ஒரு விவாகரத்தின் பின்னால்...

’இருவருக்கும்  திருமணமாகி நான்கு வருடங்கள்தான் ஆகியிருக்கின்றன. இப்போது இரண்டரை வயதில் கைக்குழந்தை இருக்கிறது. இருவரும் கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலே பிரிந்திருக்கின்றனர். சேர்த்து வைக்க வேண்டும்.’  இதுதான் போனில் அவர் சொன்ன விஷயம். போன் செய்தவர் ஒரு அரசு ஊழியர் சங்கத்தலைவர். அவர்களின் தோழர் ஒருவரின் மகள்தான் அந்தப் பெண். எங்கள் வங்கியில், எங்கள் தொழிற்சங்கத்தில் உள்ள ஒருவர்தான் அந்தப்  பையன். இது நடந்து பல வருடங்களிருக்கும். அப்போது எங்கள் சங்கத்தின் பொதுச்செயலாளராயிருந்தேன்.

பேசி இரண்டு நாட்களில் அந்த சங்கத்தலைவரும், பெண்ணின் தந்தையும் எங்கள் வீட்டிற்கு வந்தார்கள். விஷயங்களை ஆதியோடந்தமாகச் சொன்னார்கள். என்னோடு சேர்ந்து அம்முவும் எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டிருந்தாள். ஒருநாள் காலையில் வீட்டில் சண்டை நடந்திருக்கிறது. அப்புறம் வேலைக்குச் சென்றிருக்கிறாள். கொஞ்ச நேரத்தில் அவனும் அங்கு சென்று அவளோடு கடுமையாக பேசியிருக்கிறான். இறுதியாக, அங்கேயே அவளை அடித்தும் இருக்கிறான். அவள் அழுதுகொண்டு, அப்படியே வீட்டிற்கு சென்று குழந்தையை எடுத்துக்கொண்டு தன் பிறந்த வீட்டிற்கு வந்தவள்தான்.  அவன் விவாகரத்து கேட்டு கோர்ட்டுக்குச் சென்றிருக்கிறான். வழக்கு நடந்து கொண்டு இருக்கிறது.

அவர்கள் திரும்ப திரும்ப என்னிடம் சொன்னது ஒன்றுதான். பையனுக்கு தாழ்வு மனப்பான்மை என்றும், அதனாலேயே பெண்ணை படாத பாடு படுத்தியதாகவும் சொன்னார்கள். தான் சொன்னபடியெல்லாம் அவள் கேட்கவேண்டும் என்கிற வெறி அவனுக்கு இருப்பதாக குறிப்பிட்டார்கள். பையனின் குடும்பத்தில் பெரிய அளவுக்கு படித்தவர்களோ, உத்தியோகத்தில் இருப்பவர்களோ இல்லையென்பதால்தான் அவன் அப்படி குறுகிய மனப்பான்மையில் இருப்பதாக பெண்ணின் தந்தை திரும்பத் திரும்ப கூறினார். நான் பையனிடம் பேசிவிட்டு அவர்களை வந்து சந்திப்பதாகச் சொன்னேன்.

பையன் என்ன பையன். என்னைவிட சில வயதுகள்தான் இளையவனாயிருப்பான். நன்றாகத் தெரியும். இருக்கும் இடம் தெரியாத ஒரு பூச்சி போல இருப்பான் வங்கியில். யாரிடமும் அதிர்ந்து பேச மாட்டான். அப்படி ஒரு மரியாதையோடு பழகுவான். அவனா இப்படி என்ற ஆச்சரியமே எனக்குள் ஒடிக்கொண்டு இருந்தது. ஒருநாள் சாயங்காலம் அவன் வசித்துவரும் ஊருக்குச் சென்றேன்.  விசாரித்து அவன் இடத்தையடைந்தேன். என்னைப் பார்த்ததும், அதிர்ச்சியும், ஆச்சரியமும் சேர்ந்து கொள்ள, வரவேற்று உட்கார வைத்தான். அங்கு வேறு யாருமில்லை. சொல்லியும் கேளாமல் என்னை இருக்க வைத்துவிட்டு, டீ வாங்கிவர, சட்டையைப் போட்டுக்கொண்டு வெளியே கிளம்பினான். முன்னறையில் நிறைய சாமி படங்கள். ஊதுபத்தி மணம் இருந்தது. டிவி, பிளேயர் எல்லாம் இருந்தன. அலமாரியில் சில புத்தகங்கள். அதை நோக்கிப் போனேன். வங்கித் தேர்வு சம்பந்தமான புத்தகங்கள். யோகாசனம், தியானம் பற்றி சில புத்தகங்கள். அவைகளுக்கிடையில் இரண்டு சி.டிக்கள். அவை வேறுவகையானவை. பாவமாய் இருந்தது.

டீ குடித்து பேசிக்கொண்டு இருந்தபோது, முழுக்க முழுக்க பெண்ணைப் பற்றி ஒரு அம்பாரம் புகார் சொன்னான். திமிர் பிடிச்சவ, கொழுப்பு பிடிச்சவ என்று அடிக்கடி அவளைப்பற்றி குறிப்பிட்டான். தன் வயோதிகத் தாயை அவள் கவனிக்க மறுத்ததே பிரச்சினைக்குக் காரணம் என்று ஆத்திரத்தோடு குறிப்பிட்டான். காது சரியாகக் கேளாத தாயை கிண்டல் செய்ததையெல்லாம் சொன்னான். வெறுப்பு என்று ஒருவர் மீது வந்துவிட்டால் எல்லாமும் குற்றமாகிவிடுகிறது. பொறுமையாக எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டு, அவனிடம் நிறைய பேசினேன். விவாகரத்து என்பது சரியான தீர்வல்ல, வாழ்க்கை என்பதே ஒருவரையொருவர் புரிந்துகொள்ள முயற்சிப்பதுதான், பெண் என்பவள் தனது கடந்தகாலத்திலிருந்து பிடுங்கிக்கொண்டு ஒரு புதிய இடத்தில் பழக ஆரம்பிக்கிறாள், அவளை நாம் எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும் என்றெல்லாம் சொன்னேன். “குழந்தையைப் பார்க்கத் தோன்றவில்லையா?” என்றதும் விசும்பி அழ ஆரம்பித்தான். ஆறுதல் சொல்லித் தேற்றி, அருகிலிருந்த ஓட்டலில் சாப்பிடச் சென்றோம். “ஏங்கூட திரும்பவும் சேர்ந்து வாழ அவள் சம்மதிப்பாளா?” என்றான். “பேசிச் சொல்கிறேன்” என விடைபெற்றேன்.

