ஆட்டம் (மலையாள சினிமா)


ஃபேஸ் புக்கில் இந்த சினிமா குறித்து சுருக்கமாக பகிர்ந்ததை  
விரிவாக எழுதி தீராத பக்கங்களில் சேமித்துக் கொள்கிறேன். 

------------

ஒரு நாடகக்குழு. பத்துப் பனிரெண்டு ஆண்கள். ஒரே ஒரு பெண் அஞ்சலி. நாடகத்தின் மீதான ஆர்வம் கொண்ட இளைஞர்கள் அவர்கள். 
 
எல்லோரும் ஒரு இடத்தில் தங்க நேரும் ஒரு இரவில் அஞ்சலி அங்குள்ள ஒருவனால் பாலியல் சீண்டலுக்கு உள்ளாகிறாள். அவனது முகம் பார்க்கவில்லை. அவனிடமிருந்து கீழே விழுந்த பொருள் ஒன்றையும், பிரத்யேகமான செண்ட்டின் வாசனையையும் வைத்து அவள் இன்னார்தான் என சந்தேகம் கொள்கிறாள்.
 
நாடகக்குழுவில் தனக்கு பிரியமான, நெருக்கமான ஆணிடம் அஞ்சலி தன் வேதனையைப் பகிர்ந்து கொள்கிறாள். அந்த ஆண் தனக்கு நெருக்கமான இன்னொரு ஆணிடம் சொல்லி, அஞ்சலியிடம் தவறாக நடந்து கொண்ட ஆணை நாடகக்குழுவிலிருந்து நீக்க வேண்டும் என்கிறான்.
 
குற்றம் சாட்டப்பட்ட ஆணையும், குற்றம் சாட்டிய பெண்ணையும் தவிர மற்ற ஆண்கள் எல்லாம் ஒன்று கூடி விவாதிக்கிறார்கள். என்ன செய்வது என திட்டமிடுகிறார்கள்.
 
இந்தப் புள்ளியை மையமாக வைத்து நடப்பதுதான் ஆட்டம். மாறி மாறிப் பேசிக்கொண்டே இருக்கிறார்கள். ஒவ்வொருவரிடமிருந்து வெளிப்படும் வார்த்தைகள்தாம்  ஆட்டத்தையே நடத்திச் செல்கின்றன. ஒவ்வொரு வார்த்தையும், ஒவ்வொருவரின் வார்த்தைகளும் முக்கியமானவை. மனித மனங்களை, அவர்களுக்குள் ஒடும் சிந்தனையோட்டங்களை, மாறும் ஆண்களின் நிறங்களை பார்வையாளர்களுக்கு கடத்துகின்றன. ஆட்டத்தின் சுவாரசியமே அதுதான்.
 
வார்த்தைகளைத் தவற விட்டு விட்டால் காட்சிகள் அதற்குரிய நிறத்தோடும் அர்த்தத்தோடு புலப்படாது. முகமூடிகள் அணிந்து கொண்டவர்களை அவர்களது உரையாடல்கள் மூலம்தானே அறிந்து கொள்ள முடியும்
 
குற்றம் சாட்டப்பட்ட பெண்ணுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்றும், குற்றம் செய்த அந்த ஆணை நாடகக்குழுவிலிருந்து நீக்க வேண்டும் என்று ஆரம்பித்து தொடரும் உரையாடல்களில் பனிரெண்டு ஆண்களும் தனித்தனியே  இருக்கிறார்கள். நேரம் செல்ல செல்ல அந்த பிரச்சினைக்கு பல்வேறு பரிமாணங்களும் சார்பு நிலைகளும் உருவாகி மேலும் மேலும் சிக்கலாகிறது. நம்பிக்கை சார்ந்து பேசுகிறார்கள். தங்கள் சுய அனுகூலங்கள் சார்ந்து பேசுகிறார்கள். பழைய காயங்களிலிருந்து வன்மம் கொண்டு பேசுகிறார்கள். முதலில் தண்டிக்க வேண்டும் என்கிறவர்கள் அடுத்து கொஞ்ச நேரத்திலேயே அதிலிருந்து பிறழ்ந்து பேசுகிறார்கள். அவரவர்க்கான நிலைபாடுகளிலிருந்து தர்க்கங்களை முன்வைக்கின்றனர்.
 
ஒவ்வொருவருக்குள்ளும் இருந்து வெளிப்படும் ஆண்கள், நாம் ஏற்கனவே பார்த்த, பார்க்கிற ஆண்களாகவும், தனிமையில் பார்த்த நாமாகவும் இருக்கிறோம். அத்தனைக்கும் ஊடே ஒவ்வொருவரும் ஆணும் தன்னை சரியானவனாகவும், நல்லவனாகவும், முற்போக்காளனாகவும் வெளிக்காட்டிக் கொள்ள செய்யும் பிரயத்தனங்கள் இருக்கிறதே, அதுதான் ஆட்டத்தின் சுவாரசியம்.
 
