நவீன எழுத்தாளன்

நவீன எழுத்தாளன்

ஆற்றங்கரையில்
அருவியின் சாரலில்
மலை முகட்டில் மண் தரையில்
புல்வெளியின் நீள் பரப்பில்
கடலின் எதிரில் கட்டாந்தரையில்
மோவாய் தடவி
தலையைச் சொரிந்து
தானாய்ச் சிரித்துத் தானாய்க் கதறி
எங்கெங்கோ திரிந்து பற்றிக் கொண்டுவந்த
எழுத்துக்களுக்காய் இன்று
கண் சொருகிக் காத்திருக்கிறாய்
கணினி முன்...........

 

அவரவர்  அலாரம்  

 

கனவின் தடயங்களுக்குள் புகுந்து
கலைக்கிறது கடிகாரத்தின் மணியோசை

கடன் வாங்கி ஏய்த்திருந்தவர்கள் சிக்க இருந்த பொழுதில்
காதல் முத்தம் பரிமாற இருந்த கணத்தில்
தேர்வில் முதல் மதிப்பெண்
அறிவிக்கப்படும் அந்த நிமிடத்தில்

துளைத்துக் கொண்டுவந்து எழுப்புகிறது
தூக்கத்தில் கிடப்பவனை

குழப்ப கதாபாத்திரத்திலிருந்து வெளியேறி
அன்றாடத்தின் வலையில் வந்து விழ
நேரம் கொடுக்காமல் -
கனவுக்குள்ளிருந்தே நீண்ட கரங்களுக்கும் பிடிபடாமல் -
அடித்துக் கொண்டிருக்கிறது ஓயாமல்
அவரவரே வைத்துக் கொண்ட அலாரம்.....

(இரண்டு கவிதைகளையும் எழுதியவர் எஸ்.வி.வேணுகோபாலன்)

கருத்துகள்

11 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
  1. எஸ்.வி.வி!

    நானும் என் கருத்தை சொல்லி விடுகிறேன். அருமையான கவிதைகள். இரண்டுமே இன்றைய வாழ்வின் கூறுகளை சிறு நையாண்டியாய்ச் சொன்னாலும், வலி உறைக்கும் வரிகள்.

    கணிணியே வாழ்க்கை ஆகிவிடுமா? வாழ்க்கையிலிருந்துதான் சிந்தனைகளும், எழுத்துக்களும் பிறக்க முடியும்.

    பதிலளிநீக்கு
  2. இரண்டுமே கவர்ந்தன. அதிலும் முதல் கவிதை நெருக்கமாய் உணருகிறேன்
    கவிஞருக்கு வாழ்த்துகள். பகிர்ந்த உங்களுக்கும் எனது நன்றி

    பதிலளிநீக்கு
  3. கனவுக்குள் புகுந்து எழுப்பிய அலாரம்
    கணிணிக்குள்ளும் புகுந்து அலரும் நேரம் எந்நேரமோ :)

    கவிதைகள் அருமை.

    பதிலளிநீக்கு
  4. அபாரம் எஸ்.வி.வி.
    1.ஒன்று கனவின் தடயங்களுக்குள் புகுந்து கலைக்கிறது அலாரத்தின் மணியோசை அதிர்வுடன்.
    2.கண் சொருகிக் காத்திருப்பவனை வாழ்க்கைக்குக் கூட்டிப்போகிறது மற்றொரு அழகுக் கவிதை.

    பதிலளிநீக்கு
  5. கவிதைகள் நன்றாக உள்ளது. வாழ்த்துக்களை எஸ்.வி.வேணுகோபாலுக்குச் சொல்லுங்கள்!

    பதிலளிநீக்கு
  6. அருமையான கவிதைகள்
    பகிர்வுக்கு நன்றிங்க‌

    பதிலளிநீக்கு
  7. ரெண்டுமே அருமையான கவிதைகள். அனைவரும் கிட்டத்தட்ட கணினிக்கும் வலைக்கும் அடிமையாகி வருவது அலாரமடிக்க வேண்டிய நிகழ்வுதான்.

    பதிலளிநீக்கு
  8. தோழரே

    கணினித் திரைமுன் சிறை கிடக்கும் அனைவரையும் ஒரு நிமிடம் தலை சிலுப்பி யோசிக்க வைத்து விட்டீர்கள்..,

    “அவரவரே வைத்துக் கொண்ட அலாரம்”

    மிக நுண்ணிய படிமம்... கடந்த கால வாழ்க்கையின் பல நிகழ்வுகளை திரும்பிப் பார்க்க தோன்றியது..

    பதிலளிநீக்கு
  9. வருகை புரிந்தோர், கவிதைகளை கையள்ளிப் பருகி ரசித்தோர், கடந்த கால நினைவுகளில் ஆழ்ந்தோர், நிகழ் காலத்தின் வெம்மையைச் சபித்தோர் அனைவருக்கும் என் அன்பு வணக்கங்கள், நன்றிகள், வாழ்த்துக்கள்....

    மாதவ், எனது நன்றியை எப்படிச் சொல்ல.

    மீண்டும், மோசிகீரனார் உறங்கும் முரசுக் கட்டில் தான் நினைவுக்கு வருகிறது...

    நன்றி என் இனிய தோழா...

    எஸ் வி வி

    பதிலளிநீக்கு
  10. கடனைத் திருப்பித்தராமல் இருக்கும் வாடிக்கையாளர்மேல் விழுந்த அலாரமணி எஸ்.வி.வின் தொழில்பக்தியைத் தொட்டுவிட்டுப் போகிறது. ஹா! வலைப்பூக்களுக்குப் பெயரிட இன்னும் ஒரு பெயர் கிடைத்துவிட்டது...’முரசுக் கட்டில்’ மன்னன் மாதவராஜ் வாழ்க. எங்களுக்கெல்லாம் மோசிக்கீரானார்களைத் தொடர்ந்து அறிமுகப்படுத்திக் கொண்டே இருப்பதற்கு. 5 மணிக்கு எங்கள் பகுதியில் உள்ள மசூதி பாங்கு ஒலிக்கும் இப்படி”தூக்கத்தை விட தொழுகை மேலானது. ஆண்கள் பள்ளிக்குத் தொழுக வாருங்கள். பெண்கள் வீட்டிலேயே தொழுது கொள்ளுங்கள்”. நாம் இப்படி எழுதலாமா? “ ஆண்கள் கணினியில் சிறைப் படுங்கள். பெண்கள் தொலைக் காட்டியில் தொலைந்து போங்கள்” என்று... முதல் கவிதைக்கு இரண்டாம் கவிதை ஓர் அலாரம். நாகநாதன். திருச்சி

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!