வீட்டில் வந்து அம்முவிடம் எல்லாம் சொன்னேன். அடுத்தநாள் பெண்ணின் தந்தைக்கு போன் செய்து, இரண்டு நாட்கள் கழித்து ஞாயிற்றுக்கிழமையன்று அவர்களை வீட்டில் வந்து சந்திப்பதாய்ச் சொன்னேன்.

ஒரு பெண் இன்னொரு பெண்ணிடம் தயக்கங்கள் உடைத்துப் பேசுவாளென கூடவே அம்முவையும் அழைத்துச் சென்றேன். அப்படியெல்லாம் இல்லாமல் மிக இயல்பாகவும், வெளிப்படையாகவும்  இருந்தாள் அவள். ஒரு சமயத்திலும் குரல் உடையவில்லை. நிதானமாகவும், தெளிவாகவும், அழுத்தமாகவும் வந்தன வார்த்தைகள். “எல்லோர் முன்னாலும் என்னை அடித்ததை விடுங்கள். அன்று காலையில் வீட்டில் வைத்து சண்டை நடக்கும்போது, என்னவோ எதோ என்று அழுத எட்டு மாசக் குழந்தை முதுகில் அடித்த அவரெல்லாம் மனுஷனா?” என ஆத்திரத்தோடு கேட்டாள். “சார் அவருக்கு நான் புத்தகம் படிக்கிறது கூட பிடிக்காது” என்று சிரித்துக்கொண்டே சொன்னாள். புத்தகங்கள் குறித்து பேசத் தொடங்கியதும், எல்லாம் மறந்து ஜானகிராமன், நா.பார்த்தசாரதி, கல்கி, பாலகுமாரன், வண்ணதாசன் என தனக்குப் பிடித்தவர்களின் எழுத்துக்களில் புகுந்துகொண்டாள். “அந்தாளு குமுதம் கூடப் படிக்க மாட்டார்” என்று கடைசியில் நிறுத்தி யோசனையில் ஆழ்ந்தாள். “என்னால் முட்டாளாகவோ, அடிமையாகவோ பாவனையெல்லாம் செய்ய முடியாது” என்றாள். சங்கடமாக இருந்தது. சேர்ந்து வாழ்வதில் சிறிதும் அவளுக்கு விருப்பமில்லை. அவளது அப்பாவும், அம்மாவும் எங்களோடு சேர்ந்து அவளுக்குப் புத்திமதி சொல்லிக்கொண்டு இருந்தார்கள். அவள் பிடிவாதமாகவே இருந்தாள்.

பெண்ணின் தந்தை என்னிடம் “அவருக்கு உங்கள் சங்கத்தின் மூலம் இந்த ஊர்ப்பக்கம் டிரான்ஸ்பர் வாங்கித் தர முடியுமா?” என்றார். முயற்சிப்பதாய்ச் சொன்னேன். “அப்படி வாங்கிவிட்டால், இங்கேயே ஒரு தனி வீடு பார்த்து இருவரையும் இருக்கச் செய்யலாம். இவளுக்கும் நாங்கள் அருகிலிருப்பது ஆதரவாக இருக்கும். அவரும் கொஞ்சம் எங்களையெல்லாம் புரிந்துகொள்வார். சகஜமாவார்” என்றார். நான் அந்தப் பெண்ணின் முகத்தைப் பார்த்தேன். அமைதியாக இருந்தாள். கொஞ்சம் நம்பிக்கை வந்தது. அவனிடமும் பேசிவிட்டு, சொல்கிறேன் என அங்கிருந்து கிளம்பினோம்.

அவனிடமும், பெண்ணின் தந்தையிடமும் மாறி மாறி இரண்டு முறை பேசிய பிறகு ஒரு மாதிரியாக இணக்கம் ஏற்பட்டது. ‘தாங்கள் இருவரும் சேர்ந்து வாழப் போகும் வீடு, அந்த ஊரில் இருக்கட்டும். ஆனால் பெண்ணின் வீட்டிற்கு அருகில் இருக்கக் வேண்டாம். தன்னோடு தன் தாயும் இருப்பார்கள்’ என்பதுதான் அவனின் கோரிக்கையாக இருந்தது. அவர்களும் சம்மதித்தார்கள். ஒரு நல்ல நாளில், அவனை அழைத்துக்கொண்டு அவர்கள் வீட்டிற்குச் சென்றேன். ஒரு மணிநேரம் போல அங்கு இருந்தேன். அவள் அவன் முகத்தைப் பார்க்கக்கூட எத்தனிக்காதது ஆச்சரியமாக இருந்தது.

ஒரு மாதம் கழித்து, அவன் வழக்கை வாபஸ் பெற்றுக் கொண்டதாகவும், அவர்கள் இருவரும் சேர்ந்து வாழ்கிறார்கள் எனவும் பெண்ணின் தந்தை போனில் சொல்லிவிட்டு நன்றி என்றார். சந்தோஷமாக இருந்தது. அப்புறம் சுத்தமாக மறந்தே போனேன்.

