கம்மங்குழியாள்


கற்பனையல்ல, நிஜம் இது. திண்டுக்கல் அருகேயுள்ள ஒரு கிராமத்தில், பதினான்கு தலைமுறைகளுக்கு முன்னால் நடந்த கதை. கோகிலாவின் வம்சாவழியினர் இன்றும் ஒவ்வொரு மாதத்தின் கடைசி வெள்ளியில் பூஜை நமஸ்காரங்களோடு அவளை கம்மங்குழியாள் என்று வழிபடுகின்றனர். அறிவொளி இயக்கம் மூலமாக வாய்மொழியாக அறியப்பட்ட வரும் இந்தக் கதையை எழுத்தாளர் மணிமாறன் அவர்கள், நாங்கள் நடத்திய ‘விழுது’ என்னும் சிறுபத்திரிகையில் அறியத் தந்தார்! 

நமது பெரும்பாலான நாட்டுப்புறத் தெய்வங்களுக்குப் பின்னால் இப்படி உயிர்வதை செய்யப்பட்ட சம்பவங்கள் அடர்ந்திருக்கின்றன. மனசாட்சியின் வலி தாங்க முடியாத மனிதர்கள் அவர்களை காலம் காலமாக சுமந்து வந்து கொண்டு இருக்கின்றனர். கம்மங்குழியாள் இன்று ஒரு பெண்தெய்வம். விளக்குகள் அவளுக்காக எரிகின்றன. ஆனால் வாழுகிற காலத்தில்.... 

 

கம்மங்குழியாள்  

அம்மாவின் விசும்பல் அறிந்து கொன்றை மர இலைகள் சன்னமாய் படபடத்துக் கொண்டிருந்தன. அதன் நிழலில் உட்கார்ந்திருந்தான் ராமுத்தச்சன். அதற்குப்பிறகு அவனால் விளக்குகள் செய்ய முடியவில்லை. கோகிலா காலையில் போட்டிருந்த கோலத்தின் மேல் அழுந்தியிருந்த இளவரசனின் தேர்த்தடம் மிரட்சி தந்தது.  

திருணையும் கொன்றை மரங்களும் கடந்த ஐந்தாறு நாட்களாய்   உளிச்சத்தங்களை கேட்டபடி இருந்தன. வரும் பவுர்ணமியில் “இளவரசருக்குத் திருமணம், ஆயிரம் விளக்குகள் அரண்மனைக்கு வேண்டும்” என்று தம்மன் வந்து சொன்னதும்  வீடு முழுவதும் விளக்குகள் முளைத்த மாதிரி சந்தோஷம். சும்மாவா! நிறைய காசுகள் கிடைக்கும். திருணை பூராவும் மா, வேம்பு,கோதகத்தி என்று நிரப்பினான். கோகிலாவை உளியை எடுத்துத்தர கேட்டு, அவள் கையால் வேலை ஆரம்பித்தான். தங்கையின் கைபட்டால்தான் எதுவும் துலங்கும் அவனுக்கு.  

அஞ்சு முகம், ஏழு முகம் கொண்ட விளக்குகளாய் மரங்கள் உருப்பெற்றன. தேய்த்து, தேய்த்து மெருகேற்ற அவை பிரகாசித்தன. இரவெல்லாம் உளிச்சத்தம் கேட்டது. காலையில் எழுந்ததும் அண்ணன் செய்திருக்கும் விளக்குகளை கோகிலா வந்து பார்ப்பாள். மரங்களுக்குப் பக்கத்திலேயே தரையில் ராமுத்தச்சன் தூங்கிக்கொண்டு இருப்பான். பாவம் போல இருக்கும். சாமி அறையிலிருந்து சாம்பிராணி புகை வாசத்தோடு வந்து அவனை அம்மா எழுப்பி நீராகாரம் கொடுப்பாள்.  

இன்று காலையும் அப்படித்தான் விடிந்தது. ராமுத்தச்சன் திரும்பவும் எழுந்து சுறுசுறுப்பானான். கோகிலா வாசல் தெளித்தாள். கோலம் போட்டாள். வீட்டில் அவள் அங்குமிங்கும் நடமாடுவதே மகிழ்ச்சிக்குரியதாக இருக்கும் அண்ணனுக்கு. நெருங்கிய உறவினர்கள் வீட்டுக்கு அவள் ஒருநாள் இரண்டுநாள் போய்விட்டால் கூட உளி வித்தியாசமாய் ஒலிக்கும். அவன் மன ஓட்டங்களை அறுத்துக்கொண்டு குதிரைக் குளம்புகளின் சத்தம் கேட்டது. எழுந்து எட்டிப் பார்த்தான். இளவரசன் தேரில் வந்து கொண்டிருந்தான்.  

