இப்போது கம்யூனிஸ்டுகளின் நிலைமை என்ன?



"தோழர்! அ.தி.மு.கவுக்கும், காங்கிரஸுக்கும்  கூட்டணி உருவாகப் போகிறதாமே! இப்ப நம்ம நிலைமை என்ன?” இப்படியான கேள்விகள் செல்போனில் வந்து பதம் பார்க்கின்றன.  எஸ். எம்.எஸ்ஸில் வந்து முறைக்கின்றன. “இருந்தாலும் உங்களுக்கு இந்த கஷ்டகாலம் வர வேண்டாம்” என  நேரில் உச் கொட்டுக்கின்றனர்.

இந்தியாவில் இன்று இருக்கிற கட்சிகளில் உருப்படியான கட்சி  சி.பி.எம் என்ற என் நம்பிக்கைக்கு எந்த பங்கமும் இதனால் வந்துவிடப் போவதில்லை. அக்கட்சியின்  அரசியல் திட்டங்களில் இருக்கும் தெளிவுக்கு இதனால் எந்த கேடும் சூழப் போவதில்லை. எனவே, இந்தச் செய்திகளை  சந்தோஷமாகவே எதிர்கொள்ள முடிகிறது.

“ச்சே, அப்படியெல்லாம் அ.தி.மு.க முடிவெடுக்காது” என்று பித்துக்குளித்தனமாகவோ, மூட நம்பிக்கையாகவோ எதுவும் சொல்லித் தப்பிக்க முடியாது. எதுவும் எந்த நேரத்திலும் நடக்கலாம். தேர்தலுக்கு முன்பும், பின்பும் அவர்கள் பேரம் பேசுவதற்கு எவ்வளவோ இருக்கின்றன. சமரசம் செய்துகொள்வதற்கு சங்கதிகள் இருக்கின்றன.  சகலமும் கடைந்தெடுத்த சந்தர்ப்பவாதங்களால் தீர்மானிக்கப்படுகிற ஒரு  புள்ளியில் நாம் எங்கே இருக்கிறோம் என்கிற அரசியல் தெளிவு இருப்பதால், இக்கேள்விகளை சந்தோஷமாகவே எதிர்கொள்ள  முடிகிறது.

காங்கிரஸ், அ.தி.மு.க பக்கம் சாய்ந்துவிட்டால், சி.பி.எம் அ.தி.மு.க கூட்டணியிலிருந்து விலகி தி.மு.க பக்கம் வருமென, சில அதிமேதாவிகள் கணிக்கின்றனர். அவ்வளவுதான் அவர்களுக்கு கம்யூனிஸ்டுகளைப் பற்றிய அறிவும், புரிதலும். கம்யூனிஸ்டுகள் மக்கள் பக்கம் நிற்கிறவர்கள் என்று அவர்களுக்கு உறைப்பதேயில்லை.

விலைவாசி, ஊழல், பெரும் முதலாளிகளுக்கு ஆதரவு, தேசத்தின் வளங்களைச் சூறையாடுவது என தங்கள் ஆட்சிக்காலத்தை பயன்படுத்தும் இவர்களுக்கு எதிராக, மக்களின் மனநிலைகளை உருவாக்கவும் அல்லது மாற்றவும் கம்யூனிஸ்டுகள் தொடர்ந்து சமூகத்தில் பணியாற்றுகின்றனர். ஆனால் ஜெயலலிதாவுக்கு மாற்றாக கருணாநிதியையும், கருணாநிதிக்கு மாற்றாக ஜெயலலிதாவையுமே இந்த அமைப்பு முன்நிறுத்துகிறது. மன்மோகனுக்கு எதிராக, அத்வானியையும், அத்வானிக்கு எதிராக மன்மோகனையுமே முன்வைக்கிறது. வேறு சாத்தியங்கள் தெரியாத அல்லது முன்வைக்கப்படாத சமூகத்தில், மக்கள் இந்த இரண்டில் ஒன்றையே மாற்றி மாற்றி தேர்ந்தெடுத்து ஏமாந்துகொண்டும், பரிதவித்துக்கொண்டும் இருக்கின்றனர்.  மக்களின் கோரிக்கைகளை முன்வைத்து போராடுகிற கம்யூனிஸ்டுகள், ஆட்சியாளர்களை த் தொடர்ந்து அம்பலப்படுத்திக்கொண்டே இருக்கின்றனர். இங்கு  ஆட்சியதிகாரத்தை மாற்றுகிற யுத்தியில் ஏற்படுத்தப்படுகிற கூட்டணிகள்  குறித்து சுவாரசியத்துடன் பிரஸ்தாபம் செய்கிற ஊடகங்கள், கம்யூனிஸ்டுகளின் போராட்டங்களை இருட்டடிப்புச் செய்கின்றன. இதில்தான் அரசியலின் சூட்சுமங்கள் ஒளிந்துகொண்டு இருக்கின்றன.

