மாதவராஜ் பக்கங்கள் 8

“மதுரையை அப்படி ஆக்கப் போகிறேன்.... இப்படி ஆக்கப் போகிறேன்..” என வரிசை காட்டும் மத்திய மந்திரி அழகிரிக்கு இந்தச் செய்தி எவ்வளவு தூரம் முக்கியமானதாக இருக்கும் எனத் தெரியவில்லை. மதுரை வாடிப்பட்டி தாலுகாவில் உள்ள கொண்டையாப்பட்டியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியின் வகுப்பறைகள்  கக்கூஸ்களாக மாறிவிட்டிருக்கின்றன. 650க்கும் மேலே மாணவர்கள் படிக்கும் பள்ளியின் நிலைமை இதுவென அறியும்போது நமக்குக் கோபம்தான் வருகிறது. பள்ளியில் தடுப்புச் சுவர்கள் இல்லை. இரவு நேரக் காவலர்கள் இல்லை. சமூக விரோதிகளின் அனைத்து இழிவான காரியங்களுக்கும் இரவு நேர இடமாக பள்ளியின் வகுப்பறைகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றனவாம். காலையில் மாணவர்களே வந்து அனைத்தையும் சுத்தப்படுத்தி, அங்கே அமர்ந்து படிக்க வேண்டியிருக்கிறதாம். சில வகுப்பறைகளை ஒன்றும் செய்ய முடியாமல் முள்வேலி போட்டு அடைத்து வைத்திருக்கிறார்களாம். பல வகுப்புகள் திறந்த வெளியில் நடந்து கொண்டு இருக்கின்றனவாம்.

பெரிய பத்திரிகைகள் எதற்கும் இந்த அவலங்கள் எல்லாம் செய்திகளாகக் கூடத் தெரியவில்லை போலும். தீக்கதிரில் மட்டுமே இந்தச் செய்தி வந்திருக்கிறது. அரசுப் பள்ளிகள் இப்படி இருண்டு கிடக்க, தனியார் பள்ளிகள், கட்டாய வசூல் செய்து இரவுகளிலும் மின்னிக் கொண்டு இருக்கின்றன. வாழ்க பாரதம்!

0000

இப்போதும் நினைவில் இருக்கிறது. எல்லா பத்திரிகைகளிலும் முன்பக்கங்களில் நமது வீரர்களின் சிரித்த முகங்களும், கோப்பையும்தான் இருந்தன. சென்ற முறை 20-20 உலகக் கோப்பை வென்று வந்த வீரர்களுக்கு மும்பையில் கொடுக்கப்பட்ட வரவேற்பு என்ன சாதரணமான ஒன்றா? எத்தனை கி.மீக்கள் நீளமானவை அந்த நினைவுகள்! பிரத்யேக சிறப்பு வாகனத்தில் கையசைத்து கையசைத்து போனார்கள் வெற்றி பெற்றவர்கள். தேசமே உற்சாகத்தில் கொப்பளித்த போனதாய் அப்படியொரு வேகம் ஊட்டப்பட்டிருந்தது. இன்று அத்தனையும் நேர் எதிராய் திரும்பி இருக்கிறது.

நேற்றைக்கு முந்திய இரவில் முடிந்து போன கதையாகிவிட்ட உலகக் கோப்பை வாய்ப்புகள் நம் வீரர்களை தோல்வியின் ரணத்தோடு துரத்திக்கொண்டு இருக்கின்றன. இந்த சோக முடிவை எழுதியவர் டோனியென்று குற்றஞ்சாட்டப்படுகிறது. இந்திய கிரிக்கெட் விளையாட்டு வீரர்கள் மீது சரமாரியாக கோபங்கள் காட்டப்படுகின்றன. டோனியின் படங்கள் அவரது சொந்த ஊரிலேயே தீ வைத்து கொளுத்தப்படுகின்றன.

இந்த பைத்தியக்காரத்தனங்களை என்னவென்று சொல்வது. விளையாட்டு என்றால் வெற்றியும் இருக்கும். தோல்வியும் இருக்கும். வென்றால் தலையில் தூக்கி வைத்து ஆடுவதும், தோற்றால் கீழே போட்டு உடைப்பதும்தான் ரசிகத் தன்மையா? இது விளையாட்டுக்கான மரியாதையும் இல்லை. அழகும் இல்லை. அதே நேரம் இங்கு கோபம் கொள்ளவும், கொந்தளிக்கவும் ஆயிரமாயிரம் இருக்கின்றன. அவைகளை நம் இந்தியர்கள் வாயில் சுயிங்கம் மென்றபடி பார்த்துக் கொண்டு இருப்பார்கள்.