ராமுத்தச்சன் பரபரப்பாகி எழுந்து நிற்பதற்குள் தேர் வாசலில் வந்து நின்றது. இளவரசன் இறங்கி வந்தான். அவன் கும்பிடுவதைப் பார்க்காமல் விளக்குகளைப் பார்த்தான். பார்வை மெல்ல சுழன்று வந்த்போது எதோ உறுத்த மேலே பார்த்தான். கோகிலா அம்பாரியில் தலை துவட்டிக்கொண்டு நின்றாள். ராமுத்தச்சன் ஏழுமுகம் கொண்ட விளக்கொன்றை கொண்டு வந்து காட்ட இளவரசன் மேலே அம்பாரியைப் பார்த்துக்கொண்டு இருந்தான். ராமுத்தச்சனுக்கு நடுக்கமாகவும், பயமாகவும் இருந்தது. எதோ சொல்ல வாயெடுத்தான். ஒன்றும் வரவில்லை. பார்த்துக்கொண்டிருந்த அவன் அம்மாவுக்கு செத்துப் போகலாம் போலிருந்தது.  இளவரசன் “யார் அது..” என்றான். செத்துப்போன குரலில் “என் தங்கை” என்றான். “விளக்குகளை இவளிடம் கொடுத்து அரண்மனைக்கு அனுப்பு” சொல்ல்விட்டு இளவரசன் போய்விட்டான்.  

எதுவும் தோன்றாமல் அப்படியே நின்றான் ரமுத்தச்சன். செய்து வைத்திருந்த விளக்குகளை கண்ட மேனிக்கு தூக்கி எறிந்தான். அம்மா வெடித்து அழ, “என்னம்மா...” என கோகிலா பதறி வந்து கட்டிக்கொண்டாள். “என் தங்கமே, என் தங்கமே...” என அவளைப் பார்த்து தலையில் அடித்து அழுதாள். கோகிலாவுக்கு ஒன்றும் புரியவில்லை.  

பவுர்ணமிக்கு நாள் நெருங்க நெருங்க ராமுத்தச்சனுக்கு உலகம் இருட்டிக்கொண்டு வந்தது. கோகிலா போட்ட கோலங்கள் அவனை வதைத்துக்கொண்டு இருந்தன. நடுராத்திரியில் எழுந்து உட்கார்ந்து வானத்தைப் பார்த்திருந்தான். பகலில் திருணையில் முடங்கி கிடந்தான். கோகிலாவுக்கு எல்லாம் புதிராகவும் அதிர்ச்சியாகவும் இருந்தது.  

அன்று அவன் பக்கத்தில் வந்து “அண்ணா” என்று அழைத்தாள். எழுந்து உட்கார்ந்து அவளையேப் பார்த்தது விசித்திரமாயிருந்தது. “உளியை அந்த பலகை மேல் வச்சிருக்கேன். எடுத்துத்தா” என்றான். கொன்றை மரத்தின் அடுத்த பக்கத்தில் அந்தப் பலகைகள் தரையில் வரிசையாய் வைக்கப்பட்டு இருந்தன. கோகிலா எடுக்கப் போனாள். பலகையை மிதித்ததும் அவன் சட்டென ஒடி பலகையை இழுத்தான். கீழே இருந்த குழியில் விழுந்தாள். குழி பூராவும் கம்பரிசி. “அம்மா...!” அலறலோடு வழவழப்பான அரிசிக்குள் போக ஆரம்பித்தாள். ஓடிவந்த அம்மாவின் வாயைப் பொத்தி அவளைக் கட்டிப்பிடித்து முகத்தை வேறு பக்கம் திரும்பிக்கொண்டான். மெல்ல மெல்ல கோகிலா உள்ளே போய்க்கொண்டு இருந்தாள். அம்மாவின் திமிறலை அடக்கி ராமுத்தச்சன் வெறிபித்தவள் மாதிரி நின்றான். “நா ஒங்களுக்கு என்ன பாவம் செஞ்சேன்..” குரல் அடங்கியது. கம்மங்குழி முழுசாக மூடிய பின்னும் மேல் பரப்பில் கொஞ்ச நேரம் துடிப்புகள் இருந்தன.