அதிகாரத்திற்கான போட்டியில், ஒருவரையொருவர் காட்டிக்கொடுத்துக்கொண்டு, தங்களை மக்கள் தேர்ந்தெடுக்க எல்லாவிதமான பித்தலாட்டங்களிலும்  முதலாளித்துவக் கட்சிகள் ஈடுபடுகின்றன. இந்தக் காட்சிகளின் ஊடே, இந்த அனுபவங்களின் வழியே ஒருநாள் மக்கள் இவர்கள் அனைவருமே ஒரே ஆள்தான் என்பதையும், இவர்கள் அனைவருமே தங்கள் எதிரிகள் என்பதையும் காண்பார்கள். எந்தக் கட்சி, ஆட்சியிலிருந்தாலும், மக்களுக்காக போராடுகிறவர்களை கம்யூனிஸ்டுகள் என்பதை உணர்வார்கள் . இதுதான் கம்யூனிஸ்டுகள் மக்கள் மீது கொண்டு இருக்கிற அன்பு. நம்பிக்கை. எல்லாம்.

அதற்கான ஒரு சந்தர்ப்பத்தை, இந்த சந்தர்ப்பவாதம் ஏற்படுத்தி இருக்கிறது என்பதுதான்  சந்தோஷம். தாங்களே கற்பதை விடவும், தங்கள் எதிரிகளால் கற்பிக்கப்படுவதுதான் அடர்த்தியானதும்,  வலிமையானதும் ஆகிறது. இது மக்களுக்கு மட்டுமல்ல, கம்யூனிஸ்டுகளுக்கும் பொருந்தும். நடப்பவையெல்லாம் ஒரு பாடம். நல்ல அனுபவம். கம்யூனிஸ்டுகள் ஜெயலலிதாவை மட்டும் நம்பினால், இந்தக் கேள்விகளால் அவமானமடையவும், தலைகுனியவும் நேரலாம். அவர்கள் மக்களை நம்புகிறவர்கள். தலைநிமிர்ந்தே எதிர்கொள்வார்கள்.

எனவே, சந்தோஷமே....!

தொடர்புடைய இடுகைகள்:

கருத்துகள்

13 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
  1. அபாரம். அற்புதம். அவசியம்.
    வாழ்த்துக்கள் மாதவ்

    எஸ் வி வேணுகோபாலன்

    பதிலளிநீக்கு
  2. //வேறு சாத்தியங்கள் தெரியாத அல்லது முன்வைக்கப்படாத சமூகத்தில், மக்கள் இந்த இரண்டில் ஒன்றையே மாற்றி மாற்றி தேர்ந்தெடுத்து ஏமாந்துகொண்டும், பரிதவித்துக்கொண்டும் இருக்கின்றனர்//

    துவக்கம் முதல் எனது ஆதங்கமே இதுதான்.

    பதிலளிநீக்கு
  3. அண்ணா, தனியா நிற்கும் நிலைமை வருமானால் எத்தகைய முடிவுகள் வரும்?

    பதிலளிநீக்கு
  4. @ எஸ்.வி.வி!
    நன்றி, தோழர்.


    @ராஜ நடராஜன்!
    நன்றி.பலருக்கும் ஆதங்கம் இதுதான். ஆனால், மாற்று இருக்கிறது என்பதை அவர்கள் விரைவில் உணர்வார்கள். இந்த நம்பிக்கையோடு காரியமாற்றும் சித்தம் முதலில் வேண்டும்.

    வினோ!
    கம்யூனிஸ்டுகள் தலைநிமிர்ந்து நிற்பார்கள்.

    பதிலளிநீக்கு
  5. மிக உண்மையான வார்த்தைகள் தோழரே. இபோதைய அரசியல் சூழலில் இதுதான் நடக்கும் என்பது யாராலும் சொல்ல இயலாத விடயமாக உள்ளது. இருப்பினும் இன்றைய சூழலில் ஒரு விஷயத்தை நினைவுக்கு கொண்டுவர விரும்புகிறேன் 1999 ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் இரு அணிகளுக்கு எதிராக தாமாகவிற்க்கு ஆதரவாக எல்லா 40 தொகுதிகளிலும் பிரச்சாரம் செய்தோம். அந்த நிலை மீண்டும் வந்தால் கம்யூனிஸ்ட்கள் மக்கள் முன் உள்ள நியாயமான கூட்டணியைதான் ஆதரிக்கும்.

    பதிலளிநீக்கு
  6. நாங்கள் ஆட்ச்சிக்கு வந்தபிறகு தொப்புளில் பம்பரம் விட வசதி செய்து தருவோம்!

