார்கள்.

இராமேஸ்வரம் வந்த வடநாட்டு குடும்பம் கார் விபத்தில் விபத்தில் சிக்குவது, அந்த குழந்தைகளின் அம்மா இறந்து போவது, நிலமும் மொழியும் வேறான மதுரையிலிருந்து அந்த குடும்பத்தை கடும் சிரமங்களுக்கு இடையே விமானத்தில் எப்படி அனுப்பி வைத்தனர் என்னும் மையக்கதை அப்படியே இருக்கிறது.

’தங்களைப் பிடித்து உலுக்கி, கட்டியழுது, அவர்களின் கைகளையும், உடலையும் தாங்கிப் பிடித்து, கூடவே இருந்து ஆதரவு தரக்கூடிய சொந்த மனிதர்களும், மண்ணுமே அவர்களுக்கு அப்போது தேவை’ என்னும் வரிகளை அப்படியே காட்சிப்படுத்தி இருக்கிறார்கள்.

பதிவின் இறுதியில், உதவி செய்த சாமுவேல் ஜோதிக்குமாரையும், சுரேஷ் பாபுவையும், கையெடுத்துக் கும்பிட்டு, “நீங்க எல்லாம் யார் சார். எங்கிருந்து வந்தீங்க சார். எங்களுக்கு ஏன் சார் ஹெல்ப் பண்ணனும் ? ” என அந்த வடநாட்டு மனிதர் பேசுவதாக எழுதியிருந்தேன்.

மனிதாபிமானத்தின் மகத்துவத்தை அப்படி உணர்த்தி இருந்தேன். படத்தில் “தம்பி, உங்க பேர் என்ன?’ என கேட்பார். உதவி செய்த சசிகுமார், “மாலிக்’ என சொல்வார். 

இதன்மூலம் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் 3-9-2011 அன்று இதே தீராத பக்கங்களில் எழுதிய கதையைத் திருடி, அயோத்தி திரைப்படத்திற்கு கொடுத்திருக்கிறார் என்பது அப்பட்டமாகத் தெரிகிறது.

 

கொஞ்சம் கூட கூச்ச நாச்சமில்லாமல், அயோத்தி திரைப்படத்தில் ’கதை – எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன்’ என்று குறிப்பிடப்படுவதை இன்னும் பார்த்துக் கொண்டிருக்கிறார்.


இந்த தீராத பக்கம் - எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனின் மனசாட்சியிடம்  காலமெல்லாம் கேள்வி கேட்டுக்கொண்டே இருக்கட்டும்! 


ஊடகங்களில் :


ஆனந்த விகடன்   


குமுதம் 


பிபிசி 


தினமலர்  


டைம்ஸ் ஆப் இந்தியா 


அறம் இணைய இதழ்


ஒன் இந்தியா 


சினிமா விகடன் 

 


கருத்துகள்

0 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!