இந்தக் கவிதைகள் உங்களை என்ன செய்கின்றன?


நடைபாதை ஓரங்களில்
பிளாஸ்டிக் மரங்களைப் பயிரிடுவோம்
பிளாஸ்டிக் கிளைகளில் பிளாஸ்டிக் பறவைகள்
பிளாஸ்டிக் தங்கக் கதிர்களில்
பிளாஸ்டிக் தானியங்களை மகசூல் செய்வோம்
பிளாஸ்டிக் பசுக்களின் பிளாஸ்டிக் மடுக்களில்
பிளாஸ்டிக் பாலருந்துவோம்.  

0000  

முன்னொரு காலத்தில்
இங்கே ஒரு கிராமம் இருந்தது
அந்த நாட்களில்
நிலமும் காற்றும் வானமும்
இங்கே மக்களால் நிரம்பி இருந்தது
அவர்களின் சிரிப்பு, கவலைகள்
உரையாடல்கள், பெருமூச்சுக்கள், 
பாடல்கள் இவற்றை
நீ கண்டும் கேட்டும் இருக்கலாம்
காற்றில் நீந்தும் பச்சை இலைகள்
கனி கொத்திச் சிதறும் பறவைக் கூட்டம்   
ஆண் பேடைகளின் காதல் கீச்சொலிகள்
ஒரு காலத்தில்
ஆனந்த அலைகளில்
தங்கமாய் தானியமணிகள்
நடனமாடின. 

0000  

வாழ்க்கையை விட
ஒலியை விட
வேகத்தை விட
பெரிதான மௌனம் இருக்கிறது
பிரபஞசம் முழுவது விரிந்துள்ள
அந்த மௌனம்
பிணத்தின் கண்களில் தங்கியுள்ளது  

0000  

கவிதை ஒரு பொய்
உலகிற்கு நன்மை இது என்கிற
கவிதை
காமரசப் பாடல்களில்
இளம் கதாநாயகிகளின் தொடைகளுக்கிடையே
ஒட்டிக் கிடக்கிறது
இளைஞர்களின் கால்களில்
கனவுத் தைலம் பூசிய கதைகளினால் தேய்த்து
பறக்க வைப்பதாகவும் நிற்கிறது.  

000

நான் பெரும்பாலும்
ஒரே ஒரு பாடலைப் பாடுகிறேன்
என் வாழ்வு முழுவதும்
அதே பாடலைப் பாடுவேன்
என் வயிற்றின் குடலை உருவி
அதையே குழலாக்கி
வீதிவீதியாக
என் பாடலைப் பாடுவேன்
உண்மையைச் செவி மடுக்கும்
காதுகளைத் தேடிக் கொண்டே இருப்பேன்  

000

மானேப்பள்ளி ஹிருஷிகேசவராவ் என்ற நக்னமுனி என்பவர்தான் இந்தக் கவிதைகளை எழுதிய கவிஞர்! 

“விடுதலை பெற்று ஐம்பது ஆண்டுகள் ஆகியும் சமூகத்தில் நிலவுகிற ஏற்றத்தாழ்வுகளுக்கு நான்  மிகவும் கவலைப் படுகிறேன். இந்த அமைப்பை சரியாக மாற்றாவிட்டால் மனிதர்களுக்கு மகிழ்ச்சியே இல்லை” என்று கவலைப்பட்டவர் அவர். 1960களில் தெலுங்கு இலக்கிய உலகை வெடிவைத்து தகர்க்க ஆந்திராவில் தோன்றிய திகம்பரக்கவிகள் இயக்கத்தோடு தொடர்பு கொண்டவராய் இருந்திருக்கிறார். 1965களில் திகம்பரக் கவிகளின் முதல் கவிதைத் தொகுப்பை ஹைதராபாத்தில் ஒரு ரிக்‌ஷாக்காரரும், 1966ல் இரண்டாவது கவிதைத் தொகுப்பை ஒரு உணவு விடுதி சிப்பந்தியும், 1968ல் மூன்றாவது கவிதைத் தொகுப்பை ஒரு பாலியல் தொழிலாளியும் வெளியிட்டு இருக்கின்றனர்.  

பதிவில் நான் காட்டியிருந்த கவிதைகள் தனித்தனியானவையல்ல. மரக்குதிரை என்னும் முழுநீளக் கவிதையிலிருந்து எடுத்துச் சொல்லப் பட்டவை. 1977ல் ஆந்திர மாநிலத்தில் தீவாசீமாப் பகுதிகளில் வீசிய கடும் புயலாலும், வெள்ளத்தாலும் 20000 பேர் கொல்லப்பட்டனர். சகலமும் அழிந்து பிணங்களக் கூட அகற்ற முடியாமல்  அரசு காட்டிய அசிரத்தையின் மீது வெளிப்பட்ட நக்னமுனியின் கோபக்குமுறலே மரக்குதிரை!  1978 ஜனவரி முதல் தேதி வெளியிடப்பட்டது. அப்போது எந்த பாதிப்பும் இல்லை. அகில இந்திய வானொலியும் இக்கவிதையை ஒலிபரப்பியது. அப்போதும் பெரிய அளவில் யாரும் பேசவில்லை. இரண்டு வருடங்களுக்குப் பிறகு செகுரி ராமராவ் மரக்குதிரையை மகாகாவியம் என்றதும், பெரும் விவாதங்கள் எழுந்தன.  

