பின்லேடன்கள் உயிருடன் இருப்பார்கள்!

 


பிரம்மாண்டமான ஹாலிவுட் சினிமாதான் இது. பழிக்குப் பழி வாங்கி விட்டார்கள்.  சொன்ன மாதிரி  கொன்று விட்டார்கள். அமெரிக்கா என்றால் அமெரிக்காதான். உலகம் முழுவதும் ரசிகர்கள் திளைக்கிறார்கள். இயக்குனர் ஒபாமாவுக்கு பாராட்டுக்கள் குவிகின்றன.  

உண்மையான கதை வேறு. அமெரிக்கா தனது வேட்டைநாய் ஒன்றை அழித்திருக்கிறது.  அதன் நாடி நரம்புகளெல்லாம் ரத்த ருசி ஏற்றி, மற்றவர்கள் மீது  ஏவிவிடப்பட்ட அந்த நாய், பின்னொருநாள் தன் எஜமானனையே பதம் பார்த்தது. அவ்வளவுதான்,  ‘வெறி நாய்’ என முத்திரை குத்தி,  ‘அதனால் உலகத்துக்கே ஆபத்து’  என அறிவித்து,  துரத்தோ துரத்து என்று துரத்தி கடைசியில் கொன்றிருக்கிறது. இதற்குத்தான்  இவ்வளவு ஆர்ப்பாட்டம்?  இப்படி கூச்சல்,  கொண்டாட்டம் ?  

“இப்போதுதான் அமெரிக்கர்களுக்கு நீதி கிடைத்திருக்கிறது” என்று சொல்லி பூரிக்கிறார் அதன் அதிபர் ஒபாமா. இவ்வளவு வெட்கம் கெட்டவரா அவர்! கடந்த சில நூற்றாண்டுகளில் மட்டும் உலகம் முழுவதும், அமெரிக்கா இப்படி ஏவிவிட்ட வேட்டைநாய்கள் எத்தனை கோடி மனிதர்களின் ரத்தத்தையும், சதையையும், வாழ்வையும் ருசி பார்த்திருக்கின்றன. அவர்களுக்கெல்லாம் எப்போது நீதி கிடைக்கும்  மிஸ்டர் ஒபாமா?  

‘அல்லாவை நம்புகிறவர்களுக்கும், அல்லாவை நம்பாதவர்களுக்கும் இடையே நடக்கும் யுத்தம் என்றார் பின்லேடன். ’அமெரிக்காவை நம்புகிறவர்களுக்கும், அமெரிக்காவை நம்பாதவர்களுக்கும் இடையேயான யுத்தம்” என்றார் புஷ். தங்கள் மீது நம்பிக்கையற்றவர்களை அழிக்கத் தயாரான இருவரில் ஒருவர் வில்லனாகிப் போனார். இன்னொருவர் ஹீரோவாகிப் போனார்.  உலகின் நிஜமான அச்சுறுத்தல் இதுதான்.  

இப்போது உலகின் தீயசக்தி அழிந்துவிட்டதாகவும் , பயங்கரவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தாகிவிட்டது போலவும், இனி உலகம் அமைதியிலும், நிம்மதியிலும் பூத்துக் குலுங்கலாம் என்றும்  ஊடகங்கள்  பேசிப் பேசி மாய்கின்றன.  அப்புறம் எதற்கு, பின்லேடனின் உடலைக்கூட யாருக்கும் கிடைக்காமல் மறைக்க வேண்டும்? யாருக்கும் கிடைக்காமல் கடலுக்கு அடியில் புதைத்துவிட்டதாய் அறிவிக்க வேண்டும்.  அதில் தொக்கி நிற்பது அச்சமில்லாமல் வேறென்ன? பழிக்குப் பழி என்கிற இந்த ஹாலிவுட் சினிமாவின் கிளைமாக்ஸ் இதுவல்ல என்று அமெரிக்காவுக்குத் தெரியும்.  

அமெரிக்கா தனது வேட்டையை, உலகின் மீதான மேலாதிக்கத்தை நிறுத்தினால் மட்டுமே பின்லேடனின் சரித்திரம்  கடந்தகாலமாகும். அதுவரை- பின்லேடன் இறந்துவிட்டாலும், பின்லேடன்கள் உயிருடனே இருப்பார்கள்.

Comments

12 Comments

வருகைக்கு நன்றி.

கமெண்ட் செய்கிறவர்கள் Anonymous, Name/Url, Google Account, Name/Url, Google Account மூலம் கமெண்ட் செய்யலாம்.

1) முடிந்தவரை Google Account மூலம் கமெண்ட் செய்யுங்கள்.

2) இல்லையென்றால் Name/Url மூலம், பேரை மட்டுமாவது குறிப்பிட்டு கமெண்ட் செய்யுங்கள்.