Comments

22 Comments

வருகைக்கு நன்றி.

கமெண்ட் செய்கிறவர்கள் Anonymous, Name/Url, Google Account, Name/Url, Google Account மூலம் கமெண்ட் செய்யலாம்.

1) முடிந்தவரை Google Account மூலம் கமெண்ட் செய்யுங்கள்.

2) இல்லையென்றால் Name/Url மூலம், பேரை மட்டுமாவது குறிப்பிட்டு கமெண்ட் செய்யுங்கள்.

3) Anonymous மூலம்தான் கமெண்ட் செய்ய முடியுமென்றால், கமெண்ட்டில் கீழே உங்கள் பேரை தயவு செய்து குறிப்பிடுங்கள்.

நன்றி.

- தீராத பக்கங்கள்
  1. கதைதான் என்றாலும்
    ஒருகணம் .......
    மனதில் ஒரு புயலே அடித்தது

    ReplyDelete
  2. மிகவும் ஆழமான பதிவு, இதுபோன்ற எண்ணற்ற கதைகள் நமது அறியாமை சமூகத்தில் உண்டு, சமூதாயத்தால் பலி கொடுக்கப்பட்டவர்கள் மற்றும் யுத்த களபலிகள் என நிறைய உண்டு. அவர்களை காவல் தெய்வங்களாக வணங்குவர்கள் உண்டு. எனக்கு பொரிய ஆச்சி அம்மன் என்ற அம்மன் கோவில் இங்கு சிங்கையில் உள்ளது, ஆனால் அவர்களின் கதை தெரியாது,உங்களுக்கு தெரிந்தால் பதிவு இடவும்.

    ReplyDelete
  3. அருமை அருமை அருமை சார்! இறக்கும் அவள் என்ன நினைத்து இருப்பாள்?!

    ReplyDelete
  4. மிக நல்லப்பதிவு ......

    ReplyDelete
  5. அண்ணா, பதிவைப்படித்ததும் மனதை என்னவோ செய்தது.இன்னமும்கூட குடும்பம், கடமை என்ற பெயரில் பெண்கள் உயிருடன் புதைகுழிக்குள் தள்ளப் படும் அவலங்கள் தொடரததான் செய்கின்ற்ன. பெண்க்ளை தெய்வமாய் கொண்டாடுகிறோம் என்கிறார்ளே அது இப்படித்தானோ...- அம்பிகா

    ReplyDelete
  6. ithu pola vroru kathai keettirukkireen

    pakirvukku nanri sir

    ReplyDelete
  7. :((((((

    நாட்டுப்புறத் தெய்வங்களுக்குப் பின்னால் இப்படி உயிர்வதை செய்யப்பட்ட சம்பவங்கள் அடர்ந்திருக்கின்றன //

    உண்மைதான். அதனால் தான் இன்னமும் பெரு தெய்வங்களை கும்பிட்டாலும், சிறு தெய்வங்கள் என்ற குல தெய்வங்களை வருடா வருடம் நாள் தப்பாமல் கும்பிடுவது.
    சொல்லப்போனால் எனக்கு குல தெய்வ வழிபாடு மிகவும் பிடித்த ஒன்று.

    ReplyDelete
  8. பலமான முன்னுரை இருந்தாலும்,

    கடைசி வரிகளில்.....
    நெஞ்சுக்குழியில்....அடைப்பு....
    உடல் சிலிர்க்கிறது....

    என்ன சொல்ல...எழுத முடியவில்லை....வார்த்தைகள் இல்லை...

    ஆரூரன்

    ReplyDelete
  9. //ராமுத்தச்சனுக்கு நடுக்கமாகவும், பயமாகவும் இருந்தது. எதோ சொல்ல வாயெடுத்தான். ஒன்றும் வரவில்லை. பார்த்துக்கொண்டிருந்த அவன் அம்மாவுக்கு செத்துப் போகலாம் போலிருந்தது. இளவரசன் “யார் அது..” என்றான். செத்துப்போன குரலில் “என் தங்கை” என்றான்//

    இந்த வரிகளில் அண்ணன் மற்றும் அம்மாவின் நிலைகளை சொல்லிய விதம் மிக அருமை.

