பத்தாண்டு கால நாவல்கள் குறித்த வாசகக் குறிப்புகள் – 10

anju vannam

தண்ணீர்க்குடம் எடுத்து தனிவழியாகப் போன தங்கை எதற்கு இஸ்லாமிய இளைஞனைப் பார்த்துச் சிரிக்கிறாள் எனப் பதறி நெல்கொட்டி வைக்கும் மச்சுக்குள் இறக்கி அவளறியாத நொடியில் மச்சுக்கதவை பூசி மொழுகிவிட்டது குடும்பமே. அதிகாலையில் வன்கொலையாக பலியிடப்பட்டவளின் மூச்சு சுற்றிக் கொண்டே அலைவதாக நம்பிக் கடவுளாக்கினர் அவளை. அஞ்சுவண்ணம் தெருவின் ஆதிக்கிஸாவான அடக்கம் செய்யப்பட்ட தாயின் கதையும் வஞ்சித்துப் பலியிடப்பட்ட பெண்ணின் கதைதான்.

 

னித மனங்களுக்குள் விளைந்து கொண்டிருக்கும் அச்சமும், வாழ்க்கை ஏன் இப்படி சிக்கலாகிக் கிடக்கிறது என்பதைத் தேடியலையும் அவனுடைய பயணமுமே அவனை மதங்களுடன் மன நெருக்கமுடையவனாக்கியது. நம்பத் துவங்கினான். நம்பிக்கைதான் மதங்களின் அடிப்படைத்தத்துவம். எல்லாவற்றையும் சந்தேகிப்பதும், அவற்றின் மீது கேள்விகளை எழுப்பிக் கொண்டேயிருப்பதும் அறிவியலின் வேலை. கேள்விகளற்று தன்னை நம்பிக்கையுடன் பின் தொடரவே மதங்கள் மனிதக் கூட்டத்தைக் கோருகிறது. உருவாக்கப்பட்டிருக்கும் நம்பிக்கைகளின் மீது அமானுஷ்யமான தன்மையை உருவாக்கிட கதைகளே மதங்களுக்குப் பெரும் கருவியாகிறது.

புராணங்களும், இதிகாசங்களும் வரலாற்றைப் போல திரித்துச் சொல்லப்பட்டதையும், அதை ஏற்கும் மன நிலைக்கு பாரபட்சமற்ற நீதி வழங்கும் என வெகு ஜனத்திரள் நம்பிக்கொண்டிருந்த நீதிமன்றங்கள் வந்ததும் சமீபத்திய உதாரணம். எல்லா மதங்களுக்குள்ளும், நம்பிக்கையை நிலை நிறுத்திடத் துடித்தலையும் கதைகள் விரவிக்கிடக்கின்றன. அவற்றின் வழியாகவே மக்கள் மதங்களைப் பின்பற்றித் தொடர்கின்றனர். அப்படியான கிஸாக்களின் தொகுப்பே அஞ்சுவண்ணம் தெரு. ஒரு கடலோரக் கிராமத்தின் கதைக்குள்ளும், சாய்வு நாற்காலிக்குள்ளும் வெளிப்பட்ட நாஞ்சில் நிலத்து இஸ்லாமியர்களின் வாழ் வையே தோப்பில் முகம்மது மீரான் அஞ்சு வண்ணம் தெருவிற்குள்ளும் வரைந்து பார்த்திருக்கிறார்.

தமிழ் நிலங்களின் திசையெங்கும் வன்கொலையாகப் பலியிடப்பட்டு தெய்வங்களாக்கப்பட்ட பெண்களின் உயிர் மூச்சு துடித்தலைகிறது. அதிகார பீடத்தில் அமர்ந்திருந்ததாலும், ஆண் எனும் மமதையிலும் தன்னுடைய பாலியல் இச்சையை எழுதிப்பார்த்திடும் பிரதியென பெண் உடலை உருமாற்றத்துடித்த அரசர்களின் கொடூரங்களை தொகுத்துப் பார்க்க வேண்டிய அவசியம் இருப்பதை அஞ்சுவண்ணம் தெரு தமிழ்ச் சமூகத்திற்கு மீண்டும் ஒருமுறை நினைவூட்டுகிறது.

