சினிமா பீரங்கிகளும், பிளாக்கர் குண்டூசிகளும்!

”அவன் பீரங்கிகளோடு வர்றான். நம்ம கையில குண்டூசி வைத்திருக்கிறோம். இதை வைத்து அவனை எப்படி எதிர்க்க முடியும்” என்று நண்பர் ஒருவர் சினிமா குறித்து பேசிக்கொண்டு இருக்கும்போது ஒருதடவை ரொம்பவே வருத்தப்பட்டுச் சொன்னார். நம்மால் பேசத்தான் முடியும், அவர்கள் கையில் அந்த ஆகப்பெரும் மீடியா இருக்கிறது  என்ற விரக்தியில் வந்த வார்த்தைகள் அவை. இன்று அந்த குண்டூசி பீரங்கியை மிரட்டிய கதை ஒன்று நடந்திருக்கிறது! முதலில் இந்தச் செய்தியைப் படியுங்கள். அப்புறமாக நாம் பேசலாம்.

 

பிளாக் என்று சொல்லப்படும் வலைப்பூக்கள் கணிசமான வாசகர் வட்டாரத்தை கொண்டிருக்கிறது. இங்கே எழுதப்படும் சினிமா விமர்சனங்கள் பற்றிதான் இப்போது பெரும் கவலையோடு பேச ஆரம்பித்திருக்கிறார்கள் திரையுலகத்தில். சமீபத்தில் வெளிவந்த ஒரு மாபெரும் பட்ஜெட் படத்தை கிழிகிழியென்று கிழித்துவிட்டார்கள் இந்த பிளாக் எழுத்தாளர்கள். இவர்களின் விமர்சனத்தை பார்த்தால், ஒரு சீனுக்கு கூட தகுதியில்லாத படம் போலிருக்கிறது என்ற எண்ணமே எழும். ஆனால், நீளம் என்ற ஒரு குறையை தவிர கவலைப்படுத்துகிற மாதிரியான படம் இல்லை இது. அப்படியானால் இவர்கள் ஏன் இப்படி எழுதி கிழிக்க வேண்டும்?

 

அநேகமாக எல்லா படத்தையும் இப்படிதான் கிழித்து தொங்கப் போடுகிறார்கள் இந்த வலைப்பூக்காரர்கள். எங்கோ ஒரு மூலையில் உட்கார்ந்து கொண்டு உதிரத்தை சிந்தி படம் எடுக்கும் படைப்பாளிகளையும், கோடி கோடியாக கொட்டிவிட்டு தவிக்கும் தயாரிப்பாளர்களையும் பீதிக்குள்ளாக்குகிற இவர்கள் கொஞ்சம் மனிதாபிமானத்தோடு விமர்சனங்கள் எழுத வேண்டும் என்பதே நமது வேண்டுகோள்.

 

ஒன்றுக்கும் உதவாத படங்களை கிழித்தால் கூட பொறுத்துக் கொள்ளலாம். பிரமாண்டம், நேர்த்தி, இசை, ஒளிப்பதிவு என்று எதிலும் குறைவைக்காத படத்தையெல்லாம் கூட ஒரே தராசில் வைத்து பார்ப்பதுதான் பெரும் சோகம். இனியாவது யோசியுங்கள் நண்பர்களே...

 

சமீபத்தில் வந்த சில படங்கள் குறித்து பிளாக்குகளில் எழுதப்பட்ட விமர்சனங்கள் தமிழ்த்திரையுலகத்தை கதிகலக்கியிருப்பதாக tamilcinema.com என்னும் இணையதளம் ரொம்பவும் வருத்தப்பட்டு தலையங்கத்தில் எழுதியிருப்பதுதான் இது. நமது பதிவர் அத்திரி அவர்கள் அதனை அப்படியே தனது பதிவில் எடுத்துப் போட்டு, ‘கொஞ்சம் பாத்து எழுதுங்க மக்களே” என்று பொத்தாம் பொதுவாய் ஒரு வரியில் சொல்லியிருக்கிறார்.

 

இந்தச் செய்தியைப் படித்ததிலிருந்து சந்தோஷமாகவும், நமது பிளாக்கர்களைப் பார்க்க பெருமையாகவும் இருக்கிறது.அழுகிப்போன, குப்பையான படங்களைத் தந்துவிட்டு, ’டாப் டென்’னில் தொடர்ந்து முதலிடங்களை வைத்துக்கொள்கிற இவர்களது ஜம்பமும் அழுகுணித்தனங்களும் பிளாக்கர்களிடம் பலிக்கவில்லை என்பது கொண்டாட்டமாக இருக்கிறது.

 

இந்த இணையதளச் செய்தி விவரித்திருக்கிற படத்திற்கு நம் பதிவர்கள்(பரிசல், கேபிள்சங்கர் உட்பட இன்னும் பலர்) எழுதிய விமர்சனங்கள் பலவற்றை நானும் படித்திருந்தேன். சீரியஸாக எழுதியிருக்காவிட்டாலும் (அப்படி எழுத கந்தல்சாமியில் என்னதான் இருக்கிறது?) அதிகபட்சம் அந்தப் படத்திற்கு கொடுக்க வேண்டிய மரியாதையை கொடுத்தே இருந்தார்கள்.

 

கதையும் இல்லாமல் புதுமையும் இல்லாமல் யார் உதிரம் சிந்தச் சொன்னார்கள். அவர்களையெல்லாம் படைப்பாளி என்று எவன் சொன்னவன்? கோடி கோடியாய் கொட்டி அவர்கள் என்ன, தியேட்டர்களில் சமூக சேவையா நிகழ்த்துகிறார்கள்.  வாழ்க்கைக்கும், ரசனைக்கும் சம்பந்தமில்லாத இந்த பிரம்மாண்ட புண்ணாக்குகளை எவனய்யா வந்து கேட்டான்? ஆமாம் ஐயா! நாங்கள் மனிதாபிமானத்தோடு இருப்பதால்தான் இந்தத் தயாரிப்பாளர்களை பீதிக்குள்ளாக்குகிறோம். இதில் யோசிப்பதற்கு என்ன இருக்கிறது?

 

பல படங்களுக்கு நமது பிளாக்கர்கள் தரமான விமர்சனங்களைத்தான் எழுதியிருக்கிறார்கள். இத்தனைக்கும் அவை பரவாயில்லாமல்தான் இருக்கும். அவையெல்லாம் அவர்கள் கண்களில் படாது போல. எதுவும் பிரம்மாண்டமாய் இருந்தால்தான் படும் போல.

 

அவர்கள் குறித்து ஜாக்கிரதையாய் இருங்கள் பிளாக்கர்களே! இந்த பிரம்மாண்டங்கள்தான் அவ்வப்போது வந்து தமிழ்ச்சினிமாவை மூழ்கடித்து விடும் அல்லது கடத்திக்கொண்டு போய் விடும்.

