மாதவராஜ் பக்கங்கள் - 32



இனி அவன் முகத்தைப் பார்க்க முடியாது. நாற்பது வருடங்களுக்கும் மேலான நட்பில் விளைந்த ‘மாது’ எனும் அந்தப் பாசக்குரலைக் கேட்க முடியாது. சென்னையில் கால் வைக்கும் போதெல்லாம் அழகுவேலும் இங்குதான் இருக்கிறான் என்று ஒரு சந்தோஷத்தில் எழும் நினைப்பு இனி அறுக்கும். முந்தா நாள் இரவு அவன் இறந்து விட்டான்.

அவனை உங்களுக்குத் தெரியும்.  பழையபாட்டுக்களின் மீது பெருங்காதல் கொண்டவன். சென்ற மே 26ல், கனவாக வாழ்ந்தவன் என்று, ரஞ்சித் எனும் சின்னஞ்சிறு நண்பன் காலமானதை இங்கு பகிர்ந்திருந்தேன். அவனது தந்தையும்,  என் பால்ய சினேகிதனுமான அழகுவேல். ஒரே பள்ளி, ஒரே வகுப்பு, ஒரே பெஞ்ச் என கூடவே வந்தவன். எவ்வளவு, எவ்வளவு பேசி, அலைந்து திருந்திருக்கிறோம். எல்லாம் எனக்குள் உருகிக்கொண்டு இருக்கின்றன இந்த நேரத்தில்.

இரண்டு வருடங்களுக்கு முன்பு, அவன் தொண்டையில் வந்திருந்த தைராய்டு கட்டியை  ஆபரேஷன் செய்து இருந்தான்.  ஆனால், அது உள்ளுக்குள்ளேயே இருந்திருக்கிறது. கடந்த சில நாட்களாக மூச்சுத்திணறல் ஏற்பட்டு, அப்பல்லோவில் சிகிச்சை  பெற்றிருக்கிறான். நிலைமை விபரீதமான பிறகுதான், மூன்று நாட்களுக்கு முன்பு இன்னொரு நண்பன் போன் செய்து சொன்னான்.  ஒரு தடவை அவன் முகத்தையாவது பார்த்துவிடுவோம் என்பதற்குள் எல்லாம் முடிந்துவிட்டது. மகன் இறந்த வலி, இனி அவனுக்கு இருக்காது. ஆனால், அந்த குடும்பத்திற்கு.....

சுனாமியில், பூகம்பங்களில் என மனிதர்கள் எவ்வளவோ, பெரும் இழப்புகளை தாங்கிக்கொண்டு இருக்கிறார்கள். அன்றாட வாழ்வை சமாளிக்க முடியாமல் மூச்சுத் திணறிக்கொண்டு இருக்கிறார்கள் எத்தனையோ  கோடி மனிதர்கள். அவர்களின் துயரங்களின் முன்னால் இது ஒன்றுமில்லை எனும் பிரக்ஞையைத்  தாண்டியும்  வதைக்கிறது. ‘ஐயோ’ என உள்ளுக்குள் அலறிக்கொண்டு இருக்கிறேன்.

அடிக்கடி பார்ப்பதில்லை, பேசுவதில்லை என்றாலும், எங்கோ அவரவர்கள் இருக்கிறார்கள் என்பதே, இயல்பாக நம்மை சஞ்சரிக்க வைக்கிறது. அப்படியில்லை எனும்போது, எதுவும் செய்யத் தோன்றாமல் திகைத்துப் போகிறோம்.

’போன்புக்’கில் அவனது பேர்தான் முதலில் இருக்கும். அழைக்கும் போதெல்லாம் ‘சிங்கார வேலனின்  தேவா’ எனும் பாடல் வந்து தடவும். இனி, அந்தப் பாடல் ஒலிக்கும் போதெல்லாம் அழகுவேல் என்றே கேட்கும்....

