நடிகர் ரஜினிக்கு முதலமைச்சர் கருணாநிதி கொடுத்த தண்டனை!

 

சேனலை மாற்றிக்கொண்டு வரும்போது வாலி பேசிக்கொண்டு பேசிக்கொண்டு இருந்தார். ‘என்னதான் சொல்கிறார்’என்று சில கணங்கள் நிதானிக்க, அந்த காமெடி ஷோவை பார்க்க நேர்ந்தது. ‘தனக்கு வாழ்வு கொடுத்தவர்’ என்று கருணாநிதியைப்பற்றி ஊனும் உயிரும் உடன்பிறப்புக்களும்  உருகப் பேசிக்கொண்டு இருந்தார் கவிஞர். சும்மா சொல்லக்கூடாது. மடை திறந்த வெள்ளம் போலத்தான் பேச்சும் வருகிறது. எதோ ஒரு பாட்டு எழுதியிருந்தாராம். அதில் எழுத்துப் பிழைகள் இருந்ததை கருணாநிதி சுட்டிக் காண்பித்தாராம். வல்லினத்திற்கும் மெல்லினத்திற்கும் இடையில் இடையினம் வரக்கூடாது என்றாராம். எப்பேர்ப்பட்ட தீர்க்கதரிசினம் என்று புகழ்ந்து, அரசியலுக்கும் இன்று அப்படியே பொருந்துகிறது பாருங்களேன் என்று சொல்லவும், கருணாநிதி முகத்தில் புன்னகை பூக்க, ஸ்டாலின்+ கனிமொழி,+தயாநிதி மாறன் குலுங்கிச் சிரிக்க, ரஜினிகாந்த் வாய்விட்டுச் சிரிக்க, கூட்டம் ஆரவாரிக்க, எப்படி ஒரு கண்கொள்ளாக் காட்சி. என்ன தவம் செய்தனர் இந்த தமிழ் மக்கள். சுதாரிக்கும்முன், அடுத்த கதை வாலியிடமிருந்து! எங்கள் தங்கம் படத்தில் எம்.ஜி.ஆர் வாயசைக்கும் பாடலுக்கு “நான் அளவோடு ரசிப்பவன்..” என்று  முதல்வரி எழுதி, அடுத்தவரிக்கு வார்த்தைகளைத் தேடிக்கொண்டு இருக்கும்போது கலைஞர் அங்கு வந்தாராம். சஸ்பென்ஸ் வைத்து நிறுத்தினார் நெட்வொர்க்குக்கே தாங்க முடியவில்லை. எதோ தடங்கலாகி சில கணங்கள் காணாமல் போனது. திரும்பச் சரியானபோது, எல்லோரும் சிரித்துக் கொண்டு இருந்தார்கள். “எதையும் அளவின்றி கொடுப்பவன்” என்று யாருங்க சொன்னது? யோசித்துக்கொண்டு இருக்கும்போது, வாலி அவர் பாட்டுக்கு போய்க்கொண்டே இருந்தார்.

அவ்வப்போது மேடையில் கவிஞர் வைரமுத்துவைவையும் காண்பித்தார்கள். ‘இன்றைக்கு எதாவது கவிதை மன்றமா’ என யோனை வந்தது. வழக்கமாக, ‘கருணாநிதிதானே மேடையில் நடுவராக இருப்பார், இங்கு வாலி மேடையில் நடுவராகவும், கலைஞர் பார்வையாளராகவும் இருக்கிறாரே’ என கூடவே வியப்பும் வந்தது. மேடையில் மத்தியமந்திரிகள் ஜெகத்ரட்சகன், ராஜா கூடவே சுப.வீரபாண்டியன் போன்றோரையும் காண்பிக்கவும், இது வேறு என்ற தெளிவு வந்தது. மேடையின் பின்னணியில் அண்ணாவோடு கலைஞர் பவ்யமாக சிரித்து குனிந்து நிற்பதைப் பார்த்தவுடன், கலைஞருக்கு கொடுக்கப்பட்ட அண்ணா விருது என்பது நினைவுக்கு வந்தது. இப்படி எல்லாம் வந்தபின் பார்த்தே விடுவது என்கிற தைரியமும் வந்தது.

இன்ன வார்த்தைகள் என்று கிடையாது. வாய்க்கு வந்தபடி பேசிக்கொண்டு இருந்தார்கள். அமைச்சர்களும், அதிகாரிகளும் ‘எம் பணி கைதட்டி சிரித்துக் கிடப்பதே’ என்பதாய் கீழே இருந்தார்கள். முதல்வரிசை நடுவில் முதலமைச்சர் கருணாநிதிம், நடிகர் ரஜினிகாந்த்தும் இருக்க, அப்புறமும், இப்புறமும், மனைவி, குழந்தைகள், பேரன்மார், அமைச்சர்கள் புடைசூழ்ந்திருந்தனர். பின்புறம் அதிகாரிகள், அவர்கள் குடும்பத்தார், இன்னும் பலர் வரிசையாய் உட்கார்ந்திருந்தனர். இன்று காலையில் எத்தனை ‘உலகத்தமிழர்கள்’ இந்த அற்புதத்தை கண்டு களித்தார்கள் என்று தெரியவில்லை. மெய்சிலிர்த்தார்கள் என்று புரியவில்லை. தாங்கள் தயாரித்த ‘நினைத்தாலே இனிக்கும்’படம் டாப் டென்னில் முதல் படமாய் காண்பித்து சன் டிவி நிறுவனம் பெருமைப்பட்டுக்கொண்டிருக்கும் போதுதான், கலைஞர் டி.வி இந்தக் காட்சியைக் காண்பித்துக் கொண்டிருந்தது.

