மக்களும் பட்ஜெட்களும்!

ஐஸ் விக்கிற முத்துப்பாண்டியைப் பற்றியும், ஆற்றிலிருந்து மாட்டு வண்டியில் ஊருக்கு தண்ணீர் எடுத்துக் கொண்டு இருக்கும் மாடசாமியைப் பற்றியும்தான் சொல்ல வந்தேன்.அதற்கு முன் அவர்கள் உயிர் வாழ்ந்துகொண்டு இருக்கிற காலத்தை சொல்லியாக வேண்டுமென நினைக்கிறேன்.

முழுக்க முழுக்க தோலால் ஆன அந்த பழுப்பு நிற சூட்கேஸின், இந்த வருடத்திற்கான புகைப்படம் இன்று பத்திரிகைகளில் வந்துவிட்டது. பாராளுமன்ற வாசலில் அதை வைத்துக்கொண்டு இந்தமுறை சிரித்துக்கொண்டு இருப்பவர் திரு.பிரணாப் முகர்ஜி. தேசத்தின் தலைவிதியையே உள்ளே மூடிவைத்திருப்பதாக எண்ணம் தரும் பெருமிதம், அந்தச் சிரிப்பில் இருக்கிறது. மாறி மாறி எத்தனையோ கைகள் இந்த சூட்கேஸை இப்படி காமிராக்களின் ஒளிவெள்ளத்தில் மிதந்தபடி தூக்கி வந்திருக்கின்றன.

“உலகப் பொருளாதார நெருக்கடியின் பாதிப்பிலிருந்து தற்காத்துக்கொள்ளும் நடவடிக்கை” என்கிறார் பிரதமர் மன்மோகன்சிங். “இது ஒரு அதிசயம்” என்கிறார் காங்கிரஸ் தலைவர் கிரிஜா வியாஸ். “அனைவருக்குமான பட்ஜெட்” என்கிறார் கலைஞர் கருணாநிதி. “பொருளாதார மேம்பாட்டுத் திட்டங்கள் இல்லை” என்கிறார் ஜெயலலிதா. “சவால்களை எதிர்கொள்ள உதவாத பட்ஜெட்” என்கிறது சி.பி.எம். “முன்னேற்றத்துக்கு எதுவுமில்லாத காகித அறிக்கை” என்கிறது பாரதீய ஜனதா. அவரவர்களின் அரசியல் நிலைபாடுகளிலிருந்து இப்படியான முத்துக்கள் உதிருகின்றன.

இந்த கருத்துக்கள், செய்திகள் எல்லாம் போகிற போக்கில் கேட்டோ, கேளாமலோ கடந்துவிடும் அளவுக்குத்தான் முக்கியத்துவம் கொண்டவையாக இருக்கின்றன. ஆழமான அலசல் இல்லாமல், அறிவுபூர்வமான விவாதங்கள் இல்லாமல், இரண்டு நாளைக்குள் பேசிக் கழித்து விடுவதாகவே இருக்கின்றன. மத்தியதர வர்க்கத்தினரின் கவலையும், அக்கறையும் வருமான வரிச்சலுகை பற்றி மட்டுமே. பட்ஜெட் பற்றிய மதிப்பீடு இந்த அளவுகோலுக்குள் மட்டுமே ஆடிகொண்டு நிற்கிறது.

பட்ஜெட் என்றால் என்ன, நேரடி வரி என்றால் என்ன, மறைமுக வரி என்றால் என்ன, உற்பத்தி குறித்து என்ன பார்வை இருக்கிறது, இராணுவத்திற்கானச் செலவு என்ன, கல்விக்கான செலவு என்ன, ஏற்றுமதி மற்றும் இறக்குமதி குறித்து என்ன பார்வை, அத்தியாவசியப் பொருட்கள் மீதான வரி என்ன, மருத்துவத்துறையில் என்ன மாற்றங்கள், உள்கட்டமைப்புக்கு உத்தேசச் செலவு என்ன, என்று தேசம் முழுவதும் உரையாடல்கள் இருப்பதில்லை. தேர்தல் குறித்து எழும் ஆர்வம், பட்ஜெட் குறித்து இன்னும் அதிகமாய் இருக்க வேண்டும். சாதாரண, சாமானிய மக்களும் கூர்ந்து கவனிக்க வேண்டும். யாருக்கோ வந்தது போல 90க்கும் அதிகமான சதவீதம் மக்கள் பட்ஜெட்டைப் பார்க்கிறார்கள்.

