கிளிஞ்சல்கள் பறக்கின்றன (கவிதைத் தொகுப்பு)
எழுதி, எழுதி அழித்துக்கொண்டே இருக்கின்றன அலைகள். கொந்தளிப்பு, குதூகலம் எல்லாம் அடங்கமாட்டாமல் தத்தளித்துக் கிடக்கிறது. பரவசமான ஏகாந்தமும், தனிமை அடர்ந்த அமைதியும் அரவமில்லாமல் தழுவுகிறது. இழப்பின் குரலாய் காற்று இரைகிறது.
பிரம்மாண்ட நீர்ப்பரப்பில் கால் நனைக்கும் குழந்தைகளாய் யாவரும் ஒடியாடிக் கொண்டு இருக்கின்றனர். சிரிப்புகளும், கண்ணீரும் கடற்கரையெங்கும் கிளிஞ்சல்களாய் இறைந்து கிடக்கின்றன. எல்லாவற்றிலும் மனிதக் குறிப்புகளை ரகசியமாய் எழுதிய நீரின் வரிகள் அழியாமல் ஒடிக்கொண்டு இருக்கின்றன. மணலில் அளையும் கைகளிடம் அவை முறையிட்டுக் கொண்டே இருக்கின்றன. யாராவது ஒருவர் அறிந்தால் போதும், அவைகள் பறந்துவிடக் கூடும். கவிதைகளுக்கு அப்படி ஒரு மகத்துவம் இருக்கிறது.
வலைப்பரப்பும் இப்படியான ஒரு கடற்கரைதான். அலைகள் நடமாடும் கவிதானுபவம் அங்கும் நிகழ்ந்து கொண்டு இருக்கிறது. என் சிறுகைகளால் அள்ள முடிந்தவற்றை மட்டும் எடுத்து இங்கே பறக்க விட்டு இருக்கிறேன்.
தரையெங்கும் ஈரம் சுரந்தபடி கவிதைகள் சுவாசித்துக்கொண்டு இருக்கின்றன என்பது நினைவில் உறுத்திக்கொண்டு இருக்கிறது.
உள்ளடக்கம்
என் புதிய அறையின் சித்திரம்
மண்குதிரை
அத்துவான நினைவுகள்
காமராஜ்
கப்பல்காரி
அய்யனார்
ஓடிப்போனவன்
என்.விநாயகப்பெருமாள்
கவிதைத்தொகுப்பு வெளியிடுதல்
கென்
வீடு
ஜ்யோவ்ராம் சுந்தர்
இரயில் பயணம்
கே.பாலமுருகன்
இங்குபேட்டர் உலகம்
நேசமித்ரன்
குலத்தொழில்
அனுஜன்யா
தொட்ட மழை விட்ட மழை
’அகநாழிகை’ பொன்.வாசுதேவன்
நுகத்தடி பூட்டிய
வடகரை வேலன்
நிகழ்ந்து விடுமோ
வேல்ஜி
திண்ணையின் கதை
அமுதா
புறாக்கள் உதறும் சுதந்திரம்
எஸ்.வி.வி.வேணுகோபாலன்
நேற்றைய மழை
உழவன்
கையளவு
காயத்ரி
நோவா
சந்தனமுல்லை
மிச்சமிருக்கிறது
கதிர்
முடியாத கதை
கார்த்திகைப் பாண்டியன்
நகரத்துப் பூக்கள்
உமா கதிர்
மஞ்சள் நிறத்தொரு கண்
சேரல்
சத்தங்கள்
அமிர்தவர்ஷிணி அம்மா
உறக்க விதி
நந்தா
நடுத்தரங்களின் விளிம்பு...
தமிழன் கறுப்பி
நெய்தல் நினைவுகள்
நவீன்
முகம்வழி நுரைத்தொழுகும் சூனியம்
நிவேதா
கவிதை உறவு
வால்பையன்
காலச்சுவடுகள்
பாலாஜி
நின்ற அருவி
பிரவின்ஸ்
எப்படி எப்படியோ
பெருந்தேவி
அறையில்
வேல்கண்ணன்
நிறங்களின் ஊடலையும் மனம்
மிஸஸ் டவுட்
இலையுதிர்க் காட்டுமரங்கள்
சென்ஷி
நிகழின் கணங்கள்
முபாரக்
சக்திவேலும் சாவிகளும்
உமாஷக்தி
கண்ணாடிக் கோப்பைகளும் சில பிரியங்களும்
லாவண்யா
கலர்
ஆதிமூலக் கிருஷ்ணன்
'போல்'களின்றி
ஜெகதீசன்
குகைகளில் முடியும் கனவுகள்
ஜோ
நேயன் விருப்பம்
செல்வேந்திரன்
கலைந்து கொண்டேயிருக்கும் வீடுகள்
அன்புடன் அருணா
குண்டுகளால் வீழ்த்தப்பட்ட குழந்தைகள்
மாதவராஜ்
மூன்று காலங்கள்
பா.ராஜாராம்
பறவை எழுதிய இறகு
ராகவன்
தொடக்கப்பள்ளி
ஹேமா
அவகாசம்
ரிஷான் ஷெரிப்
திருவினை
யாத்ரா
எல்லைக் கோட்டில் தடுக்கப் பட்டவள்
ஃபஹீமாஜஹான்
ஆதிரை என்றொரு அகதி
தமிழ்நதி
கடந்து போனது
தண்டோரா
தங்கள் கவிதைகளை வெளியிட அனுமதித்த பதிவர்களுக்கும், இம்முயற்சிக்கு உறுதுணையாக இருந்த அத்தனை நல்ல உள்ளங்களுக்கும், வம்சி புக்ஸுக்கும் எனது நன்றிகள்.
இந்தப் புத்தகம் சென்னை புத்தகக் கண்காட்சியில், (வம்சி புக்ஸ்: கடை எண்:214) கிடைக்கும்!
பெருவெளிச் சலனங்கள் (வலையுலகில் அனுபவங்களின் தொகுப்பு)
பல்லாயிரக்கணக்கான அறைகள் கொண்ட ஒரு பெரும் கட்டிடத்தின் ஒரு அறையில் நாம் தங்கியிருப்பது போன்ற உணர்வை இந்த வலைப்பூக்கள் ஏற்படுத்தும். பக்கத்து வீட்டில் இருக்கும் காமராஜும்,, சென்னையில் இருக்கும் அமிர்தவர்ஷிணி அம்மாவும், பம்பாயில் இருக்கும் அனுஜன்யாவும், துபாயில் இருக்கும் கென்னும், மொரிசியசில் இருக்கும் மண்குதிரையும் அந்தக் கட்டிடத்தில்தான் இருப்பார்கள். ஒவ்வொருவருக்கும் ஒரு அறை. ஒருவருக்கொருவர் பழக சில காலம் ஆகும். பழகிவிட்டால் தூரத்து அறைகளில் இருந்தாலும், பக்கத்து அறைகளில் இருந்தாலும் ஒரே அறைபோல் ஆகி விடுகிறது. சிலநேரங்களில் காம்பவுண்டு வீடுகள் மாதிரியும் இருக்கின்றன. சில நேரங்களில் அடுக்கு மாடி வீடுகள் போலவும் இருக்கின்றன.
தாளிடப்படாத அறைகளுக்குள்ளிருந்து வெளிப்படும் குரல்கள் காற்று வெளியில் தெறிக்கின்றன. விரியும் வளையங்களின் அடுக்குகளில் அவரவர் வாழ்வின் கணங்கள் மிதக்கின்றன. அன்பும், காதலும், சோகமும் தீராமல் கரைகின்றன. பெருவெளியின் சலனங்கள் மனிதருக்கு எளிதில் புலப்படுவதில்லை. உள்ளங்கையில் அள்ளிப் பார்த்தால் அவரவர் ரேகைகளே தெரிகின்றன.
மரக்கதவை வாயில் நீர் வடிய கடிக்கும் குழந்தையாகிப் போகிறீர்கள். வீட்டுச் சுவர்களிலும், பள்ளிப் பாடபுத்தகங்களிலும் ஒளிந்திருக்கும் ஒவியர்கள் வெளியே வருகிறார்கள். ஐஸ் வண்டிக்காரன் உங்கள் வீட்டருகே நின்று குளிர்ந்த பால்யத்தை குச்சிகளில் வைத்து உங்களிடம் நீட்டுகிறான். ஆகாய விமானத்தை அண்ணாந்து பார்க்க வீதிக்கு வருகிறீர்கள். அதிசயம் பூத்த மரங்களில் பின்பு பிஞ்சுகளும், காய்களும் பிடிக்கின்றன. காதல் வயப்பட்ட மனதின் ரகசியங்களை, அந்த மரத்தில் வந்தமரும் பறவைகள் பேசுகின்றன. ரணம், சுகம், அவஸ்தை, கனவு, சுவராசியம் எல்லாம் பனிபோல மரத்தை குளிப்பாட்டுகின்றன. இவற்றின் ஊடே காலம் நகர்ந்திடும் அனுபவம் பருவங்களாய் கழிகின்றன. இலைகள் உதிர்ந்த வெறுமை பின்னர் அலைக்கழிக்கிறது. தனிமை நிழலாய் சுற்றி சுற்றி மிதக்கிறது. பெருவெளியின் சலனங்களுக்கு மரங்கள் தலையசைத்துக் கிடக்கின்றன.
இந்தத் தொகுப்பு இப்படியாகத்தான் இருக்கிறது.
