மாதவராஜ் பக்கங்கள் -25

நமது அன்பு பதிவரும் என் பிரிய மக்காவுமான் பா.ராஜாராம், எனக்கு அவ்வப்போது இடும் அன்புக் கட்டளை ஒன்று உண்டு. கட்டளை என்று சொல்லக் கூடாது. கோபப்படுவார். ஆசையெனக் கொள்வோமே. இலக்கிய ரீதியான பதிவுகளில் இன்னும் நான் தீவீரமாய் இயங்க வேண்டும் என்பதுதான் அது. சர்ச்சைகள், பிரச்சினைகள், அரசியல் என இறங்கி  பகிரங்கமாய் என் கருத்தை வெளியிடும் போதெல்லாம் அவருக்கு அயற்சி வந்துவிடும். “என்ன மாது! அடங்கேன்” என உரிமையுடன் தோளில் கை போட்டுச் சொல்வார். அந்த நேரம் சிறு எரிச்சல் வந்தாலும், பிறகு புன்னகையையும், பிரியத்தையும் வாரிக்கொள்கிற ஸ்பரிசம் அது. அவரது எழுத்துக்களைப் போலவே .வாழ்வின் லயம் இசைத்துக் கொண்டு இருக்கும் மனிதர் அவர்.

ஒவ்வொரு பிரச்சினையும், ஒவ்வொரு அனுபவமாகிற்து. கணங்கள் ஒவ்வொன்றும் நமக்கு கதை சொல்லிக்கொண்டு இருக்கின்றன. அவைகள் உடனடியாகவோ, கால இடைவெளியோடோ நம்மிடமிருந்து வெளிப்படுகின்றன. இந்த உடனடி வினைக்கு, எதிர்வினையும் உடனடியாக இருக்கின்றன. அவைகளுக்கு நோக்கங்களும், உள்நோக்கங்களும் இருக்கின்றன அல்லது கற்பிக்கப்படுகின்றன.  இலக்கியப் பார்வை, புரிதல் தாண்டி அங்கு அரசியல் அதிகம் அறியப்படுகிறது. எனது சில சொற்சித்திரங்களுக்கு அந்த நிலைமை ஏற்பட்டுள்ளதை அறிவேன். இன்னும் சில காலம் தாண்டி அவை பேசப்படும், கவனிக்கப்படும் என்பதையும் அறிவேன்,

காலத்தில் ஊறி வெளிப்படும் எழுத்துக்கள் எல்லோருக்கும் வசீகரமானதாகிறது. அதில் ஒரு நிதானமும், பக்குவமும் இருக்கிறது என்பதையும் சொல்லவேண்டும். அதைத்தான்  மக்கா பா.ரா எழுத வேண்டும் என ஆசைப்படுகிறார் போலும். அப்படி எழுதிய சில சமீபத்திய பதிவுகள் இலக்கிய ஆளுமைகளால் கவனிக்கப்பட்டு இருக்கின்றன, பாராட்டப்பட்டு இருக்கின்றன் என்பதையும் பார்க்கிறேன்.

அற்புதமான நாடகக் கலைஞரும், குறும்பட (பாப்பம்பட்டி ஜமா) இயக்குனருமான கருணா அவர்கள் ‘பால்ய ருசி’யை அனுபவித்து பின்னூட்டமிட்டு இட்டிருந்தார்.

தீராத விளையாட்டுத்  தாத்தாவை எழுத்தாளர் தமிழ்ச்செல்வன் அற்புதமான சிறுகதை படித்தது போலிருக்கிறது என்றார். தமிழ் படைப்புலகில், ஆண் பெண் உறவு குறித்து அக்கறையாகவும் , ஆரோக்கியமாகவும் எழுதுகிற மிகச்சிலரில் அவரும் ஒருவர் என்பதால் எனக்கு சந்தோஷமாயிருந்தது.

இது போதாது என்று, இன்று காலை எழுத்தாளர் வண்ணதாசன் அவர்கள் “தீராத விளையாட்டுத் தாத்தாவை படித்தேன். மாது! நீங்கள் நாவல் எழுதும் நேரம் வந்திருக்கிறது என நினைக்கிறேன்” என்றார். என்ன பேச என்று தெரியாமல் நெகிழ்ந்து போனேன். சாய்ங்காலம் வீட்டுக்கு வந்தால் எழுத்தாளர் வண்ணதாசனின் மெயில் ஒன்றும் வந்திருந்தது. அவருக்குத்தாம் எழுத்துக்களும், அர்த்தங்களும், எப்படி வசப்படுகின்றன!

