குட்டிப் பிசாசு!


வாரக் கடைசியில் அவன்  வீட்டுக்கு வந்திருந்தான். தாவிச் சென்ற குழந்தை அவனது தோளில் இருந்து இறங்கவே இல்லை. பயணக்களைப்பு, அசதி எல்லாம் மறந்து கொஞ்சிக்கொண்டு இருந்தான்.

”வாம்மா, அப்பா குளிச்சிட்டு வந்து சாப்பிடட்டும்.” அழைத்தாள் அவள்.

“வரமாட்டேன் போ” என்றது குழந்தை.

அவனும் அவளும் சிரித்துக்கொண்டார்கள்.

“இரும்மா, இதோ வந்துர்றேன்” என்று கொஞ்சலாய்ச் சொல்லி பாத்ரூம் சென்றான். கதவருகிலேயே நின்று கொண்டு “அப்பா... அப்பா, வாப்பா” என காத்திருந்தது குழந்தை.

சாப்பிடும்போது அவன் மடியில் ஏறி உட்கார்ந்துகொண்டது. “இதென்ன பழக்கம். இப்பிடி உக்காந்தா அப்பா சாப்பிட கஷ்டமாயிருக்கும். எறங்கு..” என்று குழந்தையைத் தூக்கச் சென்றாள் அவள்.

“ம்ஹூம்... வரமாட்டேன் என்று கைகளை இறுக்கக் கட்டிக்கொண்டு முகத்தைத் திருப்பியது.

”நல்ல புள்ளைல்ல.... வாயேன்..” கெஞ்சினாள்.

“ம்ஹூம். போ”

அவன் சிரித்துக்கொண்டான். “இருக்கட்டுமே” என்றான். செல்லமாய் முறைத்தபடி அவள் அவனைப் பார்த்து அழகு காட்டினாள்.

“அப்பா இல்லாதப்போ அம்மாவைத்தான கொஞ்சுவே... அம்மாதான் எனக்குப் பிடிக்கும்னு சொல்லுவே... இப்ப மட்டும் என்னவாம்”

“நீ மட்டும் என்னவாம்… அப்பா வந்தா என்ன மறந்துருவே. அப்பாவைத்தான் கவனிப்பே”

சிரித்தான். சாப்பிட்டுக் கொண்டிருந்தவனுக்கு புரை ஏறியது.  “வாலு என்னவெல்லாம் பேசுது பாருங்க...” அவள் அவன் தலையைத் தட்டினாள். குழந்தையும் எழுந்து அவன் தலையைத் தட்டியது.

படுக்கையில் அவனுக்கு அவளுக்கும் நடுவில் வந்து, அவனைக் கட்டிக்கொண்டது. அதுபாட்டுக்கு பேசிக்கொண்டே இருந்தது.  அவளும் தட்டிக்கொடுத்துப் பார்த்தாள். தலை முடிக்குள் கோதிவிட்டுப் பார்த்தாள். குழந்தை தூங்குவதாய் தெரியவில்லை. “குட்டிப் பிசாசு” என்று முணுமுணுத்து  வேறு பக்கம் திரும்பிக்கொண்டாள். அவனும் நெடுநேரம் பேசித் தூங்கிப் போனான்.

எப்போதோ அவனுக்கு விழிப்பு வந்து பார்த்தபோது அவள் நன்றாகத் தூங்கிக் கொண்டு இருந்தாள். குழந்தை அவன் மீது கால் போட்டுக்கொண்டு, கழுத்தைக் கட்டிக் கிடந்தது. அந்தப் பிஞ்சுக் கால்களையும், கைகளையும் மெதுவாய் விலக்கினான். வலித்தது அவனுக்கு.

Comments

20 Comments

வருகைக்கு நன்றி.

கமெண்ட் செய்கிறவர்கள் Anonymous, Name/Url, Google Account, Name/Url, Google Account மூலம் கமெண்ட் செய்யலாம்.

1) முடிந்தவரை Google Account மூலம் கமெண்ட் செய்யுங்கள்.

2) இல்லையென்றால் Name/Url மூலம், பேரை மட்டுமாவது குறிப்பிட்டு கமெண்ட் செய்யுங்கள்.