ஏழெட்டு மாதங்கள் கழித்து, அவனை ஒருநாள் தலைமையலுவலகத்தில் வைத்துப் பார்த்தேன். அருகில் சென்று விசாரித்தேன். வெறுப்பாக என்னைப் பார்த்தவன், “எங்க ஊருக்குப் பக்கத்துல டிரான்ஸ்பர் வேணும். அதுக்குத்தான் வந்திருக்கேன்” என்றான். “என்ன ஆச்சு?’ என்றதும், சட்டென, “என் வாழ்க்கையை கெடுத்துப் பாழாக்கிட்டீங்க. மானம், ரோஷம் எல்லாம் விட்டுட்டு நிக்குறதுதான் மிச்சம்.” என்றான். வெளியே அழைத்துப் பேசவும்தான் கொஞ்சம் புரிந்தது. இரண்டு மூன்று மாதங்கள்தான் ஒரே வீட்டில் இருந்திருக்கிறார்கள். அவள் அவனைத் தொடவே அனுமதிப்பதில்லையாம். பட்டும் படாமலும்தான் பேசுவாளாம். திரும்பவும் சண்டை வந்துகொண்டே இருந்திருக்கிறது. அவன் பெண்ணின் தந்தையிடமே எல்லாவற்றையும் சொல்லி அழுதிருக்கிறான்.  அவரும் இப்போது டைவர்ஸுக்கு சம்மதித்து விட்டாராம். எதுவும் சொல்லத் தோன்றாமல் நின்றிருந்தேன். அடுத்த இரண்டு நாட்களில் அவன் எங்கள் சங்கத்தின் உறுப்பினரிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்வதாக கடிதம் அனுப்பியிருந்தான்.

 

சில மாதங்களுக்கு முன்பு, சாத்தூர் ரெயில்வே பீடர் ரோட்டில் யமஹா வண்டியில் அவனைப் பார்த்தேன். பின்னால் ஒரு பெண்ணும், முன்னால் ஒரு குழந்தையும். என்னைப் பார்த்ததும், சிரித்துக்கொண்டே வண்டியை நிறுத்தினான். அவனும், குழந்தையும் மொட்டை போட்டு சந்தனம் பூசியிருந்தார்கள். உடல் பூசி, பருமனாய் இருந்தான். இருக்கன்குடி கோயிலுக்குப் போய் வருவதாகச் சொன்னான். நலம் விசாரித்தான். ‘பார்ப்போம்’ என வண்டியை ஸ்டார்ட் செய்தான். அந்தப் பெண்ணும் விடைபெறுவது போல தலையை அசைத்தாள். அவன் தோள்களைப் பற்றிக்கொண்டாள். தூரத்தில் சென்றிருந்தார்கள். அந்தப் பெண்ணின் கண்கள் எதையோ சொல்லிக்கொண்டு இருந்தன.

சரி, முதலாமவள் என்னவாகியிருப்பாள்? இதுபோல வண்டியில் தோள் பற்றிச் சென்று கொண்டு இருப்பாளா? எஸ்.ராவின் கதைகளைப் படித்துக்கொண்டு இருப்பாளா?

கருத்துகள்

38 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
  1. // இருவருக்கும் திருமணமாகி நான்கு வருடங்கள்தான் ஆகியிருக்கின்றன. இப்போது இரண்டரை வயதில் கைக்குழந்தை இருக்கிறது. இருவரும் கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலே பிரிந்திருக்கின்றனர். //

    // “எல்லோர் முன்னாலும் என்னை அடித்ததை விடுங்கள். அன்று காலையில் வீட்டில் வைத்து சண்டை நடக்கும்போது, என்னவோ எதோ என்று அழுத எட்டு வயசுக் குழந்தை முதுகில் அடித்த அவரெல்லாம் மனுஷனா?” என ஆத்திரத்தோடு கேட்டாள்.//

    இரண்டுக்கும் முரணாக இருக்கிறதே... கல்யாணம் ஆகி 4 வருஷம் ஆனால் குழந்தைக்கு 8 வயசு..

    பதிலளிநீக்கு
  2. மன்னிக்கவும். எட்டு மாசத்திற்கு, எட்டு வயசு என்று வந்திருக்கிறது. சுட்டிக்காட்டியதற்கு நன்றி. திருத்தி விட்டேன்.

    பதிலளிநீக்கு
  3. excellent write-up.

    ஒத்துப் போகமுடியாவிட்டால் பிரிந்து விடுவதே நல்லது.

    பதிலளிநீக்கு
  4. மாதவராஜ், என்ன சொல்வதென்றே தெரியவில்லை. :(

    பல விவாகரத்துகளின் மூலக்காரணத்தை ஆராய்ந்தால் மிகச் சிறியதாக பொருட்படுத்தவே தேவையில்லாததாக இருக்கும். அகங்காரமும் புரிதலின்மையும் விட்டுக்கொடுக்காத வீம்பும் அதை ஊதிப்பெருக்கி ஜென்மப் பகைவர்கள் அளவிற்கு கொண்டு வந்து விட்டுவிடுகின்றன. யாராவது பேசி அந்த மிகப் பலூனை ஊசியால் குத்தினால் பொத்தென்று உடைந்துவிடும். காற்று அல்லாமல் மண் கொண்டு நிரப்பின பலூனாக இருந்தால் கடினம்தான்.

    பதிலளிநீக்கு
  5. என்னவோ எதோ என்று அழுத எட்டு மாசக் குழந்தை முதுகில் அடித்த அவரெல்லாம் மனுஷனா?” என ஆத்திரத்தோடு கேட்டாள்.


    ----------

    மிருகம்...:((
    ------------

    “என்னால் முட்டாளாகவோ, அடிமையாகவோ பாவனையெல்லாம் செய்ய முடியாது” என்றாள்.

    -----------

    மிக சரி..

    பதிலளிநீக்கு
  6. சரி, முதலாமவள் என்னவாகியிருப்பாள்? இதுபோல வண்டியில் தோள் பற்றிச் சென்று கொண்டு இருப்பாளா? எஸ்.ராவின் கதைகளைப் படித்துக்கொண்டு இருப்பாளா?

    -------------------------

    மரம் மீண்டும் துளிர்க்கணும்னு அவசியத்தை விட, பட்டுப்போகாமல் இருந்ததே முக்கியம்..

    பதிலளிநீக்கு
  7. கடைசி வரிகள் என்னென்னவெல்லாம் சொல்கின்றன??

    நினைவை விட்டு அகலமறுக்கும் ஆழமான வரிகள்...

    பதிலளிநீக்கு
  8. யாருக்காக வருத்தப்படுவது...