 

எண்பதுகளில் ஒரு காலம் வந்தது. ஒரு வகையான மேற்கத்திய கலாச்சாரத்திற்கு ஆட்பட்டிருந்த, வெறும் சாகசங்கள் நிறைந்த நாயகத்தன்மைக்கு உதாரணமான எம்.ஜி.ஆரின் பிடியிலிருந்த தமிழ்ச்சினிமா, தன்னை விடுவித்துக்கொண்ட காலம் அது. டைரக்டர் மகேந்திரன் இருந்தார். பாலுமகேந்திரா நுழைந்தார். ‘என் இனிய தமிழ் மக்களே’ என்று கரம் கூப்பாமல் மண்வாசனையோடு பாரதிராஜா காலடி எடுத்து வைத்தார்.. ருத்திரைய்யா எட்டிப் பார்த்தார். துரை, பாரதி வாசு போன்றவர்களிடம் தாகம் இருந்தது. இவர்களோடு இளையராஜா பயணம் செய்தார். 'செந்தூரப் பூவே' அமைதி கொண்ட ஒரு சோகமாய் நம்மீது படர்ந்து கொண்டிருக்கிறது. 'இந்து டீச்சர்' சிரித்தபடி கடந்தகால தெருக்களில் நடந்து போனாள். ஷேவிங்கிரீம் அப்பிய முகத்தோடு காளியின் ரோஷம் முன்வந்து நின்றது. வாழ்க்கையும் அதன் வனப்பும் தமிழ்ச்சினிமாவை சிலிர்க்க வைத்த காலம் அது. புழுக்கத்தில் கிடந்த காமிராக்கள் புதிய காற்றை சுவாசித்தன. வெளியை தரிசனம் செய்தன. அதன் அழுத்தமான பதிவுகளாக அன்றைய சினிமாக்கள் இருந்தன. புதிய கருத்துக்களும், புதிய பார்வைகளும் முளைவிட ஆரம்பித்தன. பெண்களும், கிராமமும் திரைகளை கிழித்துவிட்டு அருகில் வந்தார்கள். தமிழ்ச்சினிமாவின் மறுமலர்ச்சிக்காலம் அது.

 

ஏ.வி.எம் பேனரில், பிரம்மாண்டமான படமாக ‘சகல கலா வல்லவன்’ சுனாமியாக வந்து எல்லாவற்றையும் நொறுக்கித்தள்ளியது. மேகங்கள் கலைந்து போயின. மீண்டும் தமிழ்ச்சினிமா அந்த மேற்கத்தியக் கலாச்சாரத்திற்கு ஆட்பட்டது. கொஞ்சம் மக்கள் தன்னை கவனிக்கிறார்கள் என்றதும் நமது  கதாநாயகர்கள் தங்களை எம்.ஜி.ஆராக வரித்துக் கொண்ட பிம்பங்கள் பிலிம் ரோல்களில் அடைக்கப்பட்டன. மாற்றங்களுக்கும், புதுமைகளுக்கும் கொஞ்சங்கூட இடமில்லாமல் இருந்தது. ஒன்றிரண்டு நல்ல படங்கள் எப்போதாவது வந்து புழுக்கத்திலிருந்து மீட்டன. அவ்வளவுதான்.

 

‘சினிமா என்பது தொழில். சினிமா என்பது கோடிக்கணக்கில் படம்போட்டு எடுக்கக் கூடியது. சினிமா என்பது பொழுது போக்குச் சாதனம். மக்கள் ரசனைக்கேற்ப படம் எடுத்தால்தான் ஓடும்’. இப்படியான அபிப்பிராயங்களை வளையமாக அமைத்துக் கொண்டு சினிமாக்கள் எடுக்கப்படுகின்றன. நமது மக்கள் அண்ணாந்து பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். 'எண்டயர்லி ஒரு டிஃபரண்ட் மூவியாக இருக்கும்' என்று இவர்கள் சலிக்காமல் பிலிம் காட்டுவதற்கு மட்டும் ஒன்றும் குறைவில்லை.

 

சினிமா என்பது ஒரு கலை. ஒரு படைப்பு. மக்களின் ரசனைகளை உயர்த்துவது. இப்படி சிந்திப்பவர்கள் மிகச் சிலரே. கலைவடிவம் மட்டுமே அர்த்தங்களிலும், வடிவங்களிலும் புதுமையை நோக்கி நகர்த்தும். தொழில் என்பது போட்டியை உருவாக்கி தொழில்நுட்பத்தில் வேண்டுமானால் புதுமையை கொண்டு வரும்.

 

இங்கு 'புதுமுகங்கள்' நிறைய பேர் வரத்தான் செய்தார்கள். பலருக்கு
பிரம்மாண்டக் கனவுகளே இருந்தன. பிறக்கும் போதே பழையதாக இருப்பது எவ்வளவு இழிவானது. புதுமைகளைச் செய்பவர்களே புதியவர்கள்.

 

அப்படிப்பட்ட புதியவர்கள் சிலர் சமீப காலமாக தமிழ்த் திரையுலகத்தில் அடியெடுத்து வைத்துக்கொண்டு இருக்கிறார்கள் என்றே படுகிறது. அற்புதமான படங்கள் என்று சொல்ல முடியாவிட்டாலும், ஆரோக்கியமான படங்களும், கதைக்களங்கோடு புதிய முயற்சிகளும் தென்படுகின்றன. தரமான விமர்சனங்களும், புதுமைகளுக்கு ஆராதனையும் நாம் செய்வோம். அதுவே நல்ல சினிமாவை நோக்கி காலத்தை மெல்ல மெல்ல நகர்த்தும். பிளாக்கர்களால் அப்படியொரு மகத்தான காரியம் ஆற்ற முடியும் என்பதே அந்த இணையதளம் சொல்லியிருக்கிற செய்தி.

 

இனியொரு ‘சகல கலா வல்லவன்’ வந்து இந்த புதியவர்களிடமிருந்து சினிமாவை அபகரித்துச் செல்வதை அனுமதிக்காமல் உங்கள் குண்டூசிகளை கூர்மைப்படுத்துங்கள்.

 

*

கருத்துகள்

40 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
  1. தமிழ்சினிமா.காம்-ல் அந்தக் கட்டுரையை எழுதியவரும் ஒரு பிளாக்கர்தான் அண்ணாச்சி..!

    பதிலளிநீக்கு
  2. கருத்து சொல்லாம போயிட்டனேன்னு வருத்தப்படாதீங்க அண்ணாச்சி..

    நானும் சினிமாக்காரன்கிறதால அவர் எழுதியிருக்கிறதுல பாதியை ஏத்துக்கணும்னுதான் என் மனம் சொல்லுது..

    பதிலளிநீக்கு
  3. அன்புள்ள மாதவராஜ், நல்ல பதிவு. கோடியைக் கொட்டி எடுக்கிறார்கள் என்பதற்காக மலத்தை சந்தனம் என்றா பூசிக் கொள்ள முடியும். 'சிவாஜி' திரைப்படம் வருவதற்கு முன்னால் நான் எழுதிய பதிவு இது. நேரமிருந்தால் வாசித்துப் பாருங்கள்.

    சிவாஜி திரைப்படம் தோற்க வேண்டும்

    பதிலளிநீக்கு
  4. ஆனால் வணிகநோக்குப் படமென்று தெரிந்தும் முதல் நாளே அடித்துப் பிடித்துப் பார்த்துவிட்டு பிறகு ஒப்பாரி வைக்கும் பதிவர்களின் போக்கும் சரியற்றது என்பதையும் குறிப்பிட வேண்டுகிறேன்.