    பதிலளிநீக்கு
  7. தேர்தலுக்கு தேர்தல் கூட்டணி மாறும் கட்சிகளில் வரிசையில் சி பி எம் மும் சேர்ந்துவிட்டிருபதினால்
    அவர்களையும் மக்கள் மற்ற கட்சிகளுடன் பத்துடன் ஒன்றாக பார்க்க போவதாக உங்களுக்கு தோன்றவில்லையா ?
    இன்று கட்சியின் கொள்கைகளுக்குகாக வோட்டு போடுவோர் மிக குறைவு என்று நான் கருதுகிறேன்.
    எடுத்துக்காட்டாக சொல்லபோனால் உங்களுக்கு தெரிந்திருக்கும் உன்னதமான தலைவர் காலஞன்ற P . மோகன் (சி பி எம்) முன்னால் M .P . மதுரையில் அவர் தான் எப்பொழுதும் ஜெய்பார் . சென்ற முறை அவரால் வெற்றி பெற முடியவில்லை.
    அய்யா அவர்களை பற்றி சொல்ல வேண்டுமானால் மக்களுக்கு பிரச்சனை என்றால் தான் வகித்த பதவி என்று பாராமல் சாலையில் அமர்ந்து போராடுவார்.

    பதிலளிநீக்கு
  8. http://powrnamy.blogspot.com/2011/03/blog-post_06.html இளைஞர்கள் முக்கியம் - புத்ததேவ். ஆட்சியை தக்கவைப்போம் - காரத்

    பதிலளிநீக்கு
  9. இந்த விளையாட்டுக்கு நான் வரலப்பா..நீங்களே விளையாடுங்கள்..!

    பதிலளிநீக்கு
  10. பாரதம் விடுதலை பெற்றபோது, இரண்டாவது பெரிய கட்சி கம்யூனிஸ்ட் தான்!தற்போது சட்டம் இயற்றும் சபைகளில், பிரதினிதிதுத்துவம் பெறவே, சட்டி எடுக்கும் சூழல்! எங்கே பிழை?

    கட்சி/கொள்கை/தலைவர்/தொண்டர்/காலம்/சூழல்/மக்கள் - இவைகளில் யார் காரணம்!?
    காரத் போன்ற தலைவர்கள், அம்மாவின் வீட்டிற்கு காவடி எடுப்பது, எந்தத் தேவைகளின் அடிப்படையில்?

    சிறந்த கொள்கை, தன்னலமற்ற தலைவர்கள்/தொண்டர்கள் இருந்தும் எடுபடாமல் போனதன் காரணங்கள் எவை!?

    மக்களின் தனிவுடமை மனப்பான்மை, அவர்களின் நுகர் பொருள் மீதான ஈர்ப்பு, பொருள் சேர்க்கும் ஆர்வம், மாறிவரும் உலக சூழல், நமக்கென்ன எனும் மனப்பான்மை, கம்யூனிஸ்டுகளின் சில வறட்டுக் கொள்கைகள், இறுதியாக கம்யூனிஸ்ட்கள் பணபலமின்மை - (கொள்கைகளை/செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கக் கூட)

    பதிலளிநீக்கு
  11. தோழரே உங்கள் அன்கூலம் நிறைவேற என் வாழ்த்துக்கல்,
    அப்போதுதான் கம்யுனிஸ்ட்களை மக்கள் முழுவதும் அறியமுடியும்.

    நல்ல பதிவு... வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  12. //இப்போது கம்யூனிஸ்டுகளின் நிலைமை என்ன?//

    பிச்சைப் பாத்திரம் ஏந்தி வந்தேன் ஐயனே என் ஐயனே!

    பதிலளிநீக்கு
  13. அதிமுக வுடன் காங்கிரஸ் சேர்ந்தால் இடதுசாரிகள் திமுக கூட்டணிக்கு செல்லமாட்டார்கள் என்று கூறமுடியாது, அப்படியே தனித்தோ அல்லது சிபிஐவுடனோ கூட்டு சேர்ந்து நின்றாலோ ஒன்றும் சாதிக்கமுடியாது. திமுகவோ அதிமுகவோ இரண்டும் ஊழல் பேர்வழிகள் அல்லது மக்களின் எதிர்பார்ப்புக்கு மாறாக நடக்கக்கூடியவர்கள்தான். ஒரு அணியை தோற்கடிக்க மற்றோர் அணிக்கு ஆதரிவளிப்பது தற்காலிக தீர்வு, மற்றும் கூட்டணி மூலம் சில பிரதிநிதிகளை சட்டமன்றத்திற்கு அனுப்பினால் அங்கு இடதுசாரிகளின் குரல் மக்களுக்காக வெளிப்படும். அதனால் அதிமுக கழட்டிவிட்டால் தனித்துநிற்கவேண்டிய தேவையில்லை என்பது என் கருத்து.

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!