    உங்களைப்போலவே கடைசிக்கேள்வி மனதில் எழுகிறது. பதில் தெரிந்தால் வேறு பதிவில் சொல்லவும்.

    பதிலளிநீக்கு
  9. அருமையான நடை.அ.புனைவுக்கு அட்டகாசமாய் பொருந்தும்.அப்பறம் யாரும் இவங்களுக்காக பேசக்கூடாது.அதுவே அவங்களுக்கு ஈகேவே தூண்டும் குறிப்பாக பெண்கள் சண்டைக்கு அப்பறம் கொஞ்சம் அதிகமாகவே ஈகோ பாக்கிறது அறிவியல் பூர்வமாய் உன்மை.

    பதிலளிநீக்கு
  10. இதோ இவர் வாழ்வை தொடங்கிவிட்டார். எஸ்.ரா.வோ, தி.ஜா.வோ அந்தம்மாவிற்கு. ஒருவேளை, பிரயாசைகளுக்கு பிறகு, தோள் பற்றி பிரயாணிக்க , ஆளும் வண்டியும் கூட கிடைத்து விடலாம் இந்த அம்மாவிற்கும். (கிடைத்தால் ஆசுவாசம்).

    எல்லாம் சரி. அந்த முதல் குழந்தை? மொட்டை அடித்து சந்தனத்தை பூச வேண்டியதுதான். இல்லையா?

    பயமா இருக்கு மாது வாழ்வ நினைச்சா.

    பதிலளிநீக்கு
  11. 60 வயதாகிறது,இவர்களுடைய பிரச்சினை என்னவென்று புரிய மாட்டேன் என்கிறது.மனதை ஈரமாகவும்,விட்டுகொடுத்து போவதை பழக்கமாக்கி கொண்டாயிற்று. அந்த முதலாமவளை நினைத்தால் வருத்தமாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  12. //அந்த முதல் குழந்தை?//

    முதலில் தோன்றியதும் நினைவில் இருப்பதும் இந்தக் கேள்விதான்.

    அவ்வளவு வாசிப்பும் பக்குவமும் இருக்கும் ஒருவர் அதையும் வென்று காட்டலாம் என்ற நம்பிக்கை இதமளிக்கிறது.

    பதிலளிநீக்கு
  13. மிக அழுத்தமான கதை. நண்பர் மாதவராஜ் இடம் இனி சொந்தக் கதை சோகக் கதை சொல்லி வர பயப்படுவாங்க. அப்படியே பதிவில ஏத்திவிடறாரு .

    இந்த கதையைப் பொருத்தவரைக்கும் யாரை குற்றம் சொல்வீர்கள் என்பது நிதர்சனம். பெற்றோர் திருமணம் செய்து தான் வைக்க முடியும். பெற்றோர் மற்றும் உற்றார் உறவினர் எல்லாம் ஓரளவுக்கு தான் வாழ்க்கை மேனுர உதவ முடியும். மற்ற படி அவர் அவர் தான் வாழும் வாழ்க்கைக்கு பொறுப்பு ஏற்க வேண்டும்.

    இதை அவர்கள் படிக்கும் பொது உணர்வார்கள். அவசியம் படிக்க வேண்டும். But too late.

    பதிலளிநீக்கு
  14. வெளிநண்பர்களிடம் நாகரிகத்துடன் பழகுகின்ற நாம் சில வேளைகளில் வீட்டில் எல்லை மீறி விடுகிறோம்... உரிமை எடுக்கிறோம் என்கிற பெயரிலும் துணை நம்மவர் என்கிற எண்ணத்திலும் எதை வேண்டுமானாலும் குறை சொல்வது, தேவைப்படாமல் சினம் கொள்வது என்பன தாம் இது போன்ற பிரிவுகளுக்குக் காரணமாகிவிடுகின்றன. இவர்களை எல்லாம் 'நமக்கான குடும்பத்தையும்' 'ஆதலினால் காதல் செய்வீரை'யும் படிக்கச் சொல்ல வேண்டும். அப்போதாவது திருந்துவார்களா எனப் பார்க்கலாம்.

    பதிலளிநீக்கு
  15. இவர் அவர்களுடன் உரையாடியது ஒரு சில மணி நேரங்கள். அதில் உள்ள ஒரு பங்கை மட்டும் அவரால் எழுத்தில் கொண்டு வந்திருக்க முடியும். இதை ஒரு நல்ல புனைவாக வேண்டுமென்றால் எடுத்துக்கொள்ளலாம். அதைவிட்டு இந்த பதிவின் மூலமாக அவர்கள் குடும்பத்தில் நடந்த பூசல்களை முழுவதும் புரிந்தது போல் நினைத்துக்கொண்டு, அவர்கள் வாழ்வின் முடிவுகளை பற்றி கருத்துக்கள் சொல்வது பயங்கர காமெடியாக இருக்கிறது.

    அதுவும் புன்னகை தேசம் கூறியுள்ள "மிகச்சரி" ஒருவித கவலையளிக்கறது. முட்டாள்தனமாக பேசிக்கொண்டே "நான் முட்டாளாக மாட்டேன்" என்று சொல்லும் ஆண்களையும்/பெண்களையும் நான் பலமுறை பார்த்துள்ளேன். (என்னுள்ளும்)

    பதிலளிநீக்கு
  16. தன்னை விட அழகான மனைவியை சகித்துக் கொள்ளும் ஆண்களால், தன்னை விட அறிவாளியான மனைவியை சகித்துக் கொள்ள முடிவதில்லை என்று மனோதத்துவ நிபுணர் ஒருவர் கூறியது நினைவுக்கு வருகிறது. இதனால் தான் அச்சம், மடம் என பெண்களுக்குரிய குணங்களை பகுத்து வைத்திருந்தார்கள் போலும். ஆனால் குழந்தைகளுக்காக அத்தனையையும் சகித்துக் கொண்டு, வாழ்பவர்களும் இருக்கிறார்கள். இந்த சூழலில் பாதிக்க படுபவர்கள், பாவம் குழந்தைகளே!