3) Anonymous மூலம்தான் கமெண்ட் செய்ய முடியுமென்றால், கமெண்ட்டில் கீழே உங்கள் பேரை தயவு செய்து குறிப்பிடுங்கள்.

நன்றி.

- தீராத பக்கங்கள்
  1. //தங்கள் மீது நம்பிக்கையற்றவர்களை அழிக்கத் தயாரான இருவரில் ஒருவர் வில்லனாகிப் போனார். இன்னொருவர் ஹீரோவாகிப் போனார்.//

    well said !!!

    ReplyDelete
  2. பொதுவாகவே உங்கள் கருத்துக்களுடன் உடன் போவதில்லை என்றாலும், இந்தப் பதிவுடன் உடன்படுகிறேன். 100% உடன் படுகிறேன். சதாம் ஹூசைனை தூக்கில் போடுவதையே நேரடி ஒளிபரப்பு செய்தவர்கள் இவருடைய உடலை மட்டும் காட்டாதது எதற்கு. ஒசாமா செய்த சிலவற்றை நான் ஒத்துக்கொள்வதில்லை என்றாலும், அமெரிக்காவுடன் ஒப்பிடும் போது ஒசாமா ஒரு தீவிரவாதியே அல்ல. அமெரிக்கா செய்யாத ஆட்டுழியங்களா? பாகிஸ்தானில் ஒருத்தர் மன்ஷனில் வாழுவது தெரிந்துமா ஆப்கானில் இத்தனை பேரைக் கொன்றார்கள். ஒபாமா மேல் எனக்கு கொஞ்சமும் மரியாதை இருக்கவில்லை. அதனால் இப்போது பெரிய வித்தியாசம் தெரியவில்லை. இதில இவருக்கு எதுவும் செய்ய முதலேயே நோபல் பரிசு கொடுத்தார்களாம். என்ன கொடுமை சார் இது.

    ReplyDelete
  3. பிந்தரன்வாலே,பிரபாகரன்,உசாமா வரிசையில்... மிதவாத கம்யூனிஸ்ட்கள் வளர்த்த தீவிரவாத மாவோக்கள்! வினை விதைத்தவர், விதையை அறுக்க முடியாது!

    ReplyDelete
  4. பிரபாகரன் தீவிரவாதி இல்லை. ராஜ்பக்சே தான் தீவிரவாதி. தெரியாமல் பேசாதீர்கள் ரம்மி. அமெரிக்க ட்வின் டவரில் புஷ்ஷாகவே குண்டு வைத்து அதைக் காரணம் காட்டி ஈராக் போரை ஆரம்பித்ததாகவும் சில ஆதாரங்கள் சொல்கின்றன.

    ReplyDelete
  5. சினிமாவைக் கடந்து நம் அன்றாட வாழ்விலும் வில்லனும், ஹீரோவும் தேவைப்படுகிறார்கள். பழையவர்கள் இறந்து விட்டால் அந்த காலியிடத்தை நாம் இட்டு நிரப்பிக்கொள்கிறோம். இப்போது ஒரு வில்லன் இறந்துவிட்டான்.

    ஒசாமாவைப் பழி வாங்க அடிப்படையாகக் கூறப்பட்ட செப்.11 இரட்டைக் கோபுரத்தகர்ப்பு என்பது திட்டமிடப்பட்ட உள்நாட்டு சதி என்பதை வில்லியம் ட்ரெப்பிங் உட்பட பலதுறை நிபுணர்கள் வெளிப்படுத்திய பின்பும் கதைகள் தொடர்கின்றன.
    ஒசாமாவின் இறந்த உடல் புகைப்படம் மார்ஃபிங் முறையில் ஒட்ட வைக்கப்பட்ட ரகசியத்தை படம் வெளிவந்த சில மணீநேரங்களிலேயே ஊடகங்கள் வெளியிட்டு விட்டன.ஏற்கனவே கொல்லப்பட்டுவிட்ட ஒசாமாவை பயன்படுத்தி அமெரிக்கா ஏதோ ஒன்றைத் திட்டமிட்டுள்ளது. பாகிஸ்தான் மீதான தாக்குதாலாகக் கூட இருக்கலாம். அமெரிக்கா தலையிடும் எல்லா விஷயங்களும் மர்மம் நிறந்த தொடர்கதைகளாக இருக்கின்றன.


    அன்புடன்,
    அ.உமர் பாரூக்

    ReplyDelete
  6. பிரபாகரன் தீவிரவாதி இல்லை.-அனாமிகா துவாரகன்

    அவர் ஒரு பயங்கரவாதி.பிரபாகரனின் ஆதரவாளர்கள் Tamils for Obama என்ற பெயரில் இயங்குவதும் அமெரிக்காவில்.

