லீனா மணிமேகலையும் உலகின் அழகிய முதல் பெண்ணும்!

I am the very beautiful என்னும் ஆவணப்படம் சில வருடங்களுக்கு முன் பார்த்தேன். நள்ளிரவு பார்களில் பாடும் ஒரு பெண்ணைப் பற்றியது. பேண்ட் ஜிப்பைத் திறந்து, அங்கிருந்து மைக்கையும், சின்ன கேசட்டையும் எடுத்து, ஒளித்து வைத்து, உடைமாற்றி வரும் ராணாவுக்குத் தெரியாமல் அவளைப் பதிவு செய்யும், அவளது காதலர்களில் ஒருவனாக வரும் ஷ்யாம்குமார்தான் படத்தின் இயக்குனர். தொலைதூரத்தில் இருக்கும் குடும்பத்திற்கு அவளைப்பற்றி தெரியாது. தான் சந்தித்த ஆண்களில் வித்தியாசமானவனாய் தெரியும் ஷ்யாமிடம் தன்னை முழுமையாக பகிர்ந்துகொள்கிறாள் ராணா.

மாறிய பணியிடங்கள், மாறியஇருப்பிடங்கள், மாறிய காதலர்களோடு கழிந்த நாட்களைச் சொல்லியபடி நகரும் 65 நிமிடங்களில், பார்வையாளர்கள் துக்கத்தையும், குற்றமனப்பான்மையையும் ஒருசேர சுமக்க வேண்டி இருக்கும். அவளை நிர்வாணமாக பார்க்க நேரிடும் காட்சியில் பெரும் அதிர்ச்சி இருக்கும். சிறுவயதில் மண்ணென்ணெய் ஊற்றி, தற்கொலைக்கு முயன்று பிழைத்த காயங்களோடு அவள் சிரிப்பாள். ஷ்யாமும் தன்னை காதலிக்கவில்லை, தன்னை படம் எடுக்கவே வருகிறான் என்று அறிந்து, கதறி, அவனை வெளியேறச் சொல்லி விரட்டி, வீட்டிலேயே அடைந்து கிடப்பாள். சில நாட்களில் மெல்லத் தேறி, உடல்காயங்களை மறைக்கும் ஆடைகளை அணிந்துகொண்டு, மேக்அப்போடு ‘ I am the very beautiful'  என நகரத்தில் நகரும் பெரும் மனிதக் கூட்டத்தில் புள்ளியாய்  கரைந்து போவாள். அப்போது ‘I am the very beautiful'  என்னும் சொற்றொடருக்கு அர்த்தங்களும், புரிதல்களும் வேறாகவே இருக்கும். காயம்பட்ட பெண்களின் இன்னொரு புள்ளியாகவே ‘உலகின் அழகிய முதல் பெண்’ என்னும் சொற்றொடர் தோன்றியது.

AFSPA, 1958  என்றொரு இன்னொரு ஆவணப்படத்தையும் இங்கே குறிப்பிட வேண்டும். Armed Force Special Power Act 1958 மூலம் மணிப்பூரில் விசேஷ அதிகாரங்களோடு இருக்கும் இந்திய இராணுவம் அங்கு செய்கிற அட்டூழியங்களையும், அதற்கு எதிரான மக்கள் இயக்கங்களையும் பேசும் படம் அது. மனோரமா என்னும் மணிப்பூர் இளம்பெண்ணை இராணுவத்தினர் பலர் வன்புணர்வு செய்து கொன்று போட்டு விடுகின்றனர். கொதிப்படைந்து மக்கள் போராடுகின்றனர். பெண்கள் சிலர் நிர்வாணமாக இராணுவத் தலைமையகம் முன்பு குழுமி “வாங்கடா, நாய்களா வந்து எங்களையும் புணருங்கடா” என்று கைகளை விரித்து  ஆத்திரத்தோடு கத்திக் கதறும் காட்சி வரலாற்றின் மீதான பெரும் கலகமாக இருந்தது. அதிகாரம், பெண்ணுடல் மீது நிறுவப்பட்டதாகவும் இருக்கிறது. போர்கள்,  கலவரங்கள் எல்லாவற்றின் போதும் பெண்ணுடல் சிதைக்கப்பட்டும், குதறப்பட்டும் வலியில் துடிக்கின்றது. இரவுகளின் நிசப்தங்கள் காலகாலமாய் பெண்ணின் அழுகையில் நனைந்துகொண்டே வந்து போகின்றன. மதங்களும், புனித நூல்களும் பெண்ணுடல் மீது விசேஷ கவனம் கொள்ள வைக்கின்றன.

இந்த கடந்தகால அடக்குமுறைகள், ஒடுக்குமுறைகள் யாவற்றின் மீதும் கேள்விகள் எழுப்பியபடி, உரையாடலை நிகழ்த்தியபடி இந்த நூற்றாண்டின் காட்சிகள் தெரிகின்றன. பெண்ணுடலை புனிதமாகவும், கவர்ச்சிப் பொருளாகவும், அடிமையின் சதையாகவும் பார்ப்பதற்கு பேசப்பட்டு வந்த ‘அழகு’ என்னும் வார்த்தையின் கட்டுடைத்து, எதிர்க்கதையாட ‘உலகின் அழகிய முதல் பெண்’ என்னும் பிரயோகம இருப்பதாக புரிய முடிந்தது. பெண்ணுடலை ரகசிய கண்களோடு மேயும் வார்த்தைகளையெல்லாம் எடுத்துவந்து நடுத்தெருவில் போட்டு ’பாரடா’ என ஆவேசத்துடன் உடைக்கும் அந்த மணிப்பூர் பெண்களில் ஒருத்தியாக ‘உலகின் அழகிய முதல் பெண்’ணும் இருப்பாள் என்று எதிர்பார்ப்பும் இருந்தது.

 

லகின் அழகிய முதல் பெண்’ என்னும் லீனா மணிமேகலையின் இரண்டாவது கவிதைத் தொகுப்பு வெளிவந்திருக்கிறது. அதன் கவிதைகள் அனைத்தையும் படித்திருக்கவில்லை. இரு கவிதைகளை அவரது வலைப்பக்கத்தில் படித்திருக்கிறேன். அதில் உள்ள முதல் கவிதை உலகெங்கும் பெண்ணுடல் எல்லோராலும், எப்போதும் சிதைக்கப்பட்டு இருப்பதாய் சொல்கிறது. நாடு கோருபவர்கள் ஜிகாத் தொடுப்பவர்கள்,
புரட்சி வேண்டுபவ்ர்கள், போர் தொடுப்பவர்கள், ராஜாங்கம் கேட்பவர்கள்,
வணிகம் பரப்புபவர்கள், காவி உடுப்பவர்கள், கொள்ளையடிப்பவர்கள், நோய் பிடித்தவர்கள் என பட்டியலிடும்போது சுருதி பேதம் ஒலித்தது. பெண்ணுரிமையை முன்மொழிந்த அல்லது வழிமொழிந்தவர்களையும் அருவருப்பான பட்டியலில் சேர்த்திருக்கும் லீனாவின் கவிதையில் வேறொரு வன்மம் தொனித்தது. உலக உருண்டைக்கு முன்னே ஆணும் பெண்ணும் சேர்ந்து உழைப்பின் கருவிகளைத் தூக்கியபடி வீறுகொண்டு நிற்கும் கனவைக் கண்ட சித்தாந்தக் கொடி பிடித்தவர்களையும் வேண்டுமென்றே ஏன் இங்கு பேசவேண்டும் என்ற கேள்வியும், சந்தேகமும் வந்தது. எல்லோரையும் இப்படி ஒரே வரிசையில், ஒரே தரத்தில் வைப்பது என்பது மோசமான அரசியலாகப் பட்டது. யார் மீதும் நம்பகத்தன்மையில்லாமல், பெண்ணுக்கு பெண்ணே துணை என்ற ரீதியில் ‘பெண்ணியம்’ பேசுவதற்கு இப்படி ஒரு கவிதையா?

இன்னொரு கவிதை அபத்தமானது. அர்த்தம் கெட்டது. ஆபத்தானது. மனிதகுல வரலாற்றின் மகத்தான அத்தியாயங்களை எழுதியவர்களை, சுரண்டப்பட்ட, அடக்குமுறைகளுக்கு ஆளான மக்களுக்காக  எதிர்காலத்தின் மீது நம்பிக்கையையும், வழிகளையும் ஆராய்ந்தவர்களை  அந்தக் கவிதை கொச்சைப்படுத்துகிறது. மார்க்ஸ், லெனின், மாவோ, சே, பிடல் எல்லோரையும் ஆண்களாக மட்டுமே பார்க்கிற கண்கள் எப்படி ‘உலகின் அழகிய முதல் பெண்’ணுக்கு வாய்த்ததோ?  "இலட்சக்கணக்கான பக்கங்களில், ஆயிரம் வருடங்கள் வேண்டுமானாலும் சேகுவாராவை எழுதிக் கொண்டிருக்கலாம்" என்னும் எழுத்தாளர் காப்ரியில் கார்சியா மார்கோஸ் எங்கே, இந்த ‘உலகின் அழகிய முதல் பெண்’ எங்கே?  இப்படிக் கேட்டால் மார்கோஸையும் ஆணாக வரித்து இன்னொரு கவிதை வரக்கூடும்.  மகத்தான இலட்சியங்களையும், சித்தாந்தங்களையும்  தரம்தாழ்ந்த ‘ஏ’ஜோக்குகள் போல சித்தரிக்கிறது கவிதை. எனக்குப் புரிந்தவரையில் உலகைப் புரட்டும் நெம்புகோலை ஆண்குறியாக்கி, கவிதை கேலி செய்கிறது. அந்த படைப்பின் மூலம் என்ன திருப்தியை படைப்பாளி கண்டாரோ.