ஜெகத்ரட்சகன் ‘கலைஞரின் பேச்சாற்றல்’ என பேச வந்தார். ராமாயாண வரிகளையெலாம் மனப்பாடமாய் சந்தசுதியோடு ஒப்பித்து இடையிடையே, கலைஞரை ‘ஆறரை கோடி தமிழ்மக்களின் இதயநாயகன்’ என கொண்டாடித் தீர்த்தார். சிறைக்குச் சென்று, கருணாநிதி சட்டசபை உறுப்பினராகி, சட்டமன்றத்துக்குள் நுழைந்தாராம். அப்போது அனந்தநாயகியம்மாள் “என்ன கலைஞரே! மாமியார் வீடு எப்படி இருந்தது” என்று கேட்டாராம். உடனே அவர் “உங்கள் தாய்வீடு நன்றாக இருந்தது” என்றாராம். எப்பேர்ப்பட்ட பேச்சாற்றல் என போற்றினார். கூட்டம் ஆர்ப்பரித்தது. சுற்றிலும் எல்லோரும் சிரிக்கும்போது ரஜினி என்ன முகத்தை இறுக்கமாகவா வைத்திருக்க முடியும். தேமேன்னு சிரித்தார். அவ்வப்போது கால்களை ஆட்டி தன்னை உற்சாகப்படுத்திக்கொண்டார். கருணாநிதி எதைச்செய்தாலும் அதில் ஆழ்ந்த பொருளிருக்குமாம், நாணயம் மிக்கவர் அண்ணா என்பதால்தான் அவரது படத்தை ருபாய் நோட்டில் இல்லாமல் நாணயத்தில் பொறிக்க வழிசெய்தாராம் முதலமைச்சர். ஆமாம், இந்த காங்கிரஸார் எந்தக் காரணத்திற்காக காந்தி படத்தை ருபாய் நோட்டில் பதித்தார்கள் என்று தெரியவில்லையே?

தொடர்ந்து உணர்ச்சிவசப்படாமல் நிதானமாகவும், கொஞ்சம் தெளிவாகவும் பேசினார் மத்திய மந்திரி ராஜா. அண்ணா, பெரியாரை எல்லாம் அந்த அரங்கத்தில் பேசியது கொஞ்சம் ஆற்றுப்படுத்தியது. கலைஞர் தன்னை நாத்திகர் என்று சொல்லிக்கொள்ளவும், பகுத்தறிவுக் கொள்கை மிக்கவர் எனச் சொல்லிக்கொள்ளத் தயங்கியது இல்லை என்றதோடு நில்லாமல் கடவுள், ஆன்மீகம் குறித்த கடுமையான விமர்சனங்களையெல்லாம் பெரியாரின் வார்த்தைகளோடு குறிப்பிட்டார். இந்த ‘ஈயாடவில்லை’ என்னும் பதத்திற்கான அர்த்தங்கள் ரஜினியின் முகத்தில் தெரிந்தன.

அப்புறம் யார்..? நம்ம வைரமுத்து அவர்கள். உடலை முறுக்கேற்றி, எல்லோரையும் விஞ்சிவிட வேண்டும் என்ற முஸ்தீபோடு வந்தார். தனக்கேயான அந்த விசித்திர உடல்மொழியோடு, ’கலைஞரின் எழுத்தாற்றலை’ அரங்கமெங்கும் நிரப்பினார். ‘அண்ணா ஒரு எழுத்தாளர், ஆனால் கலைஞர் எழுத்தாளர் மட்டுமல்ல, படைப்பாளியுங்கூட’ என்று தனது மேதமையால் கருணாநிதியை அளக்க ஆரம்பித்தார். ‘காளிதாசன், ஷேக்ஸ்பியருக்கும் இணையான, அதற்கும் மேலான உவமைகளைக் கையாண்டவர் கலைஞர்’ என்று அவரது உலக இலக்கிய அறிவை வெளிப்படுத்திய போது ‘அப்படியா’ என்றும் மொத்தக் கூட்டமே புல்லரித்துப் போயிருந்தது. ரஜினியின் புருவங்கள் உயர்ந்து நின்றன. சகிக்கமுடியாமல் டி.வியை அணைத்துவிட்டேன்.

