மாதவராஜ் பக்கங்கள் - 35

deeeeeeeeeee

 

ன்ன மாதவராஜ், இரண்டு வாரங்களாக ஒன்றுமே எழுதவில்லை. நலமாக இருப்பீர்கள் என நம்புகிறேன். எழுதுங்கள்.” என்று ஒருவர்  எஸ்.எம்.எஸ் அனுப்பியிருந்தார்.  போனில்,   “ஒரு இரண்டு வரி எதையாவது எழுதுங்கள் தோழர்” என்றார் ஒருவர். மெயிலிலும் ஒன்றிருவர் கேட்டார்கள்.  அவர்களுக்கு என் நன்றி.  எழுதிக்கொண்டு இருந்தால்தான், நலமாக இருப்பதாக அர்த்தம் கொள்ள வேண்டி வரும் போல. அம்மாதிரிதான் தொடர்ந்து  எதையாவது எழுதி வந்திருக்கிறேன் என்று புரிந்துகொள்ள முடிகிறது.

 

இரண்டு வாரங்களுக்கு மேல் ‘தீராத பக்கங்களில்’ எழுதவில்லை. இணையப் பக்கம் சரியாக வரமுடியவில்லை. அப்படித்தான்  நாட்கள் ஒடுகின்றன. எங்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர், தோழர்.சோலைமாணிக்கத்திற்கு ஒரு ஐந்தாறு மாதங்கள் ஓய்வு தேவை என மருத்துவர் சொல்லியிருக்கிறார். விருதுநகரிலிருந்து அவரது சொந்த ஊருக்கு மாறுதல் பெறப்பட்டு இருக்கிறது. எனவே சங்க நடவடிக்கைகளில் கூடுதல் பொறுப்பு இப்போது வாய்த்திருக்கிறது. தொடர்ந்து பயணங்களும், கூட்டங்களும், சந்திப்புகளுமாய் நேரம் செல்கிறது.

 

முன்பெல்லாம் இரவு ஒரு மணி, இரண்டு மணி என்று எப்போது வந்தாலும் ஒரு குளியல் போட்டுவிட்டு கம்ப்யூட்டர் முன்பு கொஞ்சநேரம் உட்காருவேன். இப்போது அப்படியெல்லாம் முடியவில்லை. அக்கடா என்று உடலை சாய்க்கத்தான் சொல்கிறது. கிடைத்த நேரத்தில் மெயில் மட்டும் பார்த்து ‘எஸ்கேப்’ ஆகிக்கொண்டு இருந்தேன்.

 

நேற்று சாயங்காலம்தான் நிதானமாக உட்கார்ந்து மேய்ந்தேன்.அனுஜன்யா மீண்டு வலைப்பக்கம் எழுத வந்திருக்கிறார். சந்தோஷமாக இருந்தது. இணையத்தில். சாரு  நிவேதிதா விவகாரங்கள் குறித்து கூகிள் பஸ் மூலமாக லேசாக அறிய நேர்ந்தாலும், நேற்றுதான் ஒவ்வொன்றாக படித்தேன். தமிழச்சி அவர்களுக்கும், வினவுத்தோழர்களுக்கும் எனது வணக்கங்களும், ஆதரவும். பெட்ரோல், டீசல், காஸ் சிலிண்டர் உயர்வுக்கான நாடு தழுவிய போராட்டங்களில் ஆரம்பித்து பின்னோக்கி செல்லும் இந்த நாட்களில் எவ்வளவோ சுற்றிலும் நடந்து கொண்டேயிருந்திருக்கின்றன.  எழுத வேண்டியவையும், வாசிக்க வேண்டியவையும் நிறைய இருக்கின்றன.

