ஓடிப்போன மகளும், தேடியலையும் தாயும் (சொற்சித்திரங்கள்)

1.ஓடிப்போன மகள்

ராமானுஜத்தை சில நாட்களாய் காணவில்லை. தினமும் காலையில் டீக்கடையில் உட்கார்ந்து பத்திரிகைகளை புரட்டியபடி உலகத்தையே அலசுகிறவர் அவர். கால் மேல் கால் போட்டுக்கொண்டு வாய்கூசாமல் யாரையும் பேசுகிறவருக்கு போதாதவேளை. கல்லூரியில் கடைசி ஆண்டு படித்துக்கொண்டு இருந்த அவரது மகள் ஆட்டோ டிரைவரோடு ஓடிப்போய் விட்டாளாம். டீக்கடையில் இப்போது ஒவ்வொரு நாளும் அவரைப்பற்றித்தான் பேச்சு. குடும்பத்தோடு விஷம் குடிக்கப் போனாராம், தெருவில் உள்ளவர்கள் மல்லுக்கட்டி தடுத்து விட்டார்களாம் என்று ஒருநாள் பேசினார்கள். போஸ்டாபிசில் டிரான்ஸ்பர் வாங்கிக்கொண்டு ஊரைவிட்டே போகப் போகிறாராம் என்று இன்னொரு நாள் பேசினார்கள். பிறகு அவரை மறந்தும் போனார்கள்.

ஒருநாள் அவரது மொபெட்டை ஒருவன் ஒட்டிக்கொண்டு வர, பின்னால் உட்கார்ந்தபடி டீக்கடைக்கு வந்தார் ராமானுஜம். “இவர்தான் நம்ம மாப்பிள்ள....” என்றவர் கடையைப் பார்த்து “ரெண்டு டீப் போடப்பா..” என்று குரல் கொடுத்தார். பத்திரிகைகளை கையில் எடுத்துக்கொண்டு, “என்ன இப்படி பிரபுதேவா பண்ணிட்டார். ரஜினி கூட பஞ்சாயத்து செய்தாரமே....” என பேச ஆரம்பித்தார். அவரது மாப்பிள்ளை, மிகுந்த மரியாதையோடு ஒரு ஒரமாய் நின்று டீக்குடித்துக் கொண்டு இருந்தான்.

2. தேடியலையும் தாய்

“கீரை... கீரை...” குரல் தெருவுக்குள் நீண்டு வந்தது. புத்தம் புதுசாய் கீரைகளை அவள் சுமந்து வருவாள். சின்னச் சின்ன நீர்த்திவலைகளோடு அவைகளிலிருக்கும் ஒரு இளம் பச்சை வாசனை, கீரைக்காரி எப்போதும் காலை நேரத்துச் சந்தோஷங்களைச் சுமந்து கொண்டு வருவதாய் சொல்லும். அவளைப் பார்த்தபிறகுதான் ஒருவாரமாய் அவள் கீரை கொண்டு வரவில்லை என்பதே நினைவில் தோன்றியது.

“என்ன சார்... அக்கா இருக்காங்களா” என்று அருகில் வந்தாள். முகம் எப்போதும் போல் இல்லையெனத் தெரிந்தது. “என்ன... கொஞ்ச நாளா கீரைக் கொண்டு வரலை” என்றேன்.  லேசாய் தொண்டை அடைத்தது அவளுக்கு. “என்ன சார், ஒங்களுக்குத் தெரியாதா..”  லேசாய் விம்மினாள். கீரை வாங்க வெளியில் வந்த மனைவியும்  “என்னம்மா...” என்றாள் இளகிய குரலில். ”பத்துநாளைக்கு முன்னால் சிவகாசி ரோட்டுல சைக்கிள்ள போன எம்புள்ளய மண்லாரி அடிச்சிட்டு சார்....  அந்த இடத்திலேயே எம்புள்ள...” அதற்குமேல் அவளால் சொல்ல முடியவில்லை. எங்களால் ஒன்றும் பேச முடியவில்லை.

“சரி வுடக்கா...  ஏங்கவல என்னோட... நல்ல தண்டங்கீரையும், அரைக்கீரையும் கொண்டு வந்திருக்கேன். வாங்குறீங்களாம்மா”  என்று ஈரத்துணியால் போர்த்தி வைத்திருந்த கீரைகளை எடுத்துத் பாத்திரத்தில் வைத்தாள். முத்து முத்தாய் கீரைகளில் தாயின் கண்ணீர்த் துளிகள் இருந்தன. சுமையை தலையில் தூக்கி வைத்துக்கொண்டு கிளம்பினாள்.

“கீரை... கீரை...” குழந்தையைத் தேடியலையும் தாயின் குரலாய் பரிதவிக்க வைத்தது.  நீண்ட தெருவில் அவள் போய்க்கொண்டு இருந்தாள்.

*

கருத்துகள்

18 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
  1. சொற்சித்திரங்கள் - நிதர்சனம்! சொல்லாமல் விட்டதையும் சொல்லிச் செல்கிறது இந்தச் சித்திரங்கள்!

