பூ படத்தில் அம்மா, எங்கள் படத்தில் கதாநாயகி!

janaki

பெரும்பாலும் கதாநாயகியை விளக்குமாற்றால் விரட்டவும், அழவும் செய்கிற, பூ படத்தின் அந்த அம்மாவின் முகம் உங்களுக்கு ஞாபகத்தில் இருக்குமா என்று தெரியவில்லை. அவர்கள்தான் ஜானகி. சாத்தூரில்தான் வசிக்கிறார்கள். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம், சாத்தூர் கிளையின் செயலாளர். சத்துணவு ஊழியராக பணிபுரிந்து கொண்டு இருக்கிறார். நாங்கள் அனைவரும் அன்போடு ஜானகி அக்கா என்றுதான் அழைப்போம்.

பூ படத்தில் அவர் நடிக்க அழைத்த போது, இயக்குனர் சசி “இதற்கு முன்னர், எதாவது படத்தில் நடித்திருக்கிறீர்களா” என்று கேட்டாராம். “ஆமாம், மாதவராஜ் இயக்கிய குறும்படத்தில் நடித்திருக்கிறேன்” என்று சொன்னாராம். இதை ஜானகி அக்காச் சொல்லி கேட்டதும் எனக்குச் சிரிப்பு வந்தது. பிறகு அவர்களே கேட்டார் “ஆமாம் தோழர், அந்தப் படம் என்னாச்சு. வருமா?” என்றார். “ம்.. பார்ப்போம்” என்று சொல்லிவிட்டு, பூ படத்தின் அனுபவங்களைக் கேட்டேன். “நம்ம படத்தில் வந்த மாதிரி அதே மாதிரிதான். விளக்குமாத்தால அடிக்கிற மாதிரிக் கூட சீன் இருக்கு” என்று என்னைப் பார்த்தார்.

சாத்தூருக்குப் பக்கத்தில் ஒத்தயால் என்னும் கிராமத்தில் மூன்று வருடங்களுக்கு முன்பு ஒரு இரவில் எடுக்கப்பட்ட அந்தக் காட்சியை மறக்க முடியாது. ஊரே திரண்டு எதோ பெரிய சினிமா ஷூட்டிங் போல சுற்றி நின்றிருந்தார்கள். நான் ஜானகி அக்காவிடம் , எந்த இடத்தில் நிற்க வேண்டும், என்ன பேச வேண்டும், பேசிக்கொண்டே எப்படி மகளருகேச் செல்ல வேண்டும், எப்படி அடிக்க வேண்டும், பிறகு விளக்குமாற்றை எடுக்க வேண்டும் என்பதையெல்லாம் திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டு இருந்தேன். இரவு என்பதால் லைட்டிங்கை ஒழுங்குபடுத்திக் கொண்டு காமிராவோடு நின்றிருந்தார் பிரியா கார்த்தி. ஜானகி அக்கா எல்லாம் சரியாகச் செய்தார்கள். ஆனால் மகளை  அடிக்கும்போது மட்டும், அந்த உக்கிரம் இழந்து, எதோ ஒப்புக்கு பாவனை செய்தார்கள். ஐந்தாறு தடவைக்கு மேல் இப்படியே போனது. கார்த்தி என்னைப் பார்த்து சிரித்தார். எனக்கு எரிச்சல் அதிகமாகிக் கொண்டு போனது. ஒரு கட்டத்தில், எப்படி அடிக்க வேண்டும் என்று சொல்லிக் காட்ட, பாய்ந்து வேகமாக அந்தச் சின்னப் பெண்ணின்  அருகில் சென்று, கொத்தாய் அவள் முடியைப் பிடித்து, தலையை அமுக்கி, ஓங்கி முதுகில் அடிக்கக் கையை ஓங்கினேன். பார்த்துக் கொண்டிருந்த ஜானகியக்கா, “ஐயோ, பார்த்து.. பார்த்து..” என்றார்கள். ஊரே என்னோடு சேர்ந்து சிரித்தது. ஒருவழியாய் அந்தக் காட்சியை முடித்தோம் எனக்குத் திருப்தியில்லாமல்தான். ஆனால் ஜானகியக்காவின் மீது பிரியம் கூடிப் போனது.

