அவன் அப்படித்தான்!

அந்த பஸ் புறப்படுவதற்கு நேரமிருந்தது. இருக்கைகள் பெரும்பாலும் காலியாக இருந்தன. நான்கு நண்பர்கள் ஏறி உட்கார்ந்து கொண்டு கதையளக்கத் தொடங்கினார்கள். மிகச்சாதாரணமாக முகத்தை வைத்துக்கொண்டு ஒருவன் பேசிக்கொண்டிருக்க, அதிலிருந்த சரளமான நகைச்சுவையை ரசித்து மற்றவர்கள் சிரித்துக் கொண்டு இருந்தனர். சமயங்களில் அந்த நகைச்சுவைக்கு மேலும் மெருகு கொடுப்பதாக தங்கள் கருத்துக்களை மற்றவர்கள் சொல்லவும் செய்தனர். நண்பர்களுக்குள்ளேயே ஒருவரை ஒருவர் கிண்டல் செய்து கொண்டும் இருந்தனர்.

அப்போது எல்லோரையும் போலவே இருந்த அவனும் ஏறி, இந்த நண்பர்கள் இருந்த இருக்கைக்கு முன் இருக்கையில் உட்கார்ந்தான். உட்காரும்போது சினேகமாக சிரிக்கவும் செய்தான். கடலை விற்பவர்கள், தண்ணீர் பாக்கெட் விற்பவர்கள் எல்லாம் பஸ்ஸில் ஏறி இறங்கிப் போய்க்கொண்டு இருந்தார்கள். இவர்கள் சிரித்துக் கொண்டு இருந்தார்கள். நண்பர்களில் ஒருவன் அரட்டையில் கலந்தபடி சுற்றிலும் அவ்வப்போது பார்த்துக் கொண்டும் இருந்தான்.

முன்னால் உட்கார்ந்தவன் எழுந்து கொஞ்சம் தள்ளி இன்னொரு இருக்கையில் அமர்ந்து இவர்களையே பார்த்துக் கொண்டு இருந்தான்.

இவர்கள் அதனை ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளவில்லை. பேச்சும், சிரிப்பும் தொடர்ந்தது. நண்பர்களில் ஒருவன் மட்டும் பேச்சினிடையே அவனை அவ்வப்போது பார்த்துக் கொண்டு இருந்தான்.

தள்ளிப் போய் உட்கார்ந்த அவன் திடுமென இவர்களைப் பார்த்து “சிரிக்காதீங்க....” என கத்தினான். சட்டென நிறுத்தியவர்கள், திரும்பி வேறு யாரையோச் சொல்கிறான் என நினைத்து இவர்கள் பாட்டுக்கு தொடர ஆரம்பித்தார்கள். “ஒங்களைத்தான் சொல்றேன்.... சிரிக்காதீங்க...” எழுந்து நின்று அவன் கத்த ஆரம்பித்தான். நண்பர்களுக்கு ஒன்றும் புரியவில்லை. பஸ்ஸில் அங்கொன்றும், இங்கொன்றுமாக இருந்தவர்கள் அவனையும், இவர்களையும் கவனிக்க ஆரம்பித்தார்கள். அவனது கண்கள் முறைத்துக்கொண்டும், முகம் துடித்துக்கொண்டும் இருந்தன. இவர்களால் அடக்க முடியவில்லை. ஹோவென்று இரைந்து சிரித்தார்கள்.

அவன் வேகமாக கீழிறங்கி ஒரு கல்லை எடுத்துக் கொண்டு, “சிரிக்காதே.... எறிஞ்சிருவேன்..” என்று கொந்தளிக்க ஆரம்பித்தான். இப்போது பஸ் ஸ்டாண்டே வேடிக்கை பார்க்க ஆரம்பித்தது. நிலைமை கடுமையானது. நண்பர்களில் இரண்டு பேர் வேகமாக இறங்கி அவனை அடிக்கப் போனார்கள். அங்கிருந்த பெரியவர், “உடுங்கப்பா.... அவன் அப்படித்தான்...   நீங்க ஏன் அவனை பாக்குறீங்க....” என்றார்.

திரும்பவும் நண்பர்கள் பஸ்ஸில் ஏறி உட்கார்ந்தார்கள். பேச்சும் வரவில்லை. சிரிக்கவும் இல்லை. அவன் பக்கம் திரும்பவும் இல்லை. அவனுடைய சத்தம் கொஞ்ச நேரம் கேட்டுவிட்டு பிறகு காணாமல் போனது. 

Comments

15 Comments

வருகைக்கு நன்றி.

கமெண்ட் செய்கிறவர்கள் Anonymous, Name/Url, Google Account, Name/Url, Google Account மூலம் கமெண்ட் செய்யலாம்.

1) முடிந்தவரை Google Account மூலம் கமெண்ட் செய்யுங்கள்.