    ReplyDelete
  10. "கம்மங்குழியாள்"

    பெரும்பான்மையான பெண் தெய்வங்களுக்குப் பின்னே இப்படிப் பட்டதோர் குல தெய்வ கதையே ஒளிந்திருக்கிறது .வதை பட்டு அல்லது வதைக்கப் பட்டு இறந்த பெண்களையே தெய்வமெனக் கொண்டாடி தங்கள் பாவங்களைப் போக்கிக் கொள்ளும் சமாதானங்கள் ஆக்கிக் கொண்டனர்(டோம்).

    நானும் இப்படிப் பட்ட நிஜக்கதை ஒன்றை பதிவாக்கி இருக்கிறேன் ...நேரமிருப்பின் வாசியுங்கள் .

    http://mrsdoubt.blogspot.com/2008/12/blog-post_09.html (குல தெய்வக் கதைகள் பார்ட் 1)

    http://mrsdoubt.blogspot.com/2008/12/blog-post_10.html (குல தெய்வக் கதைகள் பார்ட் 2)

    ReplyDelete
  11. e.mail follow up tick செய்ய மறந்ததால் மறுபடி ஒரு முறை...மன்னிக்கவும்

    ReplyDelete
  12. உண்மை கற்பனையை விட எவ்வளவு பயங்கரம்?

    ReplyDelete
  13. Ithupola engal kuladeivam aana oru kanni penn patriya kathai ithu.

    Ore pen avalukku enna karanamo thirumanam aagavillai, annanngaluku manammagi annimaar ivalai yelanam seithapadi.
    Innilaiyil ivalai pen paarka vanthirukkirargal endru ival singaarithu irukkaiyil, ivalai paarthu oru anni matravalidam solkiraal thalai naraicha ivalukku ippo kalyaanamam. ippadi avalai avamaanap paduthaa ippenno poomithaaye ennai yetrukol endru solli veetin tharaiyil irrukum nilavaraiyil amarndhu kolkiraal odi vantha annan maar ival thalai mayirai pidichu illuka muyarchikka ovargal kaiyodu mudi kithathai vara,saabamittalaam, "udan pirantha pen patriya akkarai illamal avalukku kaalathil manam seivikkamal, avalai manaiviyairdam avamaanapada vaitha intha veetu aangal ellorukkum thali ilamaiyil valukkai vilunthuvidum endru poomiyil aalnthu ponnaalam.
    Athu thaano ennavo engal veetu aanmakkalukku 30 thodanugaiyil valukkai silarukku sutha mottaiyaagividum

    ReplyDelete
  14. நினைக்கவே மூச்சு முட்டுகிறது....

    ReplyDelete
  15. புதைபொருள் போல் இது போல ஆயிரமாயிரம் கதைகளும்,சரித்திரங்களும் இந்த மண்ணிலும்,காற்றிலும் விரவியுள்ளது.இதற்கு உயிர் கொடுக்க முடியுமானால் நமது நிஜமான வரலாற்றையும், நமது முந்தைய தலைமுறைகளின் வாழ்க்கை முறைகளையும் அறிந்து கொள்ள முடியும்.ஆனால் அவை எளிதல்ல....

    ஒரு கணம் இதயத்தை நின்று துடிக்கவைத்த பதிவிது......

    ReplyDelete
  16. பொள்ளாச்சி ஆனைமலையில் இருக்கும் மாசாணியம்மன் கதைகூட இது போன்றதுதான்... ஆதிக்க சாதியைச் சார்ந்தவர்கள் நிறைமாத கர்ப்பிணியைப்பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்க, தன்னந்தனியான அந்த தலித் பெண்ணின் போராட்டம் அடர்ந்த அந்த சாணியில் குழந்தை பெற்றுகொண்டு மரணத்தைத்தழுவியதில் முடிகிறது. அந்தசிலையே உங்களுக்கு அந்த செய்தியை சொல்லும்.
    எங்கள் குலதெய்வம் பற்றிய ஒரு பதிவை இங்கே பின்னூட்டமாக அளிக்கிறேன்.
    எனது பூட்டன் சுடுகாட்டுக்கு பிணம் எரிக்க செல்லுகிறான் அது ஒரு இரவு நேரம். எரியூட்டிய பிறகு பிணத்துக்கு வேண்டியவர்கள் கலைந்து விட்டார்கள். பிணமும் பாட்டனும் தனியே... இதற்குள் பாட்டனின் பிரிய மகள் அழுது கொண்டே சுடுகாட்டுக்கு வந்துவிடுகிறாள் அவரறியாமல். (பொதுவாக எந்த பெண்களையும் ஆண்கள் சுடுகாட்டுக்குள் அனுமதிப்பதில்லை குறைந்தபட்சம் அன்றைக்கு மட்டும் மறு நாள் பால் ஊற்ற அனுமதிப்பது வேறு..) நரம்புகள் புடைக்க கொழுப்பு உருக தனது இருப்பிடம் மாறி பிணம் கீழே விழ, அந்தப்பக்கம் இருந்த பூட்டனின் மகள் மேல் தீ பற்றிக்கொள்கிறது.. அவளின் அலறல் சத்தமே பூட்டனுக்கு மகளை அடையாளம் காட்டுகிறது. காப்பாற்ற முடியாமல் போன அவளது உயிர் அவலக்குரலுடன் காற்றில் கரைந்து போகிறது. இப்படி பலியானவள்தான் எனது குலதெய்வமான "சீலக்காரி".

