மாதவராஜ் பக்கங்கள் - 23

இந்தக் காலைதான் நிதானமாக வந்திருக்கிறது. எப்போது விடிந்தது, எப்போது இருட்டியது என அறியாமல் பத்துப் பனிரெண்டு நாட்களாக பைத்தியம் பிடித்துக் கிடந்த நேற்று வரையிலான தருணங்கள் ஒரு பயணத்தின் அனுபவமாய் சுகமாய் அசைந்து கொண்டு இருக்கின்றன நினைவுகளில். தூங்காமல், நேரத்திற்கு சாப்பிடாமல், உத்தபுர மக்களின் அசைவுகளை மானிட்டரில் பார்த்து பார்த்து, தேர்ந்தெடுத்து, அடுக்கி, கோர்த்து, ஒருவழியாக ஆவணப்படமாக உருப்பெற்று விட்டது.  இரண்டு வருடங்களாக உத்தப்புரத்தில் நடந்த முக்கிய சம்பவங்களை அவ்வப்போது எடுத்து வைத்திருந்த இருபத்தைந்து  மணி நேரத்துக்கும் மேலான காட்சிகளை, நாற்பது நிமிடங்களுக்குள் நிறைத்துச் சொல்லுவது என்பது கடுமையானதாயிருந்தாலும் சுவராசியமானதுமாகும். இடையில்  மாறி, மாறி மதுரைக்கும், சென்னைக்கும், நெல்லைக்குமென பயணங்கள் வேறு. மூளையும், உடலும் கொதித்துப் போனாலும்,  சினிமா என்பது அனுபவித்து வேலை பார்ப்பதற்கு எவ்வளவு அருமையான இடம் என்றே தோன்றுகிறது.

‘வரும் 28ம் தேதி புதுக்கோட்டையில் நடைபெற இருக்கும் தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் முதல் மாநில மாநாட்டில் இந்த ஆவணப்படம் வெளியாக இருக்கிறது, முடித்துத் தாருங்கள்’ என எழுத்தாளர் தமிழ்ச்செல்வனும், சி.பி.எம் மாநில செயற்குழு உறுப்பினர் தோழர்.சம்பத் அவர்களும் சொல்லியதன் பேரில் இந்த வேகம் காட்ட வேண்டியதாகிவிட்டது. சி.பி.எம் அகில இந்தியப் பொதுச்செயலாளர் தோழர்.பிரகாஷ் காரத் அவர்கள் இந்த மாநாட்டிற்கு வருகிறார் என்பது கூடுதல் கவனத்தையும், சிறப்பையும் பெறுகிறது. கடந்த சில வருடங்களில் தமிழிகத்தில் தீண்டாமைக்கு எதிரான போராட்டங்களை மேலும் கூர்மை படுத்தியதில் தீண்டாமை ஒழிப்பு முன்னணிக்கு ஒரு தனித்த பங்கு இருக்கிறது. தலித் மக்களை தனிமைப்படுத்தி உத்தப்புரத்தில் எழுப்பப்பட்ட சுவரை அகற்றக் கோரி நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் இரண்டாயிரம் பேர் பங்கு கொண்டதும், அதில் ஆயிரம் பேருக்கு மேல் பிறன்மலைக் கள்ளர் வகுப்பைச் சார்ந்தவர்களாய் இருந்ததும் நிச்சயம் சாதாரண விஷயமல்ல. இப்படியான காரியங்களை ஆவணப்படுத்துவதில் சந்தோஷமும், நிறைவும் இருக்கிறது, அது எவ்வளவு பெரும் உழைப்பைக் கோரினாலும்.