அந்தக் காலத்து அரசவைகளில், நம் புலவர் பெருமக்களின் நிலைமை எப்படி இருந்திருக்கும் என்று நினைத்து சங்கடமடைந்தேன். எட்டையபுரத்து அரசவையில் கவிஞராய் கொஞ்ச நாட்கள் இருந்துவிட்டு, ‘பன்றியைபோல மண்ணிடைச் சேற்றில்’ கிடந்தேன் என சுயசரிதையில் எழுதிய பாரதி விஸ்வரூபமெடுத்து நின்றான். கருணாநிதியின் தமிழுக்கான பங்களிப்பை குறைத்து மதிப்பிட்டுவிடக் கூடாதுதான். ஆனால் தமிழே அவர்தான், தமிழை வாழவைத்தது அவர்தான் என்று சொல்வதெல்லாம் எப்படிச் சரியாகும்? சிறுவயதில் கருணாநிதி எழுதிய ‘நெஞ்சுக்கு நீதி’யை முழுமையாகப் படித்து அவர் மீது பெரும் மதிப்பு கொண்டவனாய் இருந்ததுண்டு. எல்லாவற்றையும் காலம் கரைத்துக்கொண்டு இருக்கிறது. போலியான, சம்பந்தமற்ற, தேவையற்ற புகழுரைகளை ஒரு மனிதர் எப்படி ஆடாமல், அசையாமல் மணிக்கணக்கில் கேட்டுக்கொண்டு இருக்க முடிகிறது என்று புரியவில்லை.

ஒன்று மட்டும் தெளிவாகப் புரிந்தது. தனது படங்களைப் பார்க்க வாருங்கள் என்று கலைஞரை ரஜினிகாந்த் அழைத்து, மணிக்கணக்காய் உட்கார்ந்து பார்க்க வைத்ததற்கு சரியான பழிக்குப் பழி இது. அவர் ஆடுவதை, பாடுவதை, சொடக்குப்போட்டு சவால் விடுவதை, நூறு பேரை பந்தாடுவதையெல்லாம்  பார்க்கவைத்த கொடுமைக்கு கொடுக்கப்பட்ட சரியான தண்டனை இது.

*

கருத்துகள்

56 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
  1. //தனது படங்களைப் பார்க்க வாருங்கள் என்று கலைஞரை ரஜினிகாந்த் அழைத்து, மணிக்கணக்காய் உட்கார்ந்து பார்க்க வைத்ததற்கு சரியான பழிக்குப் பழி இது. அவர் ஆடுவதை, பாடுவதை, சொடக்குப்போட்டு சவால் விடுவதை, நூறு பேரை பந்தாடுவதையெல்லாம் பார்க்கவைத்த கொடுமைக்கு கொடுக்கப்பட்ட சரியான தண்டனை இது//

    :))

    பதிலளிநீக்கு
  2. //தனது படங்களைப் பார்க்க வாருங்கள் என்று கலைஞரை ரஜினிகாந்த் அழைத்து, மணிக்கணக்காய் உட்கார்ந்து பார்க்க வைத்ததற்கு சரியான பழிக்குப் பழி இது. அவர் ஆடுவதை, பாடுவதை, சொடக்குப்போட்டு சவால் விடுவதை, நூறு பேரை பந்தாடுவதையெல்லாம் பார்க்கவைத்த கொடுமைக்கு கொடுக்கப்பட்ட சரியான தண்டனை இது//

    Ore Kallil Irandu Maangai!

    பதிலளிநீக்கு
  3. //சகிக்கமுடியாமல் டி.வியை அணைத்துவிட்டேன்.//

    இதை முதலிலேயே செய்திருக்கலாம் .. ரொம்ப டென்சன் ஆகாம நீங்களும் ,இந்த பதிவை படிக்க அவசியமின்றி நாங்களும் பயன் பெற்றிருப்போம்.

    பதிலளிநீக்கு
  4. நான் டிவி பார்ப்பதை நிறுத்தி மூன்று ஆண்டிகள் ஆகின்றது..இது போன்ற கொடுமைகளுக்கு உள்ளாகாமல் இருப்பதில் மகிழ்ச்சியே ;)))) பகிர்விற்கு நன்றி தோழர்.

    பதிலளிநீக்கு
  5. இந்த எழவிற்குத்தான் நான் டீவி பக்கமே போவதில்லை.

    பதிலளிநீக்கு
  6. முத்தமிழ் வித்தகர் முன்னால முத்தமிழையும் வித்துருக்காய்ங்க போல...

    பதிலளிநீக்கு
  7. காலில் விழும் கலாச்சாரம் எவ்வளவு அருவருப்பானதோ அதே போல் தான் இதுவும். இதையெல்லாம் பார்க்காமல் இருப்பது நம் ஆரோக்கியத்துக்கு நல்லது.

    பதிலளிநீக்கு
  8. //இன்று காலையில் எத்தனை ‘உலகத்தமிழர்கள்’ இந்த அற்புதத்தை கண்டு களித்தார்கள் என்று தெரியவில்லை. மெய்சிலிர்த்தார்கள் என்று புரியவில்லை.//

    அந்த‌ அப்பாவி உல‌க‌த்த‌மிழ‌ர்க‌ளில் நானுமொருவ‌ன்.

    குறிப்பாக‌, வைர‌முத்துவின் புக‌ழார‌ம் க‌லைஞ‌ருக்கு திக‌ட்டியிருக்கும்..

    ஏ.கே 47 க‌த்தி நுனி போல‌ க‌லைஞ‌ர் என்ற‌தும் என‌க்கு மெய்சிலிர்த்து....அட‌ங்கொக்கா ம‌க்கா..