வார்த்தைகளைத் தாண்டி எந்த கலகமும் இந்தக் கவிதைகளில் இருப்பதாகத் தெரியவில்லை. எதோ ஒரு வகையில் தன் கவிதை பேசப்பட வேண்டும் என்னும் விருப்பமே வார்த்தைகளின் தேர்வுகளுக்குள் நிறைந்து கிடக்கின்றன. ஒரு இடதுசாரியாகிய என்னைப் பொறுத்த வரையில், இந்த இரண்டு கவிதைகளும் ‘உலகின் அழகிய பெண்’ணுடையதாக இல்லை. இந்தக் கவிதையில் கையாளப்பட்ட இதே வார்த்தைகளின் மூலம் வேதனையும், கோபமும் கொப்பளிக்கும் பல கவிதைகள் தமிழிலேயே வந்திருக்கின்றன. அவைகளையும் தமிழில் பெண் கவிஞர்களே எழுதி இருக்கின்றனர். அதுகுறித்து கடும் விமர்சனங்கள் ஒருபுறம் இருந்தபோதும் அறிவு சார்ந்த உலகம் வரவேற்று இருக்கிறது. ஆதரித்து இருக்கிறது. ஆக, ‘உலகின் அழகிய முதல் பெண்’ நிச்சயம் லீனா மணிமேகலை இல்லை. அவருக்கு முன்னே பலர் இருக்கிறார்கள் கம்பீரமாகவும், தெளிவாகவும், எளிமையாகவும். இந்தக் கவிதைகள் குறித்து நடந்த விவாதங்களையும், சர்ச்சைகளையும் படித்தபோது அலுப்பூட்டுவதாகவே இருந்தன. நியாயமாக வந்த விமர்சனங்களும், தர்க்கங்களும் ஆத்திரப்பட்ட வார்த்தைகளாலும், தனிப்பட்ட தாக்குதல்களாலும் திசை மாறிப் போயின.

 

ப்போது லீனா மணிமேகலையின் ‘உலகின் அழகிய முதல் பெண்’ கவிதைத் தொகுப்பையும், அதே பேரில் இருக்கும் வலைப்பக்கத்தையும் தடைசெய்ய வேண்டுமென்று சென்னை காவல்துறை ஆணையரிடம் இந்து மக்கள் கட்சி புகார் செய்துள்ளது. அதில் அதில் எழுத்தாளர் லீனா மணிமேகலையின் எழுத்துக்கள் ஆபாசமாக இருப்பதாகவும் சமூக ஒழுங்கைச் சீர்குலைப்பதாகவும் கூறி அவரைக் கைது செய்யுமாறும் அவரது எழுத்துக்களையும் சொத்துக்களையும் முடக்குமாறும் கோரப்பட்டுள்ளதாக இணையதளச் செய்திகள் தெரிவிக்கின்றன. இன்று 15.4.2010, எழுத்துச் சுதந்திரத்தின் மீதான ஒடுக்குமுறையாக பாவித்து, கண்டித்து சென்னையில் ஒரு கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது. பேராசிரியர் அ.மார்க்ஸ், எழுத்தாளர் தமிழ்ச்செல்வன், ஆதவன் தீட்சண்யா உட்பட பலர் அந்தக் கூட்டத்தில் பங்கேற்பதாக ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது.

“ஒருவருடைய எழுத்துக்களின் மீது மாற்றுக் கருத்துக்கள் விமர்சனங்கள் யாருக்கு வேண்டுமானாலும் இருக்கலாம். அதை வெளிப்படுத்துகிற உரிமையும் எவருக்கும் உண்டு. ஆனால் அதற்காக போலீஸ் உதவியுடன் எழுத்தை, எழுத்தாளரை முடக்குவதை முடக்க முயற்சிப்பதை தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கம் ஒருபோதும் ஏற்காது. இந்து மக்கள் கட்சியின் இந்த அத்துமீறலை தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கம் வன்மையாகக் கண்டனம் செய்கிறது. இப்புகாரை நிராகரிக்க வேண்டுமெனக் காவல்துறையைக் கேட்டுக்கொள்கிறோம்” இப்படி தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர், எழுத்தாளர்.தமிழ்ச்செல்வன் அறிக்கை விடுத்திருக்கிறார். மேலும், “கலாச்சார போலீஸ் வேலையின் இன்னொரு வடிவமாக வாயளவில் இடது தீவிரவாதம் பேசுகிற ஒரு சிறு குழுவினர் இரவு நேரங்களில் சில எழுத்தாளர்களின் வீடுகளுக்குப் போய் அவர்களின் எழுத்தை முன்வைத்து எழுத்தாளரின் குடும்பத்தினரையும் அண்டை வீட்டாரையும் எழுப்பித் தொல்லை செய்வதும் கலாட்டா செய்து வருவதும் எந்த எல்லைக்கும் சென்று எழுதுவதும் தாக்குவதும் நடந்துள்ளது. எழுத்தாளர் லீனா விஷயத்திலும் அவர்கள் இவ்விதமாகச் செயல்பட்டுள்ளனர். அதையும் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கம் வன்மையாகக் கண்டனம் செய்கிறது.” என்றும் அந்த அறிக்கையில் சொல்லப்பட்டு இருக்கிறது.

ஒருவர் இப்படித்தான் கவிதை எழுத வேண்டும், இப்படியெல்லாம் எழுதக் கூடாது என்றோ யாரும் கட்டளையிட முடியாது.  ஆரவாரங்களினாலும், எதிர்ப்புகளாலும் படைப்புகளின் தன்மையை அளவெடுத்து விடவும் முடியாது. தக்கது நிற்கும், தகாதது அழியும். இதுதான் விதி. இந்தப் புரிதலோடு கவிதை குறித்த விமர்சனத்தில் ஈடுபடாமல், அவைகளை முடக்குவது என்பது சரியான பார்வையாகவும் இருக்காது, தடைசெய்ய வேண்டும் என்பது முறையான பாதையாகவும் இருக்காது. இப்படித்தான் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் கருதுகிறது. அதேவேளையில், ‘உலகின் அழகிய முதல் பெண்’ குறித்த தனது விமர்சனங்களும் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் சார்பில் வைக்கப்பட்டிருக்க வேண்டும். இடதுசாரிகள் பக்கமே தான் நிற்பதாய் அடிக்கடிச் சொல்லும் லீனா மணிமேகலையின் கவிதைகள் குறித்த மாற்றுக் கருத்துக்களை வெளிப்படையாக பேசியிருக்கவும் வேண்டும். லீனா மணிமேகலைக்கு காட்டும் நியாயமான இந்த ஆதரவை, எல்லா சந்தர்ப்பங்களிலும், எல்லா சம்பவங்களின் போதும் வெளிப்படுத்த வேண்டும், பாதிக்கப்படுபவர்கள் அல்லது தாக்கப்படுபவர்கள் யாராக இருந்தாலும். அவர்கள் உசேனாக இருந்தாலும், தஸ்லிமா நஸ்ரினாக இருந்தாலும், பால் சக்காரியாகவாக இருந்தாலும். ஆம், அதுதான் நியாயம்.

லீனா மணிமேகலையின் கவிதைகள் கலாச்சாரத்தைக் கெடுத்து விட்டதாகவோ, ஒழுக்கவியல் மதிப்பீடுகள் தகர்க்கப்படுகின்றன என்றோ இங்கு நான்  துடித்தெல்லாம் போகவில்லை. அவரது கவிதைகள் மற்றும் பார்வை குறித்து மாற்றுக் கருத்துடையோரையெல்லாம் “ஆணாதிக்கச் சிந்தனை’ என்னும் ஒற்றைப் புள்ளியில் நிறுத்தி, கவிதையில் செய்த தவறையே, கவிதைக்கு வெளியேவும் லீனா மணிமேகலை செய்ய மாட்டார் என நம்புகிறேன். விமர்சனம் என்பது எதிர்ப்பதல்ல. சரி செய்வது. மாற்றுக் கருத்து என்பதும் எதிர்ப்பதல்ல. செழுமைப்படுத்துவது. எதிர்த்தல் என்பதற்கு வேறு அர்த்தம். அது அவரது கவிதைகளுக்கே உரியதாய் இருந்துவிட்டு போகட்டும்!

கருத்துகள்

48 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
  1. இப்படி ஒரு விமர்சனத்தோடு மதவெறிக்கு எதிராக இக்கூட்டம் இருக்குமேயானால் எல்லார் ஆதரவும் இருக்கும். ஆனால் எதிரிக்கு எதிரியோடு எவ்வளவு சேர்வது எவ்வளவு எதிர்ப்பது என்று இது ஆகிக்கொண்டிருக்கிறது.
    விவாதங்கள் திசைமாறிக்கொண்டிருக்கின்றன. திசைதிருப்பும் வழக்கமான மேட்டிமை குயுக்திக்குப் பலர் ஏமாந்துகொண்டிருக்கின்றனர்.
    எழுத்துக்கு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  2. புதுமையான சிந்தனை. நேர்த்தியான எழுத்து நடை .

    பகிர்வுக்கு நன்றி !
    தொடருங்கள் மீண்டும் வருவேன்

    பதிலளிநீக்கு
  3. Dear Mathavaraj,Vimalavidhya sent the cutting of Leena Writing. I red Amuthans and Minarvas comments also.U r comentary is the best one.Tha.Mu.Ye.Ka. Sa should be more carefull and weather at all they have to attend such meeting I doubt...kashyapan.

    பதிலளிநீக்கு
  4. அண்ணா,
    உங்களுடைய கருத்துக்களுக்கு 100% நான் ஒத்து போகிறேன்..
    மக்களை தன் பக்கம் திருப்ப நிறைய நல்ல வழிகள் இருந்தாலும்,ஒரு சிலர் வேறு ஒரு கீழ்த்தரமான வழியை பின்பற்றி மக்களை தன் பக்கம் திருப்ப நினைக்கிறார்கள்....அதில் லீனா மணிமேகலையும் ஒருவர்....அவருடைய இடுகையை நான் ரொம்ப நாளைக்கு முன்னாடியே படித்து முடித்து விட்டேன்...மேலும் இவர் பார்த்த ஆண்கள் எல்லாரும் 'அந்த' மாதிரி என்றால், அவர்கள் பேரை அவருடைய கவிதைகளில் பயன் படுத்த வேண்டியது தானே..ஏன் இவர் உலகத்தின் நன்மைக்காக பாடுபட்டவர்களின் பேரை கெடுக்க வேண்டும்.....இதற்க்கு வீனைப்போன நாலு பேர் வக்காலத்து வாங்குறாங்க...நீங்க எது வேணும்னாலும் எழுதுவீங்க.....அத பாத்துகிட்டு நாங்க சும்மா கையை கட்டிக்கிட்டு இருக்க முடியாது...ஏன் தாமரை கூட ஒரு பெண் கவிஞர் தான்... அவர் உங்களை மாதிரியா எழுதறாரு......

