டைகிரிஸ் அமைதியாக ஓடவில்லை

 

கைகால்கள் கட்டப்பட்ட புறாவின் மீது
மதயானைகளைக் கொண்டு யுத்தம் தொடுக்கச் சென்றான் அவன்.
 
மண்ணில் தன் அலகுகளால் கீறி
அடிபணியமறுத்த அந்த எளிய பறவைதான்
உலகையே அழித்துவிடப் போவதாக அச்சுறுத்தினான்.
 
வெடித்துச் சிதறிய குழந்தைகளின் ஈனக்குரல்களும்,
நெஞ்சிலடித்துக் கதறிய தாய்களின் வானம் நோக்கிய கேவல்களும்,
குருதி சிந்திய அப்பாவி மனிதர்களின் இதயத் துடிப்புகளும்
அந்தப் புறாவின் தொண்டையில் கடைசியாய் அசைந்து கொண்டிருந்தன.
 
கழுத்தை நெறித்துக் கொன்ற புறாவை
புதைத்த இடத்தில் தனது ஷூக்களை வைத்து விட்டு
இதோ இங்கே ஜனநாயகம் பூத்துவிட்டது என மார்தட்டினான்
வண்ணத்துப் பூச்சிகளை வாயில் கவ்விய
பூனையின் கண்களை கொண்டிருந்த அவன்.
 
புறாவின் இறகொன்று
காற்றில் அலைந்து சென்று விழுந்த
நதியின் நீரைப் பருகிய ஒருவர்
கைகளில் இரண்டு ஷூக்களோடு எழுந்து வந்தார்.
 
மீதமிருக்கும் இறகுகள் மண்ணிலிருந்து  
நதியை நோக்கி மெல்ல ஊர்ந்து கொண்டிருக்கின்றன.

Comments

8 Comments

வருகைக்கு நன்றி.

கமெண்ட் செய்கிறவர்கள் Anonymous, Name/Url, Google Account, Name/Url, Google Account மூலம் கமெண்ட் செய்யலாம்.

1) முடிந்தவரை Google Account மூலம் கமெண்ட் செய்யுங்கள்.

2) இல்லையென்றால் Name/Url மூலம், பேரை மட்டுமாவது குறிப்பிட்டு கமெண்ட் செய்யுங்கள்.

3) Anonymous மூலம்தான் கமெண்ட் செய்ய முடியுமென்றால், கமெண்ட்டில் கீழே உங்கள் பேரை தயவு செய்து குறிப்பிடுங்கள்.

நன்றி.

- தீராத பக்கங்கள்
  1. இந்நிகழ்ச்சி நடந்த தினமே உங்கள் வலைப்பக்கத்தை ஆவலோடு திறந்தேன். இது பற்றீய உங்கள் பதிவுக்காக.
    புறாவின் இறகுகள் என உருவகப்படுத்தியிருப்பது அருமை.

    ReplyDelete
  2. ''Democracy''>>>having more meanings, can be annihilated at any place,anytime and anybody..Using "democracy" became a fashion and conveniant word to hide their mistakes sometime..Dont you witness such a "annihilation"of democracy on 21 st evening December at Chennai?

    "Inqulab Democracy"
    -vimalavidya@gmail.com

    ReplyDelete
  3. தீபா!


    டைகிரிஸ் தாலாட்டிய பாக்தாத்தின் வீழ்ச்சி நமது காலத்தின் சோகம் நிறைந்த பக்கமாகும்.

    ஆதியில் கடவுள் பூமியை படைத்தபோது, நதியின் நீர்த்திவலைகளின் மீது கடவுளின் ஆவி அசைந்து கொண்டிருந்ததாம். கடவுளின் ஆவியைவிட சுதந்திரத்தின் தாகம் என்பது உன்னதமானது என்று நினைக்கிறேன்.

    ReplyDelete
  4. விமலாவித்யா அவர்களுக்கு!

    புரட்சியென்னும் வார்த்தை இங்கு எப்படியெல்லாம் இழிவு படுத்தப்படுகிறதோ, அதே கதிதான் ஜனநாயகத்திற்கும் நேர்கிறது. நாம் அவைகளை இன்னும் அழுத்தமாக ஒங்கி ஒலிக்கத்தான் வேண்டும்.

    ReplyDelete
  5. //மீதமிருக்கும் இறகுகள் மண்ணிலிருந்து நதியை நோக்கி மெல்ல ஊர்ந்து கொண்டிருக்கின்றன//

    அருமையான வரிகள் வலியை ஏற்படுத்தும் வரிகள், கண்டிப்பாக விரைவில் மீதமுள்ள இறகுகள் நதியை அடையும்..

    தோழமையுடன் தம்பி

    முகமது பாருக்

    ReplyDelete
  6. ///வெடித்துச் சிதறிய குழந்தைகளின் ஈனக்குரல்களும்,
    நெஞ்சிலடித்துக் கதறிய தாய்களின் வானம் நோக்கிய கேவல்களும்,
    குருதி சிந்திய அப்பாவி மனிதர்களின் இதயத் துடிப்புகளும்////

    வலிநிறைந்த வரிகள்...

    இந்நிகழ்ச்சி ஏலவே தீர்மானிக்கப் பட்டதாய் இருக்க வாய்ப்பில்லை என நினைக்கிறேன்.இத்தனை கொடூரத்தின் பின்னரும் ஏகாதிபத்தியத்துக்கே உரிய கர்வத்தோடு அவர் ஆற்றிய உரை எந்த பண்பட்ட மனிதரையும் ஆவேசம் கொள்ளச்செய்திருக்கும்....

    ///மீதமிருக்கும் இறகுகள் மண்ணிலிருந்து
    நதியை நோக்கி மெல்ல ஊர்ந்து கொண்டிருக்கின்றன. ///

    நம்பிக்கை தருகிறது...

    நல்லதொரு படைப்பு

    ReplyDelete
  7. அன்புத் தம்பி முகமது பாருக்!

    வருகைக்கும், கருத்துக்கும் நன்றி.

    ReplyDelete
  8. தங்கராசா ஜீவராஜ்!

    //இத்தனை கொடூரத்தின் பின்னரும் ஏகாதிபத்தியத்துக்கே உரிய கர்வத்தோடு அவர் ஆற்றிய உரை எந்த பண்பட்ட மனிதரையும் ஆவேசம் கொள்ளச்செய்திருக்கும்....//

    நிச்சயமாய்...

    ReplyDelete

You can comment here