    பதிலளிநீக்கு
  9. சும்மா ஒரு விளையாட்டுக்கு கேக்குறேன்... இந்தப் பதிவை எழுதுவது மு.க-வை யாராவது திட்டவேண்டும், அவரை அத்தனை பேரும் பாராட்டுவது மாதிரி நடிப்பது கூட எனக்கு பொறுக்கவில்லை என்பதற்கான மறுமொழிதானே? இதே நிகழ்ச்சியை சற்று மாற்றி மாதவராஜ் சாரை வைரமுத்துவும், வாலியும் பாராட்டினால் வேண்டாம் என்று மறுத்துவிடுவீர்களா? எல்லாருக்குமே ஈகோ தானே சார்?

    பதிலளிநீக்கு
  10. -பின்னூட்டக் கயமை (அ) பொழுது போகாமை-

    பதிலளிநீக்கு
  11. அண்ணா நூற்றாண்டு விழாவில் அண்ணாவின் தம்பி எனச் சொல்லும் கள்ளர் கூட்டத் தலைவனுக்கு ஜால்ரா அடித்தார்கள். பாவம் அண்ணா.

    பதிலளிநீக்கு
  12. விடுங்கண்ணே!அரசியல்ல இதெல்லாம் சகஜம்தானே...

    கலைஞர் விருதையும் அறிவித்து அதையும் அவ்ர் தனக்கு தானே கொடுத்துக்காம இருந்தா சரி!

    பதிலளிநீக்கு
  13. //“எதையும் அளவின்றி கொடுப்பவன்” என்று யாருங்க சொன்னது? யோசித்துக்கொண்டு இருக்கும்போது, வாலி அவர் பாட்டுக்கு போய்க்கொண்டே இருந்தார்.

    அந்த வரிகளை கருணாநிதி தான் சொன்னாராம்.

    நானே இந்த கருத்துரையைப் பார்த்து கலங்கிப்போனேன். எப்பேர்பட்ட தமிழ் இலக்கியவாதி கலைஞர் என்று.

    ஒரு வேளை நான் அவரது புத்தகங்கள் எதுவும் படிக்காததால் அவரை சரியாக மதிப்பிடவில்லையோ ? அண்ணாவை விட இவர் பெரிய எழுத்தாளர்/பேச்சாளர் என்று அனைவரும் கூறினார்கள். அது உண்மையா ? ஏனென்றால் நான் அண்ணா எழுதியதை/பேசியதை அறிந்தவன் இல்லை. யாரிடமாவது கேட்கவேண்டும் என நினைத்தேன். உங்கள் பதிவு அதற்கு பதிலாக இருந்தது.

    பதிலளிநீக்கு
  14. காலையில meeting இனிமேல தான் eating என்று கலைஞர் சொன்னதாக ஒருவர் சொன்னார். இந்த மாதிரி நிமிடத்துக்கு ஒரு முறை பேசக்கூடியவர் விஜய T. ராஜேந்தர் என நினைத்துக் கொண்டேன்.

    அப்புறம் வாலி தனக்கு உயிர் கொடுத்தவர் என சொன்னார், ஏன் அப்படி சொன்னார் என எனக்கு தெரியவில்லை. உங்களுக்கு தெரியுமா ?

    பதிலளிநீக்கு
  15. அடடே இன்னும் நீங்க டி. வி. பாகுரீங்களா

    பதிலளிநீக்கு
  16. //
    கலைஞருக்கு கொடுக்கப்பட்ட அண்ணா விருது என்பது நினைவுக்கு வந்தது.
    //

    இது தான் நமக்கு நாமே திட்டமா??

    //
    கருணாநிதியின் தமிழுக்கான பங்களிப்பை குறைத்து மதிப்பிட்டுவிடக் கூடாதுதான். ஆனால் தமிழே அவர்தான், தமிழை வாழவைத்தது அவர்தான் என்று சொல்வதெல்லாம் எப்படிச் சரியாகும்?
    //

    முத்தமிழ் வித்தவர், எளக்கியவியாதி கலைஞ்சரை பத்தி இப்படியெல்லாம் கேள்வி கேக்கப்படாது....அப்புறம் ஒங்களை தாக்கி ஒடன்பொறப்புக்கு ஒரு கடுதாசி எழுத வேண்டி வரும்...

    //
    போலியான, சம்பந்தமற்ற, தேவையற்ற புகழுரைகளை ஒரு மனிதர் எப்படி ஆடாமல், அசையாமல் மணிக்கணக்கில் கேட்டுக்கொண்டு இருக்க முடிகிறது என்று புரியவில்லை.
    //

    இதுக்கு தாங்க பகுத்தறிவு வேணும்கிறது....இப்பவாவது ஒத்துக்கறீங்களா கலைஞசருக்கு பகுத்தறிவு இருக்குன்னு??

    //
    ஒன்று மட்டும் தெளிவாகப் புரிந்தது. தனது படங்களைப் பார்க்க வாருங்கள் என்று கலைஞரை ரஜினிகாந்த் அழைத்து, மணிக்கணக்காய் உட்கார்ந்து பார்க்க வைத்ததற்கு சரியான பழிக்குப் பழி இது. அவர் ஆடுவதை, பாடுவதை, சொடக்குப்போட்டு சவால் விடுவதை, நூறு பேரை பந்தாடுவதையெல்லாம் பார்க்கவைத்த கொடுமைக்கு கொடுக்கப்பட்ட சரியான தண்டனை இது.
    //

    ரஜினி படம்னாலும் வருசத்துக்கு ஒண்ணு வருது....இவரு அன்றாடம் இது மாதிரி ஒரு அல்லக்கை நி(பு)கழ்ச்சிக்கு போய்க்கிட்டுல்ல இருக்காரு....காசு குடுத்து இவரே ஏற்பாடு பண்ணுவாரோ???