    பதிலளிநீக்கு
  17. முத்தாய்ப்பு வரிகளில், வண்ணதாசனின் இளகிய நீட்சிதான் எஸ்ரா என்று சொல்ல வருகிறீர்களோ.

    கனவுப் பனிமூட்டம் சிந்திப்பதுமில்ல சிந்திக்க வைப்பதுமில்லை. வாடகைக்கு வந்து வருடிக்கொடுத்துவிட்டுப் போய்விடுகிறது.

    எழுத்தாளர்கள் தங்களை அவதாரப் புருஷர்கள்போல புனைவுகாட்சிப்படுத்திக் கொள்வதைவிட ஆபாசம் ஏதுமில்லை.

    ரமணி சந்திரன் தான் ஒரு பெரிய்ய செலாவணி என்று உள்ளுக்குள் நினைத்துக் கொள்கிராறோ என்னவோ ஆனால் அவருடைய வாசகர்கள் மற்ற மனிதர்களைவிடத் தங்களை உயர்வாக நினத்துக்கொண்டு அடுத்தவர்களை உதாசீனப்படுத்துவதில்லை என்றே படுகிறது. அவர்களேக்கூட தம் வாசிப்பு பற்றி மிதமான எண்ணமே கொண்டிருக்கின்றனர்.

    விஜய் ரஜினி படம் பார்த்து வாழ்க்கையைத் தொலைத்து ஒட்டுண்ணிகளாய் ஆனவர்கள் அதிகமில்லை என்றே தோன்றுகிறது. இதில் இருபது வருஷமாக என் பொண்டாட்டி என்னோடுதான் இருக்கிறாள் என்பதுகூட என் மகன் சொல்லித் தெரிந்து கொள்ளும் அவ்வளவுக்கு நிற்காத பேதி போல எளுதிக்கொண்டே இருந்துவிட்டேன் என்கிற அலம்ம்பல் வேறு.

    பதிலளிநீக்கு
  18. பொதுவாக இந்த மாதிரி பிரச்சினைகளில் ஆண்களைத்தான் எல்லாரும் குறை சொல்வார்கள். ஆனால் இப்போதெல்லாம் படித்த நடுத்தர குடும்பங்களில் பெண்ணுரிமை என்ற பெயரில் திமிராக நடந்து யாரையும் மதிக்காமல் குடும்பங்களை சீரழிக்கும் பெண்கள் அதிகரித்து வருகின்றனர். பல குடும்பங்களில் ஆண்கள்தான் பொறுத்துப் போகின்றனர். காலம் மாறி விட்டது.

    பதிலளிநீக்கு
  19. //சரி, முதலாமவள் என்னவாகியிருப்பாள்? இதுபோல வண்டியில் தோள் பற்றிச் சென்று கொண்டு இருப்பாளா? எஸ்.ராவின் கதைகளைப் படித்துக்கொண்டு இருப்பாளா?//

    முதலாமவளை விட அந்தக் குழந்தை என்னவாகியிருக்கும் என்பதே எனக்குப் பெரும் கவலை.

    இதை நீங்கள் ஒரு சம்பவமாக விவரித்ததற்குப் பதில் ஒரு புனைவாக எழுதியிருக்கலாம். இப்போது சாத்தூரில் வங்கியில் பணிபுரியும் யமஹா பைக் வைத்திருக்கும் யாரைப் பார்த்தாலும் இவன் அவனாக இருக்குமோ என்ற எண்ணம் இதைப் படிப்பவருக்கு வருவதைத் தவிர்க்க முடியாதே???

    இனி நிஜ சம்பவங்களை அப்படியே எழுதுவதைத் தவிருங்களேன்??

    பதிலளிநீக்கு
  20. கடைசி வரி என்னைச் சற்று தொந்திரவு செய்தது..அவளது புத்தகம் படிக்கிற பழக்கம்தான் அவளையும் அவனையும் அன்னியப் படுத்தி விட்டதோ..நானும் இதே போன்ற ஒரு பெண்ணைச் சந்தித்தேன். ஏறக் குறைய இதே போன்ற ஒரு முடிவுக்கு வரும் முன்பு தனது வாசிப்பை பலிகொடுத்து தனது திருமணத்தைக் காப்பாற்றிக் கொண்டாள்.வாசிப்பு ஒருவரை நுண்ணுணர்வு உள்ளவராக ஆக்குகிறது.ஆனால் நமது சமூகத்தில் சற்று முரட்டுத் தோல் இருந்தால்தான் பிழைத்திருக்க முடிகிறது.இல்லையா..

    பதிலளிநீக்கு
  21. வாசிப்பு தன்நம்பிக்கையைக் கொடுக்கிறது. சகிப்புத்தன்மையைக் கெடுக்கிறது.

    அரைகுறை படிப்பு மேம்போக்கான படிப்பு அரைகுறை இலக்கியம் எல்லாம் தேவையற்ற பெருமையை வாசிப்பதே சாதனை என்கிற உணர்வைக் கொடுக்கின்றன. இது நிஜக்கதை போன்ற கற்பனைக் கதயாக ஒருவேளை இருப்பினும் கூட பரவாயில்லை.

    முத்தாய்ப்பு வரிகளில், வண்ணதாசனின் இளகிய நீட்சிதான் எஸ்ரா என்று சொல்ல வருகிறீர்களோ.

    கனவுப் பனிமூட்டம் சிந்திப்பதுமில்ல சிந்திக்க வைப்பதுமில்லை. வாடகைக்கு வந்து வருடிக்கொடுத்துவிட்டுப் போய்விடுகிறது.

    எழுத்தாளர்கள் தங்களை அவதாரப் புருஷர்கள்போல புனைவுகாட்சிப்படுத்திக் கொள்வதைவிட ஆபாசம் ஏதுமில்லை.