உள்ளடக்கம்:
எழுத்துக்களின் ஆட்டம்
மாதவராஜ்
குளிர் நினைவுகள்
அய்யனார்
“வரக் காப்பியும் கீழ் கதவும்”-1970கள்-ஸ்காப்ரோ தோட்டம்
கே.பாலமுருகன்
மாரி என்கிற மொட்ட தாத்தா
அண்ணாமலை
ஊஞ்சலாடும் நினைவுகள்
அமுதா
அலையில் நீந்தும் மனவெளி (அ) அவஸ்தையின் ரசிகை
ஏக்நாத் (ஆடுமாடு)
உப்பு
அமிர்தவர்ஷிணி அம்மா
நான் பியர் குடித்து வளர்ந்த கதை
சுரேஷ் கண்ணன்
பிரியா பி.ஈ.,
சந்தனமுல்லை
ஆகாசக் கனவு
உண்மைத்தமிழன்
ரயில்
கார்த்திகைப் பாண்டியன்
சிறிது காற்று
ஆ.முத்துராமலிங்கம்
வாழ்வைச் சுமத்தல்
காயத்ரி
ஒரு முத்தம்
நிர்மலா
பாலைஸ்! கோனைஸ்! கப்பைஸ்!
வத்றாப்பு சுந்தர்
நகைப்புக்காக அல்ல..
தீபா
ஆணி வேர்களும், சல்லி வேர்களும்
சேரல்
சமுத்திரத்தில் மீன்களை வரைபவன்
வழிப்போக்கன்
ஒரு இரவின் பதிவு
தமிழ்நதி
சாமக்கோடாங்கி
காமராஜ்
கதைகளை தின்பவன்
செல்வேந்திரன்
தெருக்கள் என்னும் போதிமரம்
ச.தமிழ்ச்செல்வன்
தங்கள் பதிவுகளை வெளியிட அனுமதித்த பதிவர்களுக்கும், இம்முயற்சிக்கு உறுதுணையாக இருந்த அத்தனை நல்ல உள்ளங்களுக்கும், வம்சி புக்ஸுக்கும் எனது நன்றிகள்.
இந்தப் புத்தகம் சென்னை புத்தகக் கண்காட்சியில், (வம்சி புக்ஸ்: கடை எண்:214) கிடைக்கும்!
மரப்பாச்சியின் சில ஆடைகள் (சிறுகதைத் தொகுப்பு)
எண்பதுகளில் ஜோல்னாப்பைக்குள் புத்தகங்களை வைத்துக் கொண்டு, இரவு பகல் தெரியாமல் அலைந்து திரிந்த தருணங்கள் ஞாபகத்துக்கு வருகின்றன. ரோட்டோர நியான் விளக்குகளிலிருந்து அவை இப்போதும் நினைவுகளாக கசிந்து கொண்டு இருக்கின்றன. தமிழ்நாட்டில் ஒரு பட்டாளமே அப்படி இருந்தது. கோவில்பட்டியில் இருந்தது. சாத்தூரில் இருந்தது. மதுரையில், சென்னையில், திருவண்ணாமலையில் என்று அங்கங்கே பரவியிருந்தது. சிங்கிஸ் ஐத்மாத்தாவையும், காண்டேகரையும், ஜே.ஜே.சில குறிப்புகளையும் பற்றி பேசித் தள்ளிக்கொண்டு இருந்தார்கள். அவ்வப்போது கதையும் எழுதிக்கொண்டு, வாழ்வை மிக நம்பிக்கையோடு எதிர்கொள்ளத் துவங்கிய வசீகரமான காலம். இரவெல்லாம் டீ குடித்துக் கொண்டு, செகாவிலும், தஸ்தாவஸ்கியிலும் மூழ்கிப் போவோம். மசூதியின் பாங்கிச் சத்தத்தோடு காகங்கள் கரையும் வேளையில், மீண்டும் ஒரு டீ குடித்துவிட்டு குளிப்பதற்கு ஆற்றுக்குச் செல்வோம். ஆறு இப்போது வறண்டு கிடக்கிறது.
இப்போது அப்படியொரு சூழல் இருக்கிறதா, நம் இளைஞர்களுக்குள் என்ன ஓடிக்கொண்டு இருக்கிறது என்ற கேள்விகள் அவ்வப்போது வந்து செல்லும். வலைப்பூக்கள் இந்தக் கவலையை பெருமளவில் குறைத்திருக்கின்றன. தேடிக்கொண்டிருந்த மனிதர்கள் இங்கே இருக்கிறார்கள். மிக சீரியஸாக அவர்களும் இரவெல்லாம் உட்கார்ந்து பேசிக்கொண்டு இருக்கிறார்கள். ஒரு வித்தியாசம். டில்லியில் இருப்பவரும், அமெரிக்காவில் இருப்பவரும், ஈரோட்டில் இருப்பவரும் அருகருகே உட்கார்ந்து பேசிக்கோண்டு இருக்கிறார்கள். இலக்கியம், சினிமா, தங்கள் வாழ்க்கை, எதிர்காலம், கனவுகள், சமூகம் என நீளும் உரையாடல்கள் இலக்கியத் தொனியும் கொண்டிருப்பது மிகுந்த சந்தோஷமளிக்கிறது.
இலக்கியமும், சமூகம் குறித்த பார்வைகளும் கொட்டிக்கிடக்கும் பெருவெளிதான் இது. இந்த உலகத்திற்குள் நீங்கள் உங்கள் வீட்டிலிருந்தபடியே, விரல்நுனியால் நுழைந்திட முடியும். இணையமும், வலை உலகமும் இன்று உரையாடல்கள் நடக்கும் பெருவெளியாக பரிணாமம் கொண்டிருக்கின்றன. பத்திரிக்கைகள், புத்தகங்களைத் தாண்டி எழுத்துக்களை பதிவு செய்கிற இன்னொரு தளமாக இன்று இணையதளம் பரிணமித்திருக்கிறது. இங்கே யாரும் ஒருவருக்கொருவர் அறிமுகமாயிருக்கத் தேவையில்லை. கருத்துக்களும், சிந்தனைகளுமே முக்கியத்துவம் பெறுகின்றன. புதிதாக எழுத வருகிறவர்கள், பத்திரிக்கையில் பிரசுரமாகாதா என ஏங்குபவர்கள், பெண்கள், கணணித்துறையில் வேலை பார்க்கும் இளைஞர்கள் மிக அதிகமாக இந்த வலைப்பக்கங்களை பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த வலைப்பக்கங்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு மரப்பாச்சி பொம்மையாகி இருக்கின்றன. குழந்தைகள் தங்கள் மரப்பாச்சி பொம்மைகளிடம் பேசுகின்றன. பொட்டு வைக்கின்றன. சின்னச் சின்னத் துணிகளால் ஒரு ஓவியனைப் போல ஆடை அணிவிக்கின்றன. அழகு பார்க்கின்றன. கொஞ்ச நேரத்தில் அடுத்த ஆடை. அப்புறம் இன்னொரு ஆடை. சலிப்பில்லாமல் விளையாட்டு தொடர்ந்து கொண்டே இருக்கிறது. களையும் ஒவ்வொரு ஆடையும் ஒரு கதையாகிறது. கதை சொல்லுகிறவன் ஒரு குழந்தைதான் எப்போதும்.
இங்கே மனிதர்கள் குழந்தைகளைப்போல திளைக்கின்றனர்.....
உள்ளடக்கம்:
1. கடவுள் நடிக்கும் இன்னும் பெயரிடப்படாத புதிய படம்
சென்ஷி
2. கூனயன்
ஏக்நாத் (ஆடுமாடு)
3.நத்தை
அ.மு.செய்யது
4.உளவு
அமிர்தவர்ஷிணி அம்மா
5.சாமியார் செத்துப் போனார்
அய்யனார்
6.ஆலம்
நிலா ரசிகன்
7.ஆள் மாறாட்டம்
ஜ்யோவ்ராம்சுந்தர்
8.காலத்தின் வாசனை
பா.ராஜாராம்
9.இ.பி.கோ 307 அல்லது கொலை முயற்சி
கென்
10.நட்சத்திரங்களுக்கிடையில் ஒரு கதைசொல்லி
தமிழ்நதி
11.பட்டாம்பூச்சி பார்த்தல்
முரளிகுமார் பத்மநாபன்
12.மூன்றாம் கை
நந்தா
13.அய்யனார் கம்மா
நர்சிம்
14.முற்றுப்புள்ளி
ரிஷான் ஷெரிப்
15.பதுங்குகுழி
செல்வேந்திரன்
16.சிறுபிள்ளைகள் என்னருகே வர தடைசெய்யாதிருங்கள்
காமராஜ்
17.இன்று வந்தவள்
மாதவராஜ்
தங்கள் பதிவுகளை வெளியிட அனுமதித்த பதிவர்களுக்கும், இம்முயற்சிக்கு உறுதுணையாக இருந்த அத்தனை நல்ல உள்ளங்களுக்கும், வம்சி புக்ஸுக்கும் எனது நன்றிகள்.
இந்தப் புத்தகம் சென்னை புத்தகக் கண்காட்சியில், (வம்சி புக்ஸ்: கடை எண்:214) கிடைக்கும்!
மாதங்களில் அவர்கள் மார்கழி!
சில நாட்களுக்கு முன்பு அப்பா சொன்னார்கள், மார்கழி நேற்று பிறந்து விட்டது’ என்று. கனத்து அமைதியாகிப் போனேன். இந்த சில நாட்களில் வீடு, மனைவி, மக்கள் எல்லோருமே என்னைவிட்டு விலகிப்போயிருந்தார்கள். வெவ்வேறு இடங்களில் தங்கி வெவ்வேறு இரவுகளையும், காலைகளையும் சுவாரசியமற்று விழுங்கியபடி நகர்ந்து கொண்டு இருக்கிறேன் என்பதை அப்பாவின் குரல் உணர்த்துவது போலிருந்தது. எழுதுவது, வாசிப்பது அற்றுப்போய், ’தொடர்பு எண்களுக்கு வெளியே’ நிற்கிறேன். தூக்கமற்று, வெப்பம் கொண்டு கழிந்த இந்த நாட்களில் குளிர் பொருட்டாயிருக்கவில்லை. எதிலாவது மூழ்கிவிட்டால், கவனம் முழுவதையும் அதில் மட்டும் செலுத்தி விடுகிறவனாகவே இந்த நாற்பத்தெட்டு ஆண்டுகளும் என்னைக் கடந்திருக்கின்றன.
