நானே நானாய் - தொடர் பதிவு

இந்த தொடர் பதிவு பலராலும் எழுதப்பட்டு பார்த்திருக்கிறேன். சிலருடையதை வாசித்திருக்கிறேன். யாராலும் அழைக்கப்படாமல் தப்பித்து வந்தேன். அம்பிகாவால் இப்போது அழைப்பு விடுக்கப்பட்டு இருக்கிறது. நிராகரிப்பது மரியாதைக்குரியதாய் தோன்றவில்லை. ஆகவே இந்த நானே நானாய்...

(1) வலைப்பதிவில் தோன்றும் உங்கள் பெயர்? & (2) அந்தப் பெயர் தான் உங்கள் உண்மையான பெயரா? இல்லை எனில் பதிவில் தோன்றும் பெயரை வைக்க காரணம் என்ன?

என் பெயர் எனக்குப் பிடித்திருக்கிறது. இன்னொரு பெயரில், என் சிந்தனைகளை வெளிப்படுத்த எப்போதுமே நான் விரும்பியதில்லை.

(3 )நீங்கள் தமிழ் வலைப்பதிவு உலகில் காலடி எடுத்துவைத்ததைப் பற்றி.

இதுகுறித்து ஏற்கனவே கொஞ்சம் சொல்லியிருக்கிறேன் என நினைக்கிறேன். 2007ம் ஆண்டே, தீபா (சிதறல்கள்) மூலம் பிளாக் குறித்து பொதுவான விஷயங்களைத் தெரிந்து கொண்டேன். எனக்கென்று ஒரு பிளாக்கும் தீபாவால் ஆரம்பிக்கப்பட்டது. ஆங்கிலத்தில் ஒரு பதிவுகூட சின்னதாக எழுதியதாக ஞாபகம். யூனிகோட் பற்றிய ஞானம் இல்லாததால், தமிழில் எழுதத் தெரியவில்லை. அப்படியே விட்டுவிட்டேன். 2008 செப்டம்பரில்தான் யூனிகோட் பிடிபட்டது. நானே வலைப்பக்கம் ஆரம்பித்துக் கொண்டேன். மஜித் மஜிதியின் color of paradise குறித்து நான் எழுதியதுதான் முதல் பதிவு.

(4) உங்கள் வலைப்பதிவை பிரபலமடையச் செய்ய என்ன என்னென்ன
வெல்லாம் செய்தீர்கள்?

இந்த பிரபலம் என்கிற பிரயோகமே அபத்தமானதாக இருக்கிறது. கொம்புகள் எதற்கு ஒருவருக்கு? நாம் நாமாக இருப்பதுதான் முக்கியம். அதற்குத்தானே இந்த எழுத்துக்களும், பதிவுகளும். நம் சிந்தனைகளை, அனுபவங்களை, பார்வைகளை இங்கே பதிவிடுகிறோம். அதை பலருக்கும் தெரிவிக்க விரும்புகிறோம். அவ்வளவுதான். சமூகத்தின் முக்கியப் பிரச்சினை மீதான உரையாடலில் நீங்களும் ஒரு கண்ணியாக இருக்க முயற்சியுங்கள். அவைகள் குறித்து தொடர்ந்து எழுதிக்கொண்டே இருப்பதும், அது அர்த்தபூர்வமாய் இருப்பதும் முக்கியம். இன்று இல்லாவிட்டாலும் ஒருநாள் அந்தப் பதிவுகள் கவனிக்கப்படும், பேசப்படும் என்னும் நம்பிக்கை மிக மிக முக்கியம்.

(5) வலைப்பதிவின் மூலம் உங்கள் சொந்த விஷயத்தை பகிர்ந்து கொண்டதுண்டா? ஆம் என்றால் ஏன்? அதன் விளைவு என்ன? இல்லை  என்றால் ஏன்?

நம் சொந்த விஷயங்களை நாம்தானே பகிர்ந்துகொள்ள முடியும். நிறைய பகிர்ந்திருக்கிறேன். அதன் விளைவுகளை நீங்கள்தான் சொல்ல வேண்டும்.