    பதிலளிநீக்கு
  2. கீரைக்காரம்மாக்கள் - அவர்களை மறக்கவே முடியாது! எப்படி எல்லா ஊர் கீரைக்காரம்மாக்களும் ஒரே மாதிரி இருக்கிறார்கள்!! வெகு நட்பாகவும், உரிமையோடும் காலைநேரத்தைக் கலகலப்பாக்குவார்கள்!

    பதிலளிநீக்கு
  3. ஓடிப்போன மகளை கண்டுபிடுத்த தகப்பனும், விபத்தில் மகனை தொலைத்த தாயும் என்று அருமையான கதாபாத்திரங்கள்.

    பதிலளிநீக்கு
  4. அருமை. இன்று காலை இனிதே தொடங்கியது.

    பதிலளிநீக்கு
  5. ரொம்ப அருமையா இருக்கு மாதவ்.

    அனுபவங்களை வார்த்தைகளாக மாற்றி அதனை அத்தனை நுட்பத்துடன் படிப்பவர் மனங்களுக்கு ட்ரான்ஸ்பர் செய்யும் வித்தையை எங்குதான் கற்றுக்கொண்டீர்களோ தெரியவில்லை.

    பதிலளிநீக்கு
  6. மனதை நெகிழ வைக்கின்றன.
    சொற்சித்திரம் வரைகின்றது..!

    பதிலளிநீக்கு
  7. மானம் போனாலும், திருந்தாத ஜென்மங்களும் உண்டு,

    குழ்ந்தை இறந்த கவலையை அடுத்தவர் மேல் ஏற்றாத ஜென்மங்களும் உண்டு,

    இந்த விசித்திர பூவுலகில்.

    பதிலளிநீக்கு
  8. “கீரை... கீரை...” குழந்தையைத் தேடியலையும் தாயின் குரலாய் பரிதவிக்க வைத்தது. நீண்ட தெருவில் அவள் போய்க்கொண்டு இருந்தாள்."
    கூடவே நம் உணர்வுகளும் முடிவற்ற தேடலோடுதான் செல்கிறது தொலைந்து போன உறவுகளைத்தேடி....

    பதிலளிநீக்கு
  9. // 1.ஓடிப்போன மகள் //

    தலைகுனிவிலும் பொழைக்க தெருஞ்ச மனுஷன்......



    // 2. தேடியலையும் தாய் //


    " குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா......... "






    நல்ல குறுங்கதைகளை கொண்ட ஸ்வாரஸ்யமான பதிவு .....


    வாழ்த்துக்கள்.....!!!!

    பதிலளிநீக்கு
  10. இரண்டாவது கதை கண்கலங்க வைத்து விட்டது.

    அந்த மண் லாரிக்காரர் ஆயிரம் ரூபாயை கட்டினால் போதும், வெளியே வந்து விடலாம்.
    மனித உயிர்களுக்கு எந்தவொரு மரியாதையும் தராத தேசமிது.

    பதிலளிநீக்கு
  11. இரண்டு சொற்சித்திரங்களுமே பிடித்திருக்கிறது, இரண்டாவது ஸ்தம்பிக்கச் செய்து விட்டது.

    பதிலளிநீக்கு
  12. ராமானுஜமும்,கீரைக்கார அம்மாவும் தங்களின் சோகங்களைத் தாண்டி வாழ்வில் மீண்டும் நீந்தத் துவங்கிவிட்டார்கள். இரு கதைகளும் அருமையாகச் சொல்லியுள்ளீர்கள்.

    பதிலளிநீக்கு
  13. சந்தனமுல்லை!
    உண்மைதான். எல்லா ஊர்களிலும் கீரைக்காரம்மாக்கள் நெருக்கமாய் பழ்குகிறவர்களாக இருக்கிறார்கள்.

    சின்ன அம்மிணி!
    நன்றி.


    வண்ணத்துப்பூச்சியார்!
    //இன்று காலை இனிதே தொடங்கியது//
    அப்படியா!!!


    மாக்ஸிம் கார்க்கி!
    நன்றி,


    கும்க்கி!
    உண்மையாகவா...!



    ஆ.முத்துராமலிங்கம்!
    நன்றி.


    தீப்பெட்டி!
    நன்றி.


    அப்பாவி முரு!
    நன்றி.



    மங்களூர் சிவா!
    நன்றி.


    கிருத்திகா!
    நுட்பமாக உணர்ந்திருக்கிறீர்கள். நன்றி.


    keith kumarasamy!
    நன்றி. எதுக்கு அந்த அவ்வளவுதான்?


    லவ்டேல்மேடி!
    நன்றி.



    ஜோ!
    ஒரு விஷயம் குறித்த தொடர் சிந்தனையும், கோபமும் எப்போதும் உங்களிடம் இருக்கிறது!



    யாத்ரா!
    மிக்க நன்றி கவிஞனே!


    அனானி அவர்களுக்கு!
    நன்றி.

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!