அம்மாவின் போட்டோவின் முன்னால் நின்ற சமயம் கண்கலங்கின. மார்கழியை மறந்தால், அம்மாவை மறந்ததாகும்!
சமையலறையிலிருந்து கதவு இடுக்கின் வழியே, நாங்கள் படுத்திருக்கும் அறையினுள் வெளிச்சம் லேசாய் கசிந்திருக்கும். “கைத்தல நிறை கனி அப்பமொடு அவல் பொரி..” அம்மாவின் குரலிசைந்து மெல்லிதாய் கேட்கும். கருவறைக்குள்ளிருந்து அறிந்துகொண்ட முதல் நினைவு போல இந்தக் காட்சிதான் அம்மாவை நினைக்கும்போதெல்லாம் வருகிறது. “யப்பூ, எந்திக்கிறியா. வென்னி போட்டு வச்சிருக்கேன்” என்று பூப்போல எழுப்புவார்கள். ‘செல்லாத்தா... எங்க மாரியாத்தா..’ பாடல் வரிகள் மரியம்மன் கோவில் வேப்பமரத்து ஸ்பீக்கர் செட்டிலிருந்து ஊர்முழுக்க சரம்சரமாய் இறங்க வீடுகள் கிறங்கிப் போய் கிடக்கும். எவ்வளவு முரண்டு பிடித்தாலும் அமைதியான பிடிவாதத்தோடு குளிக்க வைப்பார்கள். கொஞ்ச நேரத்தில் தெருக்கோடியில் பஜனைக்கோவில் மணி, முரசுகளின் சத்தங்கள் கேட்க, நான் அப்பாவின் வெள்ளைத் துண்டை வேட்டி போல உடுத்துக்கொண்டு என் தம்பியோடும், தங்கையோடும் குளிரில் ஓடிக்கொண்டு இருப்பேன். ஈரம்சொட்டும் கூந்தலோடு அம்மா, ‘பஜனை வருவதற்குள் கோலம் போட வேண்டும்’ என வாசலில் புள்ளிகளை வைத்துக்கொண்டு இருப்பார்கள்.
புள்ளிகளிலிருந்து தவறி ஓடிய ஒரு கோலம் ஒன்று அம்மாவுக்குள் இருந்தது. அதை அம்மாவே வைத்திருந்தாலும் நாங்களும் சிலநேரங்களில் அறிந்துகொண்டோம். அம்மா பிறந்த பிறகுதான் தாத்தா செழிப்பானாராம். ஆறுமுகநேரிக்கும், தூத்துக்குடிக்கும் இடையே ஒடிய பஸ்களை தாத்தா வைத்திருந்தாராம். இசை, கதைப்புத்தகங்கள் என அம்மா செல்லமாக வளர்ந்தார்களாம். பட்டணத்தில் வியாபாரம் என்று அப்பாவுக்கு அம்மாவைத் திருமணம் செய்துவைக்க, நாங்கள் ஐந்து பேரும் வரிசையாக சென்னையில்தான் பிறந்தோம். வியாபாரம் நொடித்துப் போக, இருக்கும் நிலத்தை நம்பி ஊருக்கேத் திரும்பினோம். நடுநிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி, கல்லூரி என நாங்கள் கடந்து கொண்டு இருக்க, அம்மாவின் நகைகள், அப்பாவின் நிலம் எல்லாம் கரைந்து போயின. அம்மா எந்தப் பாட்டு பாடினாலும் அதில் துயரத்தின் பாகு கரைந்திருக்கும்.
வீடு முழுவதும் எங்கள் நண்பர்கள் வந்து அரட்டையடித்துக் கிடக்க, அம்மா சளைக்காமல் காபி போட்டுக்கொண்டே இருப்பார்கள். பணக்கஷ்டம் கடுமையாக வாட்டிய காலங்களிலும் ஆரவாரங்களுக்கும், சந்தோஷங்களுக்கும் குறைவிருக்காது. வேலை, திருமணம் என ஒவ்வொருவராய் பிரிந்து செல்ல, வீட்டின் ஒவ்வொரு மூலையிலிருந்தும் காலங்களை சேகரிக்கத் தொடங்கினார்கள். தனிமையில் பாடியபடி, செடிகளுக்குத் தண்ணீர் ஊற்றிக்கொண்டு இருந்தார்கள். ஆரம்பத்தில் சில நாட்கள் எழுதி, பிறகு உபயோகிக்காமல் விட்ட எங்கள் பழைய டைரிகளை எடுத்து வைத்துக்கொண்டு அம்மா பிள்ளையார் படங்களாய் வரைந்து கொண்டு இருப்பார்கள். சில நாட்களில் முக்கிய நிகழ்வுகளையும் எழுதி வைத்திருப்பார்கள். “இன்று என்னைப் பெத்த அம்மா என்னை விட்டுப் பிரிந்து போனார்கள்” என பென்சிலால் எழுதி வைத்திருந்த அம்மாவின் அப்படியொரு குறிப்பை எனது பழைய டைரியில் கண்டு, அம்மாவைக் கட்டிப்பிடித்து, தவித்துப் போயிருக்கிறேன்.
ஊரைவிட்டு வரவே மாட்டேன் என்று வைராக்கியத்துடன் இருந்த அம்மாவை கனிய வைத்தவன் என் இளைய மகன் நிகில். அவன் பிறந்த 2000ம் வருடத்திலிருந்து அம்மா என்னோடு சாத்தூரில் இருந்தார்கள். அவனைக் கொஞ்சுவதிலும், அவனுக்குக் கதை சொல்வதிலும் முதுமையை சிங்காரித்துக் கொண்டார்கள். அந்த சாக்கில், திரும்பவும் நான் குழந்தையாகிப்போனேன். அவ்வப்போது தங்கை, அண்ணன்கள் வீட்டுக்குச் சென்று, அங்கு நிகில் பற்றிய கதைகளாய் சொல்லிக்கொண்டே இருப்பார்கள். “ஆச்சி ஏன் இப்படி ஒரவஞ்சனை செய்றீங்க.... ஒங்க மகனுக்கு மட்டும் வேர்க்கடலை உடைச்சுக் கொடுக்கிறீங்க..” என அம்மாவிடம் என் மகள் செல்லமாய் முறைத்துச் சிரிப்பதில் அடங்காத சந்தோஷம் எனக்குண்டு. வீட்டு அலமாரியிலிருந்த அனேக புத்தகங்களில் அம்மாவின் ரேகைகளும், பார்வைகளும் படிந்திருந்தன. கு.அழகிரிசாமியின் கதைகள் முழுக்க படித்திருந்தார்கள்.
எங்கு சென்றாலும், அந்த வீட்டின் வாசல் அம்மாவுக்கு ஆனதாகிவிடும். அதுவும் மார்கழி என்றால், நாளை என்ன கோலம் போடுவது என்பதே அம்மாவின் சிந்தையாய் இருக்கும். தோட்டத்துச் செடிகளில் இருந்து நந்தியாவட்டை, செம்பருத்தி, தங்க அரளி எல்லாம் பறித்து கோலத்தில் வைத்து பூரித்துப் போவார்கள். இரத்தத்தில் உப்பு அதிகமாகி, அம்மாவின் சிறுநீரகத்தைப் பாதித்திருந்தது. கடைசிச் சில வருடங்கள் அம்மாவை திருநெல்வேலியில் இருக்கும் ‘கிட்னி கேர் செண்டருக்கு’ மாதாமாதம் அழைத்துச் சென்று கொண்டு இருந்தேன். கால்கள் வலிக்க வீடெல்லாம் தத்தி தத்தி நடந்தார்கள். எப்போதும் அப்பாவிடம் மல்லுக்கு நிற்கிற அம்மா, கசிந்துருகியதைப் பார்த்தேன் அப்போது. அண்ணன்கள், தங்கை எல்லோரும் அம்மாவிடம் தினம்தோறும் போனில் பேசினார்கள். தம்பி எங்கள் எல்லோரையும் விட்டுச் சென்றபின் அம்மா வாசலை மறந்தார்கள். மார்கழிகள் கவனிப்பாரற்றுப் போயின.
இரண்டு வருடத்துக்கு முந்தி, இதே மார்கழியில், அம்மாவுக்கு சுத்தமாய் முடியாமல் போனது. டயாலிசஸ் அடிக்கடி பண்ண வேண்டியதாயிற்று. 28நாட்கள் ஆஸ்பத்திரியில் நானும், என் தங்கையும் அம்மாவின் அருகிலேயேக் கிடந்தோம். ஹைதராபாத்தில் இருக்கும் மூத்த அண்ணனும், திருச்சியில் இருக்கும் இரண்டாவது அண்ணனும் இருமுறை வந்து பார்த்துவிட்டுச் சென்றார்கள். ஒருநாள் காலையில் ஃபிட்ஸ் வந்து, பிறகு கோமாவுக்குச் சென்று விட்டார்கள். கதறிக்கிடந்தேன். பெரிய பெரிய ஊசிகளுக்கும் அம்மாவிடம் எந்தச் சலனமும் இல்லை. ஒருநாள் இரவில், நிறைய ரம் சாப்பிட்டுவிட்டு அம்மாவின் அருகில் சென்று எதேதோ பேசினேன். “அம்மா, மார்கழி பிறந்துட்டு. எல்லாரும் கோலம் போடுறாங்கம்மா. மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளில்... பாட்டுப் பாடவாம்மா.... பஜனைக்கோயில்ல மணியடிக்காங்க... ” என உளறிக்கொண்டே இருந்தேன். அசையாத அம்மாவின் கண்களில் இருந்து நீர் வழிந்தது. “அம்மா.. அம்மா..” அரற்றினேன். ஐ,சியூவில் இருந்த நர்ஸ் என்னை வெளியேறும்படிக் கெஞ்சினாள். மூன்று நாட்களில் என்னைப் பெத்த அம்மா என்னை விட்டுப் பிரிந்து போனார்கள். அது 2007 டிசம்பர் 29ம் தேதி.