    இந்த மாதிரி நாங்க பேசினா, நான் என்னமோ கற்காலத்தில வாழுறது மாதிரி சொல்லுவாந்த இந்த அறிவு ஜீவிகள்.....

    //"இலட்சக்கணக்கான பக்கங்களில், ஆயிரம் வருடங்கள் வேண்டுமானாலும் சேகுவாராவை எழுதிக் கொண்டிருக்கலாம்" என்னும் எழுத்தாளர் காப்ரியில் கார்சியா மார்கோஸ் எங்கே, இந்த ‘உலகின் அழகிய முதல் பெண்’ எங்கே? இப்படிக் கேட்டால் மார்கோஸையும் ஆணாக வரித்து இன்னொரு கவிதை வரக்கூடும். //

    கண்டிப்பா இதுக்கும் ஒரு கவிதை எழுதுவாங்க.....

    //மகத்தான இலட்சியங்களையும், சித்தாந்தங்களையும் தரம்தாழ்ந்த ‘ஏ’ஜோக்குகள் போல சித்தரிக்கிறது கவிதை. எனக்குப் புரிந்தவரையில் உலகைப் புரட்டும் நெம்புகோலை ஆண்குறியாக்கி, கவிதை கேலி செய்கிறது. அந்த படைப்பின் மூலம் என்ன திருப்தியை படைப்பாளி கண்டாரோ. //

    என்னை பொறுத்த வரை அது ஒரு மட்டமான "a " ஜோக் தான்....

    //வார்த்தைகளைத் தாண்டி எந்த கலகமும் இந்தக் கவிதைகளில் இருப்பதாகத் தெரியவில்லை. எதோ ஒரு வகையில் தன் கவிதை பேசப்பட வேண்டும் என்னும் விருப்பமே வார்த்தைகளின் தேர்வுகளுக்குள் நிறைந்து கிடக்கின்றன//

    அவங்க பேர எப்படியாவது மக்கள் பேசனும்கிரதுக்காகவே எழுதப்பட்ட ஒரு மட்டமான படைப்பு என்பது என் வாதம்.....
    எப்படியாவது வாழணும்ன்னு கொஞ்ச பேரு இருப்பாங்க....இப்படித்தான் வாழனும்ம்னு கொஞ்ச பேரு இருப்பாங்க....இதுல அவங்க முதல் ....

    //இந்தக் கவிதையில் கையாளப்பட்ட இதே வார்த்தைகளின் மூலம் வேதனையும், கோபமும் கொப்பளிக்கும் பல கவிதைகள் தமிழிலேயே வந்திருக்கின்றன. அவைகளையும் தமிழில் பெண் கவிஞர்களே எழுதி இருக்கின்றனர். அதுகுறித்து கடும் விமர்சனங்கள் ஒருபுறம் இருந்தபோதும் அறிவு சார்ந்த உலகம் வரவேற்று இருக்கிறது. ஆதரித்து இருக்கிறது. ஆக, ‘உலகின் அழகிய முதல் பெண்’ நிச்சயம் லீனா மணிமேகலை இல்லை. //

    100% உண்மை....

    அப்புறம் என்னோட கருத்து எல்லாம் "நீங்க எது வேணும்ன்னாலும் எழுதுங்க...ஆனா உர்ப்படியா எழுதுங்க...மத்தவங்களுக்கு பயன்படவிட்டாலும் அட்லீஸ்ட் மத்தவங்கள கேவலப்படுத்தாம இருந்த சரி..."

    பதிலளிநீக்கு
  5. //எழுத்தாளர் லீனா விஷயத்திலும் அவர்கள் இவ்விதமாகச் செயல்பட்டுள்ளனர். //

    நேர்மையானவர்கள் என்றால் எந்த அமைப்பு என்று பெயர் சொல்லி எழுத வேண்டியதுதானே? ஏன் கிசு கிசு பாணி? பெயர் சொல்லி எழுதினால் உங்களது கருத்துக்கள் அவதூறு என்று நீருபணமாக வாய்ப்பாகிவிடும் என்ற பயம்தானே கிசு கிசு பாணியில் எழுதச் சொல்கிறது. இதுவே உங்களது நேர்மையின்மையை காட்டுகிறது.


    பெண்ணெழுத்துப் பாதையில் முட் கற்கள் பதிக்கும் லீனா மணிமேகலை
    மினர்வா

    http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=5740:2010-04-13-19-16-28&catid=901:2009-08-16-09-44-24&Itemid=139

    //வினவு கட்டுரை எழுப்பிய கேள்வி இதுதான்... புரட்சிகரத் தோழனும், மார்க்சும் எல்லாமும் ஆண் குறிதான் என்றால் அக்கவிதையில் ஏன் சேரன் பெயரோ, பாரதிராஜா பெயரோ, சி.ஜெரால்ட் பெயரோ இல்லை என்று கேட்டார்கள். லீனாவின் கவிதையில் அரசியல் இல்லை மிக மோசமான ஆபாசமான கவிதை என்பதை அம்பலப்படுத்திய கேள்வியே இதுதான் என்னும் போது இந்தக் கேள்வியை எப்படி நாம் உதாசீனப்படுத்தி விட முடியும். வினவின் கட்டுரைக்கு பதில் எழுதிய லீனாவும் சரி அவரது ஆண் நண்பர்களும் சரி வினவின் இக்கேள்வியை எதிர்கொள்ளவே இல்லை. மாறாக அவதூறு என்றும் தனிப்பட்ட தாக்குதல் என்றும் கூறினார்கள். இருக்கலாம் தனிப்பட்ட தாக்குதல் இருக்கலாம். ஆனால் அதையே கம்யூனிஸ்டுகள் மீது லீனா செய்யக் கூடாதில்லையா? கவிதைக்குக் கவிதை லெனின், மார்க்ஸ், புரட்சி என்றெல்லாம் எழுதும் லீனா இந்த லிஸ்டில் திராவிடத் தலைவர்களின் பெயர்களையோ, தமிழ்த் தேசியவாதிகளின் பெயர்களையோ சேர்த்திருந்தால் அவர்கள் இவரை விட்டு விடுவார்களா? இவர்களை எழுதினால் எதிர்ப்பு இருக்காது அரசின் ஆதரவையோ கம்யூனிச எதிர்ப்பாளர்களின் ஆதரவையோ பெறலாம், எதிர்வினை வந்தால் கருத்துச் சுதந்திரம் என கூட்டம் போடலாம் என்று தெரிந்து வைத்துக் கொண்டு இப்படி கவிதை எழுதுவது என்ன மாதிரி பெண்ணியம் என்று தெரியவில்லை.//

    பதிலளிநீக்கு
  6. ஒரு சில விஷயங்களைத் தவிர மற்றவற்றில் நான் உங்களுடன் உடன்படுகிறேன்.

    ஒரே ஒரு தகவல்... இந்த குறிப்பிட்ட இரு கவிதைகளும் “உலகின் அழகிய முதல் பெண்” தொகுப்பில் இடம்பெறவில்லை. ஆனால் தொடர்ந்து இணையதளங்களில் இந்தக் கவிதைகள் அந்தத் தொகுப்பில்தான் இருப்பது போன்ற மாயையை தோற்றுவிக்கின்றன. தொகுப்பு வெளியாகி பல மாதங்கள் கழித்து எழுதப்பட்ட இக்கவிதைகள் இரண்டும் ஹரிகிருஷ்ணனின் “மணல் வீடு” இதழில் வெளியானவை.

    பதிலளிநீக்கு
  7. ///ஒருவர் இப்படித்தான் கவிதை எழுத வேண்டும், இப்படியெல்லாம் எழுதக் கூடாது என்றோ யாரும் கட்டளையிட முடியாது. ஆரவாரங்களினாலும், எதிர்ப்புகளாலும் படைப்புகளின் தன்மையை அளவெடுத்து விடவும் முடியாது. தக்கது நிற்கும், தகாதது அழியும். இதுதான் விதி.///

    100% மெய் இதை உணர வேண்டும் எல்லோரும் மாது சார்

    பதிலளிநீக்கு
  8. அவங்க கவிதையை படிச்சேன்

    "அங்காடித் தெருல கதாநாயகி அந்த மோசமான மேலாளர் செய்ததை சொல்லறப வர உணர்வு சுத்தமா கவிதைய படிச்சப்ப வரல"

    பெண்ணடிமை தனத்தை முதல எதிர்த்ததே ஒரு ஆண் தான் என்பதை எப்படி அந்த கவிதாயனி மறந்தார் என்று எனக்கு தெரியவில்லை.

    http://akashsankartamil.blogspot.com/

    பதிலளிநீக்கு
  9. அந்த கவிதைகளில் நீங்கள் கூறி இருப்பது போல் கலகம் தெரியவில்லை. எனக்கு கவிதைகள் பெரும்பாலும் அர்த்தபடுவதில்லை. அந்த கவிதைகளில் ஆணாதிக்கத்தை எழுத முனைந்தபோது லெனின், மாவோ பெயர்களை குறிப்பிட்டு எழுதியதால் எனக்கு பிடித்திருந்தது.