(6) நீங்கள் பொழுதுபோக்குக்காக பதிவுகளை எழுதுகிறீர்களா அல்லது
பதிவுகளின் மூலம் சம்பாதிப்பதற்காகவா?

இரண்டுமே இல்லை. பொழுது போக்கு, சம்பாத்தியம் இரண்டுமே என்னைப் பொறுத்த வரையில் முக்கியமற்ற வார்த்தைகள். என்னை நான் வெளிப்படுத்துவதற்கு என்று சொல்லலாம். நான் எனும்போது அது வெறும் ‘நான்’ என்று பொருளில் அல்ல.

(7) நீங்கள் மொத்தம் எத்தனை வலைப்பதிவுகளுக்கு சொந்தக்காரர்?
அதில் எத்தனை தமிழ் வலைப்பதிவுகள் உள்ளன?

ஆரம்பத்தில் அரசியல், இலக்கியம், அனுபவங்களுக்காக மூன்று வ்லைப்பக்கம் வைத்திருந்தேன். ஒரு மாதத்தில் அவைகளை ‘தீராத பக்கங்கள்’ என ஒன்றாக்கி விட்டேன்.

வலைப்பக்கங்களில் நல்ல பதிவுகளை அடையாளம் காண வாடாத பக்கங்கள் ஆரம்பித்து ஏழெட்டு மாதங்கள் ஆகின்றன. நான்கைந்து மாதங்களாக அது அப்படியே இருக்கிறது. மீண்டும் விரைவில் வாசம் தரும் அது.

(8) மற்ற பதிவர்கள் மீது எப்போதாவது உங்களுக்கு கோபம் அல்லது
பொறாமை ஏற்பட்டது உண்டா? ஆம் என்றால் யார் அந்த பதிவர்?

கருத்துக்களுடன் முரண்பாடு கொள்ளாமல் மனிதர்களுடன் முரண்பாடு கொள்பவர்கள் மீதும், நாகரீகம் இல்லாமல் எழுதுபவர்கள் மீதும் கோபம் வந்திருக்கிறது. அதுவும் மிகச் சிலர் மீதுதான். கோபம் என்றால், நானும் நாகரீகம் தாண்டிப் போகுமளவுக்கு. தங்களுக்கான அடையாளங்கள் இல்லாமல், அர்த்தமில்லாமல் எழுதுபவர்களைப் பார்த்து சிரிப்பு வந்திருக்கிறது. அதற்கு கும்மி அடிப்பவர்களைப் பார்த்து பரிதாபம் வந்திருக்கிறது.

அற்புதமாய் எழுதும் பலரிடம் மதிப்பும், மரியாதையும் வந்திருக்கிறது (அந்த மரியாதை போகவும் செய்திருக்கிறது சிலரிடம்!).  பொறாமை வரவில்லை.

(9) உங்கள் பதிவை பற்றி முதன் முதலில் உங்களை தொடர்புகொண்டு
பாராட்டிய மனிதர் யார்? அவரைப் பற்றி, அந்த பாராட்டைப் பற்றி..

மதுமிதா, எஸ்.வி.வேணுகோபால். தீபா ஆகியோர். ஏற்கனவே என்னைத் தெரிந்தவர்கள் அவர்கள். என் மீதும், என் எழுத்துக்கள் மீதும் எப்போதும் அன்பும், பிரியமும் கொண்டவர்கள் அவர்கள். அப்புறம் என் மரியாதைக்குரிய எழுத்தாளர்கள் எஸ்.ராமகிருஷ்ணன், தமிழ்ச்செல்வன் ஆகியோரும் வந்து பின்னூடமிட்டு வாழ்த்தியிருந்தார்கள்.

(10) கடைசியாக...விருப்பம் இருந்தால் உங்களைப் பற்றி பதிவுலகத்துக்கு
தெரிய வேண்டிய அனைத்தையும் பற்றி கூறுங்கள்...