மார்கழியின் இந்த அதிகாலை ஊனையும், உயிரையும் நனைத்துக்கொண்டு இருக்கிறது. எல்லோரின் அம்மாவையும், எனக்குப் புரியவைத்தது எங்கள் அம்மாதானே!
மாதவராஜ் பக்கங்கள் - 18
வாசிப்பு அனுபவங்கள் பற்றி முன்னர் ஒருமுறை பதிவர் லேகா அவர்கள் அழைத்த தொடர் பதிவில் ‘பாட்டியில் குரலில் இருந்து விரியும் கதையுலகம்’ என தொடர்ச்சியான இரு பதிவுகள் எழுதியிருந்தேன். அதன் இறுதியில் இப்படி முடித்திருந்தேன்.
என்னோடு பால்ய காலத்தில் கதைகளை நோக்கி ஓடிவந்த என் தங்கை, இதே நேரம் தன் பையனின் அல்லது கணவனின் துணிமணிகளைத் துவைத்துக் கொண்டிருப்பாள். இரண்டு மாதங்களுக்கு முன்பு "இப்பல்லாம் புத்தகங்கள் படிக்கிறியா" என்று கேட்டபோது, சிரித்துக் கொண்டே "காபி சாப்பிடுறியா" என்று அவள் என்னிடம் கேட்டாள்.
இதைப்படித்துவிட்டு, உஷா அவர்கள் பின்னூட்டத்தில் வருத்தப்பட்டு கீழ்க்கண்டவாறு எழுதியிருந்தார்கள்.
இந்த வரிகள் மிகவும் வேதனையை தந்தன. உங்கள் தங்கை என்னும்பொழுது வயது நாற்பதுக்குள் இருக்கும் என்று நினைக்கிறேன். முன்பு போல இப்பொழுது வீட்டுவேலை சுமைகள் குறைவு. செல்வியும், கோலங்களும் பார்க்க நேரம் இருக்கும்பொழுது, தினசரியை புரட்ட ஆகும் பத்து நிமிட நேரமின்மை என்னால் ஒத்துக் கொள்ள இயலவில்லை. விலங்குகளை யாரும் போடவில்லை. விரும்பி அணிந்துக் கொண்டு பெருமைப்பட்டுக் கொண்டு இருக்கிறோம்.
உஷா அவர்களுக்கு பதிலாக எழுதியது இது:
வாய்ப்புகளையும், சூழலையும் நீங்கள் முதலில் புரிந்து கொள்ள வேண்டும். ஒரு சிற்றூரில் வசிக்கும் அவளுக்கு, வீட்டிற்குள் புத்தகங்கள் எப்படி வரும்? ஆனந்தவிகடனும், குமுதமும்தான் அவளுக்கு மிஞ்சிப் போனால் வாய்க்கின்றன.வாசிக்கிறவர்கள், அதைப் பகிர்ந்து கொள்கிறவர்கள் கூட இருக்கும்போது, அது குறித்த ரசனையும், விருப்பமும் இயல்பாக ஏற்படும். இருபது வருடங்களுக்கு மேலாக வேறொரு உலகத்தில் வாழ்ந்துவிட்டு, திரும்பவும், தனது விருப்பமான உலகத்தை மீட்டெடுப்பது, குடும்பத்தில் நமது பெண்களுக்கு மிகவும் அரிதான காரியம். விலங்குகளை யாரும் போடவில்லை, நாமே விரும்பி அணிந்து கொள்கிறோம். இதில் 'விரும்பி' என்பதை ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. தவிர்க்க முடியாமல் அணிந்து கொள்கிறோம் என்பது வேண்டுமானால் சரியாக இருக்கும்.
இதெல்லாம் நடந்து ஒரு வருடமாகிவிட்டது. இப்போது அதே தங்கை ‘சொல்லத்தான் நினைக்கிறேன்’ என வலைப்பக்கம் தொடங்கி எழுதவும் ஆரம்பித்து விட்டாள். இந்த காலத்திற்குள் என் வலைப்பக்கங்களை படித்து, கொஞ்சநாளில் பின்னூட்டமிடப் பழகி, இப்போது தனிப்பதிவுகளே எழுதிடும் அளவுக்கு முன்னேறிவிட்டாள். சந்தோஷமாகவும், ஆச்சரியமாகவும் இருக்கிறது.
தெலுங்கானா புயல் மையம் கொண்டு விட்டது. திருச்செந்தூரில் பண மழை பெய்து ஓய்ந்திருக்கிறது. நோபல் பரிசு வாங்கிய கையால், ஆப்கனுக்கு கூடுதல் படையனுப்ப ஒபாமா உத்தரவிட்டிருக்கிறார். சுற்றிப்படரும் செய்திகளில் கவனமற்று, எங்கள் வங்கி, எங்கள் பிரச்சினைகள், அதையொட்டிய தொழிற்சங்க நடவடிக்கைகள் என சுழன்று கொண்டு இருந்திருக்கிறேன்.
இப்போது கொஞ்சம் நிதானத்துக்கு வந்த மாதிரி இருக்கிறது. மொத்தம் சஸ்பெண்ட் செய்யப்பட்ட 50 பேர்களில், 46 பேருக்கு ஸ்டே ஆர்டர் கிடைத்திருக்கிறது. கோர்ட்டிலிருந்து ஆர்டர் கிடைக்கப்பெற்றவர்கள் பணிகளில் சேர ஆரம்பித்திருக்கிறார்கள். நிர்வாகம் அடுத்து என்ன செய்யக் காத்திருக்கிறதோ தெரியவில்லை. பதற்றமில்லாமல், எதிர்கொள்வது என சித்தமாயிருக்கிறோம்.
ரொம்ப நாளைக்குப் பிறகு நேற்று முழுவதும் வீட்டிலேயே இருந்தேன். போன்களின் அழைப்புகளும் பெரிதாய் இல்லை. எப்போதும் படிக்கிற வலைப்பக்கங்களை எட்டிப் பார்க்க முடிந்தது. நிறைய எழுதியிருக்கிறார்கள். நேரம் கண்டுபிடித்து படிக்க வேண்டும்.
பூக்களிலிருந்து வெளிவரும் புத்தகங்களுக்கு சென்னையில் வெளியீட்டு விழா நடத்த வேண்டும் என பவா செல்லத்துரை தொடர்ந்து சொல்லிக்கொண்டு இருக்கிறார். எழுத்தாளர்கள் ஜெயகாந்தன், எஸ்.ராமகிருஷ்ணன், பாலுமகேந்திரா போன்றவர்களோடு பதிவர்களையும் இணைத்து ஒரு நிகழ்ச்சிக்கு திட்டமிடலாம் என்று யோசனை தந்திருக்கிறார். மற்றவற்றையெல்லாம் வம்சி புக்ஸ் பார்த்துக் கொள்ளும் எனவும் உற்சாகப்படுத்துகிறார். பார்ப்போம்.
சென்னை புத்தகக் கண்காட்சியில் ’பூக்களிலிருந்து புத்தகங்கள்’!
நேற்று பவா செல்லத்துரை போன்செய்து ‘பூக்களிலிருந்து புத்தகங்கள்’ அச்சேறிவிட்டன என்றும், அதன் அட்டைப்படங்களை அனுப்பி வைப்பதாகவும் சொன்னார். இன்று அனுப்பியும் வைத்திருக்கிறார்.
கடந்த இரண்டு மூன்று வாரங்கள் எப்படி கடந்து போயின என்பதை யோசித்துப் பார்க்கும் இன்னும் நிதானம் வரவில்லை. இதுவரை 47 அலுவலர்களை எங்கள் வங்கி நிர்வாகம் சஸ்பெண்ட் செய்திருக்கிறது. அவர்களுக்கு நம்பிக்கையளிப்பதிலும், தொடர்ந்து போராட்டங்களை தீவீரப்படுத்துவதிலுமே கவனம் முழுவதும் இருக்கிறது.
இதற்கு இடையில் அவ்வப்போது நேரம் ஒதுக்கி, புத்தகங்களுக்கான பதிவுகளை தொகுத்து, முடிந்தவரை பதிவர்களுக்கு தெரியப்படுத்தி, யுனிகோர்டிலிருந்து செந்தமிழ் எழுத்துருக்களுக்கு மாற்றி, புரூப் பார்த்து பவா செல்லத்துரைக்கு அனுப்பி வைத்திருந்தேன். அவர் இப்போது, டிசம்பர் 30ம் தேதி தொடங்கும் சென்னை புத்தகக் கண்காட்சிக்கு, நமது புத்தகங்கள் வந்துவிடும் என சொல்லிவிட்டார். இன்னும் பலரது பதிவுகள் சேர்க்கப்படாமலிருக்கலாம். இன்னபிற பிழைகள்கூட ஏற்பட்டும் இருக்கலாம். சமீபகாலங்களில் எங்களுக்கு ஏற்பட்ட நெருக்கடிகளே காரணமாக இருப்பினும், நானே பொறுப்பேற்றுக் கொள்கிறேன்.
புத்தகக் கண்காட்சியில், வம்சி புக்ஸ்- புத்தகக் கடை எண் 214. வலைப்பதிவுகளிலிருந்து வெளிவரும் இந்தப் புத்தகங்களுக்கு ஆதரவு தாருங்கள்.
(சிறுகதைத்தொகுப்பு)
(கவிதைத் தொகுப்பு)
(அனுபவங்களின் தொகுப்பு)
(எனது சொற்சித்திரங்களின் தொகுப்பு)
வம்சி புக்ஸில் இருந்து வெளியாகும் அனைத்து புத்தகங்களுக்கு இங்கு சென்று பார்க்கலாம்.