    பதிலளிநீக்கு
  5. அன்புச் சகோதரர் அவர்களுக்கு,
    நல்ல கருத்துக்கள், வரவேற்க வேண்டியவையும் கூட.

    இன்றைய திரைப்படங்களின் வெற்றி தோல்வி, அது சார்ந்த கலைஞர்களின் ஆளுமையை ஒட்டியே செல்கின்றன. பதிவர் சமூகத்தின் விமர்சனங்கள் சென்று சேரும் இடம் மிகக் குறைவு.
    இன்னும் குறிப்பிட்டுச் சொல்லப்போனால், சில ஆயிரங்கள் தான் இருக்கும்.

    மேலும் இது, நண்பர்கள், தங்களுக்குள் தெருவில், தேநீர் விடுதிகளில் நின்று பேசிக் கொள்வது போன்ற கருத்து பகிர்வு தான். ஒத்த கருத்துடைய நண்பர்கள், தங்களுக்குள் பகிர்ந்துகொள்ளும் விசயங்கள், சமூகத்தில் பெரும் மாற்றம் கொண்டுவரும் என்னும் அளவிற்கு, நாம் (பதிவர் வட்டம்) இன்னும் வளரவில்லை எனவே தோன்றுகிறது. வாழ்த்துக்கள்
    அன்புடன்
    ஆரூரன் விசுவநாதன்

    பதிலளிநீக்கு
  6. நல்ல பதிவு சார்.பிரமாண்டம் என்னும் பெயரில் இவர்கள் செய்யும் அலப்பரைகள் ரொம்ப அதிகம்.பொழுதுபோக்கு திரைப்படங்கள் அவசியமே!ஆனால் அவற்றிக்கு இவ்வளவு பணம் செலவழிக்க வேண்டிய அவசியம் ஏதும் இல்லை.

    பதிலளிநீக்கு
  7. //
    வாழ்க்கைக்கும், ரசனைக்கும் சம்பந்தமில்லாத இந்த பிரம்மாண்ட புண்ணாக்குகளை எவனய்யா வந்து கேட்டான்?
    //

    வேண்டாம் என்று நினைத்தாலும் சொல்லாமல் இருக்க முடியவில்லை...

    வாழ்க்கைக்கு சம்பந்தமில்லை சரி....ஆனால், ரசனை?? யாருடைய ரசனை குறித்து?? உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் புண்ணாக்கா??

    நீங்கள் கேட்கவுமில்லை யாரும் உங்களிடம் வந்து திணிக்கவுமில்லை...பிடித்தால் பாருங்கள், ஆனால் உங்களுக்கு பிடித்தது மட்டுமே ரசனை, மற்றதெல்லாம் புண்ணாக்கு என்று சொல்வது தலிபான் மென்டாலிட்டி!

    பதிலளிநீக்கு
  8. //
    சுரேஷ் கண்ணன் said...
    அன்புள்ள மாதவராஜ், நல்ல பதிவு. கோடியைக் கொட்டி எடுக்கிறார்கள் என்பதற்காக மலத்தை சந்தனம் என்றா பூசிக் கொள்ள முடியும். 'சிவாஜி' திரைப்படம் வருவதற்கு முன்னால் நான் எழுதிய பதிவு இது. நேரமிருந்தால் வாசித்துப் பாருங்கள்.

    //

    சிலருக்கு சந்தனம், அதுவே உங்களுக்கு மலம்...ஏன் நீங்கள் பட்டியலிட்டிருக்கும் படங்களை கூட குப்பை என்று யாரேனும் சொல்லக் கூடும்!

    பதிலளிநீக்கு
  9. //
    இளவட்டம் said...
    பொழுதுபோக்கு திரைப்படங்கள் அவசியமே!ஆனால் அவற்றிக்கு இவ்வளவு பணம் செலவழிக்க வேண்டிய அவசியம் ஏதும் இல்லை.

    August 29, 2009 7:46 PM
    //

    அவசியமா இல்லையா என்பதை தீர்மானிக்க வேண்டியவர் தயாரிப்பாளர் தானே?? பொதுமக்களின் படத்தில் படம் எடுக்காதவரை செலவு தயாரிப்பாளரின் உரிமை...படம் அடி வாங்கினால் துண்டுடன் அலையப் போவது அவரே...அவசியம் இல்லை என்று நாம் எப்படி சொல்ல முடியும்??

    பதிலளிநீக்கு
  10. // சினிமா என்பது ஒரு கலை. ஒரு படைப்பு. மக்களின் ரசனைகளை உயர்த்துவது. இப்படி சிந்திப்பவர்கள் மிகச் சிலரே. //

    உண்மை. இந்தப் பார்வை தான் வேண்டும்.

    ஆனால் //‘சினிமா என்பது தொழில். சினிமா என்பது கோடிக்கணக்கில் படம்போட்டு எடுக்கக் கூடியது. சினிமா என்பது பொழுது போக்குச் சாதனம். மக்கள் ரசனைக்கேற்ப படம் எடுத்தால்தான் ஓடும்’. //
    மேலும் எண்ணற்ற தொழிலாளிகளின் வயிற்றுப்பாட்டுக்கு வழி செய்கிறது என்னும் ஒரு வாதமும் உண்டு. அதற்கெல்லாம் மாற்று வழி செய்யாமல் சினிமாக்களின் தரத்தை மாற்றுவது (உயர்த்துவது என்று சொல்ல வேண்டாம்; வம்பு!) சாத்தியமா என்று தெரியவில்லை.

    பதிலளிநீக்கு
  11. 'எண்டயர்லி ஒரு டிஃபரண்ட் மூவியாக இருக்கும்' என்று இவர்கள் சலிக்காமல் பிலிம் காட்டுவதற்கு மட்டும் ஒன்றும் குறைவில்லை//

    படுத்துறாய்ங்க ஸார்.. அப்படியே நிஜ குண்டூசியை வைத்தே இவர்கள் உட்காருகிற இடத்தில் குத்தலாம் போல வரும் சில படங்களைப்பார்த்தால்..

    இவ்வளவுக்கும் கொஞ்சம் நல்லது இருந்தாலும் பாதிக்கு நம்மாளுங்க புகழத்தான் செய்கிறார்கள்.

    ****

    அதுசரி : நீங்கள் கேட்கவுமில்லை யாரும் உங்களிடம் வந்து திணிக்கவுமில்லை...பிடித்தால் பாருங்கள்,//

    இப்படிச் சொல்லிச்சொல்லியே இன்னும் எவ்வளவு நாளைக்குத்தான் இந்த மொக்கைப்பாண்டிகளுக்கு சப்போர்ட் பண்ணப்போறீங்க ஸார்?

    பதிலளிநீக்கு
  12. அதுக்காக ஒரு ஆயிரம் குடும்பத்துக்கு சோறுபோடும் சினிமாக்காரர்களின் வயிற்றிலடிப்பது கொஞ்சம் கூட நல்லாயில்லை சார்......

    பதிலளிநீக்கு
  13. உண்மைத் தமிழன்!
    //தமிழ்சினிமா.காம்-ல் அந்தக் கட்டுரையை எழுதியவரும் ஒரு பிளாக்கர்தான் அண்ணாச்சி..!//

    அப்படியா!..!!!
    //அவர் எழுதியிருக்கிறதுல பாதியை ஏத்துக்கணும்னுதான் என் மனம் சொல்லுது...//

    எந்தப் பாதிங்க?