என்னைப் பற்றி, என் பதிவுகளில் நிறையவே இருக்கிறது. இங்கு சொல்ல வேண்டியது, எழுத என்னைத் தூண்டிக்கொண்டே இருக்கிறது பதிவுலகம் என்பதை.

(பதில் எழுதும்போதுதான் இன்னும் அழகான, அர்த்தமுள்ள கேள்விகள் இருக்கலாமே எனத் தோன்றியது. அவைகளோடு இன்னொரு பதிவு விரைவில்...)

கருத்துகள்

8 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
  1. படிக்க ஆரம்பிக்கும்போதே, ஐயையோ, மாதவராஜும் இந்த மொக்கைத் தொடரிலா என நினைத்தேன். பரவாயில்லை, கொஞ்சம் சமாளித்துவிட்டீர்கள் :)

    இதையே வேறு மாதிரி மாற்றி கேள்விகளை வடிவமைத்து எழுதுகிறேன் என்று சொன்னது பிடித்திருக்கிறது. எழுதுங்கள்.

    பதிலளிநீக்கு
  2. சுந்தர்!

    கொஞ்சம்தான் சமாளித்து இருக்கிறேனா?நிறைய சமாளித்துவிட்டதாய் நினைத்திருந்தேன். :-)))))

    பதிலளிநீக்கு
  3. ம்ஹூம்.. நானும் இந்த கேள்விகளுக்கு பதில் சொல்லி பதிவ போட்டிருந்தேன்... எத்தனை வித்தியாசம்... நீங்க ரொம்ப கோவக்காரரா சார்?.

    பதிலளிநீக்கு
  4. superb மாது!

    தன்னை நேர்மையாக திரும்பி பார்த்த பதில் ஒண்ணு ரொம்ப பிடிச்சிருந்தது.

    //ஐயையோ, மாதவராஜும் இந்த மொக்கைத் தொடரிலா என நினைத்தேன்.//

    உனக்கு, தொடர் விளையாட்டே மொக்கை. இதில், மொக்கை தொடர் என்ன உனக்கு? :-)

    //இதையே வேறு மாதிரி மாற்றி கேள்விகளை வடிவமைத்து எழுதுகிறேன் என்று சொன்னது பிடித்திருக்கிறது. எழுதுங்கள்.//

    எழுதுங்க, மாது. மொத ஆளா என்னை கூப்பிடுங்களேன். மொத ஆளா இவனை கூப்பிடுகிறேன். இவன் மட்டும் எழுதிட்டா, காத அறுத்து சூப்பு வச்சு தர்றேன்.

    காது சூப்பு பிடிக்கும்ல? preparation வேஸ்ட் ஆக கூடாது. உப்பு, புளில்லாம் அவ்வளவு காசு.

    பதிலளிநீக்கு
  5. \\(6) நீங்கள் பொழுதுபோக்குக்காக பதிவுகளை எழுதுகிறீர்களா அல்லது
    பதிவுகளின் மூலம் சம்பாதிப்பதற்காகவா?

    இரண்டுமே இல்லை. பொழுது போக்கு, சம்பாத்தியம் இரண்டுமே என்னைப் பொறுத்த வரையில் முக்கியமற்ற வார்த்தைகள். என்னை நான் வெளிப்படுத்துவதற்கு என்று சொல்லலாம். நான் எனும்போது அது வெறும் ‘நான்’ என்று பொருளில் அல்ல.\\

    :-)))

    பதிலளிநீக்கு
  6. //பதில் எழுதும்போதுதான் இன்னும் அழகான, அர்த்தமுள்ள கேள்விகள் இருக்கலாமே எனத் தோன்றியது.//

    கேள்விகளை வடிவமைத்து எழுதுகிறேன் என்று சொன்னது பிடித்திருக்கிறது. எழுதுங்கள்.

    பதிலளிநீக்கு
  7. //கொஞ்சம்தான் சமாளித்து இருக்கிறேனா?நிறைய சமாளித்துவிட்டதாய் நினைத்திருந்தேன். :-)))))//

    ஹா ஹா ஹா!

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!