இன்னொரு இடத்தில் முற்றிலும் வேறு விதமாய் நிலைமைகள் இருக்கின்றன. பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களின் உயர் அதிகாரிகள் அனைவரும், தங்கள் கான்பரன்ஸ் ஹாலில் பெரிய டி.வி திரைக்கு முன்னால் கவனமாக உட்கார்ந்திருக்கிறார்கள். டீ, பிஸ்கெட், மினரெல் வாட்டர் அவர்கள் முன்னால் கவனமாக வைக்கப்பட்டு இருக்கின்றன. நிதியமைச்சரின் ஒவ்வொரு வார்த்தையையும் அவர்கள் உன்னிப்பாக கவனிக்கிறார்கள். குறிப்பெடுக்கிறார்கள். பட்ஜெட் தாக்கல் முடிந்ததும் அவர்கள் விவாதிக்கிறார்கள். அன்றும், அதைத் தொடர்ந்த சில நாட்களும் அவர்களது அலுவல்களே பட்ஜெட்டை ஆராய்வதுதான். இறுதியாக அந்த வருடம் தங்கள் நிறுவனத்தின் செயல்பாடுகளுக்கான ஒரு பக்கா முன்வரைவு தீர்மானிக்கப்படுகிறது. சந்தையில் பொருட்களை எப்படி கொண்டு செல்வது, எந்த புதிய பகுதிக்குள் காலடி எடுத்து வைப்பது, வரிகளை எப்படி எதிர்கொள்வது, ஏய்ப்பது என அனைத்து அம்சங்களிலும் தங்கள் நடவடிக்கைகளை தீர்மானித்துக் கொள்கிறார்கள். பட்ஜெட் தங்களுக்காக என்பது அவர்களுக்கு புரிந்திருக்கிறது.

யோசித்துப் பார்க்கும்போது மிகத் தெளிவாக இப்படியொரு நிலைமை கட்டமைக்கப்பட்டு இருப்பது புரிகிறது. ஊடகங்கள் இரண்டு நாட்கள் பட்ஜெட் பற்றி பேசிவிட்டு, வேறு கொலை, கொள்ளை செய்திகளுக்கு போய்விடுகின்றன. பெரும் அரசியல் கட்சிகளே கூட  தங்கள் இயக்கத்தினருக்கு பட்ஜெட்டைப் பற்றி விளக்கங்கள் கொடுப்பதில்லை. அது ஏன்? தொழிற்சங்கங்களே, தொழிலாளர்களுக்கு பட்ஜெட்டை கூர்மையாக ஆராய்வதற்கான பயிற்சி அளிப்பதில்லை. சகல மக்களுக்கும் பட்ஜெட் பற்றிய தெளிவு வரும் வகையிலான கல்வி இங்கு மிக அவசியம். அப்போதுதான் ஒரு தேசத்தில் மக்களின் அரசியல் நடவடிக்கைகள் முதிர்ச்சியும், பக்குவமும் பெறும். மாற்று அரசியல் என்றும் மக்களின் அரசியல் என்றும் பேசுபவகள் மிக தீவீரமாக இயங்க வேண்டிய புள்ளிகளில் இதுவும் ஒன்று.

அதுவரை- முத்துப்பாண்டிகள் முப்பது வருடத்திற்கும் மேலாய் தெருக்களில் ஐஸ் விற்றுக் கொண்டுதான் இருப்பார். நினைவு தெரிந்த நாளிலிருந்து மாடசாமி மாட்டு வண்டியில் தண்ணீர் எடுத்துக் கொண்டேதான் இருப்பார். பம்பாயில் ஒரு வங்கியில் கடனுக்கு அலைந்த அம்பானிகள், இன்று அந்த வங்கியையே வாங்குமளவுக்கு உயர்ந்துகொண்டே இருப்பார்கள்.

*

கருத்துகள்

12 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
  1. Trade unions controlled by left are comfortable in telling their members what the party's high command tells them than in educating their members. Time and again they will
    invite only the economists and others approved by the party. They will not even introduce alternative views to their members.
    For them only Prabat Patnaiks and Venkatesh Athreyas matter as economists. So where is the question of a frank debate or educating the members.What you people do is only brainwashing.