    ரமணி சந்திரன் தான் ஒரு பெரிய்ய செலாவணி என்று உள்ளுக்குள் நினைத்துக் கொள்கிராறோ என்னவோ ஆனால் அவருடைய வாசகர்கள் மற்ற மனிதர்களைவிடத் தங்களை உயர்வாக நினத்துக்கொண்டு அடுத்தவர்களை உதாசீனப்படுத்துவதில்லை என்றே படுகிறது. அவர்களேக்கூட தம் வாசிப்பு பற்றி மிதமான எண்ணமே கொண்டிருக்கின்றனர்.

    விஜய் ரஜினி படம் பார்த்து வாழ்க்கையைத் தொலைத்து ஒட்டுண்ணிகளாய் ஆனவர்கள் அதிகமில்லை என்றே தோன்றுகிறது. இதில் இருபது வருஷமாக என் பொண்டாட்டி என்னோடுதான் இருக்கிறாள் என்பதுகூட என் மகன் சொல்லித் தெரிந்து கொள்ளும் அவ்வளவுக்கு நிற்காத பேதி போல எளுதிக்கொண்டே இருந்துவிட்டேன் என்கிற அலம்பல் வேறு.

    ஆரம்ப வரிகள் வரவ்iிlலையோ என்nகிற சtந்தேகத்தில் மறுபடியும்.

    பதிலளிநீக்கு
  22. குழந்தையின் பாடு கஷ்டம்தான்.

    http://ramamoorthygopi.blogspot.com/2010/09/blog-post_02.html

    பதிலளிநீக்கு
  23. இது போல் பல திருமணங்களில் பொருத்தம் தப்பி போகிறது. ஒரு திரை இருவருக்கும் இடையில் உருவாகத் தொடங்கும் போதே புரிந்து கொண்டு, அனுசரித்து சரி செய்துகொண்டால் ஆச்சு, இல்லையேல் பிரிவு தான் முடிவாகிறது. ஒரு திருமணம் தோற்றால் தான் எத்தனை மனங்கள் புண்படுகின்றன.

    அந்தப் பெண் என்ன ஆனால் என்ற கேள்வியை தவிர்க்க முடியவில்லை, அவருக்கும் நல் வாழ்க்கையே அமைந்திருக்கும் என்று நம்புவோம்.

    பதிலளிநீக்கு
  24. முதலாமவள் நிச்சயம் புத்தகங்களுக்குள் தன்னை புதைத்துக் கொள்ளத் தான் முயற்சி செய்வாள்.. இன்னொரு தரம் சூடு போட்டுக் கொள்ளவதை விட புத்தகங்கள் பரவாயில்லை...! :(

    பதிலளிநீக்கு
  25. இங்கு விமலாதித்த மாமல்லன் என்ன சொல்ல வருகிறார்?

    நாலஞ்சு முறை படிச்சு பார்த்தேன். புரியல. வேறொரு பதிவிற்கான பின்னூட்டமோ என குழம்புகிறது. சார், இங்கு ஒரு குடும்பம். அல்லது ரெண்டு குடும்பம் எனக் கூட எடுங்களேன். இந்த குடும்பங்களுக்குள் பிரச்சினை.

    இதில், எங்கிருந்து, இவ்வளவு எழுத்தாளர்களும், ரஜினி விஜய்யும் வருகிறார்கள்?

    தயவு செய்து விளக்குங்களேன்.

    பதிலளிநீக்கு
  26. மிக நன்றாக எழுதி இருக்கிறீர்கள்.

    என்ன சொல்வதென்று தெரியவில்லை - இதை போன்றதொரு விவாகரத்தின் பின்னணி நெருக்கமான தோழியின் வாழ்விலும் நடந்ததால் நன்றாக புரிந்து கொள்ள முடிகிறது. . ஜ்யோவ்ஜி சொல்வது போல, என்ன யோசித்தாலும் இருப்பதில் பெட்டெர் பிரிந்துவிடுவதுதான் என்றே தோன்றுகிறது.

    பதிலளிநீக்கு
  27. சுந்தர்!
    மிக்க நன்றி.
    //

    சுரேஷ் கண்ணன்!
    உண்மைதான் நீங்கள் சொல்வது. சம்பந்தப்பட்டவர்களை விடவும் சுற்றி இருப்பவர்கள் ரொம்பவும் துடிப்பார்கள். நம் குடும்ப அமைப்பு அப்படி என நினைக்கிறேன்.

    புன்னகை தேசம்!
    வருகைக்கும், பகிர்வுக்கும் நன்றி.

    தீபா!
    பதில் எனக்கும் இப்போது வரை தெரியவில்லை.

    பிரதீப்!
    //குறிப்பாக பெண்கள் சண்டைக்கு அப்பறம் கொஞ்சம் அதிகமாகவே ஈகோ பாக்கிறது அறிவியல் பூர்வமாய் உன்மை.//
    அப்படியா..! ஒப்புக்கொள்ள முடியவில்லை.

    பதிலளிநீக்கு
  28. பாலாசி!
    நம் சமூகம் குறித்துத்தான் வருத்தப்பட வேண்டும்.


    பா.ரா!
    குழந்தை என்பதே எதிர்காலம்தான். இந்த சமூகம் எத்தனை முடிச்சுக்களை போட்டு வைத்திருக்கிறது!

    விஜயன்!
    நன்றி. //60 வயதாகிறது,இவர்களுடைய பிரச்சினை என்னவென்று புரிய மாட்டேன் என்கிறது.//
    இந்த வரிகள்தான் மிக முக்கியமானவை.


    கையேடு!
    ஆமாம். இதுபோன்ற நம்பிக்கைகள்தான் ஆறுதல் தரக்கூடியவை.

    சேது!
    அப்படியெல்லாம் பயப்பட மாட்டார்கள். நபர்களையொன்றும் அப்படியே அடையாளப்படுத்தவில்லை. இன்னும் பலநுறு கதைகள் இருக்கின்றன. :-)))


    ஆதி!
    //உரிமை எடுக்கிறோம் என்கிற பெயரிலும் துணை நம்மவர் என்கிற எண்ணத்திலும் எதை வேண்டுமானாலும் குறை சொல்வது, தேவைப்படாமல் சினம் கொள்வது //மிக்க நன்றி.