    பதிலளிநீக்கு
  14. சுரேஷ் கண்ணன்!

    உங்களது இடுகையைப் படித்தேன். அடேயப்பா....! உங்கள்து கருத்துக்கள் அப்படியே எனது இடுகையிலும் ஓடிக்கொண்டு இருக்கிறதே! ரொம்ப சந்தோஷமாக இருந்தது!!! நன்றி.

    பதிலளிநீக்கு
  15. ஆரூரன் விசுவநாதன்!
    அதுதான் பிளாக்கர் குண்டூசிகள் என்று சொல்லியிருக்கிறேன். இருப்பதை வைத்து முடிந்தவரையில் நம்மால் இயன்றதைச் செய்வோமே! வல்லவனுக்கு புல்லே ஆயுதமாக இருக்கும்போது, குண்டூசி ஏண் இருக்கக் கூடாது?

    இளவட்டம்!
    சரியாகச் சொல்லியிருக்கிறீர்கள்.

    பதிலளிநீக்கு
  16. அது சரி!

    இந்தப் பதிவை எழுதிக்கொண்டு இருக்கும்போதே சின்ன புன்னகையுடன், நம்ம அதுசரி அவர்கள் கண்டிப்பாக இதற்கு பின்னூட்டத்துடன் காத்துக்கொண்டு இருக்கிறார் என நினைப்பு ஓடியது! நன்றி.

    தொடர்ந்து முரண்படும் இடத்திலேயே இப்போதும் வந்து நிற்கிறோம். சினிமா என்பது பொழுது போக்கு மட்டுமல்ல, சமூகத்தையும், மனித ரசனைகளையும் மேம்படுத்தும் சாதனம் என்பது என் கருத்து. ரசனைகள் மாறுபடும் என்பதை ஒப்புக்கொள்கிறேன். ஆனால், அது ஸ்ரேயாவின் இடுப்பில் இருக்கவில்லை, இருக்கக் கூடாது என்பது என் கருத்து மட்டுமல்ல, சமூகம் குறித்து கவலைப்படும் அனைவரின் கருத்தாகவே இருக்கும்.

    திரும்ப திரும்ப ஒரே மாதிரியான விஷயங்களைச் சொல்வது எப்படி ரசிக்கக் கூடியதாக இருக்கும்? அதில் என்ன கிரியேட்டிவிட்டி இருக்கிறது. அப்புறம் அவைகளை புண்ணாக்கு என்று சொல்லாமல் வேறெப்படிச் சொல்வதாம்?

    இது தலிபான் மெண்டாலிட்டி என்று நீங்கள் சொல்வது ஆச்சரியமாக இல்லை. ஜனநாயகம் என்ற பேரில், பார்த்தால் பார் பார்க்காவிட்டால் போ என மக்களைப் பற்றிக் கவலைப்படாமல், போட்டதைத் தின்னுட்டுப் போடா என்று உயரத்தில் இருந்துகொண்டு சொல்லும் இந்த மெண்டாலிட்டியை என்னவென்று சொல்வதாம்?

    சினிமாவை படைப்பு சார்ந்த ஒரு கலையாகப் பார்க்காமல், வெறும் பொழுது போக்கு சாதனமாக மட்டுமே பார்ப்பது வேதனையானது.

    பதிலளிநீக்கு
  17. செல்வநாயகி!
    ரொம்ப நன்றி.

    தீபா!
    கருத்தின் பிற்பகுதியில் நீ சொல்லியிருக்கும் கருத்தோடு நூறு சதவீதம் முரண்படுகிறேன். சினிமா என்பது தொழில் என்று மட்டுமே பார்க்கக் கூடாது என்பதுதான் வாதம். எதோ பல நூறு குடும்பங்களுக்கு தொழில் கிடைக்க வேண்டுமென்றுதான் இவர்களுக்கு மலைகளுக்குக் கூட பெயிண்ட அடிக்கிறார்களா? தவறு. சினிமாவை அதன் உண்மையான அர்த்தத்திலேயே பயன்படுத்தி, எதார்த்தமாக சித்தரிக்க முயற்சி செய்தால், இன்னும் பல நூறு குடும்பங்களுக்கு, அதுவும் நலிவடைந்த கலைஞர்களுக்கு வேலை கிடைக்கும் என்பதுதான் உண்மை.

    பதிலளிநீக்கு
  18. ஆதிமூலக் கிருஷ்ணன்!
    சபாஷ்! நன்றி.


    பிரியமுடன் வசந்த்!
    தீபாவுக்குச் சொன்ன பதில்தான் தங்களுக்கும். வருகைக்கும் பகிர்வுக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  19. தல, அப்பிடியே நல்ல படங்களையும் ப்ளாக்கர்கள தூக்கி நிறுத்த சொல்லுங்க..

    திட்டறத மட்டுமே செய்யற ப்ளாக்கர்களும், அதை மட்டுமே படிப்போம்னு சொல்றவங்களும் மாறுங்கய்யா.

    பதிலளிநீக்கு
  20. மேலும் ஒன்று சொல்லிக்கொள்ள ஆசைப்படுகிறேன். சிவாஜி திரைப்படம் வந்ததால் நல்ல திரைப்படங்கள் ஓடவில்லை என்று யாரும் சொல்லிவிட முடியாது. சிவாஜிக்கு பிறகு வந்த சுப்ரமணியபுரம், பசங்க, நாடோடிகள் போன்ற திரைப்படங்கள் ஓடிக்கொண்டு தான் இருக்கின்றன.

    சிலருக்கு பிரியாணி பிடிக்கும், சிலரு மோருஞ்சாதம், சிலருக்கு இட்டிலி தோசை.

    கண்டிப்பாக எல்லாருக்கும் பிரியாணியையோ இல்லை மோருஞ்சாதத்தையோ பரிமாரினால் சலித்து விடும். ஆக எல்லா விதமான திரைப்படங்களும் வரட்டுமே. உங்களுக்குப் பிடிக்கவில்லையென்றால் பார்க்காதீர்கள். ஒரு மூன்று மணிநேரம் வாழ்க்கையின் கஷ்ட நஷ்டங்களை என்னை மறக்கச் செய்யும் படம்(அல்லது படங்கள்) குப்பையாக இருந்தால் என்ன சாக்கடையாக இருந்தால் என்ன?

    பதிலளிநீக்கு
  21. //தீபா!
    கருத்தின் பிற்பகுதியில் நீ சொல்லியிருக்கும் கருத்தோடு நூறு சதவீதம் முரண்படுகிறேன். //

    அது எனக்கும் ஏற்புடைய கருத்து அல்ல தான். அப்படி ஒரு வாதம் வைப்பார்களே அதற்குத் தங்கள் பதில் என்று தான் தங்களிடம் கேட்டேன். யதார்த்தவகைப் படங்களில் இதை விட மிக அதிகமான தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் வல்லுநர்களுக்கும் வேலை கிடைக்கும் என்பதை உங்களிடம் பேசும் போது தெரிந்து கொண்டேன்.

    எடுத்த்துக்காட்டுடன் அழகாக விளக்கிய அதை உங்கள் பதிவிலும் சேர்த்து விடலாம் என்பது என் கருத்து.

    நன்றி.

