“அட கடவுளே!”

எல்லோரும் போய்விட்டார்கள். சத்தங்கள் எல்லாம் அடங்கிவிட்டன. பியூன் மின்விசிறி, விளக்குகள் என ஒவ்வொன்றாய் அணைத்தார்.  ஜன்னல்களைப் சாத்திக்கொண்டு வந்தார். ஒரு பீரோவின் மேலிருந்து சடசடவென இறக்கைகளை விசிறியபடி குருவி சுவற்றில் மோதியது. எப்படி, எப்போது உள்ளே வந்தது எனத் தெரியவில்லை. “ச்சூ...ச்சூ” என விரட்டினார். குருவி அறைக்குள்ளேயே அங்குமிங்குமாய் பறந்தது. கேஸ்கட்டுக்கள் அடுக்கப்பட்டிருந்த மேஜையில் உட்கார்ந்தது. திரும்பவும் மேலே பறந்தது. அந்தரத்தில் அங்குமிங்கும் போய்ப் பார்த்து  மின்விசிறி இறக்கையில் உட்கார்ந்து கொண்டது. ஜன்னல்களையெல்லாம் திறந்து வைத்து பியூன் திரும்பவும் விரட்டினார். வெளிச்சம் பரவிய அந்த அறைக்குள்ளேயே சுவற்றில் மோதி மோதிக் கொண்டு இருந்தது. பரிதாபமாய் இருந்தது. என்ன செய்வது என்று தெரியவில்லை. குருவி பின்னாலேயேச் சென்று விரட்டிக்கொண்டு இருந்தார். இருட்டிவிட்ட வெளியுலகம் அதன் கண்களுக்கு தெரியவில்லை போலும். காலையில் வெளிச்சம் வந்தபிறகு வெளியே சென்றுவிடும் என சமாதானப்படுத்திக்கொண்டு பியூன் மீண்டும் ஜன்னல்களைச் சாத்தினார். விளக்குகளை அணைத்தார். கதவைப் பூட்டும்போது குருவியின் சடசடப்பும், சின்னச் சத்தமும் உள்ளுக்குள் கேட்டது. மேலே மாடியில் இருந்த வக்கீல் வீட்டுக்குச் சென்று, சாவி கொடுத்துவிட்டுப் புறப்பட்டார்.

அடுத்த நாள் காலையில், புகழ்பெற்ற அந்த உயர்நீதிமன்ற வக்கீல் குளித்து, நெற்றியெல்லாம் விபூதி பூசி, கிழே இறங்கிச் சென்று தன் அலுவலகத்தைத் திறந்தார். மின்விசிறி சுவிட்சைப் போட்டு தன் இருக்கையில் அமர்ந்தார். அன்றைய கேஸ்கட்டுக்களை எடுத்துப் பார்க்க ஆரம்பித்தார். சடசடவென ஒரு மெலிய சத்தம் கேட்டது. என்னது என அறிவதற்குள் மின்விசிறியில் எதோ அடிபட்ட மாதிரி இருந்தது. அவரது மடியில் இரத்தக் கீறல்களோடு ஒரு குருவி விழுந்தது.

“அட கடவுளே!”

*

கருத்துகள்

11 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
  1. அவ்வ்வ்! அது நடந்துவிடக்கூடாதென்று நினைத்துக் கொண்டே படித்தேன்...நடந்துவிட்டது!! ஹ்ம்ம்ம்...!:(

    பதிலளிநீக்கு
  2. அட கடவுளே :(

    பதிலளிநீக்கு
  3. இதப்படிச்சது ரொம்ப நாளுக்கு நினைவிலிருக்கும். அதுதான் இதோட மகத்துவம். நான்கூட ஒருமுறை தெரியாம எக்சாஸ்ட் ஃபேன் போட்டு ஒரு புறா செத்து, இன்னிக்கும் உறுத்துது.

    பதிலளிநீக்கு
  4. தீபா!

    சந்தனமுல்லை!
    நானும் நடக்கக் கூடாதென்றுதான் நினைத்தேன்.

    கதிர்!

    ஆ.முத்துராமலிங்கம்!

    பிரியமுடன் வசந்த்!

    சின்ன அம்மிணி!

    இலக்கியா!

    பட்டம்பூச்சி!

    மங்களூர் சிவா!

    முத்துவேல்!

    அனைவரின் வருகைக்கும், உணர்வுகளை வெளிப்படுத்தியமைக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!