    பதிலளிநீக்கு
  10. we shall respect individual freedom and writings.It must be protected/safeguarded.No doubt>>>The POEMS of LEENA MANIMEHALAI HAVE NOTHING BUT PERVERSION and her lust>>>The progressive writers Association should give a CLARION call to protect the freedom of speech and writing but NOT FOR LEENA MANIMEHALAI.், ''குறித்த தனது விமர்சனங்களும் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் சார்பில் வைக்கப்பட்டிருக்க வேண்டும். இடதுசாரிகள் பக்கமே தான் நிற்பதாய் அடிக்கடிச் சொல்லும் லீனா மணிமேகலையின் கவிதைகள் குறித்த மாற்றுக் கருத்துக்களை வெளிப்படையாக பேசியிருக்கவும் வேண்டும். லீனா மணிமேகலைக்கு காட்டும் நியாயமான இந்த ஆதரவை, எல்லா சந்தர்ப்பங்களிலும், எல்லா சம்பவங்களின் போதும் வெளிப்படுத்த வேண்டும், பாதிக்கப்படுபவர்கள் அல்லது தாக்கப்படுபவர்கள் யாராக இருந்தாலும். அவர்கள் உசேனாக இருந்தாலும், தஸ்லிமா நஸ்ரினாக இருந்தாலும், பால் சக்காரியாகவாக இருந்தாலும். ஆம், அதுதான் நியாயம்.She has no courage to put the names of M.KARUNANITHI,C.N.ANNADURAI,VAIKO,RAJIV GANDHI,L.K.ADVANI in her poems.She is truly not at all a leftist..Leena needs only PROPAGANDA..My family women members after reading her poems said "they had a VOMITING SENSATIONS"That is the quality of her poems...She is worthless to be supported for her poems..

    பதிலளிநீக்கு
  11. கருத்து சுதந்திரம் குறித்தும், முதலாளித்துவம் குறித்தும் தனது இலக்கியப் பணிகளுக்கிடையே அவ்வப்போது கவலைப்படும் மாதவராஜ், சிபிஎம் கருத்து சுதந்திரத்துக்கு ஆப்படித்த ஒவ்வொரு தருணங்களிலும், முதலாளித்துவ கொழுப்பெடுத்து ஆடிய ஒவ்வொரு தருணங்களிலும் கள்ளமௌனத்தையே பதிலாகத் தந்துள்ளார். அது அவரது பிழைப்புக்கு தேவைப்படுகிறது என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது.

    பதிலளிநீக்கு
  12. நான் இந்த விவாதத்தின் உள்ளே செல்ல விரும்ப வில்லை, ஏனென்றால் தனி மனிதரை நாம் விமர்சிக்கிறோம் என்று பொருள் கொள்கின்றனர்.

    மாற்று கருத்தை ஏற்கும் பக்குவம் இருவருக்குமே இல்லை, இருவருமே விளம்பர பிரியர்கள்.

    எனக்கு தோன்றிய ஒரு கருத்து, திரை உலகை சார்ந்த பலரும் பதிவுலகம் வந்து, இங்கேயும் விளம்பரம், புகழ் அடைய முடியுமா என்றே நினைக்கின்றனர். . பதிவுலகம் வேறு, திரை உலகம் வேறு என்ற அடிப்படை வேறுபாடு அவர்களின் சிந்தனையில் வருவதில்லை.

    இன்னொரு விஷயம், நம் நாட்டிலும் எழுத்திற்கான விதி முறைகள், வரை முறைகள், எல்லைகள், சட்டங்கள் உண்டு. இன்றும் காமம் சார்ந்த (பிறப்பு உறுப்பை, உடல் உறவை ) குறிக்கும் வார்த்தை, காட்சி, புகைப் படம் போன்றவற்றை நீங்கள் அரசு அனுமதி/தணிக்கை பெறாமல் வெளியிடவோ, எழுதவோ கூடாது.

    நம் வீட்டு குழந்தைகளை (குறிப்பாகா பதின்ம வயதில் இருக்கும்) இந்த கவிதைகள் படிக்க நாம் அனுமதிப்போமா.

    நீங்கள் (நான்) தாயாரை அல்லது தந்தையை அல்லது அண்ணன், தங்கையை அருகில் வைத்து கொண்டு இந்த கவிதையை இணையத்தில் படிக்கும் அளவு பக்குவம் எட்டியுள்ளோமா நாம்.


    why relatives, are we in a stage to read this poem sitting along with a female blogger with us. If we have really attained that stage, I will be the 1st person to be happy.

    My concern is still we have not emotionally grown to that stage.

    பதிலளிநீக்கு
  13. Kavin Malar
    ஒரே ஒரு தகவல்... இந்த குறிப்பிட்ட இரு கவிதைகளும் “உலகின் அழகிய முதல் பெண்” தொகுப்பில் இடம்பெறவில்லை. ஆனால் தொடர்ந்து இணையதளங்களில் இந்தக் கவிதைகள் அந்தத் தொகுப்பில்தான் இருப்பது போன்ற மாயையை தோற்றுவிக்கின்றன. தொகுப்பு வெளியாகி பல மாதங்கள் கழித்து எழுதப்பட்ட இக்கவிதைகள் இரண்டும் ஹரிகிருஷ்ணனின் “மணல் வீடு” இதழில் வெளியானவை.



    கவின்மலர் அம்மையாரே, பெண்ணியக் காவலரே!

    அந்த கழிசடைக் கவிதைகள் எந்த இதழில் வெளிவந்தது என்கிற புள்ளிவிபரங்களெல்லாம் கிடக்கட்டும். அந்த கவிதைகள் குறித்தும் அதில் கம்யூனிச ஆசான்கள் அவமதிக்கப்பட்டிருப்பது குறித்தும் உங்களது கருத்தென்று ஏதாவது இருந்தால் முதலில் பதிந்துவிட்டு நியாயம் பேச வாருங்களேன்; கேட்போம்!

    ஈராக் போரும், ஆப்கானிய, பாலஸ்தீனிய, ஈழப் போர்களும் வெறும் ஆண்குறிகள் நடத்தும் போர்தான் என்று ‘கட்டுடைத்த’ கவிதைவரிகளுக்காக, கம்யூனிச முகமூடியணிந்து வெட்கமின்றி வாதிட வருகிறீர்களே, அப்போருக்கான உண்மையான நோக்கம் குறித்து ஏதேனும் அறிந்திருந்தால் இங்கே பதியுங்களேன் பார்க்கலாம்!!

    அமெரிக்காவின் பச்சையான ஆக்கிரமிப்புப் போர்களை வெறும் ஆண்குறி செய்யும் வேலைதான் என்று சித்தரித்திருக்கும் லீனாவை, அதே அமெரிக்காவின் ஆண்குறியை ஒத்தவர்கள்தான் சமூகமாற்றத்திற்காகப் போராடும் புரட்சியாளர்களும் என்பதாகச் சித்தரித்திருக்கும் அவரது கவிதையை விமர்சித்துவிட்டார்கள் என்பதற்காக பாய்ந்து பிடுங்க வருகிறீர்களே, ஒரு கம்யூனிஸ்ட் என்று சொல்லிக்கொள்ளும் உங்களுக்கு சொந்தமான அறிவு நாணயமென்று ஏதும் இருக்கிறதா?!

    தோழர் மாதவராஜ் இங்கு தமுஎகச விற்கு வைத்திருக்கும் கேள்வியினை புரிந்துகொள்ள முடியவில்லையென்றால், மீண்டும் மீண்டும் படித்துப்பாருங்கள். முடிந்தால் அவற்றுக்கான நேர்மையான பதிலைப் பதியுங்கள் என்று மிகத் தாழ்மையுடன் வேண்டிக்கொள்கிறேன், அம்மையாரே! நன்றி!!

    பதிலளிநீக்கு
  14. டாகடர்.ருத்ரன் சார்!
    வருகைக்கும், பகிர்வுக்கும் மிக்க நன்றி.


    பனித்துளி சங்கர்!
    மிக்க நன்றி. வாருங்கள்.


    காஸ்யபன் தோழர்!
    புரிதலுக்கு நன்றி.



    நல்லவன் கருப்பு!
    உங்களுடன் நானும் உடன்படுகிறேன்.

    பதிலளிநீக்கு
  15. வினோத்!
    அந்த அறிக்கையில் உள்ளதை அப்படியே இங்கு வெளியிட்டு இருக்கிறேன். ஒரு அமைப்பின் சார்பில் வெளியிடும் அறிக்கை நேரடியாகவே யாரென்று சொல்லியிருக்க வேண்டும் என்பதில் உடன்படுகிறேன் நானும்.

    அவர்கள் மட்டும் கம்யூனிஸ்டுகள் மீது தனிப்பட்ட தாக்குதல் நடத்தலாமா என்னும் வினவின் கேள்வியில் இருக்கும் கோபம் நியாயமானதுதான். இருப்பினும் அந்த தனிப்பட்ட தாக்குதல்களைத் தவிர்த்திருக்க வேண்டும் என்பதுதான் என் கருத்து. சில பேர்களைத் தவிர்த்திருந்தால், நன்றாக இருந்திருக்கும். வினவின் அந்தக் கட்டுரை எனக்கு பல இடங்களில் ரொம்ப பிடித்திருந்தது.

    பதிலளிநீக்கு
  16. கவின்மலர்!

    தகவலுக்கு நன்றி. ஆனாலும் அந்தக் கவிதைகள் சகிக்க முடியவில்லை என்பது உண்மைதானே!


    நேசமித்ரன்!
    மிக்க நன்றி.



    செல்வேந்திரன்!
    அப்புறம்.....?




    சங்கர்!
    வருகைக்கும், பகிர்வுக்கும் நன்றி.
    தாங்கள் குறிப்பிட்ட பதிவைப் படிக்கிறேன்.


    பா.ரா!
    வாங்க. உங்கள் குரல் பெரும் ஆதரவாய்த் தெரிகிறது. நன்றி.



    மணிகண்டன்!
    யாரை எழுதி இருந்தால் உங்களுக்குப் பிடிக்காது?

    பதிலளிநீக்கு
  17. விமலவித்யா!
    வருகைக்கும், பகிர்வுக்கும் மிக்க நன்றி தோழர்.கடைசியில் கேட்டிருக்கும் கேள்வி பளாரென அறைகிறது!

    வினோத்!
    எனக்குப் பட்டதை, தெரிந்ததை, முடிந்ததைச் சொல்கிறேன். நேர்மையாகவே பிழைப்பு நடத்துகிறேன்.