    பதிலளிநீக்கு
  22. //
    'எண்டயர்லி ஒரு டிஃபரண்ட் மூவியாக இருக்கும்' என்று இவர்கள் சலிக்காமல் பிலிம் காட்டுவதற்கு மட்டும் ஒன்றும் குறைவில்லை
    //

    well said!

    பதிலளிநீக்கு
  23. தோழர்! புரட்சியை விரைவுப்படுத்தும் பணியைத் தவிர்த்து மீதி எல்லாப் பணிகளையும் செய்துவருகிறீர்கள். அவ்வப்போதாவது சார்ந்திருக்கும் அமைப்புக்கு ஏதாவது எழுதுங்கள்.

    பதிலளிநீக்கு
  24. //இனியொரு ‘சகல கலா வல்லவன்’ வந்து இந்த புதியவர்களிடமிருந்து சினிமாவை அபகரித்துச் செல்வதை அனுமதிக்காமல் உங்கள் குண்டூசிகளை கூர்மைப்படுத்துங்கள்//

    நல்லதொரு இடுகை

    பதிலளிநீக்கு
  25. சொல்ல கஷ்டமாக இருந்தாலும்... மாதவராஜ்- உங்கள் கோபத்தில் நியாயமே இல்லை.

    சினிமா என்பது வர்த்தகம்தான்... அதிலென்ன இரண்டாவது கருத்து இருக்கிறது. முதலில் சினிமாவில் சமூக மாற்றம் தேடுவதை நிறுத்துங்கள்.

    அதற்கென ஒதுக்கப்பட்ட ஊடகத்தைப் பயன்படுத்துங்கள்.

    திரைப்படங்கள் என்பதை பொழுது போக்கு என ஒப்புக் கொள்ளும் நீங்கள், அந்தப் பொழுதி போக்கை ஏன் கொல்லச் சொல்லி போதிக்கிறீர்கள்..?

    தமிழ் சினிமாவில் எழுதிய அந்தணன் ஒரு திரைப்படத் தயாரிப்பாளரும்கூட.

    உங்கள் ரசனைப்படி மட்டுமே படமெடுத்துக் கொண்டிருந்தால் தமிழ் சினிமா இன்னும் குட்டிச் சுவராய், கழுதைகள் மட்டுமே உராய்ந்துவிட்டுப் போகிற இடமாக மட்டுமே பின்தங்கிப் போயிருக்கும்.

    மகேந்திரன்- பாலுமகேந்திராக்கள் அழகியல், அழுக்கியல் இரண்டையுமே எடுக்கத்தான் செய்தார்கள். எதையும் சுவாரஸ்யமாகக் கொடுத்தால்தான் எடுபடுகிறது என்று நீங்கள் கேட்டவை என்ற படத்தை எடுத்த சம்பாதித்த பிறகுதானே பாலு மகேந்திரா கற்றுக் கொண்டார்.

    நிஜமான... கிராமிய வாழ்வில் நடக்கும் அத்தனை விஷயங்களையும் அள்ளிப் பருக ஆசைப்படும் நீங்கள், அதன் மிகைப்படுத்தப்பட்ட திரை வடிவங்களைப் பார்த்து குய்யோ முறையோ எனப் புலம்புவது ஏன்...?

    இதைத்தான் வலையுல மனநோய்த்தனம் என்கிறோம்.

    இந்த நோய்த்தனத்திலிருந்து முதலில் வெளியில் வாருங்கள். சதா மலத்தை நினைத்து, மலத்தில் முகத்தை அழுத்திக் கொண்டு நிற்கும் பிரகஸ்பதிகளுக்கு சந்தனமும் மலமாகத்தான் தெரியும். நிறக்குருடுக்கு யார் என்ன செய்ய முடியும்...

    (சிவாஜி தோற்றுவிட்டிருந்தால், இந்த பிரகஸ்பதி வந்து மேம்பட்ட ரசனைக்கு வடிகால் அமைத்துக் கொடுத்துவிட்டிருக்குமா தெரியவில்லை...)

    உங்களுக்கு ஒரு சந்தோஷமான செய்தி... கந்தசாமிக்கு நல்ல வசூல். விநியோகஸ்தர் போட்ட காசை இரண்டாவது வாரத்திலேயே எடுத்துவிடுவார்.

    ப்ளாக்கர்கள் என்ற பூனைகள் கண்களை மூடிக்கொண்டு உலகம் இருண்டுவிட்டதாய் சந்தோஷம் கொள்வதை நாம் தடுக்கவே இல்லை.... தொடருங்கள் உங்கள் பகல் கனவை!

    பதிலளிநீக்கு
  26. பதிவு ஓகே. ஆனால் நான் அந்த செய்தியோடு முற்றிலும் மாறு படுகிறேன்.

    பல பதிவர்கள் நல்ல திரைப்படம் குறித்து பக்கம் பக்கமாய் பாராட்டி எழுதி உள்ளனர். உதாரணம்; பருத்தி வீரன், வேட்டியாயடு விளையாடு, சிவாஜி, எலுமிச்சை மரம், வெய்யில் (வெய்யில் படத்திற்கு குமுதம் உபயோக படுத்திய வரிகளே ஒரு பதிவின் வியாம்ர்சன வரிகள் thaan. ' விருது' நகருக்குள் நம்மை அழைத்து செல்கின்றனர்.

    நான் சொல்ல வரும் கருத்து, பதிவர்கள் பரவலாக சரியான விமர்சனமே எழுதுகின்றனர் (நான் கண்ணை மூடிக் கொண்டு பதிவருக்கு வக்காலத்து வாங்க வில்லை). இருபது கோடி செலவு செய்து உள்ளனர் என்ற ஒரே காரணத்திற்காக கந்தசாமி நல்ல படம் என்று என்னால் எழுத முடியாது.

    இன்னும் ஒரு செய்தி, பதிவின் தாக்கம் சமுதாயத்தில் பெரிய அளவில் உள்ளது என்பது எனக்கு சந்தேகமே. என் பார்வையில் இந்தியாவில் வசிக்கும் பதிவர்களின் எண்ணிக்கை முந்நூறை தாண்டாது. வெளிநாடுகளில் வசிப்போர் நானூறு இருக்கலாம்.

    எனவே மூன்னூறு நபர்கள் திரைப்படம் பார்க்கும் மூன்று கோடி தமிழர்களிடம் பாதிப்பு ஏற்படுத்த முடியுமா?.

    பதிவுகளின் தாக்கம் பெரிய அளவில் இருந்து இருந்தால், கடந்த நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் தோற்று இருக்க வேண்டுமே?

    பதிலளிநீக்கு
  27. முகிலன்!

    நல்ல படங்கள் குறித்தும் பிளாக்கர்கள் நல்லவிதமாய் எழுதியிருக்கிறார்களே!

    அப்புறம் நீங்க சொல்வதைத்தான் நானும் சொல்றேன். சாப்பிடும்படியாக, ஆரோக்கியமானதாக தாருங்கள் என்று.


    தீபா!
    புரிந்து கொண்டேன். மிக்க நன்றி.


    மங்களூர் சிவா!
    நன்றி.

    பதிலளிநீக்கு
  28. அனானி!

