மாதவராஜ் பக்கங்கள் - 27

raghavanதிவர் செல்வேந்திரனின் திருமணத்திற்கு சென்று வந்த அனுபவக்குறிப்புகளில் பதிவர் ராகவனின் ‘திருப்பதி ஆசாரியின் குடை சிறுகதையைக் குறிப்பிட்டு இருந்தேன். எழுத்தாளர் வண்ணதாசன் அந்தக் கதையைப் படித்துவிட்டு, “உங்களால் அந்த சிறுகதையை வாசிக்க முடிந்தது. இப்படி எழுதுகிற கைதான் நமக்கு வேண்டியதும், நாம் தேடுவதும்” என குறுஞ்செய்தி அனுப்பி இருந்தார். எவ்வளவு அற்புதமான மனதும், சிந்தனையும் எழுத்தாளர் வண்ணதாசனுக்கு. இப்படிக் கொண்டாடும் எழுத்தாளர்கள் மிகச் சிலரே இருக்கிறார்கள். தன் எழுத்துக்கு அங்கீகாரம் காண விரும்பும் ஒரு இளம் படைப்பாளிக்கு இதைவிட வேறு என்ன வேண்டும். பரிசுகளையும், விருதுகளையும் விட இதுவே சிறந்ததென்பேன். அன்பின் ராகவன்! உங்கள் குடையை விரித்து அதற்குள்ளிருந்து கதைகளை எடுத்து எல்லோருக்கும் கொடுத்துக்கொண்டே இருங்கள்.

தீபாவிற்கு (சிதறல்கள்) இரண்டாவது குழந்தை பிறந்திருக்கிறது. சனி, ஞாயிறில் சென்னை சென்று பார்த்து வந்தேன். பொத்தி வைத்திருந்த அந்தச் சின்னஞ்சிறு மனுஷியை என் கைகளில் தந்தாள். பொதுவாக, பிறந்த குழந்தையைக் கையில் வைத்திருக்கவே எனக்கு முடியாது. ஆசையாய் இருந்தாலும் சிலிர்ப்பும், நடுக்கமுமாய் இருக்கும். கொஞ்ச நேரம் வைத்திருந்தேன். அவ்வளவு மிருதுவான, இறகுபோன்ற ஸ்பரிசம் திக்குமுக்காட வைக்கிறது. முகம் நெளித்து உலகம் காண கண் திறந்து பார்ப்பது ஆதிப் புதிர்களை அவிழ்ப்பதாய் இருக்கிறது. பார்த்துக்கொண்டே இருந்தேன். இப்படித்தானே உலகின் மனிதர்கள் எல்லோருமே ஒரு நாள் இருந்திருப்பார்கள்!

ழுத்தாளர் சுஜாதாவின் லாண்டரிக் கணக்கும் பத்திரிகைகளில் பிரசுரமாகி பிரபலமானது. வைரமுத்துவின் மகன் சினிமாவுக்குப் பாட்டு எழுதினால் ஊரும் உலகும் அறியும். பாவப்பட்ட ஒரு எழுத்தாளனின் மகன் கவிதை எழுதினால் யாரறிவார். பதிவுலகமாவது அறியட்டுமே.

“பௌர்ணமி பார்க்க முடியாத
எதிர்ப்பக்க இருக்கை
ஏமாற்றத்தில் தூங்கிப் போக
அதிகாலையில்
என்னை வேடிக்கை பார்த்தபடி
என் ஜன்னலில் நிலா”

படித்ததும், சட்டென சந்தோஷம் ஒட்டிக்கொள்கிற கவிதையிது. எழுதியவர் எழுத்தாளர் மேலாண்மைப் பொன்னுச்சாமியின் மகன் வெண்மணிச்செல்வன்.

