புதிய பதிவர்கள் அறிமுகம் - 2

கொஞ்சம் காலதாமதமாகத்தான் இந்த அறிமுகம் செய்ய முடிந்திருக்கிறது.  என் வருத்தங்களை முதலில் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் பதிவர்களின் பல இடுகைகளைப் படித்த போது, சந்தோஷமாகவே இருந்தது. பல்வித சிந்தனைகள், பல்வித வடிவங்கள், பல்விதப் பார்வைகள். நீங்களும் படித்துக் கருத்துச் சொல்லுங்களேன்.

6.முத்துசாமி பழனியப்பன்

உணர்தலும் உணர்தல் நிமித்தமும் என்பது இஅவரது வலைப்பக்கம். ”கவிதையில் நன்றாக இயங்கி வருகிறார். அவர் எழுதும் கவிதைகள் பரவலாக இணைய இதழ்களிலும், சிற்றிதழ்களிலும் பிரசுரம் காண்கின்றன.” என நண்பர் கிருஷ்ணபிரபு இவரை அறிமுகப்படுத்தினார். எழுதிய இடுகைகள் அனைத்துமே கவிதைகள்தாம். உயிரோசை, உன்னதம், கீற்று, வார்ப்பு, யுகமாயினி, யூத்ஃபுல் விகடன் என சிறுபத்திரிகைகள், மின்னிதழ்களில் இவரது கவிதைகள் தொடர்ந்து வெளிவந்து கொண்டு இருப்பதைக் காண முடிகிறது. இவரது வலைப்பக்கம் கவிதானுபவம் கொண்டதாய், மிக அமைதியாய் பேசிக்கொண்டு இருக்கிறது.

7.வெங்கி

நமது உலகம்’ என்னும் வலைப்பக்கத்தின் சொந்தக்காரர். இதுவரை 40 பதிவுகள் எழுதியிருக்கிறார். சமூகப் பார்வையும், அக்கறையும் கொண்ட பதிவுகளாக இருக்கின்றன. அர்த்தம் நிறைந்த கவிதைகளில் வார்த்தைச் சிக்