வெற்றிலைக் கொடிக்காலில் தண்ணீர் பதமாக பாய்கிறதா எனப் பார்த்துக் கொண்டிருந்த பெண்ணை சாய்பு மன்னன் பெண் கேட்டுவிட்டானே என அதிர்ந்து, அவளை நிலத்தோடு நிலமாக சமாதியாக்கித் திரும்பினார்கள் அண்ணனும், தந்தையும். அரண்மனை அந்தப்புரத்திற்கு மற்றொருத்தியாக அழைத்துவிட்டானே தன் தங்கையை எனக் கொதித்து நிலத்தில் வெட்டிவைக்கப்பட்ட கம்மங்குழிக்குள் இறக்கி தன் குடும்பகௌரவம் காக்கப் பட்டதாக பெருமிதம் கொண்டிருந்தனர் அப்பாவும், சகோதரனும், ஒன்றல்ல, இரண்டல்ல ஒராயிரம் பெண்கள் தமிழ் நிலமெங்கும் குடும்பமானம் காக்க அவர்கள் அறிந்திடாத பொழுதினில் புதைக்கப்பட்டிருக்கிறார்கள். புதைந்த பெண்களின் ஏக்கப் பெருமூச்சாலே தான் ஆண்ட மன்னர்களின் கோட்டைகளும், கொத்தளங்களும் தரைமட்டமாகியிருக்கும் என்று படுகிறது.

தண்ணீர்க்குடம் எடுத்து தனிவழியாகப் போன தங்கை எதற்கு இஸ்லாமிய இளைஞனைப் பார்த்துச் சிரிக்கிறாள் எனப் பதறி நெல்கொட்டி வைக்கும் மச்சுக்குள் இறக்கி அவளறியாத நொடியில் மச்சுக்கதவை பூசி மொழுகிவிட்டது குடும்பமே. அதிகாலையில் வன்கொலையாக பலியிடப்பட்டவளின் மூச்சு சுற்றிக் கொண்டே அலைவதாக நம்பிக் கடவுளாக்கினர் அவளை. அஞ்சுவண்ணம் தெருவின் ஆதிக்கிஸாவான அடக்கம் செய்யப்பட்ட தாயின் கதையும் வஞ்சித்துப் பலியிடப்பட்ட பெண்ணின் கதைதான். ஆனால் இதுவரை சொல்லப்பட்டு வந்த கதைகளுக்கு நேர்எதிரான தன்மையில் முன் வைக்கப்பட்டு இருக்கிறது.

நாஞ்சில் நாட்டிற்கு மலையாளத்து மகாராஜாவால் சோழநாட்டிலிருந்தும், பாண்டிய நாட்டிலிருந்தும் கொண்டு வரப்பட்ட அஞ்சு நெசவாளர் குடும்பமே நாஞ்சில் நிலத்தின் ஆதி இஸ்லாமியக் குடும்பம். தஞ்சாவூர் தாயும்மா அக்குடும்பங்களின் குலவிளக்கு. பேரழகி. நகர்வலத்தின் போது மன்னனின் பார்வையில்பட சகோதரர்களும், தந்தையும் துடிக்கிறார்கள். அழைத்தது மன்னன் என்றாலும் காபி ரல்லவா? (மாற்று மதத்தவன்). ஒரு காபி ருக்கு ஒதி மடித்து சாலிஹான (பக்தியுள்ள) முஸ்லிம் பெண்ணை மணம் முடித்துக் கொடுப்பதா? எனத் துடிக்கின்றனர். மற்ற கதைகளைப் போல் இல்லாமல் பெண்ணிடமே கேட்கின்றார் வாப்பா. எம்மா ஹாஜரா நீ ஒரு காபிருக்கு மனைவியாக இருக்க விரும்பிறியா...? ஒரு காபிருக்கு நான் எப்படி மனைவியாக இருப்பேன். ஏழையானாலும் ஒரு முஸ்லிமைத்தான் கட்டிக்கொள்வேன் வாப்பா!

இங்கேயும் குழிதான் வெட்டப்படுகிறது. தாயும்மாவாகப் போகிற ஹாஜாவை இறக்கிட. குழி அருகில் கொண்டு போய் நிறுத்தி தந்தை மகளிடம் கேட்கிறார். ஈமானுள்ள (இறைநம்பிக்கை) முஸ்லிமாக இறக்க விரும்புகிறாயா? அல்லது காபிராகவா? ஈமானுள்ள முஸ்லிமாக. அப்படியானால் இந்த குழியில் இறங்கம்மா! வாப்பா..? இதுக்குள்ள எந்த மன்னனுடைய ஆட்சியும் இல்லம்மா. உன்னைப் படைச்ச அல்லாஹ்வுடைய ஆட்சிதான்.