    நீங்க எழுதியிருக்கதை படிச்சே எனக்கு பீதியாருக்கு...ரஜினிக்கு பேதியே ஆயிருக்கும்....தமிழ்நாட்டுல உயிர் வாழ்றது எவ்வளவு கஷ்டமா இருக்குடா சாமி!

    :0)))

    பதிலளிநீக்கு
  17. தலைப்பை சற்று மாற்றி வைத்திருக்கலாம்.

    "முக வைச்சுற்றி சில காக்கைகள்".

    அவஸ்தைகளிலே பெரிய அவஸ்தை மற்றவர்கள் தன்னை கூச்சநாச்சமில்லாமல் புகழ்வதை பலர் பார்க்க கேட்பதுதான். அதெற்கெல்லாம் ஒரு பக்குவம் இருக்கனும். "இவன் எவ்வளவு அடிச்சாலும் தாங்குவாண்டா" -ன்னு வடிவேலு சொன்னது தான் ஞாபகம் வருகிறது.

    பதிலளிநீக்கு
  18. இருபத்தி மூன்றாம் புலிகேசி Vs ஓணான்டி புலவர்.

    மா மன்னா?!
    மாமா மண்ணா?


    குறிப்பு: மூணு சுழி "ண்" ல எந்த உள் குத்தும் இல்ல.

    பதிலளிநீக்கு
  19. எம் ஜி ஆர் எதையும் அளவில்லாமல் கொடுப்பவர் என்றால், கருனாநிதி எதையும் கொடுக்காமல் வருபவர் என்று கவிஞர்கண்ணதாசன் சொலியதாக படித்திருகிறேன் எதற்கு என்று மட்டும் கேட்டு விடாதீர்கள்.

    பதிலளிநீக்கு
  20. அந்த கொடுமையை நானும் டி.வியில் பார்த்தேன்.

    வாலி கவிதை டி.ராஜேந்தர் வசனம் போல இருந்தது. வைரமுத்து பேசியது அபத்தம்.

    வாங்குன காசுக்கு என்னமா பீல் பண்ணி....

    பதிலளிநீக்கு
  21. இதே வாலி, ஜெகத்ரட்சகன் ஒரு காலத்தில் எம்ஜியாரை இப்படித்தான் பாராட்டி பேசிய நபர்கள்.

    நாளையே ஜெயலலிதா முதல்வர் ஆனதும் வாலி அம்மா, தாயீ அஷ்ட லக்ஸ்மி என்று துதி பாடுவார். அதையும் ரஜனி கமல் கை கொட்டி சிரிப்பார்.

    நமக்கு ஒரு காமெடி நிகழ்ச்சி.

    இன்றும் கலைஞர் டிவி பாருங்கள், அண்ணா நூறாண்டு விழா. இன்னும் ஒரு கவி அரங்கம்.

    பதிலளிநீக்கு
  22. காலையில் கவியரங்கம் பார்த்ததால் வந்த கடுப்பு, இரவில் இந்த பின்னுட்டங்களை படித்ததில் தீர்ந்திருக்குமே! வாய் விட்டு சிரிக்க வைத்தன.

    பதிலளிநீக்கு
  23. சனிக்கிழமையே... இதுக்கான விளம்பரம் கலைஞர் டிவில திருப்பி திருப்பி போட்டாங்க...

    ஜெகத்ரட்சகன் பேசுற சீன்ல ரஜினி சிரிக்கிற மாதிரி நடிக்க, கலைஞரே அவர பாவமா பார்க்கிற மாதிரி நடிக்க....

    முடியல...

    அப்பவே முடிவு பண்ணிட்டேன்.... ஞாயித்துக்கிழமை வீட்ல இருந்தா புத்தி மாறி இதப் பார்த்தாலும் பார்த்துடுவோம்னு...

    எஸ்கேப் ஆயிட்டேன்

    பதிலளிநீக்கு
  24. நாமக்கல் சிபி!
    ‘கல்லோ மாங்காயோ’ என்று கவிதைகள் வந்தாலும் வரும்.

    ஜோ!
    நமக்கு பட்டால்தானே தெரியுது நண்பா...


    அறிவிலி!
    பார்த்த எனக்கும்தான்.


    கார்த்திகேயன்...!
    :-)))


    வேல்ஜி!
    நன்றி.


    உமாஷக்தி!
    வாருமுன் காத்துக்கொண்டீர்கள்.

    பதிலளிநீக்கு
  25. ஜ்யோவ்ராம்சுந்தர்!
    உங்களது கோபமும், எரிச்சலும் மிக இயல்பாய் வார்த்தைகளில் தெரிகின்றன.
    சட்டென சிரிப்பு வந்தது.


    பாலா!
    தங்கள் சிரிப்புக்கு மிக்க நன்றி.


    செல்வேந்திரன்!
    தம்பி... வித்தவங்களையெல்லாம் வித்தகர் பார்த்துச் சிரித்ததை நீங்க பார்த்திருக்கணும். அவரா வாங்குறவரு....?