மூன்று தினசரிகளை வாங்குகிறோம் வீட்டில். பணிபுரியும் பள்ளிக்கு வரவழைத்து சாயங்காலம் ஹிந்துவைக் கொண்டு வருவாள் அம்மு. தோழர் என்று அழைத்து தந்துவிட்டுப் போவார்கள் தீக்கதிர் பத்திரிகையை. தினகரனைப் போடுபவர்கள் வராண்டாவில் வீசிச் செல்கிறார்கள். அதை இழுத்து விரித்து அதன் மேல் தினமும் நாய் படுத்துக் கொள்கிறது.

கருத்துகள்

21 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
  1. ராகவன், தீபா மற்றும் வெண்மணிச் செல்வனுக்கு வாழ்த்துகள்..

    பதிலளிநீக்கு
  2. வாழ்த்துகள் ராகவன், தீபா!

    பகிர்வுக்கு நன்றி மாது!

    பதிலளிநீக்கு
  3. நண்பர் ராகவன், சகோதரி தீபா மற்றும் வெண்மணிச்செல்வன் மூவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  4. மாது,

    நேற்றே அந்த கதையை படித்தேன். எஸ்ராவின் கதை படித்தை போல உணர்ந்தேன். இதை தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம். அந்த அளவிற்கு சுவையாக இருந்தது.

    //தினகரனைப் போடுபவர்கள் வராண்டாவில் வீசிச் செல்கிறார்கள். அதை இழுத்து விரித்து அதன் மேல் தினமும் நாய் படுத்துக் கொள்கிறது.//

    பிடிக்கவில்லை என்றால் வாங்குவதை நிறுத்திவிடுவதுதானே சரி!!!!

    பதிலளிநீக்கு
  5. 'திருப்பதி ஆசாரியின் குடை' கதையைப் படித்தேன். நல்ல ஆற்றொழுக்கான எழுத்து நடை... கூடல்கூத்தனுக்கும் அவரை அறிமுகப்படுத்திய உங்களுக்கும் நன்றி! கடைசியில் இந்து, தீக்கதிர், தினகரன் ஆகிய மூன்றைப் பற்றியும் எழுதியிருக்கிறீர்கள்... தீக்கதிரைப் பற்றி எதுவும் சொல்ல விரும்பவில்லை... அதென்ன மதுரையில் மூன்று பேரைக் கொளுத்திக் கொன்ற தினகரன் மேல் நாய் படுத்துக்கொள்கிறது! இலங்கையில் பல்லாயிரக்கணக்கான தமிழர்களைக் கொன்ற இராசபக்சேவிற்கு விருந்து போடும் இந்து மட்டும் தகுந்ததோ! நன்றாக விசாரித்துப் பாருங்கள்! பள்ளிக்கூடத்தில் நாய் இருந்திருக்காது!

    பதிலளிநீக்கு
  6. வாழ்த்துகள் தீபா

    வாழ்த்துகள் வெண்மணிச் செல்வன்

    ராகவனுக்கு எழுதிய தனிமடல் வரிகள் சில ...

    ப்ரியங்கள் சிமிழ் திறந்த படி இருக்கும் சொற்களுக்குரிய ராகவன் ...

    பிரபஞ்சத்தின் ஜன்னல்கள் சாத்திக் கொள்ளும் போது அகம் பேசத்துவங்குகிறது மனசின் ரகசிய அறைகளில் குட்டியிட்டிருக்கும் பூனைகளின் குழந்தைக் குரலில் இன்னும் சாம்பல் பூத்து அடிமடியில் கங்கு வைத்துள்ள உணர்வு முடிச்சுகள். சொல்ருசி அறிந்தவன் பென்சிலை சீவிய படி இருக்கிறான் கடந்து போகும் பறவைக்காகவோ அந்தியின் மந்த மாருதத்திற்கோ பூப்பெய்தும் அடிவயிற்று சுருக்’ வேண்டியிருக்கிறது அவனுக்கு .

