அன்னா ஹசாரே : காவிக்குதிருக்குள் கதர் குல்லா

anna hazare

(நண்பரின் போட்டோஷாப் உருவகம் இது)

 

ஊழலை ஒழிக்கப் போகிறேன் பேர்வழி என்று கதர்குல்லாவோடு கிளம்பியவர், இப்போது  காங்கிரஸை ஒழித்தால்தான் ஊழலை ஒழிக்க முடியும் என்ற முடிவுக்கு வந்திருக்கிறார். ஹரியானாவில் இடைத்தேர்தலில் காங்கிரசுக்கு எதிராக  பிரச்சாரம் செய்துகொண்டு இருக்கிறார் காந்தியவாதியான அன்னா ஹசாரே. அங்கு காங்கிரஸ் தோற்றால் ஜெயிக்கபோவது பா.ஜ.க. ஆக, அவர் யாருக்கு ஆதரவாக களம் இறங்கி இருக்கிறார் என்பதைச் சொல்ல ஒன்றும் மெனக்கெட வேண்டியதில்லை இங்கு. ஊழல் செய்வதில், மக்களுக்கு எதிரான பொருளாதாரக் கொள்கைகளில் காங்கிரஸுக்கும் பா.ஜ.கவுக்கும்  பெரிய வித்தியாசங்கள் எதுவும் இல்லை. அரசியலுக்கு அப்பாற்பட்டவராக இருந்தால்,  இரண்டு கட்சிகளுக்கும் எதிராக போர்க்கோலம் பூண்டிருக்க வேண்டியதுதானே?

 

இப்படி அன்னா ஹசாரேவின்  அரசியலும், சித்தாந்தங்களும் ஒவ்வொன்றாக வெளிப்படும் காலம் இது.

 

ஊழலை ஒழிப்பதில் இவரோடு கூடவே இருந்த உச்சநீதிமன்ற வழக்கறிஞர்  பிரசாந்த் பூஷண் சமீபத்தில் காஷ்மீர் பிரச்சினை குறித்து ஒரு கருத்தைச் சொல்லிவிட்டார்.  காஷ்மீர் மக்களிடையே பொது வாக்களிப்பு நடத்தி, காஷ்மீர் இந்தியாவுடன் இருப்பதா என்பதை முடிவு செய்ய வேண்டும் என்று தொலைக்காட்சிக்கு பேட்டியளித்துவிட்டார். அவ்வளவுதான், கருத்து சுதந்திரத்தை எப்போதுமே மதிக்காத சங்பரிவாரம் உச்சநீதிமன்றத்தில் சில நாட்களுக்கு முன்பு பிரசாந்த் பூஷணை தாக்கிவிட்டனர். எல்லோரும் அந்த காட்டுமிராண்டித்தனத்தைக் கண்டித்துக் கொண்டிருக்கும் வேளையில், அன்னா ஹசாரே, “இது அவருடைய சொந்தக் கருத்து, எங்களை கலந்தாலோசிக்கவில்லை” என நேற்றுவரை தன் கூட இருந்தவரை சட்டென்று கழற்றி விட்டிருக்கிறார். அத்தோடு நில்லாமல், “காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி. இனியும் அப்படியே இருக்கும்.அதற்காக நாங்கள் எதை வேண்டுமானாலும் செய்வோம். நான் உயிரையும் விடுவேன். காஷ்மீர் குறித்து பூஷண் தெரிவித்த கருத்துக்காக அவர் எங்களது குழுவிலிருந்து நீக்கப்படுவாரா என்பது குறித்து பின்னர் முடிவு செய்யப்படும்” என தனது கருத்தையும் வெளியிட்டு இருக்கிறார்.  அகண்ட பாரதம் பேசும் வெறிபிடித்த ஒரு வலதுசாரியின் குரலும் தொனியும்  அப்படியே ஒலிக்கிறது இந்த இடத்தில்.

 

அன்னா ஹசாரேவா அல்லது அண்ணா ஹசாரேவா  என்று நண்பர் ஒருவர் அந்தப் பெயரை தமிழில் எப்படி எழுதவேண்டும் என விளக்கியிருந்தார். ஆனால், வரலாற்றில் அந்தப் பெயரை எப்படி எழுத வேண்டும் என்பது தெளிவாகிவிட்டது.