    பதிலளிநீக்கு
  26. அம்பிகா!
    //இதையெல்லாம் பார்க்காமல் இருப்பது நம் ஆரோக்கியத்துக்கு நல்லது.//

    ரசித்தேன். ‘குடி குடியைக் கெடுக்கும்’, ‘புகை உடல்நலத்திற்கு தீங்கானது’ போன்ற வாசகங்கள் எதாவது வெளியிடலாமோ?


    செய்யது!
    ரொம்ப சந்தோஷமா இருந்தது. நீங்களும் அந்த கொடுமையை அனுபவித்தீர்களா? ஆமாமாம். ஏ.கே 47 தான். ஜாக்கிரதையாய் இருக்க வேண்டும்.


    வெங்கிராஜா!
    தவறான எண்ணுக்கு போன் செய்திருக்கிறீர்கள் நண்பரே!


    அனானி!
    ‘கள்ளர் கூட்டத்தலைவர்’ என்றெல்லாம் வார்த்தைகளை உபயோகிக்க வேண்டாமே.

    அண்ணா நூற்றாண்டு விழா இப்படி என்றால், உலகத்தமிழ் மாநாடு எப்படி இருக்கும்?

    பதிலளிநீக்கு
  27. அண்டோ!
    எந்த உலகத்தில் இருக்கிறாய் நீ தம்பி?


    பின்னோக்கி!
    அந்த வரிகளை கருணாநிதிதான் சொன்னாரா! நன்றாக கொடுத்தாரே எம்.ஜி.ஆர் கருணாநிதிக்கு....!

    ஆமாமாம், டி.ஆர் பின்னி எடுத்துவிடுவார்தான். இதெல்லாம் தெரியாத மார்ட்டின் லூதர் கிங், சர்ச்சில், லெனின் போன்றவர்கள் எல்லாம் என்ன பேச்சாளர்கள்? உலகையே அதிரவைத்த பேச்சாளர்கள் என்று அவர்களை எந்தக் கிறுக்கன் சொல்லியிருப்பான்!


    ரகுநாதன்!
    என்ன செய்ய... பார்த்துட்டேனே...

    பதிலளிநீக்கு
  28. //போலியான, சம்பந்தமற்ற, தேவையற்ற புகழுரைகளை ஒரு மனிதர் எப்படி ஆடாமல், அசையாமல் மணிக்கணக்கில் கேட்டுக்கொண்டு இருக்க முடிகிறது என்று புரியவில்லை. //

    அய்யய்யோ அது மிகத் தேவையான குணாம்சமாயிற்றே. அது இல்லா விட்டால் யாரும் பெரிய மனுஷன் என்று ஒத்துக் கொள்ளமாட்டார்கள்.

    கடைசி வரி சூப்பர் பஞ்ச்! ஆமாம், ரஜினிக்குத் தேவை தான். நமக்கு என்ன தலையெழுத்து... இதெல்லாம் பார்க்க/கேட்க??

    பாரதியை நினைவு கூர்ந்தது மிகவும் அருமை. ஹூம். அவர் வாழ்ந்த இதே மண்ணில் கவிஞர் என்ற பெயரில் மார்தட்டி வருபவர்களைக் கண்டால்...... :-((((

    பதிலளிநீக்கு
  29. அதுசரி!
    உங்கல் பின்னூட்டம் பார்த்து வாய்விட்டுச் சிரித்தேன். என் எரிச்சலும் குறைந்து போனது நன்றி. ஆனாலும் சீரியஸான கேள்விகளைத்தான் கேட்டு இருக்கீங்க...


    அனானி!
    ஓஹோ... இதற்கும் அந்த வடிவேலுவின் வசனம் பொருந்துமோ!
    சரி.... நமக்கு?


    அனானி!
    எதற்கு என்று நான் கேட்கவே மாட்டேன்...



    விநாயக முருகன்!
    நீங்களும் பார்த்தீர்களா? வாழ்க வையகம்!


    ராம்ஜி!
    எல்லாம் சரிதான்.
    அதென்ன, கடைசியில் இன்றும் டிவி பார்க்கச் சொல்லியிருக்கீங்க? ஏன் இந்தக் கொலைவெறி?


    அம்பிகா!
    ஆமாம். கொஞ்சம் குறைந்திருக்கிறது....

    கதிர்!
    மணியோசை கேட்டே யானையிடம் இருந்த தப்பித்த புத்திசாலி நீங்கள். உங்களுக்கு என் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  30. ரஜினி கொடுமைபடுத்த படுவது இருக்கட்டும். உங்கள் பதிவுகளை படித்து நாங்கள் கொடுமைபடுத்த படுவது பற்றி யொசியுங்கள். பதிவு எழுத மேட்டர் இல்லைன்னா நாலு பதிவுகளை படியுங்க சார். இதுமாதிரி கண்டதையும் எழுதி எங்களை சாவடிக்காதீங்க.

    பதிலளிநீக்கு
  31. ஆனா எப்படி தான் இப்படியெல்லாம் யோசிக்கிறாங்களோ அவங்களே ஒரு அமைப்பை தொடங்கி ஆண்டு தோறும் அவங்களுக்கே விருதுகளை பங்கு வைப்பாங்களாம் அதுக்கு ஒரு கூட்டம் வருத்த படாத வாலிபர் சங்கம் போல . அவங்கள பற்றி அவங்களே பேசி பெருமை பாடுவாங்களாம்

    என்ன கொடுமை .........