“எல்லா புதிய கவிதைகளும் ஒரே மாதிரியானவை அல்ல. இந்தக் கவிதையை உங்களுக்குள்ளேயே உரத்துப் பாடுங்கள். இதன் குரல்கள் உங்கள் மனதின் தனிமையில் வெகுவாய் ஒலிக்கும். இதன் அடியாழத்தில் புதைந்துள்ள உண்மைகள் உங்களைத் தொடும். உங்கள் மனசாட்சியின் ஞாபகச் சுவடுகளை ஒவ்வொன்றாய்த் தொட்டு செயல்படும்” என்கிறார் செகுரி ராமராவ்.  

“நாம் சொல்லப் போவது குறித்து நமக்குத் தெளிவு முக்கியம். வாசகனுக்கு எந்த அர்த்தமும் தராத, வடிவ அழகுகளில் சேதி முக்கியமற்று போய்விடக் கூடும். நக்னமுனிக்கு உள்ளடக்கம் முதன்மையானது. வடிவம் இரண்டாவது பட்சமே” என்கிறார் சந்திரகாந்த்.  

“அவரின் படைப்புகள் தெலுங்கு இலக்கிய உலக்கிய உலகின் எல்லைகளை மாற்றி அமைத்தன. அவரால் தெலுங்கு வார்த்தைகள் சரியான அர்த்தத் தளங்களில் புதிய உயரங்களைத் தொட்டன. நக்னமுனியின் கவிதைகள் புதிய உயரங்களைத் தொட்டன. முற்றிலும் புதிய அடர்த்தியை, தீவீரமான பரிமாணங்களுடன் காட்டின. சலனமற்ற அமைப்பின் மீது சரியான அளவில் தொடுக்கும் தாக்குதல்கள் ஆயின.” என்கிறார் ராமகிருஷ்ணா.  

மரணத்தின் துயரம்  பொதிந்த இந்த வரிகளை வாசித்துப் பாருங்கள்.
நூற்றாண்டுகளாக
நிழல்தந்த ஆலமரம்
வேரிழந்து விழுந்து விட்டது
வேகப் புயற்காற்றால்
பறவைகள் விழுந்தன 
மின்கம்பங்கள் செடிகளாய் சுருண்டன அனாதரவான உலகின் ஓலம் 
தூள்தூளாகித் தண்ணீரைத் தழுவி 
நாம் அறியாத 
மரணத்தின் தீவுகளை அடைகின்றது 
ஆதரவற்ற பறவையின் சிற்குகளென 
கண்ணிமைகள் சிறகடித்தன
  
மனிதன், பறவை மற்றும் மிருகம் 
மரணத்தின் முன் 
தலைகளைத் தொங்கப் போட்டு 
ஒரே மாதிரி நின்றன
  
பிணங்களை அகற்றிச் சுத்தம் செய்ய 
போதுமான காகங்களும் 
கழுகுகளும் 
வல்லூறுகளும் 
அங்கே இருக்காது 
ஆனாலும் 
காண்ட்ராக்டர்கள் உள்ளனர் 
அவர்கள் நாட்டுக்குச் 
சேவை செய்வார்கள் 
வீடில்லா பிணம் 
கேள்வி கேட்காது
  
என்றாவது ஒருநாள் 
இந்த மலட்டு நிலங்கள் உழப்பட்டால் 
மண்டை ஓடு ஒன்று தோன்றி சிரிக்கும்.  

மொத்தம் 28 பக்கங்களே கொண்ட இந்த மரக்குதிரை கவிதைத் தொகுப்பை நந்தினி பதிப்பகம் தமிழில் 2001ல் வெளியிட்டது.  தமிழில் ஜீவன் மொழி பெயர்த்திருக்கிறார். கவிஞர் உதயசங்கர் வெளிக்கொண்டு வருவதில் உதவி செய்திருக்கிறார். நண்பர் மாரீஸ்தான் வடிவமைத்திருக்கிறார். புத்தகம் கிடைக்குமிடம் என கீழ்க்கண்ட முகவரி தரப்பட்டிருக்கிறது.