திருநெல்வேலியில், நண்பர் முனிஷ்தான் எடிட் செய்தார். பகலில் அவரை உட்கார வைப்பது சிரமம். ஷூட்டிங், மீட்டிங் என்று வெளியே சென்று விடுவார். அப்படியே இருந்தாலும் போன்கால்கள் தொடர்ந்து வந்து இடையூறு செய்யும். அந்நேரங்களில், அவரது உதவியாளர்களில் சிலர், தேவையான காட்சிகளை வெட்டி, பிராஜக்டில் சேமித்து வைப்பார்கள். அதில் விசு என்ற பையன் இந்த நாட்களில்  நெருக்கமாகிவிட்டான். தனக்கு அடுத்த வாரத்தில் திருமணம் என்று சொல்லி, “கண்டிப்பாய் வரணும் சார் நீங்க” என்று அழைத்தான். அவன் கண்களில் கனவுகள் இருந்தன. அடிக்கடி உட்கார்ந்திருந்த இடத்திற்கு அவனை இழுத்து கொண்டு வந்து சேர்க்க வேண்டியிருந்தது.

munish 

முனிஷ்

இரவில்தான் முனிஷ் கிடைப்பார். அருகில்  உட்கார்ந்து, காட்சிகளைச் சொல்லிக்கொண்டு இருப்பேன். பிரிமியரின் டைம் லைனில் காட்சிகளை கோர்த்துக்கொண்டு இருப்பார். அன்புத்தம்பி பாலு அருகில் உட்கார்ந்து அவ்வப்போது டீக்களோ, பழங்களோ தருவித்துக்கொண்டு இருப்பான். ஒளிப்பதிவாளராயிருக்கும் பிரியா கார்த்தி முடிந்தவரையில் கூட உட்கார்ந்து பார்ப்பான். ஆனாலும் இரண்டு மணிக்கு மேல் அசந்து விடுவான். முனிஷ் என்னை பரிதாபமாக பார்த்து, “சார், ஒரு இரண்டு மணி நேரம் தூங்கிவிட்டு ஐந்து மணிக்கு எழுந்து வேலையைத் தொடர்வோம்”  என்பார். நான் பதிலே சொல்லாமல், அடுத்த காட்சி எது என்பதை விளக்கிக் கொண்டு இருப்பேன். ஒருநாள் தாங்க முடியாமல் “இந்த பாவம் உங்களை சும்மா விடாது” என்பார். விடிகாலை நான்கு அல்லது ஐந்து மணிக்கு மேல், மெயின் ரோட்டுக்குச் சென்று டீ குடித்துவிட்டுத் திரும்புவோம். சகுந்தலா ஓட்டல் தாண்டி, கொஞ்சம் தூரத்தில் தாமிரபரணியின் தண்ணீர் திட்டுக்கள் பளபளத்துக் கிடக்கும்.

balu
பாலு

‘இந்தக் காட்சி வேண்டும்’, ‘இந்தக் காட்சி தேவையில்லை’ போன்ற  விவாதங்களும் கூடவே வரும். எடிட் செய்வது மட்டும் தன் பணி என்றில்லாமல், ஆலோசனைகளையும், சந்தேகங்களையும் முன்வைத்து செழுமையாக்குவதில் முனிஷ் கெட்டிக்காரர்தான். இந்த ஈடுபாடுதான் அவரை வளர்த்துக்கொண்டு இருக்கிறது. பிரியா கார்த்தி, இந்த பனிரெண்டு நாட்களாக தன் ஸ்டூடியோவை, குடும்பத்தை மறந்து போயிருந்தான். சென்னக்கு சென்று இருக்கும் அம்முவும், என் குழந்தைகளும் போனில் பேசும்போது தவிப்பாய் இருக்கும். ஒரே டிரஸ்ஸை போட்டுக்கொண்டு பாலு அலைந்து கொண்டு இருந்தான். படத்தின் காட்சிகளும், சத்தங்களுமே சிந்தனையை அடைத்துக்கொண்டு இருந்தன.