    பாடி பாரிசில் வாங்கிய நவீன புலவர்களை என்ன சொல்ல

    பதிலளிநீக்கு
  32. அண்ணா விருதை கலைஞருக்கு கொடுத்தார்கள், கொஞ்ச நாளில் கலைஞர் விருது அண்ணாவிற்கு கொடுத்தாலும் கொடுப்பார்கள்.

    23ம் புலிக்கேசி படத்தில் இரண்டு துதி பாடிகள் வருவார்களே, அவர்களை நினைவிற்கு வந்தனர்.

    மகள்,மகன் சென்னையில் தந்தைக்காற்றும் உதவியும், தந்தை தில்லியில் மகனுக்காற்றும் உதவியும்,........

    வாழும் வள்ளுவர் தான்.....


    வெட்கங்கெட்டவர்கள்.....

    அன்புடன்
    ஆரூரன்

    பதிலளிநீக்கு
  33. ஆம் மாதவ்,

    நிறைய அசட்டுத் தனமாகவும், அருவருப்பாகவும் இருந்தது அந்த நிகழ்ச்சி. ஜகத் பாதி பேசும் போதே தாங்க முடியாமல் வேறு சேனல் பார்க்கச் சென்றேன். வைரமுத்துவின் தாக்குதலிலிருந்து தப்பி விட்டேன் :)

    தன் காலடியில் வீழ்பவர்களை ரசிக்கும் ஜெயாவின் குரூரத்திற்கும் இந்த புகழ் மாலைகளை குறும் புன்னகையுடன் ரசித்த கலைஞருக்கும் பெரிய வித்தியாசம் தெரியவில்லை :(

    அனுஜன்யா

    பதிலளிநீக்கு
  34. ஆல் இண்டியா ஐஸ் வைப்போர் சங்க நிகழ்ச்சிகள் அருமை...

    நிறுவனர்: ஜெகத்ரட்சகன்.

    மற்றவர்: உறுப்பினர்கள்.

    பதிலளிநீக்கு
  35. அந்த கொடுமையை நானும் டி.வியில் பார்த்தேன்.

    23ம் புலிக்கேசி படத்தில் இரண்டு துதி பாடிகள் வருவார்களே, அவர்களை நினைவிற்கு வந்தனர்.

    yenna kodumai sir ethu.

    பதிலளிநீக்கு
  36. அருவருப்பை அருமையாகச் சொல்லியிருக்கிறீர்கள்

    //
    பாரதி விஸ்வரூபமெடுத்து நின்றான்
    //

    உணரவேண்டிய உண்மை

    பதிலளிநீக்கு
  37. அருமையான நகைச்சுவையை மிஸ் பண்ணிட்டேன் போல!

    பதிலளிநீக்கு
  38. பணம் சம்பாதிப்பத்ற்காக, தான் ஆரம்பித்து நடத்திக் கொண்டிருக்கும் மகளிர் விடுதி சம்பந்தமாக அரசாங்க ரீதியாக உதவி செய்திருக்கும் முதல்வருக்கு வைரமுத்துவும்,
    தனது மருத்துவ சிகிச்சைக்காக பணம் கொடுத்து உதவியருக்கு வாலியும்...வேற எப்படித்தான் தங்களது நன்றிக்கடனை செலுத்துவது?
    நாமதான் இதையெல்லாம் கண்டும் காணாம இருந்துக்கணும்.

    பதிலளிநீக்கு
  39. இந்த கருமங்களுக்கும், சீரியல் கொடுமைகளுக்கும் பயந்தே தான் நான் கேபுள் இணைப்பு இல்லாமல் T.V. வைத்திருக்கிறேன். வெறும் DVD யும் MP3 பாடல் களும் போதுமென்று.

    பதிலளிநீக்கு
  40. தீபா!

    நன்றி. உனது பின்னூட்டத்தில் வரும் ‘ஹூம்’ அங்கே உனது பதிவின் தலைப்புமாகி இருக்கிறது. எத்தனை ஹூம்கள்.


    அனானி நண்பரே!
    உங்களைப் போன்றோரைக் கொடுமைப்படுத்தியதில் வருத்தமொன்றும் ஏனக்கில்லை.


    சுரேஷ்குமார்!
    நன்றி. நவீன பாணர்கள் அவர்கள்.


    ஆரூரன்!
    வாழும் வள்ளுவரா! அப்படியும் சொல்றாங்களா!!!!


    அனுஜன்யா!
    //தன் காலடியில் வீழ்பவர்களை ரசிக்கும் ஜெயாவின் குரூரத்திற்கும் இந்த புகழ் மாலைகளை குறும் புன்னகையுடன் ரசித்த கலைஞருக்கும் பெரிய வித்தியாசம் தெரியவில்லை//
    சரியாகச் சொன்னீர்கள்.

    பதிலளிநீக்கு
  41. butterfly surya!
    நன்றி.


    அனானி!
    நன்றி.


    நந்தா!
    நன்றி.