0000

அனைத்து சமத்துவபுரங்களிலும் பெரியார் சிலை அமைக்கப்படுமாம். துணைமுதல்வர் ஸ்டாலின் அறிவித்திருக்கிறார். சந்தோஷமாக இருக்கிறது. ஆனால் பெரியாரின் கருத்துக்களையும், சிந்தனைகளையும் மக்களிடம் கொண்டு போகாமல் வெறும் சிலைகளை அமைத்து என்ன ஆகப் போகிறது. சிலைகளுக்கு சேதம் வந்தால் பொங்கி எழுகிற சமூகம் அந்தச் சிலைகளாக நின்று கொண்டு இருப்பவர்களின் கருத்துக்கள் சிதைக்கப்படும் போது அமைதியாக இருப்பது விசித்திரமானது. ஆதலினால், பெரியார் நிச்சயம் சந்தோஷப்பட மாட்டார்.

*

கருத்துகள்

8 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
  1. ///அதே நேரம் இங்கு கோபம் கொள்ளவும், கொந்தளிக்கவும் ஆயிரமாயிரம் இருக்கின்றன. அவைகளை நம் இந்தியர்கள் வாயில் சுயிங்கம் மென்றபடி பார்த்துக் கொண்டு இருப்பார்கள்///
    சுயிங்கம் மென்றாலும் பரவாயில்லை வெறுவாயை மெல்லுவாங்கப்பா..

    அப்புறம் பள்ளிகள் எப்படி இருக்கணும்னு முன்னுதாரணம் வேணுமா? போய் பாருங்கய்யா பத்மா சேஷாத்ரி போல கான்வெண்டுகளை.... அடப் போங்கடா.. நீங்களும் உங்க Educational Systemம். என்றைக்கு அரசாங்கமே முன்வந்து இந்த விபசார விடுதிகளை (அதாங்க.. கான்வெண்ட்.. கல்வியை விலைபேசி வித்தா அது விபசாரம்) மூடுகிறதோ.. அன்றைக்கு இப்படி பள்ளிகள் கக்கூஸாவதும் தடுக்கப்படும்

    பதிலளிநீக்கு
  2. கல்விக்கூடங்கள் மற்றும் கல்வி குறித்தும் இங்கே விரிவான விவாதங்கள் இங்கே நடக்கவில்லை. அந்த சிந்தனைகளும் ஆட்சியிலிருப்பவர்களிடம் இருக்கும் என்று நாம் எதிர்பார்க்கவும் கூடாது. எனினும் ஒரு சின்ன கேள்வி, கல்விக்கூடங்கள், கல்வி, கற்பித்தல் குறித்து ஆசிரிய சங்கங்களும் ஏதேனும் செய்யலாமே!. சிறு வயது முதலே நமக்கு தோல்வி என்பது இயல்பு என்று பெற்றோர்கள் தொடங்கி கல்விக்கூடங்கள் வரை கற்பிக்கபட‌வில்லை. அதன் எதிரொலியே தோனி தொடங்கி பல கிரிக்கெட் விளையாட்டு வீரர்கள் தோல்வி சமயத்தில் தாக்கப்படுவது. கலைஞர் , பெரியார் சிலைகள் தெருக்கள் தோறும் வைப்பதை விட பாட புத்தங்களில் அவரது சிந்தனைகளை வைக்க வேண்டும். தமுஎகசவின் மிக நியாயமான கோரிக்கையான பெரியார் நூல்கள் நாட்டுடமையாக்குதல் என்பதை கலைஞர் உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.

    பதிலளிநீக்கு
  3. Dear Mathavaraj,
    I started viewing your blogspot only two days back. It is very interesting and useful.
    I intend using Kondaiampatti school's condition in Puthiya Aasiriyan
    Thank you
    K. Raju

    பதிலளிநீக்கு
  4. மூன்றுமே வருத்தமளிக்கின்ற செய்திகள்.

    பதிலளிநீக்கு
  5. //
    டோனியின் படங்கள் அவரது சொந்த ஊரிலேயே தீ வைத்து கொளுத்தப்படுகின்றன.

    இந்த பைத்தியக்காரத்தனங்களை என்னவென்று சொல்வது. விளையாட்டு என்றால் வெற்றியும் இருக்கும். தோல்வியும் இருக்கும். வென்றால் தலையில் தூக்கி வைத்து ஆடுவதும், தோற்றால் கீழே போட்டு உடைப்பதும்தான் ரசிகத் தன்மையா?
    //

    இதில் கவலைப்பட ஒன்றும் இல்லை...ஒரு சாதாரண விளையாட்டில் ஜெயித்தவர்களை ஏதோ நாட்டுக்கு உழைத்த சாதனையாளர்கள் போல கொண்டாடுவதும், தோற்றவர்களை தேசத்துரோகிகள் போல கொடும்பாவி கொளுத்துவதும் வேலை வெட்டி இல்லாத, வேறு எந்த பொறுப்பும் இல்லாத நபர்கள் செய்வது..