பேயரசு செய்தால் பிணம் தின்னும் சாத்திரங்கள்
எந்தவித நியதிகளும், விதிகளுமற்று மூர்க்கத்தனமான தாக்குதல்கள் அரங்கேறிக்கொண்டு இருக்கின்றன. ‘எல்லா தர்மங்களும் எனக்குத் தெரியும், எல்லா நியாயங்களும் எனக்குத் தெரியும்’ என்று ஜனநாயகமும், சட்டமும் காலில் போட்டு மிதிக்கப்படுகின்றன. எங்கள் பாண்டியன் கிராம வங்கி நிர்வாகம் வெறிபிடித்து நிற்கிறது.
முத்துவிஜயன் அவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டது குறித்து சென்ற பதிவில் தெரியப்படுத்தி இருந்தேன். அதுகுறித்து வங்கி நிர்வாகத்திடம் பேசுவதென 9.12.2009 அன்று சென்றிருந்தோம். பேச்சுவார்த்தைக்கு பாண்டியன் கிராம வங்கி அலுவலர் சங்கத் தலைவராயிருக்கும் முத்து விஜயன் வரக்கூடாது என்று நிர்வாகம் தடை விதித்தது. அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டதால் அவர் பேச்சுவார்த்தைக்கு வரும் தகுதியை இழந்து விட்டாராம். நாங்கள் கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்தோம். அங்கேயே காலவரையற்ற உண்ணாவிரதம் இருக்கப் போவதாக தோழர்கள்.சோலைமாணிக்கமும், செல்வகுமார் திலகராஜும் உட்கார்ந்தனர். நிர்வாகம் காவல்துறையை அழைத்தது. தோழர்கள் இருவரையும் காவல்துறை 9.12.2009 இரவு 8 மணிக்கு கைது செய்து அழைத்துச் சென்றது. பிறகு விடுவிக்கப்பட்டனர்.
கொதிப்படைந்த அலுவலர்களும், ஊழியர்களும் Lighning Strike செய்ய, 10.12.2009 அன்று மொத்தமுள்ள 195 கிளைகளில், 120 கிளைகள் செயலற்றுப் போயின. அறுபது சதவீதத்திற்கும் மேல் ஊழியர்களும், அலுவலர்களும் வேலைநிறுத்தத்தில் பங்கெடுத்தனர். கால அவகாசம், திட்டமிட்ட ஆயுத்தங்கள் எதுவுமின்றி நடந்த இந்த போராட்டம் மகத்தான் வெற்றி பெற்றது.
தாங்கிக் கொள்ள முடியாத நிர்வாகம் கடந்த இரண்டு நாட்களாக தொடர்ந்து அலுவலர்களை சஸ்பெண்ட் செய்துகொண்டு இருக்கிறது. இந்த நிமிடம் வரை 14 தோழர்கள் சஸ்பெண்ட் ஆகியிருக்கின்றனர். மொத்தம் 39 பேரை சஸ்பெண்ட் செய்யப் போவதாக தகவல்கள் வெளியாகிக்கொண்டு இருக்கின்றன. சஸ்பென்சன் ஆர்டரில் எந்தக் காரணங்களும் முறையாகச் சொல்லப்படவில்லை.
டிசம்பர் மாதம் வங்கியின் முக்கால் வருடக் கணக்கு முடிக்கும் நேரம். இந்த நேரத்தில் மொத்தமுள்ள அலுவலர்களில் 10 சதவீதத்தினருக்கும் அதிகமானோரை சஸ்பெண்ட் செய்ய இருப்பது பெரும் கேலிக்கூத்து.
இதற்கிடையில், ஒரு சந்தோஷமான செய்தியுமுண்டு. தோழர்.முத்து விஜயன் அவர்களின் சஸ்பென்சன் ஆர்டரை நிறுத்திவைக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரை பெஞ்ச்சில் வழக்குத் தொடுக்கப்பட்டு இருந்தது. அதில் வெற்றி பெற்றிருக்கிறோம். Stay order கிடைத்திருக்கிறது.
இதற்கு முன்பு, ஒரு பத்திரிகையில் போராட்டம் குறித்து எழுதியதற்காக தோழர்கள் காமராஜும், அண்டோவும் சஸ்பெண்ட் செய்யப்பட்ட போதும், கோர்ட் அதற்கு stay order கொடுத்திருந்தது. இப்போது தோழர் முத்துவிஜயன் விஷயத்திலும் அப்படியே. இதற்குப் பிறகும் தொடர்ந்து அலுவலர்களை எந்தக் முறையானக் காரணங்களுமின்றி சஸ்பெண்ட் செய்யும் இந்த நிர்வாகத்தை என்னவென்று சொல்வது?
ஊழியர்களையும், அலுவலர்களையும் மரியாதையுடன் நடத்த வேண்டும், பெண் ஊழியர்கள் மீது பரிவு காட்ட வேண்டும், வங்கியை வெறும் நகைக்கடன் வங்கியாக மாற்றிடக் கூடாது என்று தொடங்கிய போராட்டம் இன்று பெரும் அடக்குமுறைகளை சந்தித்துக் கொண்டு இருக்கிறது.
வங்கியின் தலைமையகம் இருக்கும் விருதுநகரில், வாடிக்கையாளர்கள், பொதுமக்கள், அனைத்துத் தொழிற்சங்கங்களையும் திரட்டி மிகப்பெரும் பேரணியும், போராட்டங்களும் நடத்துவது என சங்கங்கள் திட்டமிடப்பட்டு வருகின்றன.
வெயிலுக்கும் வெண்பனிக்கும்
மலைகள் அஞ்சுவதில்லை!
அணைக்க முடியாத நெருப்பு!
பத்து நாளைக்கு முன்தான் ரொம்ப சந்தோஷமாய் பேசிக்கொண்டு இருந்தார். “ திருநெல்வேலிப் பேட்டையில் இருக்குற அந்த அருந்ததியர் சமூகத்து மக்கள் சொன்னாங்க... உங்க குடும்பமே நல்லயிருக்கணும்னு. இதுதான் மாது நாம் செய்ற வேலைக்கான சன்மானம். என்ன சொல்றீங்க...? வாங்கின சம்பளத்த வீட்டுக்குக் கொண்டு போக முடியாம வட்டிக்காரன்கிட்ட கொடுத்துட்டு, வயிறெரிந்து போயிருக்கும் அந்த பாவப்பட்ட மனுஷங்களுக்கு ஒரு ஸ்கீம் வொர்க் அவுட் பண்ணி லோன் கொடுத்தோம். இப்ப கந்து வட்டிக்காரன் கிட்ட இருந்து மீண்டு, ஒருவேளையோ, ரெண்டு வேளையோ நிம்மதியாச் சாப்பிடுறோம்னு சொல்றாங்க...” இப்படி அவருடைய பேச்சுக்களில் பல சம்பவங்கள், உணர்வு மிக்க தருணங்கள் இருக்கும். “எதோ தொழிலா நமது வேலையைச் செய்யக் கூடாது. அதில் ஒரு தவமும், சந்தோஷமும் இருக்க வேண்டும்” என்பார்.
முத்து விஜயன் அவர் பேர். ஐம்பதைத் தாண்டிய வயது. இருபது வருஷமாக அவரோடு பழக்கம். எங்கள் வங்கியில் உள்ள மிக நேர்மையான அதிகாரிகளில் ஒருவர். எந்த வங்கிக்கிளையில் பணிபுரிந்தாலும் கொஞ்ச காலத்தில் அங்குள்ள மக்களின் பிரியத்திற்குரியவராகி விடுவார். “ஐயாயிரம் ருபாய்க்கோ, ஐம்பதாயிரம் ருபாய்க்கோ ஒரு நகைக்கடன் கொடுக்குறத விட, கம்மலை கையில் வைத்துக்கொண்டு அவசரத்துக்கு ஒரு ஐநூறு ருபா லோன் கிடைக்காதா என்று வருகிறவர்களுக்கு மொதல்ல சர்வீஸ் பண்ணனும். ஐயாயிரத்துக்கோ, ஐம்பதாயிரத்துக்கோ லோன் கொடுக்க நிறைய பேங்க் இருக்கு. ஐநூறுக்கு கொடுக்க நாமதான இருக்கோம்” என்பார். இதுதான் அவரது தத்துவம். வாழ்வு பற்றிய சிறுகுறிப்பு.
முந்தாநாள் இவரைத்தான் எங்கள் வங்கி நிர்வாகம் திடுமென சஸ்பெண்ட் செய்துவிட்டது. பாண்டியன் கிராம வங்கி அலுவலர் சங்கத்தின் தலைவராயிருக்கும் அவரையும், அவரது தொழிற்சங்க நடவடிக்கைகளையும் நிர்வாகத்திற்கு பிடிக்கவில்லை. சமீபமாக எங்கள் வங்கியில் நடந்து வரும் போராட்டங்களில் அவர் ஒரு முக்கியமான பாத்திரமாய் இருந்தார். இதுதான் நிர்வாகத்தின் கோபத்திற்கு காரணம். ‘தாங்கள் கொடுத்த கடன்களில் முறைகேடுகள் இருக்கின்றன.’ என்று மட்டும் சொல்லிவிட்டு, சஸ்பெண்ட் செய்துவிட்டது. என்ன லோன்கள், எப்படி முறைகேடுகள் என்ற எந்த விபரங்களும் இல்லை. அவரது 26 வருட கால, அப்பழுக்கற்ற வங்கிப் பணியை ஒரு காகிதத்தில் கொச்சைப்படுத்தவும், அவரை நிமிடத்தில் குப்பையைப் போல தூக்கி எறியவும் நிர்வாகம் துணிந்திருக்கிறது. போராட்டத்தை மழுங்கடிககவும், சிதைக்கவும் அவரை பலிகிடா ஆக்கியிருக்கிறது.