    ராம்ஜி யாஹூ!
    கருத்துக்களுக்கு நன்றி நண்பரே!

    ஏகலைவன்!
    கவின்மலர் அவர்கள் சில விஷயங்களைத் தவிர பல விஷயங்களில் உடன்பாடு என்றுதானே சொல்லி இருக்கிறார்கள். பிறகு ஏன் இவ்வளவு கோபத்தோடு உரையாடலும், வார்த்தைகளும்? நிதானமாகவேப் பேசுவோமே! கருத்துப் பரிமாற்றம்தானே?

    பதிலளிநீக்கு
  18. அன்பின் கவின்மலர்.

    அந்தக் எழுத்தைப்
    படித்தேன்.
    அதில் என்ன உடன்பாடும் முரண்பாடும் ?.

    முழுக்க முழுக்க பரபரப்பை நோக்கி வீசப்பட்ட எழுத்து அது.

    பதிலளிநீக்கு
  19. கருத்து சுதந்திரத்தை பாதுகாப்பதில் மிகுந்த அக்கறையுடன் அதே நேரத்தில் கவிதை பற்றி கூர்மையான விமர்சனத்துடன் உங்கள் பதிவு .விவாதத்தினை வளர்ப்போம்.
    "மனிதகுல வரலாற்றின் மகத்தான அத்தியாயங்களை எழுதியவர்களை, சுரண்டப்பட்ட, அடக்குமுறைகளுக்கு ஆளான மக்களுக்காக எதிர்காலத்தின் மீது நம்பிக்கையையும், வழிகளையும் ஆராய்ந்தவர்களை அந்தக் கவிதை கொச்சைப்படுத்துகிறது".
    “ஒருவருடைய எழுத்துக்களின் மீது மாற்றுக் கருத்துக்கள் விமர்சனங்கள் யாருக்கு வேண்டுமானாலும் இருக்கலாம். அதை வெளிப்படுத்துகிற உரிமையும் எவருக்கும் உண்டு. ஆனால் அதற்காக போலீஸ் உதவியுடன் எழுத்தை, எழுத்தாளரை முடக்குவதை முடக்க முயற்சிப்பதை தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கம் ஒருபோதும் ஏற்காது
    விமர்சனம் என்பது எதிர்ப்பதல்ல. சரி செய்வது. மாற்றுக் கருத்து என்பதும் எதிர்ப்பதல்ல. செழுமைப்படுத்துவது. எதிர்த்தல் என்பதற்கு வேறு அர்த்தம்.

    பதிலளிநீக்கு
  20. *** யாரை எழுதி இருந்தால் உங்களுக்குப் பிடிக்காது? **

    ஏகாதிபத்தியம் செய்பவர்களை :)-

    வெரி சிம்பிள் சார். லீனா மணிமேகலையின் கவிதையை படிப்பவர்கள் தமிழ் இலக்கிய வட்டார நபர்கள் மட்டும் தான். அவர்களுக்கு ஆணாதீக்கத்தை புரியவைக்க அந்த கவிதை எழுதப்பட்டிருந்தால் இப்பெயர்கள் மட்டுமே திரும்பி பார்க்கசெய்யும். புஷ், ப்ளேர் என்று எழுதினால் கவிதையை படித்துவிட்டு சென்றுவிடுவீர்கள். முற்போக்கு தெய்வங்களை குறிப்பிட்டால் தான் கலகம் பிறக்கும் :)- அதை லீனா மிக அழகாக செய்துள்ளார். அதனால் எனக்கு பிடித்துள்ளது. அதைத்தவிர எனக்கு இது பற்றி கருத்து சொல்லும் அளவுக்கு ஒன்றும் இருப்பதாக தெரியவில்லை அல்லது புரியவில்லை.

    பதிலளிநீக்கு
  21. //
    லீனா மணிமேகலைக்கு காட்டும் நியாயமான இந்த ஆதரவை, எல்லா சந்தர்ப்பங்களிலும், எல்லா சம்பவங்களின் போதும் வெளிப்படுத்த வேண்டும், பாதிக்கப்படுபவர்கள் அல்லது தாக்கப்படுபவர்கள் யாராக இருந்தாலும். அவர்கள் உசேனாக இருந்தாலும், தஸ்லிமா நஸ்ரினாக இருந்தாலும், பால் சக்காரியாகவாக இருந்தாலும். ஆம், அதுதான் நியாயம்.
    //

    நியாயம் என்று நீங்களே சொல்லி விட்டதால் கேட்டே ஆக வேண்டி இருக்கிறது.

    1. ஹூசேன் விஷயத்தில் கம்யூனிஸ்ட் கட்சிகளின் நிலைப்பாடு என்ன? தனது மதத்துக்கு எதிராக ஒரே ஒரு ஓவியம் கூட வரைந்திருந்தாத ஒருவர், மற்றொரு மதக் கடவுளை நிர்வாணமாக வரைந்ததை கம்யூனிஸ்ட்டுகள் ஆதரிக்கிறார்களா? அப்படியெனில் காரணம் என்ன?

    2. இஸ்லாமையும், இஸ்லாமிய பெரும்பான்மை பங்களாதேஷில் நடந்து கொண்ட முறையை விமர்சித்து "வெட்கம்" என்று எழுதிய தஸ்லிமா நஸ் ரீனுக்கு ஃபட்வா விதிக்கப்பட்ட்தையும், அதை தொடர்ந்து அவர் உயிருக்கு பயந்து புலம் பெயர நேர்ந்தது குறித்தும் கம்யூனிஸ்ட்டுகள் விளக்கம் என்ன? மேற்கு வங்கத்தில், கம்யூனிஸ்ட் அரசு நடக்கும் ஒரு இடத்தில் இருந்து அவர் வெளியேற்றப்பட காரணம் என்ன?

    3. ராஜ்மோகன் உன்னித்தான் விஷயத்தில் பால் சக்கரியா சம்பந்தப்படவில்லை...வெறுமனே எதிர்கருத்து தெரிவித்ததற்காக அடித்து உதைக்கப்பட்டிருக்கிறார்...இது தான் கருத்து சுதந்திரம் என்பதற்கு கம்யூனிஸ்டுகளின் நடைமுறை விளக்கமா?

    4. ராஜ்மோகனின் தனிப்பட்ட வாழ்க்கையில் தலையிட கம்யூனிஸ்ட்டுகளுக்கு யார் அதிகாரம் கொடுத்தது?

    5. டினாமென் ஸ்கெயரில் கல்லூரி மாணவர்களை கொன்று குவித்தது கம்யூனிஸ்ட் அரசாங்கமா இல்லை மாணவர்கள் ராணுவ டாங்க்கியை ஏற்றி தற்கொலை செய்து கொண்டார்களா?

    6. டினாமன் ஸ்கொயர், மற்றும் பல விசயங்களை கூகிள் தேடலில் கூட காட்டக்கூடாது என்பதையும் இன்னும் பிற மக்கள் எதை பார்க்கலாம் எதைப் பார்க்கக் கூடாது என்ற கன்டிஷன்களையும் எதிர்த்து அண்மையில் கூகிள் சைனாவை விட்டு வெளியேறியது. உண்மையில், இது தான் கம்யூனிஸ்ட்டுகள் சொல்லும் கருத்து சுதந்திரமா?

    பதிலளிநீக்கு
  22. மிக்க நன்றி... மாதவராஜ்... புதிதாக ஆரம்பித்த வலைதளம் நிறைய மாற்றங்களை செய்துகொண்டிருக்கிறேன்...
    இணையதளத்தின் முகவரி மாற்றப்பட்டுள்ளது.... மிக விரைவில் எனது படைப்புகள் உலா வரும் உங்கள் பார்வைக்கு....

    தமிழுக்கும் நான் செய்துகொண்டிருக்கிற வேலைக்கும் வெகு தூரம் ஆனால் கொஞ்சம் தமிழ் தாகம்... என் வாழ்வின் பாதியில், அழவைத்து மறைந்துவிட்ட என் தமக்கை ஊட்டிய தமிழ்...

    http://a-aa-purinthuvitathu.blogspot.com/

    பதிலளிநீக்கு
  23. அது சரி , ஆனா பதில் வராது அது சரி மேட்டிமைத்தனமாக திருப்பபடும்.

    பதிலளிநீக்கு
  24. மணிகண்டன்!

    மக்களுக்காக சிந்தித்தவர்கள், வாழ்ந்த வர்கள், தங்களை அர்ப்பணித்தவர்கள் குறித்து உங்களுக்கு எவ்வளவு ஈஸியான பார்வை!

    பதிலளிநீக்கு
  25. அதுசரி!

    வாங்க நண்பரே, நலமா?

    நியாயம் என்பது எனது நிலைபாடு. கட்சியிடம் நிலைபாட்டை இங்கு கேட்க வேண்டாம்.

    1.ஹீசேனுக்கு ஆதரவாகத்தான் எனது நிலைபாடு. இதுகுறித்து ஒரு பதிவு எழுதி இருக்கிறேன்.

    2.தஸ்லிமா நஸ்ரினை, மேற்கு வங்க அரசு வெளியேற்றி இருக்கக் கூடாது என்பதே என் கருத்து.

    3.பால்சக்காரியா மீது தொடுக்கப்பட்ட தாக்குதல் நிச்சயமாக கண்டிக்கப்பட வேண்டியது. யாரும் கலாச்சார போலீசாய் இருக்க முடியாது.

    4.ராஜ்மோகனின் அந்தரங்கத்திற்குள் இப்படியொரு அத்துமீறல் மிக மோசமானது.

    5.தினாமென் சதுக்கத்தில் நடந்த படுகொலைகள், ஜனநாயகத்தன்மையற்றது. எதன் பேரில், எதன் பொருட்டு நடந்திருந்தாலும் அந்த அவப்பெயர் வரலாற்றில் சீன அரசுக்கு உண்டு.

