சினிமா என்னும் மொழி

உயரமான இடத்திலிருந்து கீழே பார்க்கும்போது லேசாய் தலை சுற்றுவதையும், உள்ளங்காலில் குறுகுறுக்கும் அதிர்ச்சியையும் உணர முடிந்த மனிதர்களுக்கு ஒரு காட்சியை  இங்கு நினைவுபடுத்துகிறேன். அல்லது அறிமுகப்படுத்துகிறேன்.

பாலத்திலிருந்து நீட்டி வைக்கப்பட்டு இருக்கும் அந்தப் பலகையின் மீது இரண்டு பூட்ஸ் கால்கள் தெரிகின்றன. அதற்கு வெகு கீழே ஆறு ஓடிக்கொண்டு இருக்கிறது. எங்கோ சில பறவைகளின் சத்தம் கேட்கிறது.

கதிகலக்கத்தை தந்தபடி, இப்படியொரு கோணத்திலான காட்சி திடுமென ஞாபகத்தில் வந்து செல்கிறது. படம் பார்த்தால் அல்லது பார்த்திருந்தால் அந்த பூட்ஸ்களுக்குரிய மனிதன், கால்களும், கைகளும் கட்டி வைக்கப் பட்டு நிற்பவன் என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும். தூக்குக் கயிற்றின் முடிச்சு அவனது கழுத்தை நெறிக்கத் தயாராக இருப்பது தெரிந்திருக்கும். அவன் நின்று கொண்டு இருக்கும் பலகையின் இன்னொரு முனையை, இராணுவ உடைக்காரன் ஒருவன் அழுத்திக் கொண்டு இருப்பதும் ஏற்கனவே தெரிந்திருக்கும். அவன் அதை தளர்த்தினால் பலகையின் இன்னொரு முனை விழும் என்பதும், அதில் நின்றுகொண்டு இருக்கும் மனிதன் சரிந்த கழுத்தோடு அந்தரத்தில் ஆற்றுக்கு மேலே தொங்கிக்கொண்டு இருக்கப் போகிறான் என்பதும் புரிந்திருக்கும்.

கண்களை அவன் இறுக்க மூடுகிறான். மரணத்தின் கணங்கள் பேசத் துவங்குகின்றன பார்வையாளனுக்குள். ஒரு மரத்தினடியிலிருந்து அன்பு ததும்ப ஒரு பெண் கைகள் நீட்டி எதிர்வருகிறாள். அவளுக்குப் பின்னால் புல் விரிந்த தோட்டத்தில் ஒரு சிறுமி ஊஞ்சலாட, ஒரு சிறுவன் ஓடிக்கொண்டு இருக்கிறான். திரும்பவும் அவன் கண்கள் திறக்கின்றன. வாட்சின் டிக் டிக் சத்தம் பெரிதாக நிசப்தத்தில் கேட்கிறது. கண்ணீர்க் கோடுகள் நீள்கின்றன. சினிமா என்னும் மொழியில் காட்சிப்படுத்தப்பட்ட கதையொன்று இப்படியாக அந்த வனாந்தரத்தில் நிகழ்கிறது.

An Occurance at owl Greek bridge  என்னும் குறும்படத்தில் வருகிற ஒரு காட்சிதான் மேலே குறிப்பிட்டது. இன்றும் மிக முக்கியமான படமாக மதிக்கப்படுகிறது. சினிமா குறித்து தீவீரமாகப் பேசப்படும் போதெல்லாம் இந்தப் படமும் நினைவுகூறப்படுகிறது. சினிமா குறித்த பட்டறைகள், வகுப்புகளிலெல்லாம் இந்தப் படம் நிச்சயம் முதல் நாளிலேயே திரையிட்டுக் காண்பிக்கப்படுகிறது. குறும்படத்திற்கான இலக்கணம் போல இருப்பதாக முக்கியமான பலர் முன்வைக்கிறார்கள்.

அம்புரோஸ் பியர்ஸ் என்னும் ஆங்கில எழுத்தாளரின் புகழ்பெற்ற கதை இது. அமெரிக்க உள்நாட்டுப் போரின் போது நடைபெற்ற சம்பவமாக சொல்லப்படுகிறது. ஒற்றனென கைதுசெய்யப்பட்ட பெய்ட்டன் ஃபர்க்கார் என்பவரை தூக்கில் போடும் காட்சியிலிருந்து ஆரம்பிக்கிறது. 1939ல் சார்ல்ஸ் விடோர் என்பவரது இயக்கத்திலும், 1959ல் ஹிட்சாக் தயாரிப்பிலும் இருமுறை திரைப்படமாக்கப்பட்டிருந்தாலும் 1962ல் இந்தப் படம் ராபர்ட் என்ரிகோ என்னும் பிரெஞ்சு இயக்குனரிடமிருந்து வெளியானபோதுதான் அனைவரின் கவனத்தையும், பாராட்டுதல்களையும் பெற்றது. ஏராளமான விருதுகளையும் பெற்றது. எழுதப்பட்ட கதையைக் காட்டிலும் சிறப்பாக வந்திருப்பதாக மதிக்கப்படுகிறது.

மரணத்தின் வாயிலில் நிற்கிற, ஆரம்பத்தில் சொன்ன காட்சியை விடவும் அழுத்தமான, அதிர்வுகள் அளிக்கக் கூடிய எத்தனையோவற்றை இதுவரை சினிமாக்களில் பார்த்திருக்கலாம். தப்பித்து ஆற்றில் நீச்சலடிப்பவனைச் சுற்றி நின்று துப்பாக்கியால் சுடும் காட்சிகளை பார்த்திருக்கலாம். எங்கோ ஆற்றின் கரையில் ஒதுங்கி, மயங்கி, டுயட் பாடி, பிறகு எழுந்திரிக்கும் நாயகர்களை பார்த்திருக்கலாம். காடுகளுக்குள் மூச்சிரைக்க ஓடுவதையும்  பார்த்திருக்கலாம். அவையெல்லாமே நம் நினைவுகளில் வாழ்வதில்லை. வந்ததும் தெரியாமல், போனதும் தெரியாமல் கழிந்துதான் போயிருக்கின்றன. இந்தப் படம் வாழ்க்கை முழுவதும் உங்கள் கூடவே வரும்.

அப்படியென்னதான் என்று நினைப்பவர்கள், இங்கே முதலில் படம் பாருங்கள். பிறகு பேசுவோம்.

கருத்துகள்

4 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
  1. சில படங்கள் மனசை விட்டு போகாது
    எனக்கு ரேயின் பதேர் பாஞ்சாலி.. அபூர் சன்சார் அபராஜிதா.. இந்த்க் குறும் படமும் மனசைக் கவ்வுகிறது..

    பதிலளிநீக்கு
  2. In late seventies FTI.Pune announced Film appriciatin course.Th.Mu.Ye.Sa. patron K.M sent me for the course.Dr.Satish Bahadur,Dr.Syamala Vanarase.Director.Koul and others were teachers.About ioo films were shown.In short film category "occurence.."was shown. The short story was based on the theory "streem of consiousness".The dying mans split second thought is visualised and elongated for more than 25 minutes. Mathavji! you are raising the level of bloggers...fine..kashyapan

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!