அம்மாவும் அப்பாவும் பார்க்கிறார்கள்!

children

 

இன்று ஞாயிற்றுக்கிழமை. காவ்யாவை அவள் வீட்டிற்கு சென்று அழைத்து வந்தேன்.  எங்கள் வீட்டிற்கு எதிரே இருக்கும் வேப்ப மரத்தடியில்தான் விளையாடுவோம்.

 

போன ஞாயிற்றுக்கிழமை மரத்தையொட்டி இரண்டு செங்கல்களை நிற்க வைத்து, அதன் மேல் இன்னொரு செங்கல்லை படுக்க வைத்தோம். அதுதான்  வீடாக இருந்தது. மேலே உள்ள செங்கல்லைக் காணோம். எங்கே போனது என்று தெரியவில்லை.

 

“சித்து, பிரஷ்ஷையெல்லாம் என்ன செஞ்சே?”  காவ்யா கேட்டாள்.

 

“அதுவா...” என எங்கள் வீட்டுக்கு ஒடினேன். படுக்கையறை ஜன்னலின் வெளிப்பக்கம்  இரண்டு பிரஷ்கள் அப்படியே இருந்தன. எடுத்துக்கொண்டு உற்சாகமாய் “இதோ இருக்கு” என கத்தியபடி காவ்யாவிடம் காட்டினேன்.

 

போன ஞாயிற்றுக்கிழமை  அந்த  செங்கல் வீட்டிற்குள் இந்த இரண்டு பிரஷ்களை வைத்திருந்தோம். புளு கலர்தான் காவ்யா. ரெட் கலர்தான் நான். பார்த்து பார்த்து சிரித்துக்கொண்டோம். அந்த பிரஷ்களை குளிப்பாட்டினோம். பிரஷ்களுக்கு பசிக்கும் என சாப்பாடு செய்தோம்.  தூங்க வைத்தோம்.

 

இருவரும் செங்கல்லைத் தேட ஆரம்பித்தோம்.  அப்போது, “சித்து இரு வர்றேன்” என  காவ்யா அவள் வீட்டிற்கு ஒடினாள். எதையோ எடுத்து, முதுக்குக்குப் பின்னால் ஒளித்து வைத்துக்கொண்டு வந்தாள்.

 

“அது என்னது. காட்டு” என்றேன்.

 

அவள் காட்ட மறுத்தாள். பின்பக்கம் சென்றேன். முன்பக்கமாக திரும்பிக்கொண்டாள். அருகில் போய் கைகளை இழுத்தேன். சிரித்துக்கொண்டே காட்டினாள். ஒரு குட்டி பிரஷ் அது. இரண்டு பேரும் சிரித்தோம்.

 

அப்போதுதான் கவனித்தேன். அப்பா வராண்டா வாசலில் நின்று எங்களைப் பார்த்துக்கொண்டு இருந்தார். சங்கடமாயிருந்தது. “காவ்யா! எங்க அப்பா...” என மெல்ல முணுமுணுத்தேன்.

 

அவளும் திரும்பிப் பார்த்தாள். “சித்து, உங்க அம்மாவும் பாக்கிறாங்க” என்றாள்.

 

பார்த்தேன். ஆமாம். அம்மாவின் முகம் படுக்கையறை ஜன்னலில் தெரிந்தது. என்ன செய்வது என்று தெரியவில்லை. செங்கல்லைத் தேடுவது போல அங்குமிங்கும் அலைந்துகொண்டு இருந்தோம். வேறெங்காவது போய்விடலாமா எனத் தோன்றியது. கொஞ்ச நேரம் கழித்து திரும்பவும் வீட்டைப் பார்த்தேன். 

 

அம்மாவும் அப்பாவும் அவரவர் இடத்தில் அப்படியே நின்றிருந்தார்கள். எங்களைத்தான் பார்த்துக்கொண்டு இருப்பது போலத் தெரிந்தது. ஆனால் வகுப்பில் பாடம் நடத்தும்போது டீச்சரையேப் பார்த்துக்கொண்டு, பாடத்தில்  கவனமில்லாமல் வேறெதையோ நினைத்துக்கொண்டு இருப்பது போலிருந்தார்கள் அவர்கள்.