இதுதான் அந்தக் கடிதம்:

அன்புமிக்க மாதவராஜ்,

வணக்கம்.

வயதாகி வந்த காமம் சித்திரத்தைத் தாண்டிச் செல்கிறது இந்த தீராத விளையாட்டு.. கணபதி தாத்தாவாக நான் இருக்கிறேன். அவர் வாங்கிவைத்திருக்கிற ராஜேஸ்வரியின் மகளுக்கான் பொம்மையாகவும் நானே இருக்கிறேன்.

இறந்து போன உறவினரின் ட்ரங்குப் பெட்டியைத் திறந்து பார்க்கிற நேரத்தில், அந்த இறந்துபோன மனிதனின் மொத்த வாழ்வையும் அல்லவா நாம், சம்பந்தத்துடனும் சம்பந்தமின்றியும் திறந்து பார்க்க நேர்கிறது. எங்கள் தாத்தா இறந்துபோன பின் திறந்து பார்த்த அவருடைய மரப் பெட்டியில் இருந்த எத்தனையோ பழுப்புக் காகிதங்களில் எனக்கு ரொம்பப் பிடித்தவை அவர் வேலைபார்த்த UPASI  என்று மயில் படம். பதிக்கப்பட்ட தேயிலைத் தோட்ட அலுவலகம் சார்ந்த வெற்று உறைகளும், ஒரு மாட்டு வாகடப் புத்தகமும் தான்.

தாத்தாவுக்கு பசு மாடுகள் பிடிக்கும். தாத்தாவின் வாடை தொழுவிலும், தொழுவின் வாடை தாத்தாவிடமும் அடிக்கும். தாத்தா இறந்த பிறகு ஒரு பசுவுக்கு நானே பேறுகாலம் பார்த்தேன். ஒரு கன்றுக்குட்டி முன்கால்கள்
மேல் முகம்பதிய இந்த மண்ணுக்கு வருகிற நேரத்தின் அற்புதம் இன்னும் என்னை,பார்க்கிற ஒவ்வொரு கன்றுக்குட்டியையும் தடவிக்கொடுக்க வைத்துக் கொண்டிருக்கிறது. தோல் கண்ணுக் குட்டிகள் பற்றிச் சொல்ல வேண்டும் எனில் அது இன்னொரு துயரக் கதை.

ஏசுவைத் தச்சனின் மகன் என்கிறார்கள். அந்த வகையில் தாத்தா ஏசுவின் தகப்பனாக இருக்கத் தகுந்தவர். மாட்டுக்கும் கன்றுக்குட்டிக்கும் புண்ணாக்குத் தண்ணீர் வைக்கிற தொட்டிகளை அவரே செய்வார். அழகழகான மரப்பட்டைகளால் ஆன அந்தத் தொட்டிகளின் நேர்த்தியும், கன்றுக்குட்டிகள் குனிந்து அருந்தும் உயரத்தில் அவர் அதைச் செய்திருக்கிற கச்சிதமும் நான் ஏதாவது ஒரு கதையெழுதும்போது பிடிபட்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

எங்கள் தாத்தாவுக்கும் கிளி போல ஒரு பொண்டாட்டியும் குரங்கு போல வைப்பாட்டியும்’ உண்டென்று சொல்வார்கள். கிளி தன் எணபது வயது வரை எங்களுக்குப் பழம் கொடுத்து விட்டே பறந்து போனது. நான் கடைசிவரை அந்தக் குரங்கைப் பார்க்கவே இல்லை. நிச்சயம் அதுவும் பழம் தரும்படியாகவே இருந்திருக்கும்.

 

கடிதம் படித்த உற்சாகத்தில் அவருக்கு போன் செய்து பேசினேன். “அதிகம் பேசாதீர்கள் எழுதுங்கள் மாது!” என்றார்.

ஆகட்டும் அப்படியே....  கண்பதி தாத்தாவோடு நான் பேச ஆரம்பிக்கிறேன்!

கருத்துகள்

13 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
  1. சீக்கிரம் எழுதுங்க சார். படிக்கறதுக்கு காத்துகிட்டு இருக்கோம்.