    இது உங்களுக்கான பர்ணசாலைக்காலம் ராகவன் .கவிதைகளைக் காட்டிலும் உரைநடையில் சொல் தன்னை எழுதிச் செல்கிற லாவகமும் சரளமும் வாய்த்திருப்பதாய் உணர்கிறேன் உங்கள் எழுத்துகளில் என் குற்றறிவில் .
    கவிதை ஒரு தண்டட்டி தோள் தொடும் கிழவியாய் விழுதிறக்கி இருக்கும் ஆல மரத்தின் கிளையளவு அகன்ற மேகத்தை ஒரு தெர்மாமீட்டரலகு பாதரசமாக்குவது.உரைநடை .. குப்பி சோப்பு நீரில் ஆகாசம் மறைப்பது மூச்சடைத்த குமிழ்களால் . எழுதுங்கள் திருப்பதி ஆசாரியின் குடையோ பூங்கதவோ ..

    வாழ்த்துகள் ராகவன் தொடர்ந்து எழுதுங்கள்.

    பதிலளிநீக்கு
  7. ராகவனின் பின்னூட்டங்களில் இருந்தே அவரது எழுத்துக்கு ஒரு அபரிமிதமான சக்தி புலப்படும். அதுவும் திருப்பதி ஆசாரியின் குடை’ சூப்பர் நா சூப்பர். வாழ்த்துகள்.

    பதிவர் தீபா மற்றும் குடும்பத்தாருக்கு வாழ்த்துகள். இனிமேல் நேஹா டைம்ஸ்க்கு போட்டியா!

    என்ன நண்பரே இது. 2 குழந்தை பெற்ற நீங்களே குழந்தை தூக்குவதற்கு நடுங்குவதா! இங்கெல்லாம் குழந்தை பிறக்கும் போதே (during delivery) கணவன் அருகிலிருந்து உதவி செய்யவில்லை என்றால் இழிவாக நோக்கப்படுவார். இங்கு பல ஆண்கள் பெண்ணுக்கு சரி நிகராக குழந்தை diaper மாத்துவதிலிருந்து எல்லாம் மனம் சுளிக்காமல் செய்வர்.

    வெண்மணிச்செல்வன் அவர்களுக்கு வாழ்த்துகள்.

    "அதை இழுத்து விரித்து அதன் மேல் தினமும் நாய் படுத்துக் கொள்கிறது. ".
    என்ன ஒரு வெருப்பானாலும், தயவு செய்து இது மாதிரி எல்லாம் எழுதாதீர்கள்.

    பதிலளிநீக்கு
  8. சேது சார், குழந்தைக்கு உதவி செய்வதைப் பற்றி நான் சொல்ல வரவில்லை. நான் சொல்ல வந்தது அல்லது சொல்ல முயன்றிருப்பது வேறு.

    //என்ன ஒரு வெருப்பானாலும், தயவு செய்து இது மாதிரி எல்லாம் எழுதாதீர்கள்//
    நான் தினம்தோறும் பார்க்கும், எங்கள் வீட்டில் நடக்கும் காட்சி அது. அதைக் குறிப்பிடும்போது அர்த்தங்கள் வெவ்வேறாக பிடிபடுகின்றன. இப்போதும் மிகவும் தாழ்மையுடன் தங்களுக்கு சொல்லிக்கொள்கிறேன், நான் குறிப்பிட்டதில் எந்தத் தவறும் இருப்பதாகத் தெரியவில்லை.

    பதிலளிநீக்கு
  9. "இப்போதும் மிகவும் தாழ்மையுடன் தங்களுக்கு சொல்லிக்கொள்கிறேன்,"

    என்னாதிது! மீசையை முறுக்கி தைரியமா சொல்லுங்க நண்பரே!

    என்னாதிது 'தாழ்மைஎல்லாம்?'. மாதவராஜ்னா வெளியே முரட்டுக்காளை.

    Take it easy.