சிறிய புன்சிரிப்புடன் இரண்டு நாளாய் விருதுநகரில் சங்க அலுவலகத்தில் இப்போது நடமாடிக்கொண்டு இருக்கிறார். அடுத்து என்ன செய்வது, போராட்டங்களை எப்படி தீவீரப்படுத்துவது என திட்டமிடல்களும், விவாதங்களும் நடந்து கொண்டு இருக்கின்றன. அலைச்சல்களும், கோபங்களுமாய் நேரங்கள் விரைந்து கொண்டு இருக்கின்றன. இதுபோன்ற தருணங்களில் வேகமும் வேண்டியிருக்கிறது. நிதானமும் வேண்டியிருக்கிறது. உணர்ச்சிவசப்பட்ட மனநிலைகள் விளைவுகளை யோசிப்பதில்லை.
நேற்று இரவில் தொலைதூரத்தில் இருந்து வந்திருந்த கமிட்டி மெம்பர்கள் எல்லோரும் அவரவர் ஊர்களுக்குச் சென்ற பின் மிகச்சிலரே மிஞ்சியிருந்தோம். விருதுநகர் ஆர்.டி.ஓ அலுவலகத்திற்குப் பின்னால் சங்கக் கட்டிடம் ஆசுவாசப்படுத்திக்கொண்டு நின்றிருந்தது. காட்டுப்புதர் போல அடர்ந்து கிடக்கும் செடிகொடிகள் அந்தக் கட்டிடத்தைத் தின்றுவிடும் மூர்க்கத்தோடு சுற்றி வளைத்துக் கிடந்தன. வாசல் படிகளில் உட்கார்ந்து நான், காமராஜ், முத்து விஜயன், சோலைமாணிக்கம், செல்வகுமார் திலகராஜ், அருண், அண்டோ பேசிக்கொண்டு இருந்தோம். இங்கிலீஷ் லிட்ரேச்சர் படித்திருக்கும் முத்து விஜயன் ஆங்கிலக் கவிதைகளையும், திருக்குறளின் அர்த்தங்களையும் வியந்து வியந்து சொல்லிக் கொண்டே இருந்தார். பொன்னியின் செல்வன், சிவகாமி சபதம் படித்து லயித்துக் கிடந்த அவரது அனுபவம் எனக்கு புதியதாகவும், நெருக்கமானதாகவும் இருந்தது. ஊர், வயக்காடு, அரிசி குத்திச் சாப்பிட்ட சின்ன வயசுக் காலங்கள் என விரிந்த உரையாடல்களால் நிரம்பிக்கொண்டு இருந்தது இரவு. எங்கள் முன் ஒரு சித்தனைப் போல உட்கார்ந்து பேசிச் சிரித்துக் கொண்டு இருந்தார் முத்து விஜயன். தூக்கத்தில் ஒவ்வொருவராய்ச் சரிய, அவர் எப்போதையும் விட உற்சாகமாயிருந்தார். ”சரி, படுப்போம். காலையில் வேலைகள் இருக்கின்றன’ என்று அவரே முன்மொழிந்தார். படுத்துக் கிடந்தே அவர் பேசிக்கொண்டு இருந்ததாக ஞாபகம்.
கண்விழித்த போது, “இல்லம்மா.. அப்பா ரெண்டு நாளில் வந்துருவேன்..” என போனில் பேசிக்கொண்டு இருந்தார். என்னைப் பார்த்து ‘வணக்கம் மாது” என்றார். இன்றைக்கான ஆடைகள் இல்லை என்பது ஞாபகத்துக்கு வந்தது. வீட்டிற்கு சென்று வருவதாக கூறி அவசரம் அவசரமாக பைக்கை ஸ்டார்ட் செய்தேன். அங்கிருந்து சாத்தூர் 24 கிலோ மீட்டர் இருக்கும். காமராஜ் பின்னால் உட்கார்ந்திருந்தான்.
காலை ஏழு மணிக்கும் பனியும், குளிரும் இருந்தன. பரந்து கிடந்த நாற்கரச்சாலையில் முன்னால் சென்று கொண்டு இருந்த பெரிய கண்டெய்னர்களை தாண்டி போய்க்கொண்டு இருந்தோம். ஓரங்களில் உட்கார்ந்திருந்த மைனாக்கள் சடசடவென மொத்தமாய் பறந்தன. கொஞ்சம் வீடுகளாய் தூரத்தில் தெரிந்தன. எதோ ஒரு சின்ன ஊராய் இருக்க வேண்டும். அதிலிருந்து மண்பாதை ஒன்று நீண்டு வந்து நாற்கரச்சாலையில் வந்து சேர்ந்துகொண்டது. அதன் முனையில் சில பையன்கள் யூனிபார்மில் புத்தகக் கட்டுக்களோடு நின்றிருந்தார்கள். ஸ்கூல் வேனுக்காக காத்திருக்க வேண்டும்.
இதையும் விட சாதாரண கிராமத்தில் இருந்து வந்த, தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்த முத்து விஜயன் பல கிலோ மீட்டர் நடந்தே சென்று படித்திருக்கிறார். அந்தச் சின்ன வயதில் அவருக்குள் இருந்த நெருப்பை நேற்று இரவில் பார்க்க முடிந்தது. இப்போதும் உணர முடிகிறது. போயும் போயும் நிர்வாகத்தின் கேடுகெட்ட காகிதமா, அதை அணைத்து விடும்! ஹா..ஹா! இன்னொரு நாள் உற்சாகமாய் புலர்ந்துவிட்டது.
முடியாத ஒரு பெருந்துயரத்தின் கதை
கண்ணெல்லாம் எரியுதம்மா
கண்ணெல்லாம் எரியுதம்மா
உறக்கம் பிடிக்காமல்
புரண்ட சிறுவன்
இப்போது தாயை எழுப்பாமல்
தானாகத் தூங்குகிறான்
தூங்க மறுத்துத்
தூளியை உதைத்துத்
துடித்துக் கதறிய
பச்சிளம் குழந்தை
இப்போது நிம்மதியாகத் தூங்குகிறது
அந்தப் பாழிரவில்
நகரத்தின் தெருக்களெங்கும்
காலன் புகுந்து சென்றான்
முகமூடி கொள்ளைக்காரனைப் போல
ஊரைப் பிளப்பது போல
ஓலம் கிளம்பியது
தேவாலயத்து மணிகள்
விரிசல்கள் கண்டன
விதேசி மூலதனத்தின்
இரசாயனக் கிரியையால்
பால் வடியும் நிலவெல்லாம்
சீழ் வடிந்தது
போபால் தெருக்களெங்கும்
பிணங்கள் பிசுபிசுத்தன
இத்தனைக்கும் அசையாது
கால் சுருட்டி நிற்கிற
கருப்புச் சிலந்தியைப் போல்
அந்தத் தொழிற்சாலை
நகரத்தின் ஒரு புறத்தில்........
- பிரளயன் (சந்தேகி கவிதைத் தொகுப்பு - ஜூன் 1990)
கருப்புச் சிலந்தியைப் போல் நின்ற அந்தத் தொழிற்சாலை இன்றும் போபால் நகரத்தில் நின்று கொண்டுதான் இருக்கிறது. யூனியன் கார்பைடு இரசாயனத் தொழிற்சாலை. டிசம்பர் 2, 1984 நள்ளிரவைக் கடந்து 3ம் தேதியின் குளிர்கால விடியலுக்குச் சிலமணி நேரத்துக்கு முந்தைய அந்த நேரத்தில் நடந்த மீத்தைல் ஐசோ சயனேட் என்கிற விஷவாயுக் கசிவு பயங்கரம், உறங்கிக் கிடந்த அப்பாவி உயிர்களை நொடி நேரத்தில் ஆயிரக்கணக்கில் விழுங்கிவிட்டது. லட்சக் கணக்கானோரைச் செயலிழக்கச் செய்துவிட்டது. கால்நடைகளும், பிற ஜீவராசிகளும் கூடத் தப்பவில்லை.
அன்றோடு முடிந்துவிடவுமில்லை - உயிர்களுக்கு எதிரான அந்தத் தாக்குதல். உடனடியாக இறந்த சில ஆயிரம் பேர் 'கொடுத்து வைத்தவர்கள்' என்று நினைக்கும் அளவிற்குக் கொடூரமான நிலைக்குத் தள்ளப்பட்டனர் உயிரிருந்தாலும் மிக மோசமான பாதிப்புகளைச் சந்தித்தவர்கள். இந்த டிசம்பர் 3ம் தேதி வந்தால் 25 ஆண்டுகள் நிறைவு பெற்றுவிடப் போகிற அந்தக் கொடிய விபத்தினால் (அது விபத்தா, இரசாயனப் போர் ஆயுதம் ஒன்றின் பரிசோதனையா என்ற கேள்விகள் அப்போதிருந்தே எழுப்பப்பட்டு வருகின்றன என்பது ஒருபுறம் இருக்க) பாதிக்கப்பட்டோருக்கான முழு நிவாரணம் இன்னமும் அவர்களை எட்டாதிருப்பதும், அராஜக நிகழ்வுக்குப் பொறுப்பான பெரும்புள்யூ௨ள் இன்னமும் தண்டிக்கப்படாததுமான உண்மைதான் நம்மைச் சுடுவது.
