அகங்காரத் தமிழ்

பேராசிரியர் ச.மாடசாமி தனித்தன்மை வாய்ந்த ஒரு கல்வியாளர், சிந்தனையாளர், நாட்டுப்புறக் கலை ஆய்வாளர், அற்புதமான ஆசிரியர், மகத்தான மனிதநேயமிக்க எளிமையான தோழர். சமச்சீர் கல்வி துவக்கப்படும் வேலையில், பாட நூல் உருவாக்கும் பணி முதன்முறையாக சமூக ஆர்வலர்கள் கைக்குக் கிடைத்தது. அதன் அனுபவங்கள் ஒன்றும் அப்படி நேர்க்கோட்டில் விருப்பமான திசையில் பயனப்படுவதாக இருந்துவிடவில்லை. அதை இங்கு பேராசிரியர் மாடசாமி அவர்களே சொல்கிறார்.

-------------------------

எளிய தமிழ், அலங்காரமற்ற இயற்கையான தமிழ், சகமனிதனோடு நாம் தினசரி பேசிப் பழகும் தமிழ், மதிப்பிழந்து நிற்பது நமது பண்பாட்டின் நேர்மை குறித்த பிரச்சினைகளில் ஒன்று. பாராட்டு மேடைப் பக்கம் திரும்பினால், கொண்டாட்டத் தமிழ்..! கூஜாத் தமிழ்
.தொலைக்காட்சியில், சிதைவுண்ட தமிழ்..! தீவிர இலக்கிய உலகில், முடிச்சு விழுந்து சிக்குண்ட தமிழ்..! பிள்ளைகளின் பாடப்புத்த உலகில் - ஓர் அகங்காரத் தமிழ்..!

தமிழின் மீது உண்மையாகப் பற்று கொண்டவரிடம் இருந்து பல கேள்விகள் பிறக்கின்றன.  கோடிக்கணக்கான சாதாரண மனிதனின் தமிழ் எது? அவனைத் தூக்கி நிறுத்தும் தமிழ் எது ? விரிவான உலகை அவனுக்குப் பிரியமாய் அறிமுகம் செய்யும் தமிழ் எது ? உலகில் கவனத்தை நம் பக்கம் திரும்ப வைக்கும் ஆய்வுத் தமிழ் ஏன் வளரவில்லை..? ஆய்வுத் தமிழைப் பின்னுக்குத் தள்ளி ஆர்ப்பாட்டத் தமிழ் ஏனிப்படி வெளிச்சமும் சத்தமுமாய்த் திரிகிறது..? ஓர் அரசாங்கத்துக்கு இதிலென்ன இவ்வளவு ருசி..?

நானொரு தமிழாசிரியன், பாடப்புத்தகங்களின் வழியே மாணவர்களைச் சந்தித்து வந்தவன். பாடப்புத்தகங்கள் இரு பிழையான அளவு கோல்கள் கொண்டே உருவாக்கப்பட்டு வந்துள்ளன.

ஒன்று - திணிப்பதுதான் கல்வி.!
இரண்டு -கடினமாக இருப்பது தான் தரம்!

பாடப்புத்தகக் குழுவில் இருப்பவருக்குத் தெரிந்ததை அல்லது அவர் விரும்பியதைக் கொட்டத்தான் பாடப் புத்தகம்.!

மாணவரின் மொழி -மாணவரின் விருப்பம் - மாணவரின் உலகம் குறித்துப் பாடப்புத்தகம் கவலைப்பட்டதே இல்லை. பாடப் புத்தகம் -அகங்காரத்தின் வடிவம் ..! ஆசிரிய அகங்காரம், மொழி அகங்காரம், அதிகார அகங்காரம் மூன்றும் இணைந்த வடிவம். இந்த அகங்காரம், தமிழின் மீது ஈர்ப்பு ஏற்பட்டு விடாதபடி காலமெல்லாம் பிள்ளைகளைப் பிரம்பெடுத்துக் துரத்தியிருக்கிறது.

`பல்லுக்கு மெதுவாய்ப் பணியாரம் கொடுப்போம்`என்று தமிழ்நாடு அறிவியல் இயக்கம் பாட்டாக வைத்த கோரிக்கை சாதாரணமானது அல்ல, அது கல்வி உலகில் உயிர்த்துடிப்பு..!