    6.கூகிள் நிறுவனத்தைத் தடை செய்ததற்கு வேறு காரனங்கள் உண்டு. கட்டற்றத் தன்மை இல்லாமல் சில கட்டுப்பாடுகளை அந்த அரசு விதிக்கிறது. அதுதான் காரணம். www,baidu.com என்னும் தேடுதல் தளத்தை அவர்கள் வடிவமைத்திருக்கிறார்கள். அதைத்தான் சீன மக்கள் அதிகமாக பயன்படுத்துகின்றனர்.

    பதிலளிநீக்கு
  26. சங்கர்!
    வாழ்த்துக்கள்.



    குடுகுடுப்பை!
    உங்கள் பார்வை, உங்கள் கோணம்

    பதிலளிநீக்கு
  27. நன்றாக பதில் சொல்லி இருக்கிறீர்கள், உங்கள் கட்சியின் செயல்களில் இருந்து உங்கள் மனம் வேறுபடுகிறது உங்களது நேர்மையை மெச்சுகிறேன்.

    பதிலளிநீக்கு
  28. கூகிள் நிறுவனத்தைத் தடை செய்ததற்கு வேறு காரனங்கள் உண்டு. கட்டற்றத் தன்மை இல்லாமல் சில கட்டுப்பாடுகளை அந்த அரசு விதிக்கிறது. அதுதான் காரணம். www,baidu.com என்னும் தேடுதல் தளத்தை அவர்கள் வடிவமைத்திருக்கிறார்கள். அதைத்தான் சீன மக்கள் அதிகமாக பயன்படுத்துகின்றனர்.

    //

    ஏன் விதிக்கிறது என்று யாரும் அங்கே கேள்வி கேட்க முடியாததே காரணம். அங்கே விக்கிபீடீயா கூட தடை செய்யப்பட்டுள்ளது, இந்தியாவில் கம்யூனிஸ்ட் ஆட்சி இருந்தால் நீங்கள் கூட இப்படியெல்லாம் நியாயமாக பதிவெழுத முடியாது என்றே கருதுகிறேன்.

    பதிலளிநீக்கு
  29. மனித உரிமைவாதி அ.மார்க்ஸ் முன்னிலையில் தோழர்களை அடிக்கப் பாய்ந்த லீனா மணிமேகலை.

    புரட்சிகரத் தோழர்களையும் மார்க்கிசியப் பேராசான் மார்க்சையும் மிக மோசமான முறையில் இழிவு படுத்தி லீனா மணிமேகலை மட்டகரமான கவிதை ஒன்றை எழுதியிருந்தார். அதற்கு வினவு தோழர்கள் எதிர்வினையாற்றியிருந்தார்கள். இதற்கிடையில் இந்து மக்கள் கட்சி லீனாவுக்கு எதிராக தமிழக காவல்துறையிடம் புகார் மனு ஒன்றை வழங்கியது. பாசிச இந்து மக்கள் கட்சிக்கு தமிழகத்தில் செல்வாக்கு ஏதும் இல்லை. இந்நிலையில் லீனா மணிமேகலைக்கு ஆதரவாக மனித உரிமை வாதி என்று தன்னைத் தானே கூறிக் கொள்ளும் அ.மார்க்ஸ் ஒரு அரங்கங்கக் கூட்டம் ஒன்றை ஏற்பாடு செய்திருந்த நிலையில் ராஜன்குறை, அ.மார்க்ஸ், சுகுணாதிவாகர், லீனா உட்பட இன்னும் சிலரைத் தவிற வேறு எவரும் லீனாவுக்காக வரவில்லை.

    மக்கள் கலை இலக்கியக் கழகத் தோழர்கள் நாற்பது பேர் அக்கூட்டத்திற்குச் சென்றிருந்தனர். கூட்டம் தொடங்கியதும் அ.மார்க்ஸ்சிடம் ஜனநாயக ரீதியிலும் அமைதியாகவும் தோழர்கள் சில கேள்விகளைக் கேட்டனர். கேள்வி கேட்கும் உரிமையை மறுத்த மார்க்ஸ். தொடர்ந்து பேசுமாறு ராஜன்குறையை அழைத்தார். ஆபாசக் கவிஞர் லீனாவிடம் சில தோழர்கள் கேள்வி எழுப்பியதுமே அவர் பயங்கர உஷ்ணமாகி விட்டார். கடுமையான ரத்தக் கொதிப்பு நோயால் பாதிக்கப்பட்டுள்ள லீனாவுக்கு பிளட்பிரஷர் எகிற அ.மார்க்ஸ் முன்னிலையில் தோழர்களை கையோ ஓங்கியபடி அடிக்கப் பாய்ந்து விட்டார். ஜனநாயக ரீதியில் கேள்விகளை எழுப்ப வந்த தோழர்கள் அதிர்ந்து போய் அமைதியாகி. ராஜன் குறையை நோக்கி சில கேள்விகளை வீச அ.மார்க்ஸ் உடனே அரங்கத்தை விட்டு வெளியே போங்கள் என்று டென்ஷனாகி கத்த ஆகப்பெரிய ஜனநாயகவாதியின் அஹிம்சை முகத்தைக் கண்ட தோழர்கள் ஜனநாயக ரீதியில் கோஷமிட்டபடி அரங்கை விட்டு வெளியேறினார்கள்.

    http://inioru.com/?p=12299

    பதிலளிநீக்கு
  30. ****
    மணிகண்டன்!

    மக்களுக்காக சிந்தித்தவர்கள், வாழ்ந்த வர்கள், தங்களை அர்ப்பணித்தவர்கள் குறித்து உங்களுக்கு எவ்வளவு ஈஸியான பார்வை!
    ****

    மாதவராஜ், நான் அதிகம் படித்ததில்லை. அவர்களை போற்றவோ / தூற்றவோ காரணங்கள் இருக்கலாம். எனக்கு முழுதாக தெரியாது.

    உங்களுடைய நிலைபாடு மற்றும் தமிழகத்தின் முற்போக்காளர்கள் என்று சொல்பவர்களின் நிலைபாடும் புரிந்து லீனா மிக அழகாக கலகம் செய்துள்ளார். அது தான் எனக்கு மிகவும் பிடித்திருந்தது.

    பிற்போக்காளர்களை கலகம் செய்ய யோனி.

    முற்போக்காளர்களை திரும்பி பார்க்க வைக்க லெனின் மற்றும் மாவோ.

    அந்த கவிதை அவருக்காக எழுதப்பட்டதாக தெரியவில்லை. மிகவும் அழகாக மற்றவர்களின் மனநிலையை புரிந்து எறியப்பட்ட அம்பு.

    அடுத்தது மக்களுக்காக சிந்தித்தவர்கள் பெயரை சொல்லி அலையும் கூட்டத்தை பற்றி தானே சொல்லப்பட்டுள்ளது. அவர்களின் பெயர் இருந்தாலே எதிர்ப்புக்கள் :)- அதனால் தான் முற்போக்கு தெய்வங்கள் என்று எழுதினேன்.

    பதிலளிநீக்கு
  31. "ஆண்பெண் உறவு குறித்து பலரும் இன்று எமக்கு பாடம் எடுக்கிறார்கள்.எல்லாம் நாங்களும் அறிந்ததுதான்.நாம் வாழ்வது ஐரோப்பிய நாகரிகத்தில் இல்லை.தமிழர்களைத்தான் நாம் கட்சியை நோக்கி அணி திரட்ட வேண்டியிருக்கிறது.ஆகவே இந்தப் பண்பாட்டின் அசைவுகளைப் புரிந்து கொண்டு நமக்கு உடன்பாடு இல்லாதபோதும் (ஒரு தந்திரமாகவேனும்) அதன்படி வாழ்ந்தாக வேண்டியிருக்கிறது."



    இது தோழர் தமிழ் செல்வனின் வரிகள். வரதராசன் தற்கொலை செய்துகொண்ட நேரத்தில் எழுதப்பட்டவை. லீனா மணிமேகலையின் கவிதை விஷயத்தில் கருத்து சுதந்திரத்தை காப்பாற்றப போவதாக அவர் புறப்பட்டிருக்கிறார். . லீனாவின் கவிதையில் தெரியும் அசைவுகளைத்தான் இந்தப் பண்பாட்டின் அசைவுகளாக அவர் புரிந்து கொண்டிருக்கிறார் போலும். இந்தக் கவிதையை எழுதுவதற்கு கருத்து சுதந்திரம் வேண்டும் என்று தமிழாகளிடம் கேட்டுப் பாருங்கள். அவர்கள் உங்கள் பின்னால் திரளுகிறார்களா அல்லது மிரளுகிறார்களா என்று தெரியும்.

    குஷ்பூவின் கருத்துகள் ஏற்புடையது அல்ல என்று கூறிய அவரது கட்சி தலைமை லீனாவின் கவிதையை ஏற்குமா? அவரது கருத்து சுதந்திரத்தை காக்குமா?

    நீங்கள் பார்க்காத குறுஞ்செய்தியை வைத்துக் கொண்டு ஒருவருடைய ஒழுக்கத்தை கேள்விக்குள்ளாக்கி தற்கொலைப் பாதைக்கு தள்ளி விட்டீர்கள்? பலரும் பார்த்து கண்டிக்கும் ஒரு அசிங்கமான கவிதையை கருத்து சுதந்திரம் என்ற பெயரில் காப்பற்றப் புறப்பட்டு விட்டீர்கள்?

    தெளிவு பெறுங்கள். தெளிவுபடுத்துங்கள்.

    பதிலளிநீக்கு
  32. Is AIDWA support the Tamil Nadu progressive writer's association's stand on this issue?

    பதிலளிநீக்கு
  33. குடுகுடுப்பை!

    நான் தெளிவாகச் சொல்லியபிறகும், பாரட்டுவது போல ஏனிந்த வில்லங்கம்?