அழகுவேலைப்பற்றி…
மாதவராஜ் பக்கங்கள் - 24
கனவாக வாழ்ந்தவன்!
கொஞ்சம் ஏக்கம், கொஞ்சம் சந்தோஷம், கொஞ்சம் யோசனை

கருத்துகள்

13 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
  1. ஃஃஃஃ ‘ஐயோ’ என உள்ளுக்குள் அலறிக்கொண்டு இருக்கிறேன்.ஃஃஃஃ

    எழுத்துக்கள் தான் அதற்கு மருந்திடுகிறது ஐயா...


    அன்புச் சகோதரன்...
    ம.தி.சுதா
    ஈழத் தமிழனுக்கு கருணாநிதியில் பிடித்த ஒரே சம்பவம்

    பதிலளிநீக்கு
  2. :((( என்ன சொல்வதென்றே தெரியவில்லை, அந்தத் தாய்க்கும் மகளுக்கும். பேரிழப்பைத் தாங்கும் தைரியம் வேண்டும்.

    பதிலளிநீக்கு
  3. //அடிக்கடி பார்ப்பதில்லை, பேசுவதில்லை என்றாலும், எங்கோ அவரவர்கள் இருக்கிறார்கள் என்பதே, இயல்பாக நம்மை சஞ்சரிக்க வைக்கிறது. அப்படியில்லை எனும்போது, எதுவும் செய்யத் தோன்றாமல் திகைத்துப் போகிறோம்//

    ஆம்! ;-(

    நண்பரின் ஆத்மா சாந்தியாகட்டும் மாது.

    பதிலளிநீக்கு
  4. Very sad. Hearty condolences. How this family is going to recover from this double tragedy. Sad.

    பதிலளிநீக்கு
  5. நண்பர் அழகுவேலுவின் மறைவுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.

    பதிலளிநீக்கு
  6. மாதண்ணா!
    கடைசியாக சென்னையில் வைத்துப் பார்த்த அழகுவேல் அண்ணனின் சோகமுகம் நினைவில் நிற்கிறது. அவர்கள் குடும்பத்தை நினைத்தால்...
    :-(((

    பதிலளிநீக்கு
  7. வருத்தம் தரும் செய்தி.. அவரின் குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்கள்...

    அவரின் ஆன்மா சாந்தியடையட்டும்.

    பதிலளிநீக்கு
  8. அவரின் குடும்பத்தினருக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்.

    பதிலளிநீக்கு
  9. அன்பு மாதவராஜ்,

    அவர் உடல்நிலை சரியில்லாமல் இருக்கிறார் என்று நாம் பேசிக் கொண்டபோது, மனம் குவித்து பிரார்த்தனை வந்தது மாதவராஜ். அதுவும், மகனை இழந்த குடும்பம் இப்போது நண்பரும் இறந்தது எவ்வளவு பெரிய இழப்பு... யாராலும் இந்த இழப்பை அதே வீரியத்துடன் புரிந்து கொள்ளமுடியாது... யாராலும் பெரிதாய் சமாதானம் சொல்லவோ இழப்பை இட்டு நிரப்பவோ முடியாது.

    உங்களின் பால்ய நண்பனின் நிலை உங்களை எவ்வளவு வேதனைக்குள்ளாக்கியது, உங்கள் மனத்தை எவ்வளவு சங்கடப்படுத்தியது என்பதை நானறிந்தேன் மாதவராஜ்.

    என்னுடைய அஞ்சலியும், அனுதாபங்களும் என்ன செய்து விடமுடியும்... அந்த குடும்பத்திற்கு... பிரார்த்தனைகள் மட்டுமெ மிஞ்சுகிறது மாதவராஜ்.

    அன்புடன்
    ராகவன்

    பதிலளிநீக்கு
  10. இழப்பை ஈடு கட்ட முடியுமா என்ன..
    அவரின் குடும்பத்தாரும், நண்பர்களும் மீண்டு வர எனது பிரார்த்தனைகள்.

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!