கருத்துகள்

7 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
  1. வணக்கம் தோழர் ......
    ஆஹா..என்ன சொல்ல புகைப்படத்தில் அடைந்து கிடக்கும் நம் பால்ய முகங்களை இன்றும் வருடும் போது வாழ்ந்து போகிறோமே ..சில நொடி ..குழந்தையாக ..ஆம் மணல் வீடும் ,மண் சோறும் ..பெயர் இடாத நம் பொம்மை குழந்தைகளும் ...இன்றும் பார்க்கிறோம்இன்றும் பார்க்கும் போதும் குழந்தையகிறோம் ...பாடத்தில் கவனமில்லாமல் வேறெதையோ நினைத்துக்கொண்டு ........மணிகண்டன் ஹலோ எப் .எம்

    பதிலளிநீக்கு
  2. "என்ன நினைத்துகொண்டு இருப்பார்கள் "அன்று நாம் செங்கல் வீடு கட்டினோம் இன்று இவர்கள் கட்டுகிறார்கள், நாளை !!!!! இது வாழை அடி வாழை யாக தொடரும் நிகழ்வு தானே"

    பதிலளிநீக்கு
  3. அன்பு மாதவ்

    நல்ல எழுத்தோவியம் தோழா...

    குழந்தைகளின் விளையாட்டு வாழ்க்கையிலிருந்து பிரதி எடுக்கப் படுவது.

    அந்த வாழ்க்கையை மேம்படுத்துவது அவர்கள் சித்தரிப்பு

    அழுக்கான வாழ்வைக் கூட அவர்களது பகடி, நீர் தெளித்து சுத்தப் படுத்துகிறது

    ஆனந்தமான தருணங்களின் இனிமையை மேலும் சுருதி கூட்டுகிறது அவர்களது நடிப்பு

    நமது வில்லத் தனத்தை அம்பலப் படுத்தவும் செய்கிறது அவர்களது இயல்பான படைப்பு

    ஆனால்
    நமது அதிகாரத்தின் குறுக்கீடு தான்
    குழந்தைகளின் அம்மா அப்பா விளையாட்டிற்குக்
    களங்கம் சுமத்துகிறது

    அதற்கப்புறம் நொறுங்கி விடுகிறது அந்த விளையாட்டு

    நள்ளிரவு நேரம் வரை கூட அழுகையைத் தொடரும் குழந்தைகள்
    தங்களது பெற்றோர் உறங்கவேண்டும் என்னும்
    மாசில்லாத இதயத்திலிருந்து தான் மன்னித்து, சமாதானம் அடைகின்றனர்

    அவர்கள் தூங்கியதும்
    பெற்றோர் எழுந்துபோய்ப் பார்த்தால் தெரியும்
    இவர்கள் உடைத்துவிட்டு வந்த
    அந்த செங்கல் வீட்டை
    இம்மியளவும் இவர்களால் செப்பனிடமுடியாது என்பதை..

    எஸ் வி வேணுகோபாலன்

    பதிலளிநீக்கு
  4. @மணிகண்டன்!
    உங்கள் பின்னூட்டம் சந்தோஷமாயிருக்கிறது. குழந்தைகளால்தான் இந்த உலகமும் அழகாய்த் தெரிகிறது.

    @ swarnavelkumar!
    அவ்வளவுதானா?


    @ஓலை!
    நன்றி.


    @Rathnavel Natarajan!
    நன்றி.

    பதிலளிநீக்கு
  5. @எஸ்.வி.வி!

    இந்த சொற்சித்திரம் படித்து நீங்கள் என சொல்வீகள் என எதிர்பார்த்தேன். நன்றி.
    எவ்வளவு அழகாகச் சொல்கிறீர்கள்.

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!