    பதிலளிநீக்கு
  2. நல்ல பகிர்வு

    மூத்தோர்கள் அறிவும் அனுபவமும் அவர்கள் உரையாடலுமே மிக சுவாரஸ்யமானது தான்

    தங்கள் பகிர்வுக்கு நன்றி

    பதிலளிநீக்கு
  3. அருமை, மிகுந்த நன்றிகள்

    நீங்கள் சொல்வது போல, வண்ணதாசனின் எழுத்து மிக அற்புதம்

    பதிலளிநீக்கு
  4. // மாது! நீங்கள் நாவல் எழுதும் நேரம் வந்திருக்கிறது என நினைக்கிறேன்” என்றார். என்ன பேச என்று தெரியாமல் நெகிழ்ந்து போனேன் // “அதிகம் பேசாதீர்கள் எழுதுங்கள் மாது!” என்றார்.
    ஆகட்டும் அப்படியே....
    // நாங்களும் எதிர்பார்க்கிறோம்… தொடங்குங்கள் ஒரு புதினத்தை… உங்களுடைய ‘தூரத்தை’ப் படித்து நன்றாக இருக்கிறது என்று நினைத்துக் கொண்டிருந்தேன்… சிறிது நேரம் கழித்து மின்னஞ்சலைத் திறந்தேன். நண்பர் ஒருவர் ‘தூரம்’ கதையை ‘Nice one to read and forward’ என்று தலைப்பிட்டு அனுப்பியிருந்தார். அந்த அளவு உங்களுடைய எழுத்துகளை விரும்புவோர் இருக்கிறார்கள்..

    பதிலளிநீக்கு
  5. எங்க?... அடங்கத்தான் மாட்டீங்கறீரே... :-))

    வண்ணதாசனின் கடிதப் பகிர்விற்கு நன்றி மக்கா!

    பதிலளிநீக்கு
  6. மாதுஅண்ணா,
    நிறைய எழுதவும், உயரம் தொடவும் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  7. வண்ணதாசன் குறிப்பிட்டது முற்றிலும் உண்மை.

    நீங்கள் நாவல் எழுத வேண்டிய தருணம் இது மாதவ் அண்ணா.

    ஒரு கடிதத்தில்கூட எத்தனை செறிவான வார்த்தைகள், மயக்கமூட்டும் அந்த நடை என எல்லாமே வண்ணதாசனுக்கே உரித்தான வர்ணஜாலங்கள்.

    பகிர்வுக்கு நன்றி மாதவ் அண்ணா.

    பதிலளிநீக்கு
  8. அந்த நாவலின் வழியாக”ம்ண்குடம்”மாதவராஜை மீண்டும் சந்திக்க காத்திருக்கிறேன்.எழுது..தோழா...எழுது.வண்ணதாசன் வாக்கு பலிக்கட்டும்.

    பதிலளிநீக்கு
  9. அவ்வப்போது யாராவது சொல்லிக் கொண்டேயிருங்க pl . சீக்கிரம் எழுதுங்க.

    பதிலளிநீக்கு
  10. பா.ரா வில் ஆரம்பித்து வண்ணதாசன் முடித்த இந்த பகிர்வில் மிகவும் நெகிழ்கிறேன். எல்லாரையும் போல் நானும் 'தீராத விளையாட்டு தாத்தாவை' போல இன்னும் பல எதிர்பார்கிறேன்

    பதிலளிநீக்கு
  11. சந்தோஷ கணமாய் உணர்கிறேன். தங்களின் அரசியலற்ற எழுத்துக்களை வாசித்து வருபவன் என்ற முறையில் பா.ரா. நிலையே எனக்கும்...

    வண்ணதாசனின் மடல் மொத்தமும் சொல்கிறது... நன்றி பகிர்வுக்கு...

    பதிலளிநீக்கு
  12. வ‌ண்ண‌தாச‌ன் அவர்களின் க‌டிதத்தையும், இங்கு ப‌ல‌ரின் பின்னூட்ட‌ங்க‌ளையும் ப‌டிக்கும் போது ரொம்ப‌ ச‌ந்தோஷ‌மாக‌ இருக்கிற‌து.சனி ஞாயிறு

    // “அதிகம் பேசாதீர்கள் எழுதுங்கள் மாது!” என்றார். //
    :)ஆமாம் அங்கிள். வாசிக்கக் காத்திருக்கிறோம்.

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!