செயல்வழிக் கற்றல் வந்த பின்னர் ஆரம்ப வகுப்புப் பிள்ளைகளுக்கான பாடப்புத்தகங்கள் ஒழிக்கப்பட்டன. அதற்கு முன்னால் இருந்த பாடப்புத்தகங்களைப் பார்க்க வேண்டுமே..! கொடுமை..!

முதல் வகுப்புத் தமிழ்ப்பாடத்தில் அகவை, ஞாலம், நெய்தல், நன்னூல் போன்ற பல சொற்கள் அறிமுகம். முதல்வகுப்பு மாணவனுக்குக் கற்பிக்கிற சொற்களா? இவை? `ஞாலம்` என்ற சொல்லுக்கு அறிவு என்று ஒர் ஆசிரியர் வகுப்பில் பொருள் சொன்னதை நானே கண்கூடாகப் பார்த்தேன்! அகவை என்பது வயதைக் குறிக்கும் சொல் என்பது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்? இந்தச் சொற்களை அறிமுகப்படுத்திய பாடத்திட்டக் குழுவினரே வீட்டிலும் வீதியிலும் பேசாத சொற்கள் இவை. இந்தச் சொற்களைத் திணிப்பதற்குச் சின்னஞ்சிறு பிள்ளைகளின் பிஞ்சு மூளைகள் தானா கிடைத்தன? திணிப்பது அகங்காரம் அல்லவா?

முதல் வகுப்பு புத்தகத்தில் இருந்த மற்றொரு அநீதி `ஆத்திசூடி !` முதல்வகுப்பு மாணவனுக்கான உபதேசம்- அறஞ் செய விரும்பு! குழந்தைக் கல்வியாளர்கள் இதை ஒரு வன்முறை என்கிறார்கள். ஆறு மாதங்களுக்கு முன் மதுரையில் பள்ளி ஆசிரியர்கள் கூட்டத்தில் பேசினேன். அப்போது முதல் வகுப்பு மாணவனுக்கு ஆத்திசூடி தேவையா என்று கேட்டேன். தேவை! தேவை! ஆசிரியர்கள் உரத்த குரல் எழுப்பினார்கள். காரணம் கேட்டேன்.-ரொம்ப எளிமையான முறையில் சொல்லப்பட்ட  அறம் என்றார்.ஓர் ஆசிரியை அவரிடம் -இயல்வது கரவேல் என்றால் என்ன பொருள்? என்றேன். சொல்லச் சிரமப்பட்டார். `கரவேல்` என்ற சொல்லுக்கான பொருள் அந்தக் கூட்டத்தில் விரல் விட்டு எண்ணக்கூடிய ஒரு சிலருக்கே தெரிந்திருக்கிறது. உடையது விளம்பேல் என்ற வரிக்கு ஓர் ஒருமித்த பொருளை  அன்று ஆசிரியர் கூட்டம் தரவில்லை. வீண் குழப்பமே மிகுந்தது. `ஙப்போல் வளை`யும் அப்படித்தான்.! ஆத்திசூடி எளிமையானதும் அல்ல. ஞானத்தின் தொகுதியும் அல்ல தையல் சொல் கேளேல்.! (பெண் பேச்சைக் கேட்காதே) என்று சொன்ன நூல் தான் ஆத்திசூடி.

நியூசிலாந்தில் மாவோரி ஆதிவாசிக் குழந்தைகளுக்குத் தொடக்கக்கல்வி தந்த ஸிவ்வியா என்ற ஆசிரியையின் அனுபவம் இங்கு குறிப்பிடத்தக்கது. தன் விருப்பப்படி கல்வியைத் தொடங்காமல் ஒவ்வொரு மாணவரிடமும் தனித்தனியே உரையாடி ஒவ்வொருவருக்கும் உரிய ஆரம்பச் சொற்களைத் தேடியவர் அவர். ஒரு மாணவிக்கு `அம்மா` ஒரு மாணவனுக்கு `துப்பாக்கி` ஒரு மாணவனுக்கு -`கார்` அவர்களுக்குள் வட்டமிடும் சொற்களைக் கொண்டே அவர்களுக்கான கல்வியைத் தொடங்கினார் ஸில்வியா.

மிகவும் பொறுமையும் அக்கறையும் இருந்தால் மட்டுமே கல்வியில் இப்படிப்பட்ட தொடக்கத்தைப் தரமுடியும்.

இன்றைக்கு முதல் முறையாகச் சமச்சீர்க் கல்வி முதல் வகுப்புத் தமிழ் பாடநூல் பிற்போக்கான பல தடைகளைத் தாண்டி கொஞ்சம் முன்னேறியிருப்பது மகிழ்ச்சியை தருகிறது.