மற்ற காட்சிகள் எல்லாம் நன்றாகவே இருந்தன. காலையில் எடுக்கப்பட்ட காட்சியின் போது, ஜானகியக்கா மிரட்டியிருந்தார்கள். தன் மூன்று மகள்களும் வேலை பார்க்கும் தீப்பெட்டி ஆபிஸில் தீப்பிடித்து விட்டது என்பதையறிந்து கதறி வீட்டில் இருந்து எழுந்து ஓடும் காட்சியில் அப்படி நடித்திருந்தார்கள். பக்கத்தில் குழாயில் தண்ணீர் பிடித்துக் கொண்டு நின்றிருந்த கிராமத்து அம்மா எதோ உண்மையிலேயே நடந்து விட்டது போல, “ஏ அம்மா, என்னாச்சு, என்னாச்சு.. “ என்று பதறி ஒடி வந்து ஜானகியக்காவின் கையைப் பிடித்துக் கொண்டார்கள். விளக்கம் சொன்னதும், “அட.. அப்படியா, சினிமாவா” என்று வெத்திலை வாயெல்லாம் அந்த அம்மா சிரித்தார்கள்.

எழுத்தாளர் லட்சுமணப்பெருமாள் எழுதிய “தீ” என்னும் கதை அது. முதலில் தீ விபத்து என்று பதறி, தன் செல்வங்களுக்கு ஒன்றுமில்லை என்றறிந்ததும் நிம்மதியடைகிற ஒரு தாய், பின்பு இறந்தவர்களுக்கு ஒரு லட்சம் கொடுக்கும் என்று அரசு அறிவித்ததும், வறுமை அவளுக்குள் ஒரு ஒரத்தில் ‘எவளாவது ஒருத்தி செத்துத் தொலைஞ்சிருக்கக் கூடாதா’ என நினைக்க வைக்கும் கொடுமைதான் கதை. படப்பிடிப்பு எல்லாம் முடிந்தது. எடிட்டிங் நடக்கும்போது, அந்தக் கதை எனக்கு வேறு மாதிரியாகத் தொனிக்க ஆரம்பித்தது. இணை இயக்குனராக இருந்த காமராஜும், பிரியா கார்த்தியும் “ஆமாம், இது எப்படிச் சரியாக இருக்கும்’ என்றே கருத்துத் தெரிவித்தார்கள். அத்தோடு நின்றது படத்தின் வேலைகள்.

இதையெல்லாம் ஜானகியக்காவிடம் நான் சொல்லவில்லை. முதல் படம் ‘தீ’யாக இல்லாமல், இன்னொரு ஒற்றை எழுத்து ‘பூ’ வில் அவர்கள் நடிப்பது சந்தோஷமாக இருந்தது. பார்க்கும் போதெல்லாம் படத்தில் நடிக்கிற அவர்களின் அனுபவங்கள் குறித்து கேட்பேன். நிறைய சொல்வார்கள். கூட ஒரே அறையில் தங்கியிருந்த அம்மாவுக்கு படத்தில் வெற்றிலை இடித்துக் கொண்டு இருக்கிற காட்சியாம். “எல்லா படங்களிலும் என்னை வெத்தல இடிக்கவே வைக்கிறானுங்க..” என்று அவர்கள் அலுத்துக் கொண்டதெல்லாம் தனியாக ஒரு பதிவு போடக் கூடிய அளவுக்கான விஷயம் கொண்டது. அதுபோல, கிராமத்து பெருசுகளாக நடிப்பவர்கள் எல்லோருக்கும் பெரிய பெரிய மீசைகளை, விதம் விதமாய் வைத்திருப்பார்களாம். அவைகளோடு அந்த மனிதர்களின் படுகிற பாட்டை, அக்கா சொல்லும் போது ரசித்து ரசித்துச் சிரிக்கலாம். சாப்பிடும்போது எல்லா மீசைகளையும் கழற்றி பத்திரமாக வைத்துக்கொள்வார்களாம். இப்படி சின்ன்னச் சின்னதாய்ச் சொல்லிக் கொண்டு இருப்பார்கள்.