3) Anonymous மூலம்தான் கமெண்ட் செய்ய முடியுமென்றால், கமெண்ட்டில் கீழே உங்கள் பேரை தயவு செய்து குறிப்பிடுங்கள்.

நன்றி.

- தீராத பக்கங்கள்
  1. நல்லாயிருக்கு அண்ணா.குட்டிப்பிசாசின் குறும்பின் பின்னால் தகப்பனுக்கான ஏக்கம் புரிகிறது.

    ReplyDelete
  2. குழந்தைகளின் உலகமே அலாதியானது தான்...

    கதையின் ஒவ்வொரு வரியும் மெல்லிய புன்னைகையை வரவழைத்தது.

    ReplyDelete
  3. குட்டிப் பிசாசுகள் இல்லாத உலகம்
    சூன்யம்

    எவ்வளவு அணுக்கமாக பதிவு செய்திருக்கிறீர்கள் மாது சார்

    ReplyDelete
  4. அற்புதம் மாது!

    இதுவல்லோ சொற்சித்திரம்... :-)

    ReplyDelete
  5. //அந்தப் பிஞ்சுக் கால்களையும், கைகளையும் மெதுவாய் விலக்கினான். வலித்தது அவனுக்கு//

    இந்த முறையும் ரசித்தேன், மிக சரியாய் தொட்டு சென்றிருக்கிறீர்கள்

    ReplyDelete
  6. ///அந்தப் பிஞ்சுக் கால்களையும், கைகளையும் மெதுவாய் விலக்கினான். வலித்தது அவனுக்கு.///

    அருமை!!!! அருமை!!!!

    உண்மை!!! உண்மை!!!

    வேறு எதுவும் சொல்வதற்கு இல்லை !!!!

    ReplyDelete
  7. லேபிள்ல சொற்சித்திரம்னு பார்த்தேன்.

    குழந்தைகளின் சித்திரம் இங்கே சொற்களாய்... குழந்தையின் ஏக்கத்தில் ஆரம்பித்து தகப்பனின் தவிப்பில் முடியும் இவ்விடுகை காணும்போது, குழந்தையில்லா வீடு இருண்டுதான் கிடக்கும் என்று எண்ணத்தோன்றுகிறது.

    ReplyDelete
  8. அருமை.. சமீபத்தில் படித்த அகநாழிகை வாசுவின் கவிதை ஞாபகத்திற்கு வருகிறது.

    ReplyDelete
  9. அருமையாக இருக்குங்க.

    ReplyDelete
  10. பச்சைகிளி ஒன்று;
    இச்சைக்கிளி ரெண்டு
    பாட்டு சொல்லி தூங்க செய்வேன்
    ஆரிரரோ......
    சிட்டிவேஷனல் சாங்.

    ReplyDelete
  11. கவிதைபோல் மிளிர்கிறது....

    ReplyDelete
  12. குட்டிப் பிசாசுதான்!

    ReplyDelete
  13. அழகு அழகு! கொள்ளை அழகு!
    :-)
    //Excellent narration. // yes!

    ReplyDelete
  14. நல்லாருக்குஜி.

    எங்க வீட்டுல ரெண்டு பிசாசு இருக்கு.
    ஒண்ணு 12 மணிவரை தூங்காது. இன்னொன்னு காலையில 5 மணிக்கு எந்திரிச்சு, உசுப்பிட்டு இருக்கும்.

    அதுவும் சுகமாத்தான் இருக்கு.

    ReplyDelete
  15. வெளிநாட்டில் வாழும் எங்கள் காதலர்களுக்கு எல்லாம் இந்த குட்டி பிசாசு பற்றி உணரமுடியாதது கண்டு எங்களுக்கு வலிக்கிறது. குட்டிபிசாசு குட்டிபிசாசுதான்.

    ReplyDelete
  16. ஆஹா...
    என்னோமோ செய்கிறது
    நடத்த நிகழ்சி கண்முன்
    பிரிவில் வாடும் யம்மை போன்றவர்களுக்கு ஒரு சுகமான நினைவுகளாக இருக்கும்
    மிக்க நன்றி அண்ணா ........
    அஜீம்

    ReplyDelete
  17. சொற்சித்திரத்தை ரசித்த, பாராட்டிய அனைத்து நண்பர்களுக்கும் என் நன்றிகள்.

    ReplyDelete

You can comment here