அந்த விஷயத்தைச் சொல்லவில்லை, அந்த சம்பவத்தை காட்சிப்படுத்தவில்லை, அவரது குரல் சரியாக கேட்கவில்லை என்கிற குறைபாடுகள் இம்சை செய்தன. இன்னும் படத்தை சிறப்பாய் செய்து இருக்கலாம் என்பது உள்ளுக்குள் ஒடிக்கொண்டே இருந்தது. எதையும் சரி செய்வதற்கு நேரமில்லை. திங்கட்கிழமைக்குள் படத்தை முடித்து மாஸ்டர் காப்பியை சென்னைக்கு அனுப்பியாக வேண்டியிருந்தது.

karthi
பிரியா கார்த்தி

நேற்று காலையில் எடிட்டிங் முடிந்து, டைட்டில் அடித்து, rendering  கொடுத்து, டி.வி.டியாக மாற்றும் நேரம் அப்பாடா என்றிருந்தது. பிரியா கார்த்தி உடல்நலம் கெட்டு ஒரு மூலையில் சுருண்டு கிடந்தான். வயிற்றுப் போக்கும், வாந்தியுமாய் இருந்தது. அருகிலிருந்த ஆஸ்பத்திரிக்கு கூட்டிச் சென்றோம். ஒரு கல்யாண வீட்டில் வீடியோ எடுக்க வேண்டி இருக்கிறது எனச் சொல்லி முனிஷ் புறப்பட்டுச் சென்றார். வெளியில் வெயில் அலை அலையாய் மிதந்து தகித்தது. பிரியா கார்த்திக்கு டிரிப்ஸ் ஏறிக்கொண்டு இருந்தது. என் கையில் உத்தப்புரத்தின் மாஸ்டர் காப்பி அப்போது இருந்தது.

கருத்துகள்

16 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
  1. பதிவு எதுவுமே வராத போதே ஏதோ வேலை என்றே ஊகித்தேன். எங்களுக்கும் பார்க்க கிடைக்குமா சார்

    பதிலளிநீக்கு
  2. எல்லா தடைகளையும் தாண்டி வெற்றி. வாழ்த்துக்கள் சார் for ur perseverance .பிரியா கார்த்திக் விரைவில் நலம் பெறட்டும்

    பதிலளிநீக்கு
  3. அன்புள்ள மாதவராஜ்,
    வணக்கம். தங்களது 'இது வேறு இதிகாசம் ' பாப்பாபட்டி கீரிப்பட்டி பற்றிய அற்புதமான பதிவாக வெளி வந்திருந்தது. அதே போல் இந்தப்படைப்பும் உத்தப்புரம் நிலைமையை உலகுக்கு உணர்த்தட்டும்.இந்த குறும்படப்பணிகளில் தங்கள் குழுவினரின்'மாரத்தான்' பணிகள் பாராட்டத்தக்கது.போற்றத்தக்கது.

    பதிலளிநீக்கு
  4. wishes for your project.

    But I dont think communist parties have strongly raised their voices on castisms, inequalities when they were alliances with DMK & AIADMK.

    Ideally when CPI & CPIM had alliances with ADMK they should have stronly objected Jayalaitha amma not to have allaicnes with Moovendar munnanai, fprward block Santhanam ani, John Paandiyan party etc.

    பதிலளிநீக்கு
  5. வாழ்த்துக்கள் உங்கள் முயசிக்கு, உங்கள் உழைப்புக்கு நன்றிகள் , பாராட்டுக்கள் உங்கள் குழுவினர்க்கும்.

    ஆனால் எதார்த்த உண்மையை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
    பிரகாஷ் கரத், தீ ராஜா, தா பாண்டியன், நல்ல கண்ணு, பால பாரதி, லிங்கம் போன்றோர், தேர்தல் கூட்டணி போது சௌகர்யமாக தீண்டாமை, ஜாதிய பாகுபாடு போன்றவற்றை மறந்து விடுகின்றனர்.