தமிழோசை பதிப்பகம்
797E  ஸ்ரீராம் மோகன் வணிக வளாகம்
சக்தி ரோடு
காந்திபுரம்
கோயம்புத்தூர் -641 012 
 

“நாட்டில் பிறமொழிகளில் நடப்பதை நாம் தெரிந்திட வேண்டும். மொழிபெயர்ப்புகள் அவசியம். நாம் மற்றவர்களோடு தொடர்பு கொண்டு மற்றவர்களை அறியாவிட்டால் எதிர்காலத்தை பார்க்க முடியாது” என்கிறார் நக்னமுனி.    

அந்த வழியிலேயே நாம் நக்னமுனியை தெரிந்து கொள்வோம். 

Comments

12 Comments

வருகைக்கு நன்றி.

கமெண்ட் செய்கிறவர்கள் Anonymous, Name/Url, Google Account, Name/Url, Google Account மூலம் கமெண்ட் செய்யலாம்.

1) முடிந்தவரை Google Account மூலம் கமெண்ட் செய்யுங்கள்.

2) இல்லையென்றால் Name/Url மூலம், பேரை மட்டுமாவது குறிப்பிட்டு கமெண்ட் செய்யுங்கள்.

3) Anonymous மூலம்தான் கமெண்ட் செய்ய முடியுமென்றால், கமெண்ட்டில் கீழே உங்கள் பேரை தயவு செய்து குறிப்பிடுங்கள்.

நன்றி.

- தீராத பக்கங்கள்
  1. \\"இந்தக் கவிதைகள் உங்களை என்ன செய்கின்றன?"\\

    நிறைய யோசிக்க வைக்குது

    என்ன செய்து விட முடியுமென்று.

    ReplyDelete
  2. \\வாழ்க்கையை விட
    ஒலியை விட
    வேகத்தை விட
    பெரிதான மௌனம் இருக்கிறது
    பிரபஞசம் முழுவது விரிந்துள்ள
    அந்த மௌனம்
    பிணத்தின் கண்களில் தங்கியுள்ளது \\

    மிகவும் அருமை.

    ReplyDelete
  3. யாருடைய கவிதைங்க இதெல்லாம்.. அதுவும் முதல் கவிதை மிகப் பிடித்திருக்கிறது.

    ReplyDelete
  4. Theriyum
    Enakku theriyum
    you only introduced this great poet to me through your wrappers:
    Nagna Muni...

    you are again proving different..
    with regards

    svv

    ReplyDelete
  5. உண்மைதான் மாதவ். அபாரமாக, எளிமையாக, வலியுடன் இருக்கு. முதல் கவிதை அருமை.

    //அந்த மௌனம்
    பிணத்தின் கண்களில் தங்கியுள்ளது //
    சிலீர் என்கிறது.

    போலவே //உண்மையைச் செவி மடுக்கும்
    காதுகளைத் தேடிக் கொண்டே இருப்பேன்//
    என்ற வரிகளும் நிறைய சொல்கின்றன.

    சீக்கிரம் சொல்லுங்கள். அப்போ கடைய மூட வேண்டியதுதானா?

    அனுஜன்யா

    ReplyDelete
  6. திகைக்க வைக்கின்றன, ஏங்க வைக்கின்றன, அச்சுறுத்துகின்றன, ஆனாலும் நம்பிக்கை அளிக்கின்றன... இந்த அளவு சிந்திக்கும் மனிதர்களும் நம்மிடையே இருப்பதை உணரும்போது.

    ReplyDelete
  7. நட்புடன் ஜமால்!

    நிறைய யோசிப்போம். நீங்கள் குறிப்பிட்ட கவிதை வரிகள் என்னை மிகவும் தொந்தரவு செய்தவை.

    ReplyDelete
  8. சுந்தர்!

    கவிஞரை இன்று பதிவில் அறிமுகம் செய்து விட்டேன்.

    ஞானப்பால் அறிந்த சமூகம், பிளாஸ்டிக் பால் அறிந்திருக்காதுதான்.

    அந்த வார்த்தையிலிருந்து எட்டு வருடங்களாக விடுபடாமல் இருக்கிறேன்.

    ReplyDelete
  9. வேணு!

    ஏன் இந்த அவசரம்....வருகைக்கு நன்றி.

    ReplyDelete
  10. அனுஜன்யா!

    சொல்லிவிட்டேன்.
    அதுசரி ... அதென்ன //அப்போ கடைய மூட வேண்டியதுதானா? //..?

    ReplyDelete
  11. தீபா!

    உண்மையைச் செவி மடுக்கும் காதுகள் நம்மிடம் இருக்கின்றன.
    நம் யாவரையுமே இந்தக் கவிதைகள் எதோ ஒரு அவஸ்தைக்குள்ளாக்குகின்றன.

    ReplyDelete
  12. ENTHA KAVITHAIGAL ENAI MIGAUM ENNGA VAIKINRANA ANALUM NAMPIKAIUDAN.

    ReplyDelete

You can comment here