யாரும் பார்க்கவில்லை!

plastic bags

 

எத்தனையோ காலமாய் தினமும்  இந்த வனப்பகுதியை, அண்ட சராசரம் அதிரும்படியாய்க் கடந்து விடும் டிரெயின் அன்று எதோ கோளாறால் நின்று போனது.

காடு பெரும் கண் கொண்டு இயந்திர மூச்சு விட்டுக் கொண்டிருக்கும் நீண்ட புழுவை பார்த்தது.

சுதந்திரமாய்ப் பறந்து திரிந்து கொண்டிருந்த பறவைகளும், விலங்குகளும் அங்கங்கு அடைந்து கொள்ளவும், ஒளிந்து கொள்ளவுமாயின.

வேற்றுக் கிரகம் போன்ற புத்தம் புது மண்ணில் மனிதக் கால்கள் பட்டன. பரவின.

மனிதச் சத்தங்களும் சேர்ந்து கொண்டன. யுகங்களின் அமைதி கிழிக்கப்பட்டது.

திடுமென பெரும் ஊளையிட்டு, துடிப்பு உடல் முழுவதும் வெட்ட, டிரெயின் அங்கிருந்து புறப்பட்டது.

தண்டவாளம் முழுவதும் மூத்திரங்களும், மலங்களும், சிகரெட் பாக்கெட்டுகளும், மது பாட்டில்களும், பிளாஸ்டிக் பைகளும் சிந்தி சிதறிக் கிடந்தன.

பறவைகளும், விலங்குகளும்  மெல்ல வந்து முகர்ந்து பார்த்தன.

பிளாஸ்டிக் பைகள் காட்டிற்குள் உருண்டு உருண்டு பயணப்பட்டன.

இயற்கையை அள்ளி அள்ளிப் பருகியதின் மிச்சத்துளிகளும் அங்கு கிடக்கத்தான் செய்தன. யாரும் பார்க்கவில்லை.

 

*

கருத்துகள்

9 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
  1. //தண்டவாளம் முழுவதும் மூத்திரங்களும், மலங்களும், சிகரெட் பாக்கெட்டுகளும், மது பாட்டில்களும், பிளாஸ்டிக் பைகளும் சிந்தி சிதறிக் கிடந்தன.//


    முதலிரண்டையும் மனிதனால் பொறுக்கமுடியாததால் விட்டுவிடலாம், அடுத்த மூன்றையும் பொறுக்கமுடியாததால் பொறுக்கியே ஆகவேண்டும்.

    பதிலளிநீக்கு
  2. No comments-R.Selvapriyan-Chalakudy

    பதிலளிநீக்கு
  3. மனம் துணுக்குறும் விதமான காட்சிப்படுத்தல்

    பதிலளிநீக்கு
  4. காடும் வாழ் உயிரினங்களும் என்ன பாவம் செய்தது.
    இதற்கெல்லாம் மாற்று வழிகளே இல்லையா,

    ரயில் பணியாளர்கள் இம்மாதிரி நிறுத்தத்திலிருக்கும் தண்டவாளங்களை சுத்தம் செய்வதை பார்த்திருக்கிறேன், மனிதன் மலத்தை மனிதன் அள்ளும் அவலம் என்று தீருமோ

    பதிலளிநீக்கு
  5. //இயற்கையை அள்ளி அள்ளிப் பருகியதின் மிச்சத்துளிகளும் அங்கு கிடக்கத்தான் செய்தன. யாரும் பார்க்கவில்லை. //
    மனதில் எழுவதை அற்புதாம
    வரியில் காட்சி படுத்திவிட்டீர்கள்
    அருமை.

    பதிலளிநீக்கு
  6. உங்கள் நடை.... அருமை!!! சொல்ல வந்த கரு முன்பே படித்துவிட்டாலும் உங்கள் நடையில் அதைக் காணும்பொழுது இன்னும் இனிக்கிறது!!!

    தொடருங்கள் மாதவராஜ் அவர்களே!

    பதிலளிநீக்கு
  7. இந்தப் பதிவு மிக முக்கியமான ஒன்றாக கருதினேன். வந்திருந்த பின்னூட்டங்கள் மிகக் குறைவே.

    பொதுவாகவே வலையுலகத்தில், சீரியஸாக எழுதும்போது எட்டிப்பார்த்து விட்டுப் போகின்ற மனோபாவமும், கொஞ்சம் ஜாலியாக இருந்தால் புகுந்து ரகளை செய்வதும் இருக்கிறது.

    மனிதருக்கும், இயற்கைக்குமுள்ள உறவுகள் குறித்தும், சுற்றுப்புறச் சூழல் குறித்த சில சிக்கல்களையும் சொல்ல வந்தேன்.

    ’யாரும் பார்க்கவில்லை’ என்றில்லாமல் வந்து கருத்து தெரிவித்தவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

    எழுத்தாளர் தமிழ்ச்செல்வன் கருத்து தெரிவித்ததை நூறு பேர் கருத்து தெரிவித்ததாய் எண்ணி நிறைவடைந்தேன்.

    பதிலளிநீக்கு
  8. Simple and powerful. I liked it very much. Keep it up.

    பதிலளிநீக்கு
  9. தண்டவாளமருகே மேய்ந்துகொண்டிருக்கும் என் வீட்டு எருதுகளும் முகர்ந்து பார்க்க ஆரம்பித்திருக்கின்றன பிளாஸ்டிக் பைகளை இன்று.

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!