    ReplyDelete
  17. \\பெண்க்ளை தெய்வமாய் கொண்டாடுகிறோம் என்கிறார்ளே அது இப்படித்தானோ...- அம்பிகா//
    நல்லா கேட்டிருக்காங்க :)

    திலீப் சொல்லற கதையை இப்பத்தான் கேக்கறேன்.. பேரு பொருத்தமாத்தான் வருது. ஆனா அந்தகோயிலில் ராஜாவுக்கு சொந்தமான மாந்தோட்டக்கனியை சாப்பிடக்கூடாதுங்கற சட்டத்தை மீறி ஆற்றில் விழுந்த மாங்கனியை சாப்பிட்ட பெண்ணை வெட்டி கொன்னதா சொல்றாங்களே..
    கதைகள் தான் எத்தனை விதம்..:(

    ReplyDelete
  18. நினைக்கவே மூச்சு முட்டுகிறது....
    :((((

    ReplyDelete
  19. பல சிந்தனைகளை தோற்று விக்கிறாள் "கம்மங்குழியாள்".

    மிர‌ட்ட‌லான‌ ப‌கிர்வு !!!

    ReplyDelete
  20. கதிர்!
    இது போன்ற கொடுமையானக் கதைகள் நிறையவே இருக்கின்றன.

    பித்தன்!
    தகவலுக்கு நன்றி. விசாரிக்கிறேன்.


    இளவட்டம்!
    என்ன நினைத்து இருப்பாளோ என்றுதான் சாமி கும்பிடுகிறார்கள்.


    ஊடகன்!
    நன்றி.


    அம்பிகா!
    //இன்னமும்கூட குடும்பம், கடமை என்ற பெயரில் பெண்கள் உயிருடன் புதைகுழிக்குள் தள்ளப் படும் அவலங்கள் தொடரததான் செய்கின்ற்ன. பெண்க்ளை தெய்வமாய் கொண்டாடுகிறோம் என்கிறார்ளே அது இப்படித்தானோ..//
    என் பதிவுக்கு அர்த்தம் சேர்க்கும் வரிகள். அருமை.


    மண்குதிரை!
    நன்றி.

    அமித்து அம்மா!
    நம் கிராமங்களின் ஆன்மாவாக குலதெய்வங்களே இருக்கின்றன.


    ஆரூரன்!
    நிச்சயமாக பாதிக்கத்தான் செய்யும். மனிதர்கள்தானே...


    சுரேஷ்குமார்!
    நன்றி.


    மிஸஸ் தேவ்!
    கண்டிப்பாக படிக்கிறேன். நன்றி.


    சேகர்!
    நன்றி.


    தண்டோரா!
    ஆமாங்க....


    அனானி!
    வருகைக்கும், பகிர்வுக்கும் நன்றி.அந்தப் பெண்ணின் நிலைமை வருத்தம் அளிக்கிறது.


    சந்தனமுல்லை!
    :-(((

    அண்டோ!
    :-((((


    திலீப் நாராயணன்!
    சீலக்காரியின் வாழ்க்கை பதற வைக்கிறது. சரி.... உங்கள் பிளாக் அப்படியே இருக்கிறது. எழுதற்து இல்லையா?


    முத்துலெட்சுமி!
    பல தலைமுறகளாய் வாய்மொழியாகவே சொல்லப்பட்டு வரும் வரலாறுகள் இவை. அந்த பயணத்தில் அங்கங்கு மாற்றமடைந்து, கற்பனைகளும் சேர்ந்து வேறு வேறு செய்திகளைத் தாங்கி வருகின்றன...

    மங்களூர் சிவா!
    :-((((


    செய்யது!
    நன்றி...

    ReplyDelete

You can comment here