வேறுநிலைகளில் வெளிப்பட்டாலும் ஆச்சர்யமான ஒற்றுமை இக்கதைகளின் வழியே வெளிப்படுகிறது. இஸ்லாமிய மன்னன் பெண் கேட்டதற்காக இந்துப் பெண் பலியிடப்படுகிறாள், இஸ்லாமியப் பெண் இந்து மன்னனிடமிருந்து தப்புவிக்க பலியிடப்படுகிறாள். மதங்கள் தங்களை நிறுவிடக் கிடைத்த பொருளாகவே பெண்களின் உடல்களை தீர்மானிக்கிறதே, ஏன் என்பது குறித்து ஆய்வினை நிகழ்த்திப் பார்த்தால் உடலரசியல் எவ்வளவு வன்மையானது என்பதும் கூட புரிபடத் துவங்கும்.

ஆதிக்கிஸாவின் பகுதியில் எழுத்தாளர் சிலாகித்து எழுதுகிறார். ஒரு மகத்தான கோட்பாட்டிற்கு எந்தவித ஊனமும் தட்டாமலிருக்கவும், ஒரு பாரம்பரியத்தின் பெருமைக்கு களங்கம் ஏற்படாமலிருக்கவும் புன்னகையோடு வாப்பா கையைப் பிடித்து இறக்கிய குழியில் அவள் இறங்கினாள் எனும் தோப்பிலின் குரலோடு என் மனம் ஒன்றவில்லை. அது அவரின் நம்பிக்கை சார்ந்தது என்று மட்டும் சொல்லத் தோன்றுகிறது. பெண்களின் உடலின் மீது மதங்களும், மதவெறியும் நிகழ்த்தி பார்த்திருக்கிற வன்முறையின் வரலாறு இவற்றை வாசித்துக் கடக்கும் போது எனக்குள் ஓடிக்கொண்டேயிருந்தது. கோவையும், மன்டைக்காடும், ஒரிஸாவும், குஜராத்தும் வெற்றுப்பெயர்கள் அல்ல என்பதை மட்டும் என் மனம் எனக்கு ஞாபகமூட்டிக்கொண்டேயிருக்கிறது. ஒரு பிரதியை வாசித்துக் கொண்டிருக்கும் போது மனம் பேதலித்து வேறு வேறான வரலாறுக்குள்ளும், புனைவுகளுக்குள்ளும் போய்த் திரும்புவதை வாசகனால் இனி தவிர்க்கமுடியாது என்றே எனக்குப் படுகிறது.

அடக்கப்பட்ட தாயும், தீன் பிரச்சாரம் செய்து கலிமா சொல்லி முதலிமார்களையும், பட்டாச்சாரிகளையும் முஸ்லிமாக்கிய மெஹமூதப்பாவும் அஞ்சுவண்ணம் தெருவின் காவல் தெய்வங்கள். வணக்கத்திற்குரியவன் அல்லா ஒருவன் மட்டுமே என நம்புவதால் அதிகாலையில் எதிர்ப்படும் போதெல்லாம் என்னைப்பார்த்து காலை வரவேற்பு சார் எனச் சொல்லிக் கொண்டிருக்கும் தமிழாசிரியர் ஒருவரை எனக்குத்தெரியும். வணக்கம் என்ற சொல்லிற்கு கூட உரியவன் இறைவன் அல்லாவே என நம்புகிற இஸ்லாமியர்களுக்கு மத்தியில் தான் தர்ஹாக்குள் குறித்த நம்பிக்கை, அவுலியாக்களின் மதப்பிரச்சாரம், சூபிகள் குறித்தும் அவர்களின் ஹாரமத்துகள் (அதிசயங்கள்) பற்றிய பெருமிதமும் நிலைபெற்றிருக்கிறது.