    ஒரு அமைப்பின் நிலைபாட்டிற்கும், தனிமனித நிலைபாட்டிற்கும் பெரும் வித்தியாசங்கள் இருக்கின்றன. அமைப்புக்கு இருக்கும் சில நியாயங்கள், தனி மனித நியாயங்களுக்கு முரண்பட்டதாய் இருக்கலாம். அவை விவாதங்களாகவும், உரையாடல்களாகவும் அமைப்புக்கு உள்ளேயும், வெளியேயும் தொடர்ந்து கொண்டே இருக்கும். ஒன்றை ஒன்று சரிபார்த்து, சரி செய்து, முன்னேறுவதுதான் ஆரோக்கியமானதாகவும், ஜனநாயக ரீதியாகவும் இருக்கும். பாட்டாளிவர்க்க சித்தாந்தத்தில் அதற்கு இடம் நிச்சயம் இருக்கிறது. அந்த நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  34. சாரி....மணிகண்டன்!

    எங்களுக்கு மார்க்ஸ், லெனினும் தெய்வங்கள் இல்லை. நம்மைப் போல மனிதர்கள், நமக்காக சிந்தித்த, செயல்பட்ட மனிதர்கள் என்றுதான் போற்றுகிறோம்.

    போற்றினாலே தெய்வங்கள் என்று பார்வை இருக்கும்போது, இப்படித்தான் விளக்கங்களும் இருக்கும் போலும்.

    பதிலளிநீக்கு
  35. “கலாச்சார போலீஸ் வேலையின் இன்னொரு வடிவமாக வாயளவில் இடது தீவிரவாதம் பேசுகிற ஒரு சிறு குழுவினர்" ‍ அறிக்கையிலிருந்து...//

    மக்கள் கலை இலக்கிய கழகம் எவ்வளவு மறைத்தாலும், மறைக்க முடியாத அரசியல் சக்தியாக உருவாகி பல காலங்கள் ஆகிவிட்டன. இன்னமும் பெரியண்ணன் பாணியில்.. "ஒரு சிறு குழுவினர்" என பேசுவது அரசியல் முதிர்ச்சி இல்லாத பேச்சு!

    பதிலளிநீக்கு
  36. நொந்தகுமாரன்!

    ம.க.இ.க மட்டும் வார்த்தைக்கு வார்த்தை, மூச்சுக்கு முன்னூறு தடவை போலிக் கம்யூனிஸ்டுகள் எனச் சொல்வது சரியா?

    இந்த அமைப்பில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டுமென்ற துடிப்பில், இடதுசாரிச் சிந்தனைகளோடு அளப்பரிய தியாகங்களும், போராட்டங்களுமே வாழ்க்கையாய் அமைத்துக்கொண்ட எத்தனையோ பேரை ஒரு வார்த்தையில் கேலி செய்வது முறையா?

    பதிலளிநீக்கு
  37. அன்பு மாதவராஜ்,
    எப்படி இவ்வளவு பொறுமையாக எல்லோருக்கும் அர்த்தமுடன் பதில் சொல்கறீர்கள். படித்தவர்களுக்கு அழகே அவர்களின் எழுத்தக்களில் பிரதிபலிக்கும். பெருமையாக உள்ளது. நன்றி.
    அன்புடன் சுவாமி.

    பதிலளிநீக்கு
  38. மாதவராஜ் said...
    குடுகுடுப்பை!

    நான் தெளிவாகச் சொல்லியபிறகும், பாரட்டுவது போல ஏனிந்த வில்லங்கம்?//

    எனக்கு வில்லங்கமெல்லாம் தெரியாது, கம்யூனிஸ்ட் கட்சிக்காரர்கள் கிட்டத்தட்ட அனைவருமே நல்லவர்கள் என்பது என் புரிதல், ஆனால் கம்யூனிஸம் பாட்டாளி வர்க்கத்தை முன்னேற்றும், ஜனநாயகத்தை அனுமதிக்கும் என்ற நம்பிக்கை எனக்கு அறவே கிடையாது, கம்யூனிசம் இன்னொரு வகையான நிறுவனமாக்கப்பட்ட மதம் என்பதே என் புரிதல்.

    வேறு வார்த்தையில் சொன்னால் நல்லக்கண்ணு போன்ற நல்ல முதலாளிகள் முதலாளித்துவத்துக்கு தேவை என நினைப்பவன்.
    ///////////////

    ஹீசேனுக்கு ஆதரவாக பதிவிட்ட நீங்கள், தஸ்லீமா தாக்கப்பட்டபோது, மே.வங்கத்தில் இருந்து வெளியேற்றப்பட்டபோது உங்கள் எதிர்ப்பை பதிவு செய்தீர்களா?

    பதிலளிநீக்கு
  39. ////ஏகலைவன்!
    கவின்மலர் அவர்கள் சில விஷயங்களைத் தவிர பல விஷயங்களில் உடன்பாடு என்றுதானே சொல்லி இருக்கிறார்கள். பிறகு ஏன் இவ்வளவு கோபத்தோடு உரையாடலும், வார்த்தைகளும்? நிதானமாகவேப் பேசுவோமே! கருத்துப் பரிமாற்றம்தானே?////

    மன்னிக்கவேண்டும் நண்பரே!

    கடுமையான கோபத்தை எப்போதும் நாம் செயற்கையாக வரித்துக்கொள்வதில்லை. யாருக்கு எந்தப் பதத்தில் பதிலளிக்க வேண்டும் என்பது அவர்களுடைய அனுகுமுறையைப் பொறுத்து மாறுபடும். கவின்மலர் கீற்று இணையதளத்தில் பதிந்திருப்பவற்றைப் பார்த்திருப்பீர்கள். அவருடைய பாணியில் பதிலளித்தால்தான் அவருக்குப் புரியும் என்கிற காரணத்தினால்தான் சற்று கடுமையாக பின்னூட்டமிட நேர்ந்தது. மற்றபடி அதற்காக நான் வருந்துகிறேன்.

    பதிலளிநீக்கு
  40. ////////மாதவராஜ் said...
    நொந்தகுமாரன்!

    ம.க.இ.க மட்டும் வார்த்தைக்கு வார்த்தை, மூச்சுக்கு முன்னூறு தடவை போலிக் கம்யூனிஸ்டுகள் எனச் சொல்வது சரியா?////

    நண்பர் மாதவராஜ் அவர்களே!

    சிபிஎம் / சிபிஐ கட்சிகள் மீதான போலி கம்யூனிஸ்டு என்கிற எமது மதிப்பீடு, வெறும் வசைபாடலோ அல்லத் கேலியோ அல்ல. ஒரு கம்யூனிஸ்டு கட்சிக்குரிய, ஒரு பாட்டாளி வர்க்கக் கட்சிக்குரிய தன்மைகள் இல்லாத நிலையிலும், அக்கட்சிகளின் பெரும்பாலான நடவடிக்கைகள் முதலாளித்துவத்தை உயர்த்திப்பிடிப்பதாக இருக்கின்ற காரணத்தினாலும் மட்டுமே அவர்களை கம்யூனிச போலிகள் என்று மதிப்பிட வேண்டியுள்ளது.

    1967-ல் நக்சல்பரி எழுச்சி ஏற்பட்ட போது, சிபிஎம் கட்சியின் விவசாயிகள் சங்கத்தைச் சார்ந்த தோழர்கள் மே.வங்க ‘ஜோத்திதார்கள்’ எனப்படும் நிலவுடைமைக் கொடுங்கோலர்களுக்கு எதிராகப் போராடுகின்றபோது, அதே கட்சியின் தலைமையில் இருந்த ஜோதிபாசு (தன்னுடைய போலீசு துறை மூலம்) சொந்த கட்சியின் அணிகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி,அந்த நிலவுடைமையாளர் வீட்டு ஏவல் நாயாக நடந்துகொண்டது, எதைக்காட்டுகிறது? அக்கட்சியின் பாட்டாளி வர்க்கத்தன்மையையா?

    ப.சிதம்பரம் என்கிற ஒரு ஏகாதிபத்திய கைக்கூலியுடன் இரண்டற கலந்து கொண்டு ‘பசுமை வேட்டை’ அல்லது ‘காட்டு வேட்டை’ எனப்படும், ஒரு கொடூரமான உள்நாட்டுப் போரை நடத்திவருகிற மாநில அரசுகளில், மேற்குவங்க சிபிஎம் அரசும் ஒன்று. ஏழை, எளிய பழங்குடி மக்களை காடுகளை விட்டு விரட்டியடித்துவிட்டு பன்னாட்டு ஏகபோக நிறுவனங்களுக்கு, தாதுக்களும் கனிம வளங்களும் மண்டிக்கிடக்கும் காடுகளையும் மலைகளையும் சொந்தமாக்குவதற்காக போலீசையும் இராணுவத்தையும் ஏவுகின்ற ஆளும் வர்க்கப் பணியில், ‘கம்யூனிஸ்ட்’ என்று பெயர் மட்டும் வைத்திருக்கும் கட்சி, இன்முகத்துடன் ஈடுபட்டிருக்கும் போது அதனை நீங்கள் எப்படி மதிப்பிடுவீர்கள், நண்பரே?

    காங்கிரசும், பாஜகவும் இதர ஓட்டுக் கட்சிகளும் தத்தமது ஏகாதிபத்திய, முதலாளித்துவ சார்புத்தன்மையை வெளிப்படையாக ஒப்புக்கொள்வது போல, இந்தக் கம்யூனிச போலிகள் ஒப்புக்கொள்வதில்லை, மாறாக பாட்டாளிகளைப் பாதுகாக்க வந்த பரமாத்மாவாகத் தங்களைக் காட்டிக் கொண்டு, பச்சையாக, சிறிதும் கூச்சமின்றி ஏகாதிபத்திய சேவையாற்றி வருகிறார்கள்.

    சிங்கூரின் ஆயிரம் ஏக்கர் நிலத்தை டாட்டாவுக்கு வழங்கி, கார் தொழிற்சாலைக்காக சிபிஎம் அரசால் போடப்பட்ட ‘புரிந்துணர்வு ஒப்பந்தம்’, காலாவதியாகிவிட்ட பிறகும் கூட இன்று வரை அந்த ஒப்பந்தங்களை அக்கட்சியின் அரசு இரகசியமாகவே வைத்திருக்கிறதே இதன் பொருள் என்ன?

    தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை, குறைந்த பட்ச செயல்திட்டத்தின் மூலமாகவும், தமது கட்சியின் நாடாளு மன்றப் பாதையின் மூலமாகவுமே சாதித்துப் பெற்றதாகப் பெருமை பேசிக்கொண்டார்கள், சிபிஎம் தலைவர்கள். அதே த.அ.உரிமைச் சட்டத்தின் மூலமாகக் கூட டாட்டாவுடன் கொல்லைப்புறமாகப் போடப்பட்ட அந்த ஒப்பந்தத்தின் விபரங்களைப் பெறமுடியவில்லை. அதற்கும் தடை வாங்கி வைத்திருக்கிறார்கள்.

    இவர்களால் புனிதம், புனிதம் என்று உயர்த்திப்பிடிக்கப்படும் நாடாளுமன்றத்திலும் அனைத்து மாநில சட்ட மன்றங்களிலும் கூட விவாதங்களுக்கு அப்பாற்பட்ட இரகசியங்களாகவே அந்த அடிமைச் சாசனங்கள் (புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்) பராமரிக்கப்படுகின்றன.

    காலாவதியாகி, இரத்து செய்யப்பட்ட அந்த ஒப்பந்தத்தின் விபரங்களையே பரம இரகசியமாக வைத்திருக்கும் இவர்கள், நந்திகிராம், லால்கார் இன்னும் இன்னும் எத்தனையெத்தனையோ ஒப்பந்தங்கள் குறித்து ஏதேனும் வாய்திறப்பார்களா?

    ஏகாதிபத்தியச் சூறையாடலுக்கு விளைநிலங்களைப் பறித்து, ஆயிரக்கணக்கான விவசாயிகளின் வாழ்க்கையை சி.பொ.ம. என்கிற பெயரிலும், தொழில் வளர்ச்சி என்கிற புனைவின் மூலமாகவும், ஒரே ஒரு முதலாளிக்காக பலியிட்டுக் கொடுக்கின்ற ஒரு ஆளும்வர்க்க கூட்டம், கம்யூனிசத்தின் பெயரால் செயல்படுகிறதென்றால், அக்கூட்டத்தை போலி கம்யூனிஸ்டுகள் என்று அடையாளப்படுத்துவதில் என்ன தவறு இருக்க முடியும், ஐயா?

    பதிலளிநீக்கு
  41. /////இந்த அமைப்பில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டுமென்ற துடிப்பில், இடதுசாரிச் சிந்தனைகளோடு அளப்பரிய தியாகங்களும், போராட்டங்களுமே வாழ்க்கையாய் அமைத்துக்கொண்ட எத்தனையோ பேரை ஒரு வார்த்தையில் கேலி செய்வது முறையா?/////////

    அவ்வாறு தியாகம் செய்த தோழர்கள் நினைத்திருப்பார்களா, தாம் தமது உயிரை விட அதிகமாக நேசித்த அரிவால் சுத்தியல் பொதித்த செங்கொடி, கேவலம் ரெண்டு,மூன்று சீட்டுகளுக்காக புரட்சித்தலைவியின் ’ஆசி’பெற்ற சின்னமாக தமது கட்சியால் அறிவிக்கப்படும் என்று!

    தமது இரத்தமும் சதையுமாகக் கட்டிக் காத்த கட்சி, (உ.ரா.வரதராசன் கடைசியாக பிரகாஷ்காரத்துக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது போல்) பல பெண்களுடன் உறவு வைத்துக் கொண்டிருக்கும் ’யோக்கியர்’களால் தலைமை தாங்கப்படுமென்று!

    நீங்கள் குறிப்பிட்டுள்ள அத்தகைய தோழர்களின் தியாகங்களின் மீது சிறுநீர் கழிக்கின்ற அரசியல் நடைமுறையை வைத்திருக்கும் அக்கட்சியினைப் பார்த்து நீங்கள் கேட்க வேண்டிய கேள்வி இது, என்பது எனது தாழ்மையான கருத்து.

    தோழமையுடன்,
    ஏகலைவன்.
    http://yekalaivan.blogspot.com

    பதிலளிநீக்கு
  42. நண்பர் ஏகலைவன்!

    லீனா மணிமேகலை கவிதை குறித்த உரையாடலிலிருந்து, இன்னொரு இடத்திற்கு கொண்டு செல்கிறீர்கள்.அதுகுறித்து பிறிதொரு சந்தர்ப்பத்தில் பிரத்யேகமாக பேசுவதுதான் பொருத்தமாக இருக்கும். என்றாலும் பொதுவான சிலவற்றை சொல்ல வேண்டிய அவசியத்தை ஏற்டுத்தி இருக்கிறீர்கள்.

    வரலாற்றை நீங்கள் உங்களுக்கேற்ப பார்க்கிறீர்கள். இதுபோல நாம் மாறி மாறி பேசிக்கொண்டே இருக்கலாம். காலம் சரியானதை நிச்சயமாய் மக்களுக்குச் சுட்டிக் காட்டும்.

    உங்களைப் போன்றவர்கள் தொடர்ந்து சுமத்தும் பழிகள் (இங்கே நீங்கள் குறிப்பிட்டு இருக்கும் விஷயங்கள் உட்பட) மே.வங்க அரசை குறிவைத்தே இருக்கின்றன.இந்திய முதலாளித்துவத்திற்கு ஆதரவாக இடதுசாரிக் கட்சிகள் இயங்குகின்றன எனச் சொல்லியபடி, மே.வங்கத்தை நோக்கியே உங்கள் கைகள் நீள்கின்றன. அங்கு 33 வருடங்களாக ஒரு இடதுசாரி அரசு மக்களின் செல்வாக்கோடு இருப்பதுதான் பிரச்சினையே. சிபி.எம் மீது முதலாளித்துவக் கட்சிகளுக்கு இருக்கும் கோபமும், வன்மமும் , ஒரு இடதுசாரி என்று தங்களைச் சொல்லிக் கொள்கிற நக்சல்பாரிக்கும் இருப்பது வினோதமானதாகவும், விசித்திரமாகவும் இல்லையா?

    இந்த முதலாளித்துவ அமைப்பில், இருக்கும் குறைந்தபட்ச அதிகாரத்தோடு, ஒரு மாநில அரசாக, மே.வங்கத்தில் முறையாக நிலச்சீர்திருத்தத்தை அமல்படுத்திய ஒரு இயக்கத்தை எப்போதேனும், எங்கேனும் ஒரு வார்த்தை நீங்கள் பாராட்டியதுண்டா. இடதுசாரிக் கட்சிகள் பாராளுமன்றத்துக்கு உள்ளேயும், வெளியேயும் ஆற்றியிருக்கும் நல்ல காரியங்கள் ஒன்றுகூட உங்கள் கண்ணில் படவில்லையா?

    எப்போதும் குறை மட்டுமே சொல்கிறவர்கள், யாராய் இருக்கமுடியும்?


    போலிக் கம்யூனிஸ்டுகள் குறித்து நான் சொன்னதற்கு நீங்கள் சொல்லும் விளக்கம் நன்றாக இல்லை ஏகலைவன்! ஐக்கிய முன்னனித் தந்திரமாக, தேர்தலில் வைக்கும் கூட்டினால் கட்சியையே அடகு வைக்கிறீர்கள் என்று சொன்னால் என்ன வாதம் உங்களோடு செய்ய முடியும்? பதிலுக்கு மே.வங்கத்தில் நகசல்பாரிகள் மம்தாவோடு கூட்டுச் சேர்ந்து என்று நான் சொல்லவா?

    வேண்டாம். உங்கள் பாதை உங்களுடையது. தக்கது நிற்கும். தகாதது அழியும்.

    ’தியாகத்தின் மீது சிறுநீர் கழிக்கின்ற’ என்ற வார்த்தை பிரயோகங்கள், சொல்லாடல்கள் இங்கு வேண்டாம். இனிமேல் அதுபோன்ற வார்த்தைகளை நான் பிரசுரிக்க மாட்டேன்.

    இத்துடன் இங்கே நிறுத்திக் கொள்வோம். வேறொரு இடத்தில் மீண்டும் நிதானமாகத் தொடர்வோம்.

    பதிலளிநீக்கு
  43. EKALAIVAN EZHUVATHAP PADITHTHATHUM NANBARKALAIP POL NADIPPAVARGAL ENDRA THODARTHAAN NINAIVUKKU VARUGIRATHU.SINGUR,NANDHIGRAM PRACHANAIGALIL MAKKALUKKU ETHIRAAGA YAAR YARODU KAIKOTHTHU KONDAARGAL ENBATHAI EKALAIVAN PONDRAVARGAL SULABAMAAGA MARANTHU POKIRAARGAL.

    பதிலளிநீக்கு
  44. 1.லீனாவின் கவிதைகள் மீதான விமர்சன உரிமையை தக்கவைத்துக் கொள்வது என்பதும்
    2.அவரது கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்துக்கு ஏற்பட்டுள்ளது என கூறி
    அச்சுறுத்தலைக் கண்டிப்பதும் தனி தனி விஷயங்கள்.
    @ "வினவு "நாமக்கல் மாவட்ட குழுவின் தீர்மானத்தை (1) பிரசுரிக்கும் போது எழுதிய கமெண்ட்ஸ் ஏற்புடையதல்ல.
    @ அது கேலியாகவும், அமைப்புக்கு எதிராக திருப்ப முயலுவதாகவும் இருக்கிறது---விமலா வித்யா

    பதிலளிநீக்கு
  45. அந்த கவிதைகள் மலிவான விளம்பர உத்தி என்பதை தவிர அதை பற்றி சொல்ல ஒன்றுமில்லை. விரும்பி படிப்பவர்கள் படிக்கட்டும்.

    பதிலளிநீக்கு

  46. நான் உங்கள் பதவியை படித்து போன்ற இனிமையான வரிகளை பகிர்ந்து நன்றி வேண்டும். , நானும் அறிவுறுத்த வேண்டும் அது மே நான் கும்பிட்ட இருந்து அனைத்து இன்னும் வரவில்லை ஏற்று பொருள் கவனத்துடன் வாசி தேவை என நீங்கள் மேலும் தரவு பகிர்ந்து கொள்ள என்று கூறியுள்ளது. wordpress plugins

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!