    பதிலளிநீக்கு
  10. வெண்மணிச் செல்வன் , ராகவன் தீபா ஆகியோருக்கு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  11. அன்பு ராகவன்

    மாதவராஜ் போன்ற ஓர் அன்பு கொண்டாடி இருக்கப் போய்த் தான் இந்த திருப்பதி ஆசாரி என்னைப் போன்றோரது மனதருகேயும் வெயிலுக்கோ, மழையின் சாரலுக்கோ ஒதுங்க வந்தார். அவரை இனி எப்படி வெளியே விடுவது...
    வெளியே விட்டுத் தான் ஆகவேண்டும். பையம்மாவிற்கு அவரது குடைவிரிப்பிலிருந்து இட்லி கிடைக்கட்டும்.

    அந்தக் குடை அற்புதமான - உருக்கமான ஓர் உருவகம். அவரது தொழில் தருமத்தின் - வேலைத் திறனின் - வருமான சாமர்த்தியத்தின் அத்தனை நுணுக்கங்களுக்கும் பிடிபடாத அவரது அத்தனை ஏக்கங்களின் கூட்டு முடிச்சாக அவரது கக்கத்திலேயே இருக்கிறது அந்தக் குடை.

    வெயிலுக்கோ, மழைக்கோ, அன்னியர் எவரது பார்வைக்கோ திறக்காத அந்த முடிச்சின் ரகசியம் அவரைப் பார்த்து ஏனென்று கேட்காத பத்தினியின் பசிக்குக் காதல் உதிர விரியும் என்பதும், அப்போதும் அதிலிருக்கும் ராஜம்மாவின் மீதான ஒரு கடைக்கண் மயக்கம் உதிர்ந்துவிடாது பத்திரமாயிருக்கும் என்பதும்.................
    பார்த்துப் பார்த்துச் செய்த வேலைப்பாடுள்ள நகை மாதிரியான கதை.

    பெண் பார்க்கப் போன இடத்தில் அவளது மூக்குத்தியைச் செய்த ஆசாரியின் கலைத் தேர்ச்சியின் பிரமிப்பில் திருமணத்திற்கு இசைவு தெரிவித்துவரும் இடம் கவிதை என்றால், ஆசாரியின் பசியைப் பரிச்சயத்திலிருந்தே அறிந்து தாமாகவே அழைத்து டிபன் வழங்கி கவுரவிக்கும் ஓட்டல்கார அய்யரின் காருண்யம் கண்ணீர்.

    வாழ்த்துக்கள் ராகவன்.

    ஒரு கோடி நன்றி மாதவ் உங்களுக்கு......

    எஸ் வி வேணுகோபாலன்

    பதிலளிநீக்கு
  12. வெண்மணிச்செல்வன் கவிதை மிக அருமை....

    பதிலளிநீக்கு
  13. திருப்பதி ஆசாரியின் குடயை திறந்து பார்க்கவைத்ததர்க்கு மிக்க நன்றி....

    பதிலளிநீக்கு
  14. அன்பு மாதவராஜ்/காமராஜ்...

    இரட்டை நாயனங்கள்... மதுரை சேதுராமன் பொன்னுச்சாமி போல மல்லாரியில் கலந்து ஆடி வீதியில் அசைந்து அசைந்து போகும் உற்சவரும் கிறங்கும்... இரட்டை குழல் ஒற்றை இசை... என்ன சொல்வது மாதவராஜ்/காமராஜ்? வார்த்தைகள் அற்று மேலுக்காய் அன்பும் நன்றியும் என்று சொல்வது எப்படி ஈடாகும்... நீங்கள் செய்தது மிகப்பெரிய உதவி... உங்கள் இருவரின் பிரியம் வழியும் பேச்சு தான் எனக்கு உங்களிடம் ஒட்டிக் கொள்ள தோன்றியது... பிறகு உங்களிடம் இருக்கும் கோபம், பன்முகத்தண்மை, என்னை மேலும் நெருக்கியது. நீங்கள் இரண்டு பேரும் ஆளுக்கொரு விதத்தில் என்னை வழி நடத்துகிறீர்கள்... ரெண்டு பேரையும் பார்த்து, கட்டி பிடிச்சுக்கனும்னு தோனுது. உடற்சூடும், உள்ளங்கை மெத்தும் தவிர என்ன செய்ய முடியும் என்னால்... கண்ணெல்லாம் கலங்குது மாதவராஜ்/காமராஜ்... போதும்... “THE BEST WAY OF CONVEYING A MESSAGE IS, NOT TO CONVEY THAT” என்பது தான் இங்கேயும்... வாசிக்காத சங்கீதத்தின் மீது தான் இன்னும் இயற்றபடாத பாடல்கள் இருக்கின்றன.