இந்தியாவின் ஹிரோசிமாவாக வருணிக்கத்தக்க அளவிற்கு, மத்தியபிரதேச மாநிலத்தின் தலைநகரமான போபால் இந்த இரசாயன வாயுவிபத்திற்கு அடுத்த சில மணிநேரங்களிலிருந்து பரிதாபமான நிலைக்கு மாற்றப்பட்டது. போபால் நகரத்தின் மொத்தமுள்ள 56 வார்டுகளில் 36 வார்டுகள் பாதிக்கப்பட்டன. அதில் இருந்த 6 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டதாக அரசுதரப்பில் பதிவான விவரங்களே சொல்கின்றன. மாநகரத்தின் ஏழை மக்கள் வடக்கே வசித்துவந்த ஒதுக்குப்புறப் பகுதியில்தான் நிறுவப்பட்டிருந்த இந்த இராட்சத தொழிற்சாலை. அங்கே என்ன தயாரிக்கப்படுகிறது, என்ன அபாயமான சூழல் அது, கொஞ்சம் அசந்தாலும் என்ன மாதிரியான விளைவுகள் ஏற்படும் என்பது எதுவும் அறிந்திராத ஏழை மக்கள். போபால் நகரில் 1981 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி கல்வியறிவு விகிதம் வெறும் 34 சதவீதமே. இதுவும் பெண்களுக்கு 19 சதவீதமாக இருந்தது. வெளியிடங்களிலிருந்து புலம்பெயர்ந்து வேலை தேடி வந்த மக்களும் சேர்ந்து வாழ்ந்த அந்தப் பூமியின் மேற்பரப்பில் படிந்த இரத்தக் கறையும், குவிந்த மண்டையோடுகளும் என்றும் வேதனைக்குரியவை.
பூச்சிக்கொல்லி தயாரிக்க நிறுவப்பட்ட இந்தத் தொழிற்சாலையின் தொட்டிகளில் ஒன்றிலிருந்து கசிந்த விஷவாயுவின் அளவு 40 டன்கள் என்று சொல்லப்படுகிறது. ஏற்கெனவே ஆலைக்குள் 1981ல் நடந்த விபத்தில் ஒரு தொழிலாளி மரணமடைந்திருந்த போதிலும், அதற்குப் பின்னரும் வெவ்வேறு விதமான சிறு பிரச்சனைகளும், விபத்துகளும் நடைபெற்றிருந்த போதிலும், பாதுகாப்பு ஏற்பாடுகள் வலுப்படுத்தப் படவில்லை என்பது மட்டுமல்ல, இருந்த பாதுகாப்பு அம்சங்களின் தரமும் தாழ்த்தப்பட்டிருந்தது. விஷ வாயு கசிவின் நெடியை மூக்கு நுகர்ந்த அடுத்த நொடியே அது நுரையீரலை எட்டித் தனது கைவரிசையைக் காட்டிவிடும் என்றிருக்க, சிறிய ஈரத்துணியால் மூக்கை மூடிக்கொண்டு அதிவேகமாக அந்தப் பகுதியை விட்டே ஓடியிருந்தால் ஒருவேளை அதிக பாதிப்பிலிருந்து தப்பித்திருக்கலாம் என்ற அடிப்படை அறிவியல் ஆலோசனை கூட அறிந்திராத மக்கள் பகுதியில் தான் இந்த விபத்து ஏற்பட்டிருந்தது. அதுவும், அவர்கள் ஆழ்ந்த உறக்கத்திலிருந்த நள்ளிரவைக் கடந்த வேதனை மிக்க நேரத்தில்....
நிலைமையின் தீவிரமறிந்து, யூனியன் கார்பைடு நிறுவனத் தலைவர் வாரன் ஆண்டர்சன் இந்தியாவிற்கு வந்ததும், மத்திய அரசு தொடுத்திருந்த வழக்கின் அடிப்படையில் அவர் உடனே கைது செய்யப்பட்டார். ஆனால் அது வெறும் நாடகம் என்பது, உடனடியாக அவருக்கு எதிர்ப்பின்றி ஜாமீன் வழங்கப்பட்டதும், அடுத்த நொடியே தனி விமானமொன்றில் அவர் அமெரிக்காவிற்குத் தப்பி ஓடி ஒளிந்ததும், பின்னர் பல்லாண்டுகள் போபால் மாவட்ட நீதிமன்றத்தில் நடந்த வழக்கில் ஒருபோதும் அவர் ஆஜர் ஆகாமல் நழுவிக் கொண்டிருந்ததும், அவரை இந்தியாவிற்குக் கொண்டுவர பிரத்தியேக நடவடிக்கை எடுக்குமாறு உச்சநீதிமன்றமே வழங்கிய சிறப்பு உத்தரவை அமலாக்க இந்தியப் புலனாய்வுத் துறையோ, மத்திய அரசோ இன்றுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காதிருப்பதுமான பல நிகழ்வுகளிலிருந்து வெளிப்பட்டது. ஆண்டர்சன் மட்டுமல்ல, இவ்வளவு படுபயங்கரமான ஒரு சம்பவத்திற்குப் பொறுப்பானவர் என்று ஒற்றை ஆள் கூட அடையாளம் காணப்படவோ, விசாரணைக்கு உட்படுத்தப்படவோ, தண்டிக்கப்படவோ இல்லை என்பது அதிர்ச்சியளிப்பதாகும்.
அமெரிக்காவின் பணவெறி பிடித்த வழக்கறிஞர்கள் பலர் போபால் நகரத்திற்கு வந்திறங்கி அப்பாவி மக்களுக்கு நிவாரணம பெற்றுத்தரும் ஆசைகாட்டிக் கொண்டிருந்த அதே வேளையில், அமெரிக்க உச்ச நீதிமன்றத்தில் இந்திய அரசு தொடுத்திருந்த வழக்கில், இந்தியாவின் மிக பிரபல வழக்கறிஞரான நானி பால்கிவாலாவைத் தனக்குச் சாதகமாக வாதாட நியமித்திருந்தது யூனியன் கார்பைடு. மிக உயர்ந்த மனிதர்களாகச் சமூகத்தில் தங்களைக் காட்டிக் கொண்டிருக்கும் இத்தகைய பல நபர்களுக்கு, தேச பக்தியைவிடவும் தொழில்பக்தியும், காசு பக்தியுமே விஞ்சி நிற்கும் என்பது மீண்டும் நிரூபணமானது. முகம் தெரியாத, பெயர் அறியப்படாத ஏழை எளிய மக்களின் உயிரும், உடல் ஊனமும் அமெரிக்க நீதிமன்றத்தில் பேசப்படக் கூடாதது, வழக்குக்கு அங்கு இடமில்லை என்று இந்திய அறிவுஜீவியையே பேச வைத்தது அந்நிய கம்பெனியின் பணபலம்.
அதுமட்டுமல்ல, லாபவெறியும், இரத்தவெறியுமிக்க இந்த நிறுவனத்தின் சார்பில் அடுக்கடுக்காக முன்வைக்கப்பட்ட பெரும்பொய்கள் சாதாரணமானவை அல்ல. விஷவாயு கசிந்தது சீக்கிய தீவிரவாதிகளின் வேலை (அக்டோபர் 1984 இறுதியில் தான் பிரதமர் இந்திரா காந்தி இரண்டு சீக்கிய தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டிருந்தார் என்பதைப் பயன்படுத்தி !) என்றது. எங்கள் நிறுவனமே அல்ல, அது இந்தியக் கம்பெனி, இந்தியத் தொழிலாளர்களால் மோசமாகக் கட்டப்பட்டிருந்தது என்றது. சட்டப்படியாக, பன்னாட்டு நிறுவனம் என்ற ஒரு வரையறையே எங்கும் செய்யப்படவில்லை என்று கூசாமல் சொல்லுமளவு தனது பொறுப்பைத் தட்டிக் கழிக்க முயன்ற அதன் முயற்சிகள் அம்பலப்படுத்தப்பட்டன.
ஆனாலுமென்ன, 3000 கோடி டாலர் கேட்டதற்கு வெறும் 47 கோடி டாலர் நஷ்ட ஈடுதான் விதிக்கப்பட்டது. இதன் நடுவே, நயவஞ்சகன் ஆண்டர்சன் 1986ல் பணி ஓய்வு பெற்றார். நிறுவனத்தை டவ் கெமிகல்ஸ் என்ற வேறு நிறுவனத்திற்கு விற்றுவிட்டார். டவ் கெமிகல்ஸ் எங்களுக்கு எதுவும் தொடர்பில்லை என்று சாதிக்க ஆரம்பித்துவிட்டது. இதற்குள் ஆண்டுகள் பல உருண்டோடிவிட்டன. உயிர்பிழைத்து பாதிப்புற்றிருப்போர் போராட்டக் குழுக்கள், முக்கியமாக பெண்கள் போராட்டக் குழு உதயமாயின. இந்த அமைப்புகளின் போர்க்குரலும், தீர்மானமான போராட்டமும் இதுவரை தேசம் சந்திக்காதது. எங்கே சென்றாலும், அநீதி இழைத்தவனைத் துரத்திப் பிடிப்போம் என்று அமெரிக்காவரை சென்ற இந்தக் குழுவின் தலைவியர் பெரிய கல்வியறிவோ, செல்வமோ படைத்தவர்களே அல்லர்.
இதில் முக்கியமாக அறியப்படும் இரட்டையர், ரஷிதா பீ - சம்பக் தேவி சுக்லா என்கிற இஸ்லாமிய-இந்து பெண்மணிகளாவர். மத பேதங்களை மீறி இலட்சிய வெறியோடு பாதிக்கப்பட்டவர்களை ஒருங்கிணைக்க இவர்கள் எடுத்துவரும் முயற்சிகள் அளப்பரியவை. டவ் கெமிகல்ஸ் நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தின் வாசலில் தர்ணா நடத்த அமெரிக்காவின் சிகாகோ நகரம் சென்றவர்கள். 'துடைப்பக்கட்டையால் அடிப்போம் வாருங்கள்' (ஜாடு சே மாரோ) என்ற இயக்கத்தின் பெயரால், போபாலில் துவங்கி புது தில்லி வரை எத்தனையோ கிராமங்களுக்குச் சென்று சாதாரண மக்களிடமிருந்து துடைப்பங்களைத் திரட்டிக் கொண்டு போய்ப் போராட்டம் நடத்திவந்த இவர்களுக்கு 2004ம் ஆண்டின் கோல்டுமேன் விருது (1990ல் கோல்டுமேன் தம்பதியரால் சுற்றுச்சூழல் இயக்கவீரர்களுக்காக நிறுவப்பட்ட விருது) வழங்கப்பட்டது.