சமச்சீர்க்கல்வி ஆறாம்வகுப்புத் தமிழ்ப்பாட நூல் உருவாக்கத்தில் பங்கேற்றவர்களுள் நானும் ஒருவன் ஆசிரியர்கள் மட்டுமல்ல, எழுத்தாளர்கள், சமூக சிந்தனையாளர்கள் எனப் பல  தரப்பினரும் பாடநூல் உருவாக்கத்தில் பங்கேற்றிருந்தார்கள். பாடநூல் இது முதல் அனுபவம்.

ஆசிரியரின் பிடியைக் கொஞ்சம் தளர்த்தி மாணவரை நோக்கிப் பாடப்புத்தகத்தை நகர்த்துவது புத்தகத் தயாரிப்பின் அடிப்படை நோக்கமாக இருந்தது. பாடப் பொருள், மொழி, இலக்கணம், திறன் என எல்லாமே வகுப்பறையில் ஆசிரியரின் இடம் குறைந்து மாணவரின் இடம் அதிகரிக்க வேண்டும் என்பது புத்தக தயாரிப்பில் உழைத்தவர்களின் விருப்பமாக இருந்தது.

புத்தக உருவாக்கம் கமுக்கமாக நடைபெறவில்லை. அது ஒரு திறந்த மேடையாக இருந்தது. படிக்கவும் கருத்து தெரிவிக்கவும் ஒரு பொது அழைப்பு இருந்தது.
பலரும் வந்து படித்துப் பார்த்துத் தட்டிக் கொடுத்துச் சென்றார்கள் ஆனால், ஒரு சில ஆசிரியர்களின் இருந்து மனத்தாங்கலான ஒரு கருத்து வந்தது. பாடப் புத்தகம் இத்தனை எளிமையாக இருந்தால் ஆசிரியர் எதற்கு? என்று அவர்கள் கேள்வி எழுப்பினார்கள். இன்று புத்தகம் முடிந்து வெளிவந்த பிறகு நோட்ஸ் போடும் நிறுவனத்தார் ஒருவர் என் வீடு தேடி வந்து கேட்டார். `` புத்தகம் இவ்வளவு எளிமையாக இருந்தால் எப்படி நோட்ஸ் போடுவது? இரண்டு கேள்விகளுக்கும் இடையே ஒரங்குல தூரமும் இல்லை.

சமீபத்தில் ஒரு நாளிதழில் ஆறாம் வகுப்புத் தமிழ்ப்பாட நூல் குறித்து மதிப்பிட்டிருந்தவர். நூல் மிக எளிமையாக இருக்கிறது எனக் குறைப்பட்டிருந்தார். `மலிவு விலையில் கூறு கட்டி விற்கப்படும் வாழைப்பழம்` என அவர் அங்கலாய்த்திருந்தார்.ஆசிரியரின் தேவையும், இருந்தால்தான் அது கனமான - தரமான கல்வி என்பது இவர்கள் அபிப்பிராயம்.

தமிழ்நாட்டு வகுப்பறைகளில் மாணவரின் வாசிப்புத் திறன் பலவீனமாக இருக்கிறது என்பதுவே, சில மாதங்களுக்கு முன் வெளியான `அஸர் அறிக்கையில் கிடைக்கும் உண்மை. சில ஆண்டுகளுக்கு முன் நடந்த அறிவொளியின் போதும் இதே அனுபவம் தான். ஆறாம் வகுப்பில் படித்த மாணவனுக்கு அறிவொளிப் பாடத்தை வாசிப்பது சிரமமாக இருந்தது. அவன்தான் கிராமங்களில்  எங்களுக்குக் கிடைத்த தொண்டன்!
எளிமை என்பது எவருடைய தனிப்பட்ட விருப்பமும் அன்று, அது காந்தத்துண்டாய் ஈர்க்கப்படவும், இது அத்தியாவசியத் தேவை.

ஆறாம் வகுப்புப் பாடநூல் உருவாக்கத்தின் இறுதிக் கட்டத்தில் சிறுசிறு  தடைகள் முளைக்க ஆரம்பித்தன. பிழைகளைத் திருத்த வந்தோர் திருத்தங்களை வலியச் செய்தனர். அகராதி அகரமுதலி ஆனது. பெரியார் ராமசாமி பெரியார் இராமசாமி ஆனார்.ர,ல , இரண்டையும் இன்று மொழி முதல் எழுத்துக்களாக  கொள்வதில் தடையே இல்லை என்று மொழியியல் அறிஞர்கள் பல ஆண்டுகளாகச் சொல்லி வருகின்றனர். பிழை திருத்துபவர்கள் நவீன உரையாடல்களைக் காதில் வாங்காதவர்கள்.!

