தாய் வலி

பின்னிரவில் எதோ வெறுமை உறுத்த அவன் விழித்தான். அருகில் அவள் இல்லை. இருட்டில் உற்றுப்பார்த்தான். மகள் தனியாகத்தான் படுத்திருந்தாள். எங்கே அவள் என அறையெல்லாம் கண்கள் சுற்றி வந்த போது ஜன்னல் அருகே அவள் அசையாமல் நிழலாய் நின்றிருப்பதைப் பார்த்தான். அவளது உடல் அதிர்ந்து கொண்டு இருந்தது. விசும்பிக்கொண்டு இருந்தாள்.

என்ன ஆச்சு அவளுக்கு என்று குழம்பினான். அன்றைக்கு பள்ளிக்கூடத்தில் தன் மகள் படித்து வந்த ரைம்ஸ்களை ஆசை ஆசையாய் படுக்கையில் சொன்னாள். பிறகு எல்லாம் முடிந்து, “ஆளைப் பாரு...” என வெட்க சந்தோஷத்துடன் தூங்கிப் போனாள். சின்னச் சின்னதாய் பாட்டுக்களை முணுமுணுத்துக்கொண்டு இந்த வீட்டிற்குள் சந்தோஷமாய்த்தான் இருந்தாள். இரவில், இப்படித் தனியாய் வருத்திக்கொள்ள அவளுக்குள் அப்படியென்ன என பரிதவித்தும், கலைந்தும் போனான்.

என்ன என்று கேட்போமா, வேண்டாமா என யோசித்து, அருகில் சென்று “என்னம்மா... தூங்கலியா?’ என்றான்.

“முழிச்சிட்டீங்களா... நீங்க தூங்குங்க...” என்று வெளியே நட்சத்திரங்களைப் பார்த்தாள். உடல் அதிர்ந்து கொண்டுதான் இருந்தது.

“என்னம்மா... என்ன ஆச்சு..”

“ஒண்ணும் இல்லிங்க..”

“இல்ல. நீ அழுற.. ஏங்கிட்ட சொல்லும்மா..”

அவ்வளவுதான். உடல் வெட்டிக் கொண்டு வர, அவன் மீது சாய்ந்து “அன்னிக்கு அபார்ஷன் பண்ணலன்னா, அந்தக் குழந்தை இப்ப நம்ம மகள் பக்கத்துல படுத்துக்கிட்டு இருக்கும்ல....”

அதிர்ச்சியாய் இருந்தது. அந்தக் குழந்தையை இன்னும் சுமந்து கொண்டு இருக்கிறாள் அவள் என்பதில் கலங்கினான். ஆதரவாய் அணைத்துக் கொண்டு  “சரி விடம்மா... விடம்மா... “ என சரியாய் வார்த்தைகள் வராமல் எதோ பிதற்றிக்கொண்டு இருந்தான்.

“நாளையோடு அந்தக் குழந்தையை அபார்ஷன் செய்து நான்கு வருடமாகிறது”

அவனும் அவளோடு சேர்ந்து அழ ஆரம்பித்தான்.

 

*

கருத்துகள்

10 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
  1. மனித மனசு தொலைந்த ஆடுகுட்டியை தேடும் இடையன் மட்டுமல்ல
    கொன்றதற்கும் அழும் தானே..!

    தாய் என்றால் தனி மனம் தான்

    பதிலளிநீக்கு
  2. நான்காம் ஆண்டு பிறந்தநாள் நினைவஞ்சலி.....!!!!

    ஆஅவ்வ்வ்வ்...!!!

    பதிலளிநீக்கு
  3. தாய் வலி படித்தேன் .. பெண்ணின் உணர்வு இயல்பாக சொல்லப்பட்டது ... நன்று.. அபார்ஷன் செய்து நான்கு வருடங்கள் ஆன பின்பும் உயிரை அழித்த குற்ற உணர்வு --புரிந்து கொள்ள முடிகிறது. இன்னும் சொல்லப்படாத விஷயம்
    * அந்த பெண்ணின் சம்மதத்தோடு கரு கலைக்கப்பட்டதா ?

    *எதற்காக அபார்ஷன் செய்யப்பட்டது?

    இந்த கேள்விகளுக்கு பதில் சொல்லாமல் இந்த சொற்சித்திரம் முடிவு அடையுமென்று நினைக்கவில்லை ..

    இது எனது கருத்து ..

    உங்கள் பதில் கிடைத்த பின் மற்றவை ..

    பவித்ரா

    பதிலளிநீக்கு
  4. தெரிந்தோ தெரியாமலோ - இணங்கியோ வற்புறுத்தியோ - கருக்கலைப்பு செய்யப்பட்டாலும் - தாயினைப் பொறுத்த வரையில் அது ஒரு கொலைதான். மறக்க இஅயலாது அவ்வளவு எளிதாக

    நல்ல கற்பனையில் எழுதப்பட்ட - ஏதேனும் உண்மை சம்பவத்தின் அடிப்படையில் எழுதப்பட்ட கதையாகத்தான் இருக்க வேண்டும்.

    நல்ல் கதை - நல்வாழ்த்துகள் மாதவராஜ்

    பதிலளிநீக்கு
  5. நான்கு வருடத்திற்கு முன்பு நான் செய்ய இருந்த தப்பு இறைவனால் தவிர்க்கப்பட்டது இப்போது என் மகளுக்கு வயது நான்கு

    பதிலளிநீக்கு
  6. அனைவரின் வருகைக்கும் நன்றி.
    பவித்ரா எதற்காக அபார்ஷன் செய்யப்பட்டது என்று கேட்டிருக்கிறார். எத்தனையோ காரணங்கள் இருக்கலாம். தன்னுடைய சம்மதத்தின் பேரிலேயே நடந்து இருந்தால் கூட தாய்க்கு எப்போதும் அது வலிதானே!

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!