மஹமூதப்பா தைக்காப்பள்ளி வாசலை விட உயரமான வீடான நபீஸா மன்ஸின் சொந்தக்காரர். வர்த்தகம் இழந்து, வாழ்க்கையிழந்து மன்ஸிலை பேயடையப் போட்டு எங்கோ போய்விடுகிறார். நபீஸா மன்ஸிலை தாருல்ஸாஹினா எனப் பெயர் மாற்றித் தங்கிய குடும்பத்திற்கும் வாழ்க்கையில் சுபிட்சம் லபிக்கவில்லை. அதற்கு காரணம் என்று அஞ்சுவண்ணம் தெருவே நினைப்பது, பள்ளிவாசலை விட உயர்ந்ததாக வீடு இருப்பதே என்பது தான். வீட்டை விட உயரமாக இரண்டு மினார்களைப் பள்ளிவாசலுக்கு கட்டிவிட்டால் போதும் என்று நிர்பந்திக்கின்றனர். மற்றவர்களால் வகாபி எனச் சொல்லப்படும் கதை சொல்லியின் தந்தை அதற்குச் சம்மதிப்பதில்லை. இது மாதிரியான நம்பிக்கைகளை நாவலுக்குள் கடைசிவரை எதிர் கொள்பவராக எதிர்ப்படுகிறார். கடைசி வரையிலும் மினாராக்கள் கட்டித் தரப்படவும் இல்லை. தவ்ஹீதுகளின் தலையீட் டால் தைக்காப்பள்ளியும் இடிந்து போகிறது. இவற்றின் ஊடே ஆதி இஸ்லாமியத் தெரு தன்னை எழுதி வேறு ஒன்றாக்கிய கதையே அஞ்சுவண்ணம் தெரு.

மீரானே நாவலில் சொல்வது போல இந்த நாவல் வரலாற்றை ஞாபகப்படுத் திடும் செயல்தான். வரலாறு ஆபத்துக் கட்டங்களில் கையெட்டிப் பிடிக்கக் கூடிய நினைவுகள்தான் என்பது மக்களுக்குத் தெரியவில்லை. பன்னாட்டு ஏகாதிபத்திய ஆதிக்கம் நடக்கும் இன்றைய ஆபத் தான சூழலில் ஏகாதிபத்தியத்திற்கு எதிராகப் போராடுவதற்கு நமக்கு சில நினைவுகள் தேவைப்படுகின்றன. அதனால்தான் மாப்ளா கலவரத்தின்போது களப்பலியான அயம்மாதாஜியின் வரலாற்றை புனைவாகக் கட்டமைத்திருக்கிறார். கிலாபத் போரில் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டவர்களின் விடுதலை நாளில் நடந்த கலவரத்தில் வெள்ளைச் சிப்பாய்களை களத்திலே வெட்டி வீழ்த்தி தானும் பலியான விடுதலை வீரன் அயம்மாதாஜி.

வரலாற்றுத் தகவல்களை புனைவுறுத்தி நாவலுக்குள் விதவிதமான கதைகளை எழுதிப் பார்த்திருக்கிறார் மீரான். இஸ்லாமிய வாய்மொழி வரலாற்றுக் கதைகள் வழிநெடுக நாவலில் தென்படுகிறது. குறிப்பாக தக்கலை பீரப்பாவின் கதை நமக்கு உணர்த்துவது உழைப்பே கடவுள் என்கிற தத்துவத்தைத்தான். பள்ளிவாசலுக்கு வந்து தொழ மறுக்கும் பீரப்பாவை யாவரும் தொழுகைக்கு அழைத்திடும் போது பாருங்கள் நான் தொழுது கொண்டு தானிருக்கிறேன் எனச் சொல்லி நெசவு செய்யும் இடத்தை காட்டுகிறார். அதற்குள் மெக்கா, மெதீனா காட்சிதந்ததாக கூறும் பீரப்பாவின் கதை தமிழ் இஸ்லாத்திற்கும் சூபிமார்க்கத்திற்கும் இடையேயான நெருக்கத்தின் அடையாளம் தான். இப்படித்தான் போர்ச்சுக்கீசிய மாலுமிகளிடம் இருந்து கடற்கரை கிராமத்தைக் காப்பாற்றிட போரிட்ட அப்துல் மரைக்காயரின் கதையென நாவலுக்குள் இஸ்லாமிய தொன்மக்கதைகள் கட்டி வைக்கப்பட்டுள்ளன.

மம்முதம்மா ஒரு அசாத்தியமான பெண் பாத்திரம். வீடின்றி திண்ணையில் ஒடுங்கியவள் அஞ்சுவண்ணம் தெருவின் திறந்த கண்ணாடியாகிறாள். அவளறியாது இந்த தெருவிற்குள் அணுவும் அசைவதில்லை. இரவு பொத்திக் காப்பாற்றி வைத்திருக்கும் ரகசியங்களை தண்ணீர் பிடிக்கும் குழாயிலிருந்து வெளியேறும் நீரைப்போல வெளியேற்றுபவள். நபிகள் நாயகம் காட்சிதந்த வேம்படி பள்ளி வாசலுக்குச் சொந்தக்காரக் குடும்பமான ஆலிப்புலவரின் வாரிசுகளின் அழிவிற்காக மனம் வருந்துபவளும் அவள்தான். தவ்ஹீதுகளின் வருகைக்குப் பிறகு சிக்கலாகும் தெருவிற்காக வருந்திக் கிடப்பவளும் அவள்தான். இந்த மம்முதம்மா சுதந்திரப் போராளி அயம் மாதாஜியின் வழித்தோன்றல் என்கிற ரகசியம் வெளிப்படும் இடத்தில் வாசகன் நிலை தடுமாறிப் போகிறான். தேச விடுதலைக்கு உயிர் தந்த குடும்பத்துப் பெண்ணிற்கு தெருவின் திண்ணையே வீடான சாபத்தையே வாழ்க்கை அவளுக்குப் பரிசாக அளித்தது துரதிர்ஷ்டம் தான்.