அந்தப் பெண்ணை அழைத்து நடந்ததை விசாரிக்க வேண்டும் என்கிறார்கள். தன்னைப் புரிந்து கொண்ட, பிரியமான ஆணிடம் பகிர்ந்து கொண்ட ஒரு சந்தேகம், அவளுக்குத் தெரியாமல் பனிரெண்டு ஆண்களால் விவாதிக்கப்பட்டு அவரவர்க்கான நியாயங்களோடு ஊதப்பட்டு இறுக்கமான நேரத்தில் அந்த பெண் அங்கு செல்கிறாள். தான் அதுவரை புரிந்து கொண்டிராத உலகில்  நுழைகிறாள். ஆண்களின் வார்த்தைகளை அந்தப் பெண் எதிர் கொள்கிறாள். அதிர்ந்து போகிறது ஆட்டம்.
 
ஆண்கள் எழுப்பும் கேள்விகள், நடந்த நிகழ்வு குறித்து கொண்டிருக்கும் சந்தேகங்கள் அவளை குழப்பமடையச் செய்கின்றன. அவள் மிக நேர்மையாக, உண்மையாக பேசுகிறாள். அதற்கான வெளி ஆண்களிடம் இல்லை என்பது அவளுக்குத் தெரியவில்லை. ரகசியமாய் பாதுகாத்தவை அவளுக்கு எதிராகவே திரும்புவதைப் பார்க்கிறாள். மௌனமாக நிதானமாக எல்லோரையும் புரிந்து கொள்கிறாள். ஆனாலும் அவளிடமிருந்து ஒரு வார்த்தையும் உண்மை தவறவில்லை.
 
அங்கு இல்லவே இல்லாத ஆண் மீது சாட்டப்பட்ட குற்றம் நிருபணம் ஆகாமல் போகிறது. பிரியமானவன், தன்னைப் புரிந்து கொண்டவன் என்று அவள் நினைத்தவனே சக மனிதனாக இல்லாமல் எல்லோரோடும் வெறும் ஆணாகி நிற்பதைப் பார்த்து சிரித்து ஆட்டத்திலிருந்து வெளியேறுகிறாள். அந்த ஒரே பெண் மட்டும் முகமூடி இல்லாமல் கம்பீரமாக தெரிகிறாள்.
 
பிறகு  ஆட்டம் வேறொரு இடத்தில் ஆரம்பமாகிறது. அங்கு அவள் பேசுகிறாள். ’உங்களிடம் ஒருவன் தப்பானவன் இருக்கிறான். அவன் யார் என்று நீங்கள் சொல்லவில்லை. அவன் யார் என்று தெரியும் வரை நீங்கள் அனைவருமே தப்பானவர்கள்’ என்கிறாள். அந்த கடைசி காட்சி கிளாசிக். அது பெண்ணின் ஆட்டம்.
 
ஆண்களின் அக உலகத்தை, அதில் நிரம்பியிருக்கும் பொய்மையை சந்தர்ப்பவாதத்தை, போலித்தனத்தை எல்லாம் தோலுரிக்கிறது சினிமா. ’ஆட்டம்’ அழுத்தத்தோடும், தாக்கங்களோடும் சிந்தனையை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறது.
 
மிக எளிமையாக சொல்லப்பட்ட சினிமா. அதே நேரத்தில் அழுத்தமாக நினைவுகளிலும், உணர்வுகளிலும் பதியக் கூடியதாய் காட்சிகளும் உரையாடல்களும் இருந்தன. வேறு மொழிதான். இருந்தாலும் பார்வையாளர்களை ஒன்ற வைத்ததோடு இல்லாமல் கதாபாத்திரங்களோடு தங்களை இணைத்துக் கொள்ளும் திரைமொழி வசப்பட்டிருந்தது.
 
அஞ்சலியாக நடித்திருக்கும் ஜரின் ஷிஹாப்பை இந்தப் படத்தில்தான் பார்க்கிறேன். மறக்க முடியாது. படத்தின் இயக்குனர் ஆனந்த் எகார்ஷி மற்றும் அவரது படக்குழுவினருக்கும் பாராட்டுகள்.
 
இந்திய அளவில் சென்ற ஆண்டின் சிறந்த படமாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது.
 
மகிழ்ச்சி.
 
அமேசான் பிரைமில் பார்க்கலாம். 

Comments

2 Comments

வருகைக்கு நன்றி.

கமெண்ட் செய்கிறவர்கள் Anonymous, Name/Url, Google Account, Name/Url, Google Account மூலம் கமெண்ட் செய்யலாம்.

1) முடிந்தவரை Google Account மூலம் கமெண்ட் செய்யுங்கள்.

2) இல்லையென்றால் Name/Url மூலம், பேரை மட்டுமாவது குறிப்பிட்டு கமெண்ட் செய்யுங்கள்.

3) Anonymous மூலம்தான் கமெண்ட் செய்ய முடியுமென்றால், கமெண்ட்டில் கீழே உங்கள் பேரை தயவு செய்து குறிப்பிடுங்கள்.

நன்றி.

- தீராத பக்கங்கள்
  1. அருமையான பதிவு... ஆட்டம் நிச்சயமாக ஒரு சிறந்த படைப்பு... எளிய காட்சியமைப்புகள்..

    ReplyDelete
    Replies
    1. அன்புத் தோழர் லூர்து, தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மகிழ்ச்சி.

      Delete

You can comment here