    உண்மையான அக்கறை இருந்தால், கூட்டணியில் ஜாதிய மத கட்சிகளுக்கு இடம் இருக்க கூடாது என்ற நெருக்கடியை கம்யூனிஸ்ட் கட்சிகள் கொடுக்க வேண்டும். அப்படி பண்ணுவது இல்லையே. பல முறை கூட்டணியில் பார்வர்ட் ப்ளாக், ஜான் பாண்டியன் , கிறித்துவ முன்னணி மூவேந்தர் முன்னணி, வன்னியர் முன்னணி, போன்ற கட்சிகள் இருக்கும் கூட்டணியில் இருந்து உள்ளனரே.

    எனவே தான் இந்த மாதிரி மாநாடு, ஊர்வலங்கள், ஆவணப் படங்கள், நாடகங்களில் என்னை போன்ற சாமானிய வாக்களர்களுக்கு நம்பிக்கை இல்லை.

    அழகிரி, மிசா பாண்டியன், மானமிகு குஷ்பூ வே பரவா இல்லை என்ற மனோ நிலைக்கு வந்து விட்டோம்.

    பதிலளிநீக்கு
  6. Now I understood why there were no posts from you recently. Your last Post was on May 13th.

    I really appreciate the effort you have put. My native is Sattur (Padanthal). Currently I live in Chennai.

    I wanted to meet you sir when I come to Sattur.

    பதிலளிநீக்கு
  7. எங்கடா ஆளை காணோமே என்று இருந்தது. பிறகு நேற்றுதான் காமராஜிற்கு அழை பேசி தெரிந்து கொண்டேன்.

    முயற்சிக்கு வாழ்த்துகள் மாது!

    உதவிய தோழர்களுக்கும் அன்பு.

    பதிலளிநீக்கு
  8. வாழ்த்துக்கள் சார். பிரியா கார்த்தி அண்ணன கேட்டதா சொல்லுங்க.

    பதிலளிநீக்கு
  9. வாழ்த்துகள் மாது சார்

    ஒரு கதை போல துவக்கி முடித்திருக்கிறீர்கள்

    நண்பர் நலம் பெறட்டும்

    பதிலளிநீக்கு
  10. கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக பதிவு எதுவும் இல்லையே என்று பார்த்துக்கொண்டிருந்தோம்.இப்போதுதான்காரணம் தெரிகிறது.கடின உழைப்புக்கும் முயற்ச்சிக்கும் பாராட்டுக்கள்.ஆவணப்படத்திற்கு வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
  11. அப்போ, 28ம் தேதி புதுக்கோட்டைக்கு வந்தா உங்களைப்பாக்கலாமா?

    பதிலளிநீக்கு
  12. Vazthukkal. Hope all turns out well, including for people of Uthapuram.

    பதிலளிநீக்கு
  13. ஒருவாரமாகப் பதிவு எதுவும் வரவில்லையே என நினைத்தேன்... மகள் பன்னிரண்டாம் வகுப்புப் படிப்பதாக முன்பு ஒரு பதிவில் படித்த நினைவு... மாதவராசு வலைப்பூவில் ஏதும் புதிதாக இல்லையே என நண்பன் கேட்டபோது கூட 'மே மாசம்... எங்காவது குடும்பத்துடன் சுற்றுலா போய் இருப்பார்' என்று சொன்னேன்.. இப்போது தான் தெரிகிறது... உள்ளபடியே உயர்ந்து நிற்கிறீர்கள்... பாராட்டுகள்... இயன்றால் குறும்படத்தை இணையத்தில் ஏற்றுங்கள்... (உடல்நலத்தையும் குடும்பத்தையும் பார்த்துக்கொள்ளுங்கள்)

    பதிலளிநீக்கு
  14. தூங்காமல் கொள்ளாமல், கடும் வேலைக்கு பிறகு குடிக்கும் அந்த அதிகாலை டீ தான் எத்தனை சுவையானது :)

    படத்திற்கு வாழ்த்துக்கள்..

    பதிலளிநீக்கு
  15. The "HISTORY "will remember you ever..This is the field where all leftists so far totally failed.They never documented many important things of history.you have done.Congrats J.M. My sweet kisses to you kanna

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!