    மணிகண்டன்!
    //இவர் அவர்களுடன் உரையாடியது ஒரு சில மணி நேரங்கள். அதில் உள்ள ஒரு பங்கை மட்டும் அவரால் எழுத்தில் கொண்டு வந்திருக்க முடியும்.//
    உண்மை.

    பதிலளிநீக்கு
  29. அம்பிகா!
    //தன்னை விட அழகான மனைவியை சகித்துக் கொள்ளும் ஆண்களால், தன்னை விட அறிவாளியான மனைவியை சகித்துக் கொள்ள முடிவதில்லை என்று //

    சரிதான். தம்பி பிரியா கார்த்தி உன் பின்னூட்டத்தைப் படித்து விட்டு பாராட்டினான்.


    Madrasdada!
    நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் என்பதே புரியவில்லை. பா.ரா கேட்டதைப் படித்தீர்களா?


    ராபின்!
    காலம் காலமாக அடக்கப்பட்டு, வீடுகளுக்குள் அடைக்கப்பட்டு வந்தவர்கள் சென்ற நூற்றாண்டில்தான் வெளியுலகை கொஞ்சம் தரிசிக்க ஆரம்பித்து இருக்கிறார்கள். தங்களுக்கான இடத்தைத் தேடுகிறார்கள். தயவுசெய்து இதனைத் திமிர் என்று சொல்ல வேண்டாமே!


    முகிலன்!
    //இப்போது சாத்தூரில் வங்கியில் பணிபுரியும் யமஹா பைக் வைத்திருக்கும் யாரைப் பார்த்தாலும் இவன் அவனாக இருக்குமோ என்ற எண்ணம் இதைப் படிப்பவருக்கு வருவதைத் தவிர்க்க முடியாதே???//

    அப்படியேவா எழுதுவேன் என எதிர்பார்க்கிறீர்கள் :-))))


    போகன்!
    //ஆனால் நமது சமூகத்தில் சற்று முரட்டுத் தோல் இருந்தால்தான் பிழைத்திருக்க முடிகிறது.இல்லையா..//
    இதுதான் பிரச்சினை இப்போது. அதை மீறுவதில்தான் சிக்கல்கள் தோன்றுகின்றன.


    கோபி!
    படிக்கிறேன்.


    அண்ணாமலை சுவாமி!
    நம்புவோம்.


    ஸ்வாதி!
    சரிதான். :-))))

    பா.ரா!
    எனக்கும் புரியவில்லை.


    பாலா அறம்வளர்த்தான் !
    வருகைக்கும் பகிர்வுக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  30. நண்பர்களே!


    சட்டென்று இங்கு ஒரு முடிவுக்கு வந்துவிட முடியுமாவென தெரியவில்லை. ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ள முயற்சிப்பதுதான் வாழ்வின் அர்த்தமாகப் படுகிறது. முதலில் இங்கு தன்னையே புரிந்துகொள்ள முடியாமல் பலரும் இருக்கிறோம். தீர்மானகரமாக ‘புரிந்து கொண்டு விட்டோம்’ என்னும் நினைப்பில்தான் தவறுகள் முளைக்க ஆரம்பிக்கின்றன.

    புரிய முயற்சிப்பதில் சிக்கல்கள் இருப்பதுபோல் சுவாரசியமும் இருக்கிறது. இங்கு பரஸ்பரம் மிகவும் அவசியம். பரஸ்பரம் என்பது அனுசரித்துப் போவதும் அல்ல, சகித்துப் போவதும் அல்ல.

    பொதுவாக இரு மனிதர்களுக்கிடையே இவ்வளவு இருக்கும்போது, ஒரு ஆணுக்கும், பெண்ணுக்கும் இடையில் இன்னும் புரிந்துகொள்ள முடியாத எவ்வளவு பிரதேசங்கள் இருக்கின்றன?.

    இதை அறியாதவர்களாக, அறிய நேர்ந்தாலும் ஒப்புக்கொள்ளாமல் முரண்டு பிடிக்கிறவர்களாகவே வாழ்ந்து கொண்டு இருக்கிறோம்.

    பதிலளிநீக்கு
  31. விமலாதித்தன் இலக்கியம் அந்தப் பெண்ணை தரைக்கு இழுத்து வருவதற்குப் பதிலாக அவளை இறங்கி வர முடியாத உயரத்துக்கு ஏற்றி வைத்து விட்டதாக சொல்கிறார் எனப் புரிந்து கொள்கிறேன்.ரமணிச் சந்திரன் போன்றவர்களைப் படிப்பவர்க்கு இந்த பிரமைகள் இருப்பதில்லை என்கிறார்.இது விவாதிக்கப் பட வேண்டிய விசயமே.

    பதிலளிநீக்கு
  32. ஏற்பு போகன். விவாதிக்கலாம்.

    இதோ நீங்க சொல்றது நேரடியா இருக்கே.

    "வாசிப்பு தன்னம்பிக்கையை கொடுக்கிறது. சகிப்பு தன்மையை கெடுக்கிறது" ஏற்பாக இருக்கிறது. இல்லையா?

    இந்த அளவிற்கு ஏற்பாக இல்லை எஸ்.ரா.தொடங்கி, வண்ணதாசன், ரமணி சந்திரன் வரையிலான காய்ச்சுதல். . ரமணி சந்திரன் வாசகர்களை ஓகே சொல்கிறார். ரமணி சந்திரனை ஓகே சொல்லலையோ என்பது என் புரிதல்.

    இந்த பதிவிற்கும் எழுத்தாளர்களை சாடுவதற்கும் சம்பந்தம் இல்லையே என்பதுதான், என் கேள்வி போகன்.