மாணவர்களை வகுப்பறையில் பேசவைக்கும் நோக்கில் துணைப்பாடமாக வைக்கப்பட்டிருந்த நாட்டுப்புறக் கதைகள் ஒவ்வொன்றாய்ப் பறிபோயின.நாட்டுப்புறக் கதை தமிழ்ப்பண்பாட்டின் அடையாளம் இல்லையா? இல்லையாம்..! வடமொழி கலவாமல் பேசுவதும் எழுவதும் தான் தமிழ்ப்பண்பாடாம்..! கேலிக்கூத்து..!
வேரின் துடிப்பு`என்ற அற்புதமான நாட்டுப்புறக் கதையை நீக்கி விட்டு விவேகானந்தரைப் பாடமாக வைத்தார்கள்..! பாடப்புத்தகம் இன்னும் கனமாக வேண்டும் என்பதற்காக 15 ஆக இருந்த திருக்குறள் பாடல்களை 20 ஆக ஆக்கினார்கள். எல்லாவற்றுக்கும் மேலான, `நாட்டுப்புறம்` என்று வருகிற இடத்தில் எல்லாம், நாட்டுப்புரம் எனத் திருத்தி, கடுமையான உழைத்து உருவாக்கப்பட்ட இப்பாடப்புத்தகத்துக்குத் தீராத களங்கத்தை உண்டு பண்ணினார்கள்.

இத்தனைக்குப் பிறகும் மாணவர்கள் விரும்பிக் கையிலெடுக்கும் விதத்தில் - ஆர்வமுடன் வாசிக்கும்படி - சமச்சீர்க்கல்வி ஆறாம்  வகுப்புத் தமிழ்ப் பாடப் புத்தகம் வந்திருக்கிறது. தமிழ்ப்பாடப் புத்தகம் இவ்வளவு அழகான தோற்றத்துடன். இதுவரை வந்ததும் இல்லை. மாணவர்களை நோக்கிய அற்புதமான நகர்வு இது.

ஆனால், நகர்வு தொடருமா? தடுத்து நிறுத்தப்பட்டு,ஆசிரியர் கையிலேயே புத்தகம் அடைக்கலம் ஆகுமா? என்பதெல்லாம் அடுத்தடுத்த பாடப்புத்தகங்கள் வரும் போது தெரியும்..!

நன்றி: செம்மலர் ஜூலை இதழ்

கருத்துகள்

13 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
  1. மாணவரின் மொழி -மாணவரின் விருப்பம் - மாணவரின் உலகம் குறித்துப் பாடப்புத்தகம் கவலைப்பட்டதே இல்லை. // உண்மைதான்... இன்றைய கல்விமுறை அடிமைகளை உருவாக்குகிறதே மனிதர்களை இல்லை...

    பதிலளிநீக்கு
  2. //தமிழ்நாட்டு வகுப்பறைகளில் மாணவரின் வாசிப்புத் திறன் பலவீனமாக இருக்கிறது என்பதுவே, சில மாதங்களுக்கு முன் வெளியான `அஸர் அறிக்கையில் கிடைக்கும் உண்மை// மறுக்க முடியாத ஒன்று. பள்ளியில் ஒரு முறை வாசித்து, மனப்பாடம் செய்து, எழுதிப்பார்த்து விட்டால், பிறகு ஏன் மீண்டும் அதை வாசிக்க வேண்டும். அப்படி இருக்கையில், வாசிக்கும் திறன் எப்படி வளர்க்கப்படும். மேலும் பாடப்புத்தகங்களை தவிர்த்து, பிற புத்தகங்கள் வாசிக்கும் பழக்கம், அந்தப் பருவத்தில் எத்தனை பேருக்கு இருக்கும் என்பதுவும் கேள்விக்குறிதான்.