    எனக்கு தெரிந்து, ஒரு வேலையில் இருக்கும் நபர், அது கூலி வேலையாக இருந்தாலும் சரி, பெரிய தொழிலதிபராக இருந்தாலும் சரி, இது போன்ற வெட்டி வேலைகளில் ஈடுபடுவது இல்லை..

    இவர்களுக்கும் ரசிகத்தன்மைக்கும் எந்த சம்பந்தமுமில்லை...இவர்களைப் பற்றி கவலைப்படுவதிலும் அர்த்தமில்லை...

    பதிலளிநீக்கு
  6. //
    Keith Kumarasamy said...
    ///அதே நேரம் இங்கு கோபம் கொள்ளவும், கொந்தளிக்கவும் ஆயிரமாயிரம் இருக்கின்றன. அவைகளை நம் இந்தியர்கள் வாயில் சுயிங்கம் மென்றபடி பார்த்துக் கொண்டு இருப்பார்கள்///
    சுயிங்கம் மென்றாலும் பரவாயில்லை வெறுவாயை மெல்லுவாங்கப்பா..

    அப்புறம் பள்ளிகள் எப்படி இருக்கணும்னு முன்னுதாரணம் வேணுமா? போய் பாருங்கய்யா பத்மா சேஷாத்ரி போல கான்வெண்டுகளை.... அடப் போங்கடா.. நீங்களும் உங்க Educational Systemம். என்றைக்கு அரசாங்கமே முன்வந்து இந்த விபசார விடுதிகளை (அதாங்க.. கான்வெண்ட்.. கல்வியை விலைபேசி வித்தா அது விபசாரம்) மூடுகிறதோ.. அன்றைக்கு இப்படி பள்ளிகள் கக்கூஸாவதும் தடுக்கப்படும்

    June 16, 2009 4:41 PM
    //

    ஆக, அரசுப் பள்ளிகளை மேம்படுத்த வேண்டும் என்ற எண்ணம் உங்களுக்கு தோன்றக் கூடவில்லை...கான்வென்டுகளை மூட வேண்டும் இது தான் உங்களுக்கு தோன்றுகிறது...

    பத்மா சேஷாத்ரியை மூடிவிட்டால், அரசு பள்ளிகள் மேம்பட்டு விடுமா??

    பதிலளிநீக்கு
  7. //
    “மதுரையை அப்படி ஆக்கப் போகிறேன்.... இப்படி ஆக்கப் போகிறேன்..” என வரிசை காட்டும் மத்திய மந்திரி அழகிரிக்கு இந்தச் செய்தி எவ்வளவு தூரம் முக்கியமானதாக இருக்கும் எனத் தெரியவில்லை. மதுரை வாடிப்பட்டி தாலுகாவில் உள்ள கொண்டையாப்பட்டியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியின் வகுப்பறைகள் கக்கூஸ்களாக மாறிவிட்டிருக்கின்றன.
    //

    //
    பெரிய பத்திரிகைகள் எதற்கும் இந்த அவலங்கள் எல்லாம் செய்திகளாகக் கூடத் தெரியவில்லை போலும். தீக்கதிரில் மட்டுமே இந்தச் செய்தி வந்திருக்கிறது.
    //

    அழகிரிக்கு தெரிவது இருக்கட்டும்...அரசு அதிகாரிகளுக்கு தெரியுமா?? ஒரு பள்ளியை பராமரிக்க வேண்டியதில் கல்வித்துறையின் அதிகாரிகளுக்கும் பொறுப்பு உண்டா இல்லையா?? இப்படி பொறுப்பற்ற அரசு அதிகாரிகளை பற்றியும் தீக்கதிர் எழுதியிருக்கிறதா???

    அமைச்சர்களின் ஊழலுக்கும் அடிப்படை அரசு அலுவலர்களே...இவர்கள் திருத்தப்படாத வரை, அழகிரி என்ன, அந்த அழகர் கோவில் ஆண்டவனே வந்தாலும் நிலைமை மாறாது!

    பதிலளிநீக்கு
  8. keith kumarasamy!
    உங்கள் கோபம் புர்கிறது. வருகைக்கும், பகிர்வுக்கும் நன்றி.

    இராம்கோபால்!
    மிகச் சரியாக சொன்னீர்கள்.

    ராஜூ சார்!
    வணக்கம். வருகைக்கும், பகிர்வுக்கும் நன்றி.


    தமிழினி!
    நன்றி.


    ஆ.முத்துராமலிங்கம்!
    நன்றி.


    அது சரி!
    உங்களது கருத்துக்களில் சில முரண்பாடுகள் இருக்கின்றன. முக்கியமாக ஒன்று.அரசியல்வாதிகள் சரியானால்தான், அதிகாரிகள் சரியாவார்கள் என்பதுதான் சரியாக இருக்கும். ஒழுக்கம் என்பது மேலிருந்துதான் கீழ் வர முடியும்.

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!