கருத்துகள்

8 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
  1. அருந்ததி ராய் அன்றே அவர் முகத்திரையை கிழித்து விட்டாரே.. மக்களை வழிநடத்தி செல்ல நேர்மையான தலைவர்களின் வெற்றிடம் இருக்கும் வரை, இப்படி பட்ட காளான்கள் கிளம்பி கொண்டு தான் இருக்கும்... ஆனால் அவர் செய்த அளப்பரிய சாதனை... எனக்கென்ன என்று இருந்த மத்திய தர வர்க்கத்தை தட்டி எழுப்பியது தான்.... அதை மறுக்க முடியாது

    பதிலளிநீக்கு
  2. ஒன்றை மட்டும் சொல்ல விரும்புகிறேன்.. அவர் செய்வதெல்லாம் சரியாக இருக்க வேண்டியதில்லை. ஆனாலும் மேலே நண்பர் சொன்னது போல நடுத்தர மக்களை விழிக்க செய்தவர் அவர். குற்றம் இல்லாத ஒருவரை காண்பியுங்கள் பார்ப்போம்? அவருடைய ஊழல் ஒழிப்பு பிரச்சாரம் பிடித்திருக்கிறது. அதற்காக அவர் சொல்வதை எல்லாம் நாம் கேட்க போவது இல்லை. இப்படியே எல்லாரையும் discredit செய்தால் பிறகு இந்த பெருச்சாளிகள் (எல்லா கட்சிகளும் தான்) எப்படி தான் துரத்த படும்?

    பதிலளிநீக்கு
  3. ஊடக்ங்களாலும் கார்ப்பரேட்டுகளாலும் முன்வைக்கப்பட்ட புதிய உத்தமர் அண்ணா ஹசாரேவின் போலிப் பிம்பம் இவ்வளவு விரைவாக தகர்ந்து போகும் என்று யாருமே எதிர்ப்பார்த்திருக்க மாட்டார்கள். நடிப்புச்சுதேசி என பாரதி சாடியது இவருக்கு முழுமையாக பொருந்துகின்றது.

    பதிலளிநீக்கு
  4. அன்னா வின் முகத்திரை சமீபகாலமாக தாமாகவே கிழிந்துகொண்டிருக்கிறது.

    ஒரு வேண்டுகோள்.. போலியாகத் தாயாரிக்கப்பட்ட புகைப்படங்களினால் நியாமான விமர்சனங்கள் சிதறிப் போகும். பயன்படுத்தாதீர்கள் அல்லது தயாரிக்கப்பட்ட புகைப்படம் என்பதை எங்காவது குறிப்பிடுங்கள்.

    பதிலளிநீக்கு
  5. சூர்யாஜீவா!

    மத்தியதர வர்க்கத்தை அவர் தட்டி எழுப்பியது என்பதுமே இந்த அமைப்பின் திட்டமிட்ட ஏற்பாடே. ஊழலுக்கு எதிரான கோபத்தை திசை திருப்ப அல்லது மழுங்கச் செய்கிற நோக்கமும் அதில் இருக்கிறது என்றே நினைக்கிறேன். அன்னா ஹசாரே குறித்த தீராத பக்கங்களில் வந்த முந்தைய பதிவுகளில் அது குறித்து ஆராயப்பட்டிருக்கிறது.


    Ranga!

    ஊழல் குற்றம் இல்லாத பலர் இருக்கிறார்கள். குறிப்பாக இடதுசாரிகள்.


    ராமன்!
    ஆமாம், நடிப்புச் சுதேசிகள் சரியாகவே பொருந்துகிறது.

    பதிலளிநீக்கு
  6. கையேடு!

    தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி. சரிசெய்துகொண்டேன்.

    பதிலளிநீக்கு
  7. தோழர் நான் கூற வந்தது என்ன என்றால், மத்திய தர வர்க்கம் கொடி பிடித்து கோஷம் போடும் தொழிலாளி வர்க்கத்தை கேவலமாக தான் பார்த்து வந்தது... கிளம்பிட்டாங்கையா என்று கிண்டல் செய்தது.. அவர்கள் என்ன நோக்கத்தில் போராடினாலும் சரி, இனி தொழிலாளி வர்க்கத்தின் நியாயமான கோரிக்கையை காத்து கொடுத்து கேட்க தயாராக இருப்பான் களத்தில் இறங்கி விட்ட மத்திய தர வர்க்கத்தினர்... ஒரு நாள் கோஷம் போட்டால் போதும், ரத்தம் முழுவதும் முறுக்கேறி, போராட்ட களத்தில் முன் நிற்கும் அளவு சக்தி வாய்ந்தது போராட்டம்..

    பதிலளிநீக்கு
  8. ஊழலை ஒழிக்கப் போகிறேன் பேர்வழி என்று கதர்குல்லாவோடு கிளம்பியவர், இப்போது காங்கிரஸை ஒழித்தால்தான் ஊழலை ஒழிக்க முடியும் என்ற முடிவுக்கு வந்திருக்கிறார்.

    அதற்குள் அவரே ...........?????விடுவார்

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!