    பதிலளிநீக்கு
  3. ஒன்று - திணிப்பதுதான் கல்வி.!
    இரண்டு -கடினமாக இருப்பது தான் தரம்!
    பாடப்புத்தகக் குழுவில் இருப்பவருக்குத் தெரிந்ததை அல்லது அவர் விரும்பியதைக் கொட்டத்தான் பாடப் புத்தகம்.!//

    இது தான் உண்மையும் கூட. நல்ல ஒரு விசயத்தை பகிர்ந்ததர்க்கு நன்றி.வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  4. பாட நுல்களை உருவாக்கும் பணியென்பது மிகச்சிறப்பு வாய்ந்தது. அப்பணி ஆசிரியர்கள் கையில் மட்டுமில்லாம் சமூக ஆர்வலர்கள் கையிலும் கிடைத்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. ஆயினும் அதில் இவ்வளவு இடையூருகளை உருவாக்குபவர்களை என்ன செய்வது.

    நல்ல பகிர்வு. நன்றி.

    பதிலளிநீக்கு
  5. நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை.நேரடியாக பொருள் தருவதைவிட்டு சுற்றி வளைத்து புரிந்துகொள்ளுமாறு இருப்பதால்தான் பலர் தமிழ் படிக்க சிரம்ப்படுகிறார்கள்.

    பதிலளிநீக்கு
  6. நம்புவோமாக...

    பதிலளிநீக்கு
  7. நல்லா பதிவு .........வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  8. நூற்றுக்கு நூறு உண்மை சார். நான் கிராமத்து பள்ளியில் படித்தவன். எனது தாத்தா தமிழ் ஆர்வலர். நகரத்தில் உள்ள அவர் வீட்டில் வளர்ந்து, பின் கிராமத்து பள்ளியில் படித்ததால் எனக்கு பெரும் சிரமம் இல்லை. ஆனால் என்னுடன் படித்த மாணவர்கள் வயல்வேலைக்கும் செல்ல வேண்டும், படிக்கவும் வேண்டும். பள்ளியில் பாடத்தின் கடினத்தன்மையும் , ஆசிரியர்களின் கண்டிப்பும் அவர்களை கல்வி என்பது வேப்பங்காய் ஆக்கியது. ஆறாம் வகுப்பில் தேறாத மாணவர்கள் அனைவரும் ஏழாம் வகுப்புக்கு வரவில்லை. தெரிய மாணவர்கள் சிலரும் அரையாண்டு தேர்வுடன் நின்று விட்டார்கள். கிராமத்து பெற்றோர்களுக்கு பிள்ளைகளை படிக்க வைக்க ஆசை இருந்தாலும் , கல்வியின் கடினத்தன்மை, ஆசிரியர்களின் கண்டிப்பும் பிள்ளைகளை பயங்கொள்ள வைக்கிறது. படிக்கும் காலத்தில் எத்தனை நண்பர்களை இதனால் இழந்தேன் என்பது எனக்குத்தான் தெரியும். சத்துணவு மட்டும் இல்லையென்றால் கிராமத்துப்பள்ளிகள் மாணவர்கள் இல்லாமல் இழுத்து மூடவேண்டி இருக்கும் என்பதே உண்மை. இன்றும் கிராமங்களில் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்புவது பிள்ளைக்காவது சுடுசோறு கிடைக்குமே என்றுதான்.

    பதிலளிநீக்கு
  9. //ஒன்று - திணிப்பதுதான் கல்வி.!
    இரண்டு -கடினமாக இருப்பது தான் தரம்!
    பாடப்புத்தகக் குழுவில் இருப்பவருக்குத் தெரிந்ததை அல்லது அவர் விரும்பியதைக் கொட்டத்தான் பாடப் புத்தகம்.!
    //

    உண்மை...

    சிறந்த பதிவு...தற்போது கல்வியின் நோக்கம் அறிவை வளர்ப்பதாக இல்லாமல், வியாபாரமாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  10. நல்ல பகிர்வு.
    இதைப் போன்ற பகிர்வுகளையும், அருமையான பதிவுகளையும் நிறைய எதிர்பார்க்கிறோம்.

    பதிலளிநீக்கு
  11. கல்வி,பாடநூல்கள் குறித்த அருமையான,சரியான சிந்தனைகள்,சிறந்தவற்றை நடைமுறைக்குக் கொண்டுவருவது எப்போதும் போராட்டம்தான்.பாட நூல்கள் மாணவரை மட்டுமே மையமாகக் கொண்ண்டு உருவாக்கப் படவேண்டும் என்பதைப் பல ஆசிரியர்களும் கல்வியாளர்களும் புரிந்து கொள்ள மறுக்கிறார்கள்.

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!