    ReplyDelete
  7. 1979ல் ஆப்கானிஸ்தானில் சோவியத் யூனியன் படையெடுத்து தன் ஆதரவு அரசை நிறுவியதிலிருந்துதான் இந்த பிரச்சினை துவங்கியது.சோவியத் யூனியனும் ஏகாதிபத்தியம் என்று மாதவராஜ் ஒப்புக்கொள்வாரா.ஆப்கானிஸ்தானிலிருந்து சோவியத் படைகளை விரட்ட இஸ்லாமிய தீவிரவாதிகளுக்கு உதவி வளர்த்தது அமெரிக்கா.ஆக இரு தரப்பும் போரிட ஒரு மூன்றாம் உல்க நாடு கிடைதத்து. பின் லாடன்கள் இருக்கிறார்கள்.26/11ன் மூளைகளையும் பின் லேடனைக் கொன்றது போல் தீர்த்துக்கட்ட வேண்டும்.பாகிஸ்தான் ஜிகாதி இயக்கங்களை இந்தியாவிற்கு எதிராக பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும்.இல்லாவிட்டால் இந்தியா பாகிஸ்தான் மீது போரிட்டு இர்ண்டில் ஒன்று பார்த்து விட வேண்டும்.

    ReplyDelete
  8. pintharavale-Indira gandhi,IPKF-rajiv,russia in afgan-bin laden-obama.

    ReplyDelete
  9. சர்வாதிகாரிகள் அவர்களின் எதிரிகளால் அழிக்கப்படுவதும், அதனை அவர்கள் கொண்டாடப்படுவதும் இயல்பானதே ஆகும். ஆனால் அதன் பின் அமைதிப் பிறக்கும் என்றெல்லாம் நம்ப முடியாது. ருசியாவின் ஷார் நிக்கோலஸ் இரண்டாம் மன்னரின் உடலை போல்சேவிக்குகள் என்னப் பண்ணினார்கள் -- காட்டில் ஒரு குழியில் போட்டு மூடினார்கள்.

    இட்லரின் உடலுக்கு என்னானது ? அவர் காணப் பிணமானார். பிரபாகரனுக்கு என்ன நடந்தது எரிக்கப்பட்டு கடலில் கலந்துவிட்டார்கள். எத்தியோப்பியாவின் கடைசி மன்னர் ஹெய்லி செலாசி என்னானர். அரண்மனைக் கழிவறைக்குள் அவரது உடல் போடப்பட்டது.

    அப்படித் தான் ஒசாமாவின் உடலையும் கடலில் போட்டுவிட்டார்கள். யாரும் யாருக்கும் சளைத்தவர்கள் இல்லை. சோவியத் முதல் அமெரிக்கா வரை எல்லாரும் எதிரிகளைக் கடவுளாக்க விடுவதில்லை என்பதே நிஜம்.

    ReplyDelete
  10. @ அனாமிகா துவாரகன் - // பிரபாகரன் தீவிரவாதி இல்லை, ராஜபக்ஷே தான் தீவிரவாதி //

    பிரபாகரன் தீவிரவாதி இல்லாமல் என்ன மகாத்மாவா? அப்படிப் பார்த்தால் ஒசாமாவின் ஆதரவாளர்களுக்கு ஒசாமா மகாத்மா தான். சிங்கள மக்கள் பலருக்கு ராஜபக்ஷே மகாத்மா தான்.

    // அமெரிக்க ட்வின் டவரில் புஷ்ஷாகவே குண்டு வைத்து அதைக் காரணம் காட்டி ஈராக் போரை ஆரம்பித்ததாகவும் சில ஆதாரங்கள் சொல்கின்றன. //

    எப்படி முள்ளிவாய்க்காலில் தமிழர்களை தாமே சுட்டுக் கொன்றுவிட்டு சிங்களப் படைத் தாக்குதல்காள் செத்தத்தாக அறிவித்தார்களே தமிழ்ப் புலிகள். அப்படியாங்க....

    ReplyDelete
  11. ஒசாமாவின் மார்ப்பிங்க் புகைப்படத்தை வெளியிட்டது வெள்ளை மாளிகையோ, சிஐஏவோ இல்லையே.. அதனை வெளியிட்டதே பாகிஸ்தானிய ஊடகங்கள் தான்., இவை போலியானவை எனக் கூறியதும் பிரித்தானிய ஊடகங்கள் தான்.... என்பதையும் கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.

    ReplyDelete
  12. மிக அருமையான பதிவு!!!!

    பின்லேடனை உருவாக்கியது யார்?
    அவர்களையும் கொல்ல வேண்டும்.
    அப்போதுதான் பின்லேட்ன்கள் உருவாக மாட்டார்கள்!!!

    ReplyDelete

You can comment here