ஒளிந்திருந்து தாக்குதல்



றெழு ஆண்டுகளுக்கு முன்பு அவர்கள் இதே போன்று ஒரு காரியத்தை செய்தார்கள். சென்னை திருவல்லிக்கேணியில் பாரதியார் பிறந்தநாளை தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தினர் கொண்டாடிக் கொண்டு இருக்கும்போது திடுமென உருட்டுக்கட்டைகளோடு புகுந்து தாக்குதல் நடத்த ஆரம்பித்தனர். பாரதியார் கவிதைகளைக் கிழித்து எறிந்தனர். இப்போது, செப்டம்பர் 22ம் தேதி சென்ன போரூரில் பெரியாரின் 130வது பிறந்தநாளை தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தினர் கொண்டாடிக் கொண்டு இருக்கும்போது, 'ஒளிந்திருந்து' இந்த 'ராம(கோபால) பக்தர்கள்' கற்களை வீசி தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர்.



விஜயகாந்த்த் VS வடிவேலு பிரச்சனையை பக்கம் பக்கமாக எழுதவேண்டியிருந்த பிரபல தமிழ்ப் பத்திரிக்கைகளுக்கு இந்த வன்செயல் ஒன்றும் முக்கியமான செய்தியாக இருக்கவில்லை. பெரியாரின் பேரை இதயத்தில் பச்சைக் குத்தியிருப்பதாகச் சொல்லும் எந்த திராவிடக் கட்சியும் உதடுகளைப் பிரித்து கண்டனத்தை வாசிக்கவில்லை. கருத்துச் சுதந்திரத்திற்காகவே அவதரித்திருக்கிற அறிவுஜீவிகள் அனைவரும் மொத்தமாக தமிழகத்தை விட்டு எங்கே சுற்றுலா சென்றுவிட்டனர் என்று தெரியவில்லை.



தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தினர் தமிழகத்தின் முக்கிய நகரமெங்கும் போஸ்டர் அடித்து, ஆர்ப்பாட்டம் நடத்தி, இந்த காட்டுமிராண்டித்தனத்தை கண்டித்து வருகிறார்கள். விருதுநகரில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் நான் கலந்து கொண்டேன். செப்டம்பர் 27ம்தேதி, திருச்சியில் நடந்த எழுத்தாளர் சங்க மாவட்ட மாநாட்டில் நிறைவுரையாற்ற சென்றபோது, அன்று மாலை அங்கு நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்திலும் கலந்து கொண்டேன். ஆர்ப்பாட்டம் ஆரம்பிக்க சில நிமிடங்கள் இருக்கும் போது அங்கேயும் அந்த 'ஓளிந்திருந்து' தாக்குதலை 'ராம(கோபால) பக்தர்கள்' நிகழ்த்தினர். சத்திரம் பஸ்நிறுத்தம் அருகில் இருந்த கட்டிடங்களின் பின்பு இருந்து கற்கள் சரமாரியாக வீசப்பட்டன. பார்த்துக் கொண்டிருந்த போலீஸார் கட்டடங்களை நோக்கி ஓடினர். யாரும் இருப்பதாகத் தெரியவில்லை என்று கட்டிடங்கள் மேல் ஏறி நின்று கொண்டனர். கண்டன ஆர்ப்பாட்டம் மிகுந்த வேகத்தோடும், உக்கிரத்தோடும் நடந்தது. கவிஞரும், பட்டிமன்றப் பேச்சாளருமான நந்தலாலா கடுமையாக இந்த வன்செயலைக் கண்டித்தார்.