    பதிலளிநீக்கு
  33. அவர் யாரைச் சொல்கிறார் என்பது தெரிந்ததே.இது ஓர் இணைய வியாதி என்று நினைக்கிறேன் எல்லா விவாதங்களும் எதோ ஒரு புள்ளியில் சாருவிடமோ ஜெமோவிடமோ வந்து முட்டி நிற்கும்.அதை தவிர்த்து அவர் முதலில் சொன்ன கருத்தை விவாதிக்கலாம்.இரண்டு விசயங்கள் இதில் முக்கியமாக படுகிறது.முதல் விஷயம் அந்தப் பெண் படிக்கிற எழுத்தாளர்கள் யாவருமே [தி ஜா ,பாலகுமாரன்,வண்ணதாசன் ]சற்று மிகையான நுண்ணுணர்வு கூடிய மானுடர்களை தங்கள் படைப்புகளில் முன்வைப்பவர்கள்.குமுதம் கூட படிக்காத ஒரு கரிசல்காட்டு ஆணிடம் இந்த கவித்துவத்தை எதிர்பார்த்தால் ஏமாற்றமே கிடைக்கும்.இரண்டாவது காமம்..அந்தப் பெண் தன கணவனைத் தொடவே விட வில்லை என்பதில் இருக்கலாம் சூட்சுமம்.குடும்பப் பூசல்களில் பெரும் பாலானவை கட்டிலிலேயே தொடங்குகின்றன.இது ஒரு தேய்வழக்காகத் தோன்றினாலும் இது நிஜம் என்பதை பல இடங்களில் உணர்ந்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  34. தி.ஜா. மற்றும் பாலகுமாரன்(என் வரையில் வண்ணதாசனை இவர்களோடு சேர்க்க இயலவில்லை. மெல்லியவரே. ஆனால் குடும்பத்திற்குள் இவரின் பாதிப்பு இருந்ததா என தெரியவில்லை) இவர்களை பெண்கள் என இல்லை போகன். யார் வாசித்தாலும் அதன் சார்ந்த சரிவு இருக்கும்.

    இது வேறு.

    வாசிப்பை, இலக்கியத்தை, ஒரு தாம்பத்திய தோல்விக்கு காரணமாக கொள்ள இயலவில்லை. இதில், இரு சார்ந்த பக்குவம், வளர்ப்பு, பின்புறம் உள்ள குடும்ப சூழல், மன முதிர்வு, எல்லாம் பொறுத்து அமையுமோ என இருக்கு. பிரதானமான sex, இவ்வளவு இனிஷியலையும் தாண்டி வரணும். வந்தால் தெரியுமோ என்னவோ, ஒரு குழந்தையை.

    இதை எல்லாம் இப்படி இருக்குமோ, அப்படி இருக்குமோ என்று முடிக்கத்தான் முடிகிறது. முடிக்கவே முடியும். சரி, போகன். நன்றி!

    பதிலளிநீக்கு
  35. பின், வாசிப்ப்பின் விளைவுதான் என்ன..நாம் வாசிக்கும் ஒவ்வொரு சொல்லுக்கும் நாம் மாறிக் கொண்டே இருக்கிறோம்.எதையும் பாதிக்காத மாற்றாத எழுத்தை நாம் ஏன் விழுந்து விழுந்து எழுத வேண்டும்.வாசிக்கவேண்டும்?வாசிப்பு மூலமாக தங்கள் துணையைக் கண்டுகொண்டவர்கள் உண்டு..நேர் மறை விளைவுகள் போல எதிர் மறை விளைவுகளும் இருக்கலாம்தானே..இது ரசனை சார்ந்த விஷயம்.ஆணுக்கும் பெண்ணுக்கும் ரசனைப் பொருத்தம் இல்லாவிட்டாலும் கூட பரவாயில்லை..அதில் ஒருவருக்கு ரசனையே இல்லை என்றால் என்ன செய்வது?அது இருக்கட்டும்.ஆ வியில் உங்கள் தட்டாம் பூச்சியைப் பிடித்தேன்.[படித்தேன்]சும்மா பறக்கறீங்க ராஜாராம் .

    பதிலளிநீக்கு
  36. // பின், வாசிப்ப்பின் விளைவுதான் என்ன..நாம் வாசிக்கும் ஒவ்வொரு சொல்லுக்கும் நாம் மாறிக் கொண்டே இருக்கிறோம்.எதையும் பாதிக்காத மாற்றாத எழுத்தை நாம் ஏன் விழுந்து விழுந்து எழுத வேண்டும்.வாசிக்கவேண்டும்//

    வாஸ்தவம்.

    சரியலாம் போகன். சரியனும். அப்பத்தான் வாசித்ததுக்கு அடையாளம். (எழுதியதற்கும்) சாராமலும் இருக்கலாம். அப்பத்தானே வாழ்ந்ததுக்கும் அடையாளம். என்ன பாஸ், என்னைப் போய் இப்படியெல்லாம் பேச வைக்கிறீங்க?

    //ஆணுக்கும் பெண்ணுக்கும் ரசனைப் பொருத்தம் இல்லாவிட்டாலும் கூட பரவாயில்லை..அதில் ஒருவருக்கு ரசனையே இல்லை என்றால் என்ன செய்வது?//

    ரசனை என்பது என்ன போகன்?

    பதிலளிநீக்கு
  37. //அது இருக்கட்டும்.ஆ வியில் உங்கள் தட்டாம் பூச்சியைப் பிடித்தேன்.[படித்தேன்]சும்மா பறக்கறீங்க ராஜாராம்//

    போகன், நேற்று நன்றி சொல்ல விட்டுப் போயிற்று, நன்றி மக்கா!

    பதிலளிநீக்கு
  38. அன்பின் மாதவராஜ்

    பெண்களைப் புரிந்து கொள்வது சற்றே சிரமம். அவர்களின் கண்ணோட்டத்தில் நாம் சிந்திப்பதில்லை. இரு வேறு திசைகளில் இருவரின் சிந்தனை செல்லும் போது இவை எல்லாம் தவிர்க்க இயலாததாகி விட்டது. பெற்றோர் ஒரளவிற்குத்தான் கட்டுப்படுத்த - நெறிப்படுத்த இயலும். என்ன செய்வது.......

    அவனுக்கென்ன அடுத்த குழந்தை - இவள் குழந்தையின் எதிர்காலம் என்ன .....

    இதற்கெல்லாம் தீர்வே இல்லையா மாதவராஜ்

    நல்வாழ்த்துகள் இரு குழந்தைகளுக்கும்
    நட்புடன் சீனா

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!