    பதிலளிநீக்கு
  2. It's a very useful article. You are explained the facts very clearly..

    பதிலளிநீக்கு
  3. அரசியல்வாதிகளுக்கு தரும் தேர்தல் நன்கொடைகளுக்கு மட்டும் முழு வரிவிலக்காம்...

    தேர்தலில் பணம் வாங்கிக் கொண்டு ஓட்டுப் போடும் மக்கா உங்களுக்கு இனி அதிக தொகைகள் கிடைக்கும். வாழ்க் ஜனநாயகம்.

    பதிலளிநீக்கு
  4. அருமையான அல்சல்!

    மறைமுக வரி, நேரடிவரி பற்றி தெரிந்தால் கொஞ்சம் விளக்கமாக பதிவிடுங்களேன்!

    பதிலளிநீக்கு
  5. //அதுவரை- முத்துப்பாண்டிகள் முப்பது வருடத்திற்கும் மேலாய் தெருக்களில் ஐஸ் விற்றுக் கொண்டுதான் இருப்பார். நினைவு தெரிந்த நாளிலிருந்து மாடசாமி மாட்டு வண்டியில் தண்ணீர் எடுத்துக் கொண்டேதான் இருப்பார். பம்பாயில் ஒரு வங்கியில் கடனுக்கு அலைந்த அம்பானிகள், இன்று அந்த வங்கியையே வாங்குமளவுக்கு உயர்ந்துகொண்டே இருப்பார்கள்.//

    ஹ்ம்ம்...:(

    பதிலளிநீக்கு
  6. மிக்க நன்றி அங்கிள். மொத்தப் பதிவுமே ரொம்ப ரொம்ப அவசியமான தகவல்களோடும் அலசல்களோடும்

    //யாருக்கோ வந்தது போல 90க்கும் அதிகமான சதவீதம் மக்கள் பட்ஜெட்டைப் பார்க்கிறார்கள். //

    //சகல மக்களுக்கும் பட்ஜெட் பற்றிய தெளிவு வரும் வகையிலான கல்வி இங்கு மிக அவசியம். அப்போதுதான் ஒரு தேசத்தில் மக்களின் அரசியல் நடவடிக்கைகள் முதிர்ச்சியும், பக்குவமும் பெறும். மாற்று அரசியல் என்றும் மக்களின் அரசியல் என்றும் பேசுபவகள் மிக தீவீரமாக இயங்க வேண்டிய புள்ளிகளில் இதுவும் ஒன்று. //

    ம்ம்ம்ம்ம்

    பதிலளிநீக்கு
  7. நீங்க ஒரு கட்டுரை எழுதலாமே
    மாடசாமிகள் அல்ல பொதுவாக அனைவருக்குமே பட்ஜெட் பற்றி அறிய முழுவிபரங்கள் தெரிவதில்லை
    அல்லது தங்களது துறையின் சாதக பாதகங்களை அலசிவிட்டு இருந்துதான்
    விடுகிறோம்.

    பதிலளிநீக்கு
  8. மாதவராஜ் வெகு நியாயமான தேவை. நீங்கள் சொல்லிய ஒவ்வொன்றுமே ஏற்றுக் கொள்ள வேண்டிய ஒன்றுதான். ஹாட்ஸ் ஆஃப்.

    பதிலளிநீக்கு
  9. இதில் குறை என் போன்ற வாக்காளர்களிடம் தான் உள்ளது.

    நடந்து முடிந்த நாடு ஆளும் தேர்தலில் என் போன்ற குப்பனும் சுப்பனும் முத்து பாண்டியும், மாடசாமி கோனாரும், ரத்தினம் நாடரும், அழகர்சாமி நாயக்கரும், அந்தோனியும், காஜா பாயும் எந்த அரசு எனக்கு நல்லது செய்யும், எந்த அரசு கல்வி, சுகாதாரம், விவசாய வளர்ச்சி தரும் (பிரணாப் முகர்ஜீ யா, சீதா ராம் எசூரியா- மாணிக் தாக்கூற வைகோ வா, ) என்று சிந்திக்காமல், தேர்தல் திருநாள் அன்று எனக்கு யார் அதிகம் பணம் கொடுக்கிறார்கள் என எண்ணி, பணத்தை வாங்கி என் வாக்கை விற்று விட்டேன்.