குஜராத்தில் நரவேட்டையாடியவர்களின் கைகள் - ஒரிஸ்ஸாவை ரணகளமாக்கிய கைகள் - கர்நாடகத்தில் கலவரம் ஏற்பட முயற்சி செய்கிற கைகள்- தமிழ்நாட்டில் இப்படி ஒளிந்திருந்து கல்லெறியத்தான் முடிந்திருக்கிறது. பெரியார் உலவித் திரிந்த மண்ணில், அவர்கள் சிந்தனைகளும், செயல்களும் இன்றுவரை வேர் பிடிக்க முடியாமல் திணறத்தான் செய்கின்றன. ஆனாலும் அவர்கள் தொடர்ந்து விதைகளை தூவிக் கொண்டே இருக்கிறார்கள். மண்டைக்காட்டில் ஆரம்பித்து, கோயம்புத்தூர், தென்காசி என்று அவர்களின் பாதச்சுவடுகள் தெரிகின்றன. அரசியல் சதுரங்கத்தில், சில சமயங்களில் திராவிடக் கட்சிகளின் சந்தர்ப்பவாதங்களால், ரஜினிகாந்த் போன்ற நடிகர்களின் ஆதரவால் சற்றே தங்கள் இருப்பை நிலைநிறுத்திக் கொள்ள முடிந்த போதிலும்- ஒரு பெரும் சக்தியாக உருவெடுக்க முடியவில்லை. எது தங்களை தடுத்து நிறுத்துகிறது என்பதை அவர்கள் தெரிந்தே வைத்திருக்கிறார்கள். அதுதான் அவர்களுக்கு பெரியார் மீதும், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தினர் மீது எரிச்சல் வருகிறது.


அவர்களுக்கு எல்லாக் காலத்திலும் மூடநம்பிக்கைகளும், ராமருமே ஆதாரமாக இருக்கிறார்கள். அவர்களுக்கு பெரியாரைப் பிடிக்காது. அவர்களுக்கு பாரதியைப் பிடிக்காது. வள்ளலாரைப் பிடிக்காது. வள்ளுவரைப் பிடிக்காது. இந்த மண்ணும், மக்களும் போற்றும்படி வாழ்ந்த மாமனிதர்கள் யாரும் அவர்கள் பக்கம் இல்லை. இவர்கள் அனைவரையும் எழுத்தாளர் சங்கம் தொடர்ந்து கொண்டாடுவதும், போற்றுவதும், மக்கள் மனதில் நிலைநிறுத்துவதும்தான் அவர்களது கோபத்திற்கு காரணம் ஆகிறது.


இந்த 'ஒளிந்திருந்து தாக்குதல்' ஒன்றை தெளிவாக்கி விட்டது. எழுத்தாளர் சங்கம் தாங்கள் சரியான திசையில், மிகச்சரியான பாதையில் அடியெடுத்துச் செல்வதை உறுதிப்படுத்தி இருக்கிறது. எல்லோர் வீடுகளுக்கும் பெரியாரின் கருத்துக்களை கொண்டு செல்ல வேண்டிய அவசியம் இருப்பதை உணர்ந்து இருக்கிறது. எங்கே அவர்கள் ஒளிந்திருந்தாலும், அவர்களை பெரியாரின் கருத்துக்களும், கைத்தடியும் அடையாளம் காட்டிவிடும்.


முன் பக்கம்

கருத்துகள்

4 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
  1. Dear Mathav

    we are with you in registering our condemnation in stringent and strongest terms against the nefarious designs of the communal elements and their fascist outfits. Let us meet the challenge.

    s v venugopalan

    பதிலளிநீக்கு
  2. Dear Madhav,
    Your approach is very good, this is the right time for working class to take over the polytics to unite all the youth & mass organisation for the alternate to the socio economic crisis and against religious funtementelism.

    பதிலளிநீக்கு
  3. கோபாலகிருஷ்ணன்!

    ரொம்ப நன்றி.
    உற்சாகமாய் இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  4. comrade Madav . mika sariyaga soli ullergal.karuthu suthanthirathirkku yethirana thakkuthali yethir kolla mattumalla muriyadikka vegu makkal amaippukalukkana parntha medai indrya thevai.kalathil iyankink kondu irunthall than ithu sathiyam. trichy kottathil nandalalavudan naan utpada nanbargal palarum irunthoom.

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!