ஆண்டர்சன் மற்றும் பொறுப்பான அதிகாரிகளை இந்தியாவிற்குக் கொணர்ந்து கிரிமினல் வழக்கு தொடரப்படவேண்டும், வாயுக்கசிவின் முழு உண்மைகள், பாதிப்பின் விளைவுகள் மக்களது தகவலுக்கு வெளியிடப்படவேண்டும், தொழிற்சாலை அதன் நச்சுக் கழிவுகளோடு உடனடியாக அகற்றப்படவேண்டும், பாதிப்புற்றோர் வாழ்வாதாரங்களுக்கு முழு ஏற்பாடு செய்யப்பட வேண்டும் என்பதுதான் போபால் விஷவாயுவின் பாதிப்பால் அல்லலுறுவோர் எழுப்பும் குரலாகும். பாதரசம், நிக்கல் போன்ற உலோகங்களும், வேறு பல நச்சு வேதியல் பொருள்களும் மண்ணிலும், உடலிலும், ஏன் - தாய்ப்பாலிலும் கூடக் கலந்துவிட்டிருப்பதன் பாதிப்புகள் சமூக ரீதியாகவே தலைமுறைகளைத் தாக்கிக் கொண்டிருக்கிற பயங்கரம்தான் போபால் நிகழ்வு. தொழிலுக்கும், லாபத்திற்கும் வேட்டைக்காடாக வளரும் நாடுகளைப் பயன்படுத்தும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு எந்தச் சமூகப் பொறுப்போ, தார்மீக மதிப்போ, அரசியல் ரீதியான கடிவாளமோ கிடையாது என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டியிருப்பது அந்த பயங்கரம்.
'பொன்னார் வளநகரில் வேதாளம் சேர்ந்தது, வெள்ளெருக்கு பூத்தது, பாதாள மூலி படர்ந்தது, உழுமண்ணில், குடிநீரில், சுவாசத்தில், கர்ப்பத்தில் அனைத்திலுமே பாஷாணம், பாஷாணம்.....'. என்று அப்பாவி மக்களைக் கதறடித்துவிட்ட போபால் விஷவாயு கசிவின் இருபத்தைந்தாவது ஆண்டு நிறைவு, இன்றைய உலகமய-தாராளமய சூழலில் எந்த எச்சரிக்கையும் கொள்ளாதிருக்கிற ஆட்சியாளர்களைப் பற்றிய கோபத்தையும், ஏகாதிபத்திய உலகமயமாக்கல் மக்களுக்கு எதிரான தாக்குதலுக்கு அஞ்சாதது என்ற விழிப்புணர்வையும் புதுப்பிக்கிறது
(கட்டுரையாளர்: எஸ்.வி.வேணுகோபாலன்)
பூக்களிலிருந்து நான்கு புத்தகங்கள்!
‘பூக்களிலிருந்து சில புத்தகங்கள்’ பணி முக்கியக் கட்டத்தை எட்டியிருக்கிறது. புத்தகங்களின் தலைப்பு, அவை பற்றிய குறிப்புக்களோடு அட்டைகள் தயாராகிக் கொண்டு இருக்கின்றன.
முதன்முதலில் இதுகுறித்து பேசும்போது, வம்சி பதிப்பகம் சார்பாக எழுத்தாளர் பவா.செல்லத்துரை அவர்கள் சொன்ன ஒரே விஷயம், ‘எழுத்துக்கள் இலக்கியத் தரமாக இருக்க வேண்டும்’ என்பதுதான். அறிவிப்பு வெளியானபோது, சினிமா, பயணங்கள், விவாதங்கள் குறித்து சேகரிப்பது என்றெல்லாம் சொல்லப்பட்டு இருந்தது. வந்திருந்த சுட்டிகளில் சினிமா குறித்தும் இருந்தன. ஆனால் அவை புத்தகங்களாகும் நிலையான தன்மை கொண்டிருக்கவில்லை. உலக சினிமா குறித்து தீவீரமாக எழுதப்பட்ட முக்கியப் பதிவுகள் பல இருக்கின்றன. அவற்றை பிறிதொரு சமயம் பார்த்துக் கொள்ளலாமே என்றார் பவா. இப்போதைக்கு, சென்னை புத்தகத் திருவிழாவுக்கு, அனுபவங்கள், கவிதை, சிறுகதை என மூன்று தொகுப்புகள் கொண்டு வருவது என முடிவானது. இவைகளோடு வலைப்பக்கங்களில் நான் எழுதிய சொற்சித்திரங்களின் தொகுப்பும் வருகிறது.
1.பெருவெளிச் சலனங்கள்
(அனுபவங்களின் தொகுப்பு)
தாளிடப்படாத அறைகளுக்குள்ளிருந்து வெளிப்படும் குரல்கள் காற்று வெளியில் தெறிக்கின்றன. விரியும் வளையங்களின் அடுக்குகளில் அவரவர் வாழ்வின் கணங்கள் மிதக்கின்றன. அன்பும், காதலும், சோகமும் தீராமல் கரைகின்றன. பெருவெளியின் சலனங்கள் மனிதருக்கு எளிதில் புலப்படுவதில்லை. உள்ளங்கையில் அள்ளிப் பார்த்தால் அவரவர் ரேகைகளே தெரிகின்றன.
2.கிளிஞ்சல்கள் பறக்கின்றன
(கவிதைத் தொகுதி)
கட்ற்கரைப் பூக்களாய் கிளிஞ்சல்கள் இறைந்து கிடக்கின்றன. எல்லாவற்றிலும் மனிதக் குறிப்புகளை ரகசியமாய் எழுதிய நீரின் வரிகள் ஒடிக்கொண்டு இருக்கின்றன. மணலில் அளையும் கைகளிடம் அவை முறையிட்டுக் கொண்டே இருக்கின்றன. யாராவது ஒருவர் அறிந்தால் போதும், அவைகள் பறந்துவிடக் கூடும். கவிதைகளுக்கு அப்படி ஒரு மகத்துவம் இருக்கிறது.
3.மரப்பாச்சியின் சில ஆடைகள்
(சிறுகதைத் தொகுப்பு)
குழந்தைகள் மரப்பாச்சி பொம்மைகளிடம் பேசுகின்றன. பொட்டு வைக்கின்றன. சின்னச் சின்னத் துணிகளால் ஒரு ஓவியனைப் போல ஆடை அணிவிக்கின்றன. அழகு பார்க்கின்றன. கொஞ்ச நேரத்தில் அடுத்த ஆடை. அப்புறம் இன்னொரு ஆடை. சலிப்பில்லாமல் விளையாட்டு தொடர்ந்து கொண்டே இருக்கிறது. களையும் ஒவ்வொரு ஆடையும் ஒரு கதையாகிறது. கதை சொல்லுகிறவன் ஒரு குழந்தைதான் எப்போதும்.
4.குருவிகள் பறந்து விட்டன, பூனை உட்கார்ந்திருக்கிறது
(நான் எழுதிய சொற்சித்திரங்கள்)
எதிரும் புதிருமாக அலைக்கழிக்கிறது. சரி, தவறு என்பதில் மூளை கசங்குகிறது. திசைகளில் சிக்கித் தவித்து தடுமாறுகிறது. இழப்பதைக் காட்டிலும் பெறுவதில் மோகம் முட்டுகிறது. இரையைத் தேடி மூச்சு இழைக்கிறது. வன்மம் குருதியிலும், கண்களிலும் தேங்குகிறது. இந்தச் சின்னப் பறவைகளுக்கு மட்டும் நாட்கள் எளிமையாகவும், இயல்பானதாகவும் வந்து கொண்டு இருக்கின்றன.
நண்பர்களே!
வந்திருந்த சுட்டிகளிலிருந்து புத்தகங்களுக்கு தேர்ந்தெடுக்கும் பணி முடிந்து விட்டது. முக்கியப் பதிவர்களின் சுட்டிகள் வராததால் அவர்களிடம் போன் மூலமாகவும், மெயில் மூலமாகவும் அனுமதி பெற்றுக்கொண்டு இருக்கிறேன். முடிந்தவரை நல்ல எழுத்துக்களை அடையாளம் காணவேண்டும் என நினைக்கிறேன். இதில் நான் தோற்றுப் போகக் கூடும். ஆனால் முயற்சி இருக்கும். அது தொடரம், மேலும் சில புத்தகங்களாக....
ஏற்கனவே இங்கு நான் எங்கள் வங்கியில் நிலவும் அசாதாரணச் சூழலை தெரிவித்து இருந்தேன். நிர்வாகம் வெறி பிடித்து நிற்கிறது. charge sheetகளும், show-cause noticeகளும் குவிந்து கொண்டு இருக்கின்றன. பழிவாங்கும் transfers போடப்படுகின்றன. நாங்கள் தொடர் உண்ணாவிரதத்தில் இருக்கிறோம். இன்று நான்காவது நாள். இதற்கிடையில்தான் ‘பூக்களிலிருந்து புத்தகங்கள்’ பணியும் நடந்து கொண்டு இருக்கிறது. சங்க அலுவலகத்திலேயே தங்கி இருக்கிறோம். நடு இரவிலோ, விடியற்காலையிலோ நேரம் வாய்க்கிறது. “இப்போது இருக்கும் நிலையில், இந்த வேலை எதுக்கு” என சக தொழிற்சங்க நிர்வாகிகள் என்னை ஒரு விரோதத்துடனே பார்க்கிறார்கள். பவா செல்லத்துரையோ டிசம்பர் 10ம் தேதிக்குள் அச்சுக்கு போக வேண்டும் என்கிறார்.
இன்னும் பதிவுகளை வரிசைப்படுத்த வேண்டும், எழுத்துப் பிழை பார்க்க வேண்டும். நேரம் கொல்லுகிறது. பார்ப்போம்.