    சார்ந்திருக்கும் அமைப்பு குறித்து தாங்கள் வெகுவாக கவலைப்பட்டு இருக்கிறீர்கள். நான் வாழ்ந்து கொண்டு இருக்கும் அமைப்பைப் பற்றி கவலைப்பட்டுக்கொண்டு இருக்கிறேன்.

    புரட்சியத் தடுக்கும் காரியம் எதிலும் நான் ஈடுபடவில்லையே....!

    பதிலளிநீக்கு
  29. அனானி!

    சார்ந்திருக்கும் அமைப்பு குறித்து தாங்கள் வெகுவாக கவலைப்பட்டு இருக்கிறீர்கள். நான் வாழ்ந்து கொண்டு இருக்கும் அமைப்பைப் பற்றி கவலைப்பட்டுக்கொண்டு இருக்கிறேன்.

    புரட்சியத் தடுக்கும் காரியம் எதிலும் நான் ஈடுபடவில்லையே....!

    பதிலளிநீக்கு
  30. ஞானசேகரன்!
    வருகைக்கும், பகிர்வுக்கும் நன்றி.

    அரசியல்!
    நான் திரையுலத்தை பொழுதுபோக்கு சாதனம் மட்டுமே இல்லை என்றுதான் சொல்லியிருக்கிறேன்.சரியாக புரிந்து கொள்ளுங்கள். சினிமாவை வெறும் வர்த்தமாக மட்டுமே பார்க்கும் தாங்கள் கந்தசாமியின் வசூல் கண்டு கொண்டாடத்தான் செய்வீர்கள். வாழ்த்துக்கள். கண்ணை மூடிக்கொண்டு எதையும் ரசிப்பவர்களை விட, இந்த பிளாக்கர்கள் எவ்வளவோ மேல்!


    ராம்ஜி!
    உங்கள் கருத்துக்கள் சரியானதே. அதுதான் குண்டூசி என்று தலைப்பிட்டேன். இதை வைத்துக்கொண்டும் முடிந்தவரை, திரையுலகுக்கு ஒரு சிறு வலி உண்டாக்க முடிந்திருக்கிறதே.

    பதிலளிநீக்கு
  31. மாது,
    கலை கலைக்காவே
    கலை மக்களுக்காகவே என்ற இரு கருத்து நீண்ட நெடுங்காலமாகாவே இருந்து வருகிறது. மக்களின் வாழ்வைப்பிரதிபலிக்காத எந்த கலையும் ஜெயிக்காது. மறைந்த கலைஞர் எம்.ஆர்.ராதா சொல்லுவார் மக்களை மறந்த கலை செல்லுபடியாகாது.

    பதிலளிநீக்கு
  32. //
    மாதவராஜ் said...
    August 30, 2009 9:40 AM
    அது சரி!

    இந்தப் பதிவை எழுதிக்கொண்டு இருக்கும்போதே சின்ன புன்னகையுடன், நம்ம அதுசரி அவர்கள் கண்டிப்பாக இதற்கு பின்னூட்டத்துடன் காத்துக்கொண்டு இருக்கிறார் என நினைப்பு ஓடியது! நன்றி.
    //

    அடடா, அப்படியெல்லாம் வெயிட்டிங்ல இல்ல ஸார்...ஆனா உங்களை ஏமாற்றதது சந்தோஷமே :0)))

    //
    தொடர்ந்து முரண்படும் இடத்திலேயே இப்போதும் வந்து நிற்கிறோம். சினிமா என்பது பொழுது போக்கு மட்டுமல்ல, சமூகத்தையும், மனித ரசனைகளையும் மேம்படுத்தும் சாதனம் என்பது என் கருத்து. ரசனைகள் மாறுபடும் என்பதை ஒப்புக்கொள்கிறேன். ஆனால், அது ஸ்ரேயாவின் இடுப்பில் இருக்கவில்லை, இருக்கக் கூடாது என்பது என் கருத்து மட்டுமல்ல, சமூகம் குறித்து கவலைப்படும் அனைவரின் கருத்தாகவே இருக்கும்.
    //

    நீங்கள் ஸ்ரேயாவின் இடுப்பை இழுத்து விட்டதால் :0)), இது குறித்து நீளமாக பேசலாம்...ஆனால் சுருக்கமாக....ஸ்ரேயாவின் இடுப்பை ஏன் ரசிக்கிறார்கள் என்பதற்கான அடிப்படை காரணங்கள் ஆதாம் ஏவாள் காலத்திலிருந்தே இருக்கிறது...இப்பொழுது இருக்கக் கூடாது என்பது மனிதனின் அடிப்படையை மறுப்பதாகவே அமையும்...

    ரசனைகளை மேம்படுத்துவது என்றால் நீங்கள் உயர்ந்த ரசனை என்று எதையோ குறிப்பதாக ஆகிறது...எனக்கு கர்னாடிக் ம்யூசிக் பிடிக்கும்...அதற்காக பாப் ம்யூசிக் கேட்பவர்களின் ரசனை கீழானது என்று சொல்ல முடியுமா??

    //
    திரும்ப திரும்ப ஒரே மாதிரியான விஷயங்களைச் சொல்வது எப்படி ரசிக்கக் கூடியதாக இருக்கும்? அதில் என்ன கிரியேட்டிவிட்டி இருக்கிறது. அப்புறம் அவைகளை புண்ணாக்கு என்று சொல்லாமல் வேறெப்படிச் சொல்வதாம்?
    //

    நீங்கள் க்ரியேடிவிட்டியை பார்க்கிறீர்கள்...மக்கள் பொழுதுபோக்கை பார்க்கிறார்கள்...இதே ரீதியிலான படங்கள் தொடர்ந்து வரும்போது அவர்களுக்கே அலுத்துப் போய், அந்த படங்கள் படு தோல்வி அடையும்...பின்னர் திரையுலகம் அடுத்த வெற்றி கான்சப்ட்டை நோக்கி திரும்பும்.... ஆனால், அவர்கள் ஒரே விதமான படத்தை தருவதால் நீங்கள் புண்ணாக்கு என்று சொல்கிறீர்கள் என்று நான் நினைக்கவில்லை...நீங்கள் புண்ணாக்கு என்று சொல்வதற்கு வேறு காரணங்கள்...முக்கியமாக உங்கள் ரசனை...

    //
    இது தலிபான் மெண்டாலிட்டி என்று நீங்கள் சொல்வது ஆச்சரியமாக இல்லை. ஜனநாயகம் என்ற பேரில், பார்த்தால் பார் பார்க்காவிட்டால் போ என மக்களைப் பற்றிக் கவலைப்படாமல், போட்டதைத் தின்னுட்டுப் போடா என்று உயரத்தில் இருந்துகொண்டு சொல்லும் இந்த மெண்டாலிட்டியை என்னவென்று சொல்வதாம்?
    //

    ஆங்...இது பாயிண்ட்! ;0))

    கொஞ்சம் யோசித்து பாருங்கள்...இப்படி தான் படம் எடுப்போம் என்று கமர்சியல் டைரக்டர்கள் யாரும் சொல்வதில்லை...இப்படி எடுத்தால் மக்களுக்கு பிடிக்கிறதோ என்று தான் எடுக்கிறார்களே தவிர, மக்கள் இதைத் தான் பார்க்க வேண்டும், இதை மட்டுமே பார்க்க வேண்டும் என்று யாரும் சொல்வதில்லை....அவர்கள் அனுமானம் தப்பாக போகும் போது, மீண்டும் வேறு விதமாக முயற்சிக்கிறார்கள்....உதாரணம் முன்பு ஜெமினி (விக்ரம்) ஜெயித்ததும் தொடர்ந்து அதே போல படங்கள்....ஒரு படம் தோற்றதும் ட்ரன்ட் மாறி விடும்...