    இன்று நான் அழுது என்ன பயன். இன்று அழுவதிலோ, அடுத்தவரை குறை கூறுவதிலோ எனக்கு எந்த வித உரிமையும் கிடையாது.

    அதே போல மக்கள் தொலைகாட்சியில், பொதிகை யில் நிதி நிலை அறிக்கை குறித்த விவாதம் சிறிதேனும் நடை பெறுகிறது, அதை பார்க்க எனக்கு ஆர்வம் இல்லை,

    என் ஆர்வம் எல்லாம் மான் ஆட மயில் ஆட , கலக்க போவது யாரு மிமிக்ரியிலுமே உள்ளது.

    பதிலளிநீக்கு
  10. ஆனால் உள்ள படியே இந்த முறை காங்கிரஸ் சர்கார் முத்து பாண்டியையும், மாடசாமியையும், மாரியம்மளையும் தான் கருத்தில் கொண்டு தான் பட்ஜெட் தயாரித்து உள்ளது.

    ஓரளவு படித்த விபரம் தெரிந்த மாதவராஜ், வால்பய்யன், 49o ஆசாமிகளான ஞானி போன்றோரை மனதில் கொண்டு அல்ல.

    என்ன ஒரு சிறிய திருத்தம், சர்க்காரின் அக்கறை முத்து பாண்டியின் கல்வி அல்லது முத்து பாண்டி குடும்பத்தாரின் கல்வி பற்றி அல்ல, அவர் குடும்பத்தின் வாக்கு பற்றியே.
    அதனால் தான் நாங்கள் ஜவகர் ரோஜ்கர் திட்டத்திற்கு முப்பாதாயிரம் கோடி, இந்திரா காந்தி கிராம வளர்ச்சி திட்டதிற்கு நாப்பதாயிரம் கோடி ஒடுக்கி உள்ளோம்.

    இந்த திட்டங்கள் மூலமா தான் எங்கள் ஒன்றிய செயலாளர்களுக்கு பணம் கிடைக்கும், தேர்தலின் பொழுது வாக்குகளை விலைக்கு வாங்க முடியும்.

    எனவே எங்களின் பார்வை தெளிவாகவே தொலை நோக்கியே வர இருக்கும் தேர்தல்களை கருத்தில் கொண்டே உள்ளது.

    பதிலளிநீக்கு
  11. நல்ல ஆரோக்கியமான கருத்தை வைத்துள்ளீர்கள். பட்ஜெட் பற்றிய தெளிவும் அறிவும் சாதாரண மக்களுக்கும் தெரிந்தால்தான், அது தொழிலதிபர்களுக்கான பட்ஜெட்டா இல்லை மக்களுக்கான பட்ஜெட்டா என்பதை மக்கள் உணரமுடியும். பட்ஜெட்டை அலசி ஆராய்ந்து அவற்றைப் பற்றிய ஒரு முழுமையான நடுநிலையான ஆய்வை மக்களுக்குக் கொண்டுசெல்லவேண்டிய மிகப் பெரும்பாண்மையான பொறுப்பு ஊடகங்களையே சாரும்.

    பதிலளிநீக்கு
  12. அனானி!
    திறந்த, வெளிப்படியான விவாதங்களும், உரையாடல்களும் தேவை என்பதுதான் எனது கருத்தும்.

    ரூபஸ்!
    நன்றி.

    குடந்தை அன்புமணி!
    ஆமாம்... வாழ்க... ஜனநாயகம்!
    வளர்க பணநாயகம்!


    வால்பையன்!
    தங்கள் யோசனைக்கு நன்றி. முடியுமா என்று பார்க்கிறேன்.

    சந்தனமுல்லை!
    நன்றி.


    தீபா!
    நன்றி.

    J!
    முடியுமா என்று பார்க்கிறேன். யோசனைக்கு நன்றிங்க...


    நந்தா!
    நன்றி.


    குப்பன் யாஹூ!
    நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் என்பது தெரிகிறது. தங்கள் கோபம் மிக நியாயமானது.


    உழவன்!
    தங்கள் புரிதலுக்கு நன்றி.


    செய்தி வளையம்!
    நன்றி

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!