2) இல்லையென்றால் Name/Url மூலம், பேரை மட்டுமாவது குறிப்பிட்டு கமெண்ட் செய்யுங்கள்.

3) Anonymous மூலம்தான் கமெண்ட் செய்ய முடியுமென்றால், கமெண்ட்டில் கீழே உங்கள் பேரை தயவு செய்து குறிப்பிடுங்கள்.

நன்றி.

- தீராத பக்கங்கள்
  1. கதை நல்லா இருக்குங்க..

    ஆனால் கதையின் மையக்கரு என்ன என்று ஊகம் செய்வதில் சற்றே மர்மம்
    நிலவுகிறது.

    புதசெவி !!

    ReplyDelete
  2. :-))))) அட்டகாசம்!

    ஆனால் இதனைப் புரிந்து கொள்ளும் அளவுக்குக் கூட...

    சந்தேகம் தான்!

    ReplyDelete
  3. தோழர்,
    நன்றாக எழுதியிருக்கிறீர்கள்.
    அசாத்திய மனம் உங்களுக்கு. எப்படித்தான் தொடர்ந்து பதிவிட முடிகிறதென்றே தெரியவில்லை. அந்த வித்தையை என்னிடமும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

    000

    அப்புறம், ஒரு விஷயம்.

    //“ஒங்களைத்தான் சொல்றேன்.... சிரிக்காதீங்க...”//

    பாவம், தோழர் விட்டுருங்க.
    இதெல்லாம் மனச்சிக்கல், மலச்சிக்கலை விட மோசமானது.

    பகிர்தலுக்கு... மன்னிக்கவும், நையாண்டிக்கு நன்றி,

    ‘அகநாழிகை‘
    பொன்.வாசுதேவன்

    ReplyDelete
  4. நாலு பேர் நாலுவிதமாதான் இருப்பாங்க.

    பதிவின் மூலம் நீங்கள் வேறு எதோ மெசேஜ் சொல்வது போல உள்ளது.

    டைரக்டா சொன்னாலே புரியாது மரமண்டைக்கு!
    :)))))

    ReplyDelete
  5. ha ha ha chancey illai:):):) super:):):)

    ReplyDelete
  6. அ.மு.செய்யது!
    தீபா!
    மங்களூர் சிவா!

    இந்தப் பதிவில் எந்த மர்மமும் இல்லை. ஏன் புரிவதற்கு சிரமப்படும் என நினைக்கிறீர்கள்?


    அகநாழிகை!
    தொடர்ந்து பதிவிடுவது ஒன்றும் சிரமமாக இல்லை. சொல்வதற்கும், பகிர்ந்து கொள்வதற்கும் எவ்வளவோ இருக்கின்றன. நேரம் மட்டுமே வேண்டும்.


    rapp!
    உண்மையாகவா....!

    ReplyDelete
  7. பாராநாய்டு சீஷோபெரினியா!?

    ReplyDelete
  8. அருமையா இருக்கு. பாதிக்கப்பட்டவங்களோட மனசுக்குள்ள என்ன இருக்குன்னு மத்தவங்களுக்கு புரியறது கஷ்டம்தான்.

    ReplyDelete
  9. சிரித்து பேசி சாதாரணமா இருக்கிறங்களை விட உறுத்து பாத்து உரத்து சத்தம் போட விசித்திரங்களைத்தான் இந்த நாம உத்துப் பார்ப்போம் என்கிற, கூட்டு மனவியலை எளிமையாக ​புரிந்து​கொள்ளமுடிகிறது.

    ReplyDelete
  10. வால்பையன்!
    என்ன சொல்ல வருகிறீர்கள் என்பது புரியவில்லை...

    சந்தனமுல்லை!
    நன்றி.

    சின்ன அம்மிணி!
    ஜெகநாதன்!
    தங்கள் வருகைக்கும், புரிதலுக்கும் நன்றி.

    ReplyDelete
  11. அப்படியென்றால் சந்தேகத்துடன் கூடிய மனசிதைவு என்று அர்த்தம்,

    வேரு யாராவது இருவர் பேசி கொண்டிருந்தால் தன்னை பற்றி தான் பேசி கொண்டிருக்கிரார்கள் என்று தோன்றும், அளவிட முடியாத தாழ்வுமனப்பான்மையில் இருப்பார்கள்.

    மனநல மருத்துவமனையில் 10 பெட் இருந்தால் அதில் 8 சீஷோபெரினியா பேஷண்ட் இருப்பார்கள். நாம் அனைவரும் அதன் விளிம்பில் நின்று கொண்டிருக்கிறோம், கரணம் தப்பினால் நமக்கும் ஒரு பெட்டு!

    ReplyDelete
  12. வால்பையன்!
    விளக்கியமைக்கும், தகவலுக்கும் மிக்க நன்றி.

    ReplyDelete

You can comment here