    இப்பொழுது அடுத்த பக்கத்தை பாருங்கள்...ஒவ்வொரு தோல்விக்கு பின்னும் கலைப்பட ரசிகர்கள் சொல்வது மக்கள் ரசனை உயர வேண்டும்! ஆக, இப்பொழுது மக்களை ரசனையற்றவர்கள் என்று சொல்வது யார்??

    ஆனால், மக்கள் என்னவோ தெளிவாகத் தான் இருக்கிறார்கள்...சிவாஜியை ஜெயிக்க வைத்த அதே மக்கள் தான் நாடோடிகள், சுப்ரமணியபுரம், பசங்க என்றும் ஜெயிக்க வைக்கிறார்கள்....

    அவர்கள் ரசனை மிகவும் பேலன்ஸ்டாகத் தான் இருக்கிறது....போன மாதம் அதிரடி படம் பார்த்தால் இந்த வாரம் நாடோடிகள் பார்ப்போம் என்பது போல!

    இதில் இந்த விதமான படங்கள் மட்டுமே வரவேண்டும் என்று திணிப்பது யார்?? கமர்சியல் பட டைரக்டர்களா இல்லை கலை/எதார்த்த பட ரசிகர்களா??

    //
    சினிமாவை படைப்பு சார்ந்த ஒரு கலையாகப் பார்க்காமல், வெறும் பொழுது போக்கு சாதனமாக மட்டுமே பார்ப்பது வேதனையானது
    //

    சரி, அப்படியானால், படைப்பு சார்ந்த கலை யாருக்காக?? மக்களுக்கா இல்லை படைத்தவர்களுக்கா??

    மக்களுக்காக இல்லையெனில், அந்த மக்களை பார்க்க வேண்டும் என்று வலியுறுத்துவது என்ன நியாயம்??

    மக்களுக்காகத் தான் கலை...அவர்கள் தான் ஆணி வேர்....ராஜா மெச்சியதே ரம்பா!

    பதிலளிநீக்கு
  33. அருமையான பதிவு . உங்கள் வலைப்பூவிற்கு முதல் வருகை..

    பதிலளிநீக்கு
  34. இது சரியல்ல மாதவராஜ் அவர்களே. கந்தசாமி படம் 15 டாலர் கொடுத்துப் பார்த்த எனக்கு நல்ல பொழுது போக்காக இருந்தது. அந்தப் படத்தில் என்ன குறை என்று சொல்லாமல் பிரம்மாண்டமாக எடுத்ததால் அது சொத்தை என்று சொல்வது என்ன வகையான மனநிலை என்பது புரியவில்லை. சினிமா என்பது ஒரு தொழில். அதில் லாபம் வந்தால் மட்டுமே தயாரிப்பாளர் பிழைக்க முடியும். நஷ்டம் வந்தால் தயாரிப்பாளருக்கு மட்டுமே நஷ்டம். மற்ற அனைவருக்கும் அதனால் எந்த நஷ்டமுமில்லை.

    //இனியொரு ‘சகல கலா வல்லவன்’ வந்து இந்த புதியவர்களிடமிருந்து சினிமாவை அபகரித்துச் செல்வதை அனுமதிக்காமல் // சகல கலா வல்லவனை ரசிப்பவர்களும் இருக்கிறார்களே. ஜெட் லீயும் ஜாக்கி சானும் பறந்து பறந்து சண்டை போட்டால் கை தட்டுபவர்கள் விக்ரமுக்கு மட்டும் நொள்ளை சொல்வது ஏன்? பெரும் பணம் புரளும் வியாபாரத்தில் கதா நாயகனுக்கு மட்டும் ஏன் கோடிக்கணக்கில் சம்பளம் என்று கேளுங்கள். அது சரியாக இருக்கும். பிளாகர்களால் தமிழ்நாட்டில் பாதிப்பு இல்லாவிட்டாலும் வெளி நாடுகளில் பெரிய பாதிப்பு இருக்கலாம். பொறுப்பு உணந்து எழுத வேண்டும். அப்படியே எழுதினாலும் படம் வெளி வந்து இரண்டு மாதம் கழித்து எழுதினால் அது ஒரு ஆய்வு ரீதியில் உபயோகமாகும். படம் வெளி வந்த அடுத்த நாளே தவறாக எழுதுவது தவறு.

    இன்னும் எழுத நினைக்கிறேன், ஆனால் எந்த பிரயோசனமும் இல்லை. பிரம்மாண்டமாக செலவழிக்காமல் எடுத்த "நல்ல" படங்களும் வியாபார ரீதியில் வெற்றி பெற்றதை நினைத்துப் பாருங்கள்.

    பதிலளிநீக்கு
  35. கோபிநாத்!
    மிக்க நன்றி. முடியும்போதெல்லாம் வாருங்கள்.

    நாஞ்சில்நாதம்!
    நன்றி.

    அதுசரி!
    நூற்றூக்கு நூறு உங்களிடமிருந்து மாறுபடுகிறேன்.திரும்பத் திரும்ப நாம் ஒரே இடத்தில்தான் பேசிக்கொண்டு இருக்கிறோம். கலை,இலக்கியம், ரசனை, மக்கள் குறித்து விரிவான ஒரு பதிவிடுகிறேன். அதில் பேசுவோம்.

    அமரபாரதி!
    அதுசரி அவர்களுக்கு சொன்னதுதான் உங்களுக்கும்.

    பதிலளிநீக்கு
  36. எப்படி படம் எடுத்தாலும் சரி நான் காசு கொடுத்து தியேட்டரில் சென்று என் ரசனைக்கு ஒத்து வரவில்லையென்றால் விமர்சனத்தில் கிழிக்கப்படும். விமர்சனம் பிடிக்கவில்லையென்றால் விமர்சிக்கலாம்.:))))))))))

    பதிலளிநீக்கு
  37. ஏதோ தமிழ் சினிமாவில் மட்டும்தான் ராம நாராயணன்களும், பேரரசு களும் , சில பேர்களுக்கு ஷங்கர் களும் இருப்பது போல எண்ணி தமிழ் சினிமா தரம் உயர வேண்டும் என்று கூறுகிறீர்கள்..

    சன் டிவி, விஜய் டிவி மற்றும் கலைஞர் டிவிஇல் போடும் பல மேலை நாட்டு படங்களும் சராசரி மசாலா படங்கள் போலவே உள்ளது.. அங்கும் சராசரி இயக்குனர்களும், என்னை போல் சராசரி மசாலா படங்களை ரசிக்கும் ரசிகர்களும் உண்டு .. ஆனால் நாம் பார்க்கும் சில மேலை நாட்டு படைப்புகளை வைத்து நம் படைப்புகளை எடை போட கூடாது..

    கலாம் அக்னி சிறகுகளில் இருந்து சில வரிகள் " புதியதாக பாதை போட எண்ணி கரடான பாதையில் பயணிக்கும் சில பேர்களால் தான், மற்ற சராசரி மனிதர்களுக்கு சீரான பாதை கிடைக்கிறது" ..