வளைகுடாவிற்கு பணி நிமித்தம் சென்று தமிழ்நிலம் திரும்பிய இஸ்லாமிய இளைஞர்களின் மனங்களுக்குள் தவ்ஹீதுகளின் கருத்துக்கள் சேகரமாகின்றன. அதன் பின் அவர்கள் அஞ்சுவண்ணம் தெரு, வேம்படித்தெரு என நிறைந்திருக்கும் எல்லா மதச்சடங்குகளையும் கேள்வி கேட்கிறார்கள். இது எல்லா ஊரின் இஸ்லாமியத் தெருக்களுக்குள்ளும் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது.

தொப்பிபோட்டுத் தொழணுமா? கூடாதா? விரல் ஆட்டித் தொழணுமா? கூடாதா? எனும் விவாதங்கள் நடந்து கொண்டிருக்கும் இஸ்லாமியத் தெருவில் ஒன்றாகிப் போகிறது அஞ்சு வண்ணம் தெரு. இறந்தவர்களின் கபர்ஸ்தானை வழிபடாதீர்கள். அவுலியாக்களுக்கு தனியே ஆற்றல் எதுவும் இருந்தது இல்லை. தர்ஹா வழிபாடும், சந்தனக்கூடு வழிபாடும் மார்க்கவிரோதச் செயல்கள் என தவ்ஹீது இளைஞர்கள் பிரச்சாரம் செய்கிறார்கள். வைதீக இஸ்லாமியத் தத்துவத் தளமாக தமிழ் இஸ்லாமியத் தெருக்களை ஆக்குவதே அவர்களின் நோக்கம். சூபி மார்க்கத்தின் சாயல்களோடு அரபு வணிகத் தொடர்பால், முகம்மது நபியின் காலத்திற்கு முன்பாகவே தமிழ் நிலத்தில் இஸ்லாம் கால்பதித்திருக்கிறது என்கிற வரலாற்று உணர்வை நாவல் ஏற்படுத்துகிறது.

தனித்த தமிழ்நிலத்திற்கு மட்டுமேயான இஸ்லாமியச் சடங்குகளும், வாழ்வியல் கூறுகளும், நம்பிக்கையை வலுப்படுத்திடும் அசாத்தியமான கதைகளோடும்தான் வாழ்கிறார்கள். ஆனால் அவற்றை அழித்து ஒற்றைத் தன்மையிலான இஸ்லாத்தை கட்டமைக்க தவ்ஹீதுகள் முயற்சிக்கிறார்கள். இதனைக் கட்டுடைக்க வேண்டிய மீரான், மாறாக சுன்னத்துல் ஜமாத் பிரதிநிதியை போல நாவலின் பல இடங்களில் பேசுகிறார்.

பெட்ரோல் துட்டுல கலவரம் பண்ணிக்கிட்டு திரியுறாங்க என்பதும், பளிங்குப் பள்ளிவாசல் தேவையா? என்றும் கதையாடும் இடங்களில் மீரானின் குரலுக்குள் பதிந்திருக்கும் கோபமே வெளிப்படுகிறது. இது இஸ்லாமியர்கள் குறித்த காவிப்படையின் குரலைப்போலவும் வெளிப்படுகிறது. காலம், காலமாக பின்பற்றப்படுகிற இஸ்லாமியத் தொன்மங்கள், அதிசயம் நிகழ்த்திய அவுலியாக்களின் கதைகள், அவற்றின் மீதான மக்களின் அசைக்கமுடியாத நம்பிக்கைகள் இவற்றிற்கு வைதீக இஸ்லாத்தை எதிர்த்து நிற்கும் ஆற்றல் இருக்கிறது என்று நான் உறுதியாக நம்புகிறேன்.

-ம.மணிமாறன்

கருத்துகள்

0 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!