 

ல்லூரியில் என்னோடு பி.பி.ஏ படித்த  நண்பர்கள் யாருடனும் இப்போது தொடர்பில்லை என்பது அவ்வப்போது நினைவுக்கு வந்து செல்வதுண்டு. ஒரு வாரத்துக்கு முன்பு அது தீர்ந்தது. இணையத்தில் என்னைப் பார்த்துவிட்டு நண்பன் பாலு மெயிலில் தொடர்பு கொண்டான். சிட்னியில் இருக்கிறான் இப்போது. கல்லூரி நாட்களில் அவனுடன் செஸ், டேபிள் டென்னிஸ் விளையாடியதிலிருந்து எல்லாம் ஞாபகம் வருகிறது. திருச்செந்தூரில் கோவிலுக்குச் செல்கிற வழியில், பிள்ளையாருக்கு தேங்காய் உடைக்கிற இடம் அருகே அவன் வீடு அப்போது. அங்கு சென்றுவிட்டு, அப்படியே கடற்கரை சென்று பலநாட்கள் பேசியிருந்திருக்கிறோம். எஸ்.பி.பி குரலில் அற்புதமாய் பாடுவான். புருஸ்லீ மாதிரி, ‘ஆ’, ‘வூ’ என்பான். நினைக்க நினைக்க சுகமாக இருக்கிறது. ‘வா, இரண்டாவது இன்னிங்ஸ்’ ஆரம்பிபோம் என்று இப்போது செய்தி அனுப்பியிருக்கிறான்.

கருத்துகள்

4 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
  1. என்ன இது, மாது அண்ணன் இரண்டு வாரங்களாக ஒன்றும் எழுதவில்லையே என்று நானும் நினைத்துக்கொண்டுதான் இருந்தேன்.

    //எழுத வேண்டியவையும், வாசிக்க வேண்டியவையும் நிறைய இருக்கின்றன//

    ஆமாண்ணே.. கேப் விடாம எழுதுங்க. வாசிக்கக் காத்திருக்கிறோம்.

    //கல்லூரி நட்பு//

    வாழ்த்துகள். செகண்ட் இன்னிங்ஸ் ஆரம்பிங்கண்ணே.

    பதிலளிநீக்கு
  2. எழுதுவதற்கு இன்னும் எத்தனையோ விஷயங்கள் உள்ளது. மே. வங்கத்தில் காக்காய் அடிபட்டு விழுந்தால் கூட அது மார்க்சிஸ்ட்டுகளின் அராஜகம் என கோஷம் இட்ட e-தேசபக்த கார்ப்பொரேட் மீடியாக்கள், இப்போது மம(தை)தா பானர்ஜி பதவி ஏற்றதிலிருந்து திரிணாமுல் காரர்கள் எண்ணற்ற மார்க்சிஸ்ட் தோழர்களை கொலை செய்துள்ளபோது அமைதி காக்கின்றனரே / கண்மூடி மௌனம் காக்கின்றனரே அதை பற்றி எழுதுங்கள். அவர்களுக்கு குறிக்கோள் நிறைவேறி விட்டது, மாநிலத்தில் மார்க்சிஸ்ட்டுகளின் ஆட்சி முடிவுக்கு வந்து விட்டதில். ஆட்சியில் யார் இருந்தாலென்ன, என்ன் செய்தாலென்ன. மார்க்சிஸ்ட்டை வீழ்த்துவதற்கு மம்தா ஒரு கருவியாய் உபயோகபடுத்த பட்டார். மக்கள் மீதோ அவர்களின் வாழ்வாதாரத்தின் மீதோ அந்த மீடியாக்களுக்கு கவலை யில்லை. நிற்க, அதிதீவிர அக்மார்க தேசபக்த கம்யூனிஸ்ட்கள் so called Naxalitகள் இப்போது தூங்குகிறார்களா.அரசியல் அநாகரிக கொலைகள் மனித உரிமை மீறல்கள் இல்லையா. அக்னிவேஷ் கும்பல்கள், அணைகட்டு அம்மா கும்பல்கள்ம்,அருந்ததிராய்கள் இப்போது எங்கே போயினர். எழுதுங்கள் தோழரே. இது உங்களுக்கு தேசம் இட்ட பணி.
    -தேசாந்திரி

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!