    எல்லா துறைகளிலும் சில பேர் தான் மற்று வழிகளில் முயற்சிப்பர்.. எல்லாரும் புதிய முயற்சி மேற்கொள்ள வேண்டும் என நினைப்பது .... ????

    பதிலளிநீக்கு
  38. //விமர்சனங்கள் பலவற்றை நானும் படித்திருந்தேன். சீரியஸாக எழுதியிருக்காவிட்டாலும் (அப்படி எழுத கந்தல்சாமியில் என்னதான் இருக்கிறது?) //

    உங்களுக்கு ஒரு படம் பிடிக்கவில்லை என்பதற்காக இவ்வாறு கேட்க முடியாது? ஒரு படத்தை நல்ல படம் கெட்ட படம் என்று யாரும் வரையறுக்க முடியாது. உங்களுக்கு பிடித்த படம் இன்னொருவருக்கு குப்பை படம், மற்றவர் குப்பை படமாக கருதும் படம் உங்களுக்கு நல்ல படமாக தெரியலாம்.

    சாம் ஆண்டர்சன் படத்தையும் பார்க்க இருக்கிறார்கள் என்றால் அது அவர்கள் ரசனை, உனக்கு ஏன் இந்த மாதிரி படமெல்லாம் பிடிக்கிறது என்று அவர்களை கேட்க முடியாது! கிண்டலுக்கு வேண்டும் என்றால் இவரை எல்லாம் ரசிக்க இருக்கிறார்களா என்று நக்கல் செய்யலாம்..நிஜம் வேறு

    கந்தல்சாமி என்று நீங்கள் கூறுவதில் இருந்தே நீங்கள் அந்த படத்தை எவ்வளவு வெறுக்கிறீர்கள் எனபது தெரிகிறது. அப்படி இருக்கும் போது உங்களிடம் நடுநிலையான விமர்சனத்தை எப்படி எதிர்பார்க்க முடியும். கந்தசாமி பிரம்மாண்டத்தை நியாயப்படுத்தவில்லை ஆனால் அதையும் ரசிக்க ரசிகர்கள் இருக்கிறார்கள். அவர்களை முட்டாள்கள் என்றால் அவர்கள் பார்வையில் நீங்கள் முட்டாளாக தெரிவீர்கள்.

    பதிவுலகமே வெறுத்த கிண்டலடித்த குசேலன் வாரணம் ஆயிரம் எனக்கு பிடித்த படங்கள், அதனால் உங்கள் பார்வையில் மட்டமாக போய் விடுவேனா! அப்படி நினைத்தால் தவறு உங்கள் பார்வையில் தான். எனக்கு இந்த படங்களும் பிடிக்கும் நீங்கள் உயர்ந்த படங்களாக நினைத்து கொண்டு பேசும் படங்களும் எனக்கு பிடிக்கும்

    ரஜினி, விஜய் அஜித் போன்ற நடிகர்கள் படத்தை கிழிப்பதில் காட்டும் ஆர்வத்தை எத்தனை பேர் நல்ல படங்களை பாராட்டி எழுதுவதில் ஆர்வம் காட்டுகிறார்கள். சுப்ரமணிய புரம் நாடோடிகள் படத்தை அதிகம் பேர் பாராட்டினார்கள்..அப்படி என்றால் இந்த இரண்டு படத்தை தவிர வேறு எந்த நல்ல படங்களும் வரவே இல்லையா..

    பூ என்ற ஒரு படம் எத்தனை பேர் பாராட்டி எழுதினார்கள்..பசங்க படத்தை பாராட்டி விமர்சனம் எழுதியவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம்.

    எனவே ஒரு படத்தை எனக்கு பிடித்து இருக்கு பிடிக்கலை என்று தான் கூற முடியுமே தவிர இது நல்ல படம் குப்பை படம் என்று நாம் வரையறுக்க முடியாது.

    உலகத்தில் எல்லோருமே நல்லவர்களாகவே இருந்தால் ..கற்பனை செய்து பாருங்க எவ்வளவு சலிப்பாக இருக்கும் என்று அது போல தான் திரையுலகமும். நல்ல படங்கள் என்று பூ சுப்ரமணியபுரம் பசங்க நாடோடிகள் என்று பார்த்துக்கொண்டு இருந்தால் ஒரு வெறுப்பு வந்து விடாது. உலகில் பலதரப்பட்ட மக்களும் இருக்கிறார்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு ரசனை அப்படி இருக்கும் போது விருப்பம் என்பது மாறுபடும். நல்ல படம் என்று பார்த்து கொண்டு இருந்தால் ஒரே மாதிரி படங்கள் தான் வரும். பிரம்மாண்டத்தை ரசிப்பவர்களும் அதிகம் இருக்கிறார்கள்.

    நீங்கள் வெறுக்கும் பிரம்மாண்டம் தான் டைட்டானிக் அந்த படம் இந்த பிரம்மாண்டத்தை கொடுக்கவில்லை என்றால் உலகத்தில் இத்தனை ரசிகர்களை கவர்ந்து இருக்குமா? படம் எடுக்கும் அனைவரும் சிறந்த படமாக எடுக்க வேண்டும் என்று தான் நினைக்கிறார்கள் ஆனால் அது வேறு விதமாக போகும் போது உங்கள் பார்வையில் கந்தல்சாமி ஆகி விடுகிறார்கள். இதில் டைட்டானிக் மூழ்காமல் தப்பித்து விட்டது அவ்வளவே.

    நீங்கள் நினைக்கும் குப்பை படங்களை நான் ஆதரிக்கவில்லை, அனைத்து படங்களையும் ரசிக்க ஆட்கள் இருக்கிறார்கள் பார்க்கும் சதவீதம் தான் மாறுபடுகிறது.

    விமர்சனம் என்பது ஒருசார்பாக கூறுவது அல்ல..தனக்கு பிடிக்கவில்லை என்றாலும் அதில் உள்ள குறை நிறைகளை கூறுவது தான் நியாயம். நமக்கு பிடிக்கவில்லை என்பதற்காக நம் கருத்தை திணித்து கூறுவதற்கு பெயர் விமர்சனம் அல்ல.

    //சுரேஷ் கண்ணன் said...
    ஆனால் வணிகநோக்குப் படமென்று தெரிந்தும் முதல் நாளே அடித்துப் பிடித்துப் பார்த்துவிட்டு பிறகு ஒப்பாரி வைக்கும் பதிவர்களின் போக்கும் சரியற்றது என்பதையும் குறிப்பிட வேண்டுகிறேன்//

    சுரேஷ் கண்ணன் அதேசமயம் படத்தை ஏதாவது கூறி கிண்டலடித்து பதிவிட வேண்டும் என்று படம் பார்ப்பவர்களும் இருக்கிறார்கள் என்பதையும் குறிப்பிட வேண்டுகிறேன்

    "அதுசரி" அவர்களின் ஒரு சில பின்னூட்டங்களை குறிப்பிட்டு எழுதலாம் என்று இருந்தேன்..ஆனால் அவர் என் ஒட்டுமொத்த எண்ணத்தை பிரதிபலிப்பதால் அவரை அப்படியே வழிமொழிகிறேன்

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!