    வால்பையன்!
    நீங்க மிஸ் பண்ணியிருக்கக் கூடாது. பதிவுலகம் ஒரு அருமையான நையாண்டிப் பதிவை இழந்துவிட்டது!



    அனானி!
    அப்படியா....!


    கக்கு மாணிக்கம்!
    நல்ல முடிவுதான். நன்றிங்க.

    பதிலளிநீக்கு
  42. எனக்கும் அந்த நிகழ்ச்சியை கொஞ்ச நேரமே (ஷ் அப்பா.., முடியல)
    பார்த்தபோது இதுதான் தோன்றியது.

    பதிலளிநீக்கு
  43. மங்களூர் சிவா!
    நன்றி.

    அமித்து அம்மா!
    //(ஷ் அப்பா.., முடியல)// கரண்ட போனவுடன் வர்ற கமெண்ட் மாதிரி இருக்கு. :-)))))

    பதிலளிநீக்கு
  44. அருமையான பதிவு. ஆனால், தாங்கள் எப்படி இதைப் பொறுமையோடு பார்த்தீர்கள் என்பதுதான் ஆச்சர்யமாக இருக்கிறது. ஒரு வேளை ரிமோட் ரிப்பேர் ஆகியிருக்கக் கூடும்.

    தாங்களே ஒரு விழா நடத்தி, தங்களின் கைத்தடிகளை விட்டு வாழ்த்திப் பேச வைத்து, தங்கள் டிவியிலேயே அதை ஒளிபரப்பி, கண்டு மகிழும், கருணாநிதி, ஒரு "நார்சிஸ்ட்" என்றே நினைக்கிறேன். எவ்வளவு அரசுப் பணிகள் இருந்தாலும், இது போன்ற பாராட்டு விழாக்களுக்கு கருணாநிதி நேரம் ஒதுக்க தவறியதே இல்லை. இதில், வரும் 26ம் தேதி, கருணாநிதிக்கு அண்ணா விருது வழங்கப் படப் போகிறதாம். இது தொடர்பாக, அண்ணா கருணாநிதிக்கு எழுதிய கடிதம் இந்த தளத்தில் காணலாம்.

    www.savukku.blogspot.com

    பதிலளிநீக்கு
  45. //போலியான, சம்பந்தமற்ற, தேவையற்ற புகழுரைகளை ஒரு மனிதர் எப்படி ஆடாமல், அசையாமல் மணிக்கணக்கில் கேட்டுக்கொண்டு இருக்க முடிகிறது என்று புரியவில்லை.//

    நெடுநாளாக எனது புரியாமையும் இதே!

    ///ஒன்று மட்டும் தெளிவாகப் புரிந்தது. தனது படங்களைப் பார்க்க வாருங்கள் என்று கலைஞரை ரஜினிகாந்த் அழைத்து, மணிக்கணக்காய் உட்கார்ந்து பார்க்க வைத்ததற்கு சரியான பழிக்குப் பழி இது. அவர் ஆடுவதை, பாடுவதை, சொடக்குப்போட்டு சவால் விடுவதை, நூறு பேரை பந்தாடுவதையெல்லாம் பார்க்கவைத்த கொடுமைக்கு கொடுக்கப்பட்ட சரியான தண்டனை இது.
    ///
    மிகச் சரியான கணிப்பு!

    ஆனாலும் உங்களுக்குப் பொறுமை அதிகம்!மேடையில் காக்காக் கும்பலுடன் கலைஞரை கண்டால்;
    மாறிவிடுவேன்.

    பதிலளிநீக்கு
  46. மாது

    அந்த நிகழ்ச்சியை நானும் பார்த்தேன் மன்னர் கால புலவர்கள் நினைவு சரிதான்

    பதிலளிநீக்கு
  47. //‘பன்றியைபோல மண்ணிடைச் சேற்றில்’//

    இதுகள் எல்லாம் பன்றிகள் என்று கூறி பன்றிகளை கேவலப்படுத்தகூடாது.

    பதிலளிநீக்கு
  48. இந்த மாதிரி நிகழ்சிகள் வரும்பொழுது நான் கவிதையை மட்டுமே ரசிப்பேன் மத்தபடி எல்லாமே பிஸ்னஸ்னு நான் நினைகிறேன்..

    பதிலளிநீக்கு
  49. தியாவின் பேனா!
    நன்றி.


    ஒப்பாரி!
    நகைச்சுவையாக பார்க்க முடிந்ததால், பொறுமை இருந்தது. லிங்க்கை தவறாக கொடுத்து இருக்கிறீர்கள். இந்தப் பதிவுக்கே வருகிறது. பரவாயில்லை. தேடிப் பார்த்துவிட்டேன்.


    யோகன் பாரிஸ்!
    எனக்கு பொறுமையே கிடையாது என்றுதான் வீட்டில் சொல்கிறார்கள்.


    ரவிசங்கர்!
    நன்றி.


    பகுத்தறிவு!
    கோபம் புரிகிறது. இருந்தாலும்.....



    ராம்கோபி!
    பிசினஸா.....! என்ன பிசினஸ்?

    பதிலளிநீக்கு
  50. மன்னிக்கவும். தவறான லிங்க் கொடுத்ததற்கு. இந்த லிங்க் சரியாக இருக்கும்.

    http://savukku.blogspot.com/2009/09/blog-post_22.html

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!