    பேரன்புடன்
    ராகவன்

    பதிலளிநீக்கு
  15. லேபிளில் அப்பா பெயர் பார்த்ததும் ஆர்வமாய் வாசித்தேன்,என் கவிதை! கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை. அதிகாலையின் திடீர் மழையாய் கொட்டும் சந்தோஷம். அறிமுகத்திற்கும் வாழ்த்திய அனைவருக்கும் தோழமை நிறைந்த நன்றிகள்!

    பதிலளிநீக்கு
  16. ஷென்ஷி!
    பஸ்ஸில் பிஸியாய் இருக்கிற உங்களின் பின்னூட்டத்தை ரொம்பநாள் கழித்து தீராத பக்கங்களில் பார்க்கிறேன். சந்தோஷம்.

    பா.ரா!
    நன்றி சொல்லணுமா :-))))


    விக்கி உலகம்!
    நன்றி.


    சரவணக்குமார்!
    தம்பி.... பதிவுகள் எழுதக் காணோம். எழுதுங்க ஒரு நல்ல கதையை.


    உலகநாதன்!
    வீட்டில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொன்று பிடிக்கும். நான் எல்லாவற்றையும் வாசிப்பேன். ஆனால் இந்த நாய்தான் பாடாய் படுத்துகிறது :-)))))

    பதிலளிநீக்கு
  17. பகுத்தறிவு!
    உங்கள் கோபம் நியாயமானதே.வருகைக்கும், பகிர்வுக்கும் நன்றி.


    மித்ரா!
    இப்படித்தான் உங்களை அழைக்கத் தோன்றுகிறது.
    //இது உங்களுக்கான பர்ணசாலைக்காலம் ராகவன் .கவிதைகளைக் காட்டிலும் உரைநடையில் சொல் தன்னை எழுதிச் செல்கிற லாவகமும் சரளமும் வாய்த்திருப்பதாய் உணர்கிறேன் // உண்மை.


    மஹி!
    வருகைக்கும், பகிர்வுக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  18. வேணு!
    ராகவனின் எழுத்துக்களை தாங்கள் அறிந்து கொண்ட விதமும், அதைப் பகிர்ந்து கொண்ட விதமும் நெகிழ வைக்கிறது. நான் அப்படியென்ன செய்துவிட்டேன், ஒரு கோடி நன்றி சொல்வதற்கு, தோழா!

    கனாக்காதலன்!
    வருகைக்கும், பகிர்வுக்கும் நன்றி.


    வழிப்போக்கன் யோகேஷ்!
    வருகைக்கும் பகிர்வுக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  19. ராகவன்!
    எழுதுங்கள் எங்கள் ராகவன். மித்ரா சொன்னதைக் கேட்டீர்களா? இது உங்கள் பர்ணசாலைக் காலம்.

    வெண்மணீச் செல்வன்!
    உங்கள் வலைப்பக்கத்தில் ஏப்ரல் 2010க்குப் பிறகு எதுவும் எழுதப்படவில்லை. எழுதுங்கள் என் இளம் தோழனே!

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!