மழைக் காலம்

pattuppoochi எல்லாம் உருகி, எங்கும் நிறைந்து கிடக்கிறது. தென்னங்கீற்றில் சரம் கோர்த்து திரண்டு மெல்ல மெல்ல வழிகின்றன துளிகள். சொட்டும் சப்தங்கள் துல்லிய வரிசையோடு கேட்கின்றன. ஈரம் ஊறித் திரண்ட நெல்லி மரக்கிளைகளில் பச்சை மின்னும் பட்டுப் பூச்சிகள் ரகசியமாய் நகர்கின்றன. நீர்ப்புகையாய் மண்டிய வெளியில் குடைகளோடும், தலைப்பாகைகளோடும் ஒன்றிரண்டாய் மனிதர்கள் தென்படுகிறார்கள். நேற்றிலிருந்து விடாமல் இப்படித்தான் இருக்கிறது. ஆடாமல், அசையாமல் மோனத்திருக்கிறது வையம்.

மனிதர்கள்  யாரும் சத்தமாய் பேசுவதே இல்லை என்பதாய்த் தெரிகிறது. வெளிக்காட்டாமல் உள்ளுக்குள்ளே எல்லாம் நிகழ்கிறது. வேப்ப மரங்களுக்குள் இரண்டு காகங்கள் கரையாமல் ஒடுங்கி உட்கார்ந்திருக்கின்றன. நகரும் ஓவியமாய் மங்கிய ரெயிலொன்று தொலைவில். அதனிடமும் ஆர்ப்பரிப்பும் இரைச்சலும் இன்று இல்லை. எதுவும் கலைய விருப்பமற்று இருக்கிறது.

எல்லாவற்றையும் கிழித்துக்கொண்டு இரண்டு சிறுவர்கள் தெருவில் ஓடினார்கள் நனைந்துகொண்டே. “இன்னிக்கு எங்களுக்கு லீவு!” 

கருத்துகள்

11 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
  1. கட்டுரையையும் கவிதையாய் தர முடிகிறது உங்களுக்கு...

    கடைசி வரியில் பளீர் மின்னல். குழந்தைகளைக் கண்டால் ’பொறாமையாய்’ இருக்கிறது; மீண்டும் கிட்டுமா அந்த ‘தொலைந்த சொர்க்கம்’?

    பதிலளிநீக்கு
  2. எனக்குத் தன் சுடு சோறு சாப்பிட்டுட்டு வரட்டுமா...

    அன்புச் சகோதரன்...
    மதி.சுதா
    http://mathisutha.blogspot.com/

    பதிலளிநீக்கு
  3. ஃஃஃஃஃ “இன்னிக்கு எங்களுக்கு லீவு!”ஃஃஃஃ
    பிழைக்கத் தெரிந்த பசங்க...

    பதிலளிநீக்கு
  4. //எல்லாவற்றையும் கிழித்துக்கொண்டு இரண்டு சிறுவர்கள் தெருவில் ஓடினார்கள் நனைந்துகொண்டே. “இன்னிக்கு எங்களுக்கு லீவு!” //

    இந்த சந்தோஷத்தை அனுபவிக்கக் கொடுத்து வைத்திருக்க வேண்டும். இது போன்ற அருமையான நாட்களைக் கடந்து தான் நானும் வந்திருக்கேன்.

    இந்த வயதிலும் சந்தோஷமாக சொல்வேன். "எனக்கு தினம், தினம் லீவு!"

    பதிலளிநீக்கு
  5. அன்பு மாதவராஜ்,

    விடாமல் பெய்கிறதாம்... யார் சொன்னார்களோ... பெய்யெனப் பெய்கிறது மழை... மழை நேரத்தில் நண்பனின் வீட்டைத் தேடி அலையும் வண்ணநிலவனின் கதை ஞாபகம் வருகிறது... எத்தனையோ பேர் அது மாதிரி இப்போதும் யாரையாவது தேடி கொண்டிருக்கலாம்... வைகையில் வெள்ளம் போவது பற்றி என் தம்பி பேசினான்... இரண்டு கரையையும் அடைத்து கொண்டு ஓடும் வைகை... அகண்ட காவேரியாய் தெரிவதாய் சொன்னவன்... பேச்சிலிருந்து...யார் யாரோ வந்து போனார்கள்... ஏ.கே.ராமானுஜம், தி.ஜா... இன்னும் பலர். அடுக்களை எப்படி இருக்கும் மழைக்காலங்களில், மதிய நேரங்களின் மழை எத்தனை சுகம்... எல்லோருக்கும் மழை பார்த்தல் போய் கேட்கும் பக்குவம் வந்து விட்டது, மழை பெய்யும் போது... அடைமழை காதுகளுக்கானது என்று தெளிவார்கள், மழை நின்ற பிறகு தான் வாய் திறப்பார்கள், மழை பற்றி பேசிக்கொண்டே இருப்பார்கள் சில காலங்களுக்கு...

    மழை நின்ற பின் பச்சைக்கண்ணாடித் தேரென நிற்கும்... மரங்கள்... மழை சில மனிதர்களையும், நினைவுகளையும் ஞாபகப்படுத்த தவறுவதில்லை... மழையுடன் சம்பந்தப்படுத்தப் பட்ட விஷயங்கள் மறக்கமுடிவதில்லை... நான் பிறந்த போதும் தீபாவளி அடைமழை... மழையில் லயித்தவன் அழவே இல்லை... மழையில் நடந்த திருமணம், மழையில் நனையும் ரயில், (மிகப்பெரிய சகிக்கமுடியாக்கொடுமை ரயில் மழையில் நணைவது... பாப்லோ நெருடாவிற்கு...) ஒடுங்கியிருக்கும் ஆடுமாடுகள், கோழிகள்... தார்சால் முகப்பில் ஸ்படிக மணிகளாய் தொங்கும் துளிகள், மழை ஜலதரங்கம், இசை துறந்த பறவைகள், முன் நெற்றி மயிர் விலக்கி இந்தாங்க என்று நீட்டும் தேனீர்... மழை சுகமானது மாதவராஜ்...

    அன்புடன்
    ராகவன்

    பதிலளிநீக்கு
  6. பயங்களுத்தான்னே லீவுடுறாங்க, நம்முளுக்கு ஒருத்தரும் லீவுடுறதில்ல

    _____________


    ம.தி.சுதா சோறு மழை ஈரத்திற்கு கூட ஆறவில்லை போல்!!! :))

    பதிலளிநீக்கு
  7. எவ்வளவு ஒரு ரம்மியமா இருக்கு படிக்க.

    ஆர்ப்பரிக்கும் மழையில்
    பெருகும் சிறுவர் சந்தோசம்
    “இன்னிக்கு எங்களுக்கு லீவு'.

    மழை
    கேட்க்கும் போது கொடுக்காது
    கொடுக்கும் போது தங்காது
    தங்கும் போது தாங்காது
    தாங்கும் போது பெருகாது!

    பதிலளிநீக்கு
  8. அன்புள்ள நண்பரே!
    ஒரு எளிமையான template தேர்ந்தெடுத்தால் நன்றாக இருக்கும். உங்க பக்கம் ஓபன் ஆவதுக்கும் க்ளோஸ் பண்ணுவதற்கும் மிக சிரமாக இருக்கு. உங்க பக்கத்திலுள்ள பல நுண்ணறிவு சாதனங்களும் (widgets , apps ) ஓடுவதற்கு இழுத்துப் பிடிக்கிறது. நன்றி.

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!