படம் வெளியானதும், முதல் நாள் அவர்களுடன் படம் பார்க்க அருப்புக் கோட்டைக்கு அழைத்தார்கள். செல்ல முடியவில்லை. அதில் கொஞ்சம் வருத்தம் அவர்களுக்கு. படம் பார்த்ததும் எனக்கு ஆச்சரியம் தாங்க முடியவில்லை. நாங்கள் எடுத்த காட்சிகளையே பார்த்தது போலிருந்தது. அதுபோலவே வீடு, மகள், விளக்குமாறு, அழுகை என ஜானகியக்கா வந்து கொண்டிருந்தார்கள்.

கொஞ்ச நாளைக்கு முன்னால், ஜானகியக்காவுக்கு அரசு ஊழியர் சங்கமும், எழுத்தாளர் சங்கமும் இணைந்து விருதுநகரில் பாராட்டு விழா நடந்தது. அக்காவைப் பாராட்டி என்னைப் பேச அழைத்திருந்தார்கள். “பூ படத்தில் கதாநாயகிக்கு அம்மாதான், எங்கள் படத்தில் இவர்கள்தான் கதாநாயகி” என்றுதான் பேச ஆரம்பித்தேன். விழா நடந்து முடிந்த பிறகு, அக்கா இதைச் சுட்டிக்காட்டி சந்தோஷப்பட்டார்கள். “சரிக்கா... எங்களையெல்லாம் மறந்துராதீங்க... பிறகு எதாவது கால்ஷீட் கேட்டால் தேதி கொடுக்கணும்” என்றேன். “போங்க தோழர்.... உங்களுக்கு எப்பவுமே கிண்டல்தான்..” சொல்லிக் கொண்டே டவுண் பஸ்ஸைப் பிடிக்க ஒடினார்கள். எங்கள் கதாநாயகி.

 

*

கருத்துகள்

17 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
  1. ஆமா சார் இன்னும் அவுங்க கண்ணுக்குள்ளே இருக்காங்க.

    "ஏண்டீ செத்த வெயில் தாவ வரவேண்டியதுதான்டீ"

    "சீல புதுசாருக்கு எடுத்தயடீ"

    அவர் உச்சரிக்கும் ஒவ்வொரு வச்னமும் இப்போதும் அதே குரலில் ஒலித்துக்கொண்டிருக்கிறது.

    வெகு இயல்பான நடிப்பு. அவரைப் பற்றி பகிர்ந்ததிற்கு உளமார்ந்த நன்றி!

    பதிலளிநீக்கு
  2. பூ படத்தில் மிகுந்த உயிரோட்டமுள்ள நடிப்பு அவர்களுடையது.

    இவர்கள் முகம் சுவரொட்டி விளம்பரத்தில் இல்லை என்ற வருந்தில் என் தளத்தில் படங்களை பிரசுரித்தேன்.

    http://veyilaan.wordpress.com/2008/12/05/poo/

    பதிலளிநீக்கு
  3. வெகு இயல்பான மனிதர்கள்- நல்லா எழுதியிருக்கீங்க...ஜானகி அக்காவிற்கு வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
  4. பூ படத்தில் ஜானகியக்கா நடிப்பு யதார்த்தமானது. இதுக்கு முன்னாடி ஆனந்த விகடனில் கூட அவுங்கள பத்தி செய்தி வந்திருந்தது.

    பதிலளிநீக்கு
  5. உங்களிடம் நடிப்பு பயின்று பூ படத்தில் சிறப்பாக வெளி படுத்தியுள்ளார்

    இது போல நிறைய நடிகர்களை உருவாக்க என் வாழ்த்துகள் .

    சீமானை பற்றிய எனது பதிவு

    http://irumbuthirai.blogspot.com/2009/05/blog-post_09.html

    படித்து விட்டு உங்கள் எண்ணத்தை தெரிவிக்கவும்

    பதிலளிநீக்கு
  6. //ஜானகியக்கா, “ஐயோ, பார்த்து.. பார்த்து..” என்றார்கள்.///

    அருமையான பதிவு!!

    பதிலளிநீக்கு
  7. அருமையான பதிவு,
    அவர்களின் நினைவகளை ஈரத்துடன் பதிவிட்டிருக்கீங்க. அவர்களைப் பற்றி அறிமுத்திற்கும் பகிர்வுக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  8. ஆம்.யதார்த்தமான நடிப்பு அவர்களுக்கு.

    நன்றி :)

    பதிலளிநீக்கு
  9. பூ படத்தை கண்கள் நீர் கோர்த்திருக்கவே பார்த்தேன், மண்குதிரை சொன்ன அந்த ஆரம்பக்காட்சி மற்றும் பல காட்சிகளில் மிக இயல்பாக அதீத அபிநயங்களேதுமின்றி அற்புதமாக நடித்திருப்பார். பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  10. பகிர்விற்கு நன்றி. பூ படம் பார்த்தேன். அனைவரின் நடிப்பும் அருமை. இவரது பெயரே இப்பதான் தெரியும்...

    நன்றி சார்.

    பதிலளிநீக்கு
  11. மண்குதிரை!
    ஆச்சரியமாக இருக்கிறது. அந்த வசனங்களைக்கூட ஞாபகம் வைத்திருக்கிறீர்களே!

    ஜான்பொன்ராஜ்!
    நன்றி.

    வெயிலான்!
    ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. நன்றி.

    சந்தனமுல்லை!
    மிக எளிய மனிதர்கள், மிக இயல்பாக நமக்குள் நிறைந்து விடுகிறார்கள்.

    முத்துலெட்சுமி!
    நன்றி.

    தீப்பெட்டி!
    ஆமாம், நானும் பார்த்தேன். சந்தோஷமாக இருந்தது.

    அரவிந்த்!
    உங்களுடைய பதிவைப் பார்த்தேன். நன்று.

    த.ஜீவராஜ்!
    வருகைக்கும், புரிதலுக்கும் நன்றி.

    போஸ்டன் பாலா!
    நன்றி.

    ஆ.முத்துராமலிங்கம்!
    நன்றி.

    பட்டாம்பூச்சி!
    நன்றி.

    தமிழன் கறுப்பி!
    நன்றி.

    யாத்ரா!
    நன்றி.

    வண்னத்துப் பூச்சியார்!
    நன்றி.

    பதிலளிநீக்கு
  12. (kattuppaduththap patta inaiya inaippu thamizhai thaduththu vittathu, mannikkavum)
    poo padaththil veyilodu varum makalaip paarththu thaay pesum vasanaththil varum karusakkaattu vaarththai "odiyaaraattiyenna?" nanellam chinna vayasil peesi ippozhuthu pesa maranthu pona vaarththai athu. innamum ammavidamum, kiraamaththileye irukkum aatkalidamum mattum ottik kondirukkirathu. innum niraya vaarththaikal irukkirathu ithaip polave. appavin padaippukalil varuvathiyum thandi thedipidiththavathu sekariththu vaikka vendum.
    -Thozhamaiyudan
    Venmani

    பதிலளிநீக்கு
  13. அன்பின் மாதவராஜ்

    குறும்படமும் எடுத்திருக்கிறீர்களா - தங்களின் ம்ழுப் பரிமானம் இன்னும் அறியவில்லை.

    நல்வாழ்த்துகள் - ஜானகி அக்காவினிற்கும் மாதவராஜினிற்கும்

    பதிலளிநீக்கு
  14. I remember her. I was shell shocked look at that character. It was so real!(generally manoramas used to do! thank god) i thought she must me local person! i remember many of her dialogue still! Poo's brother character also very nice! i liked both of their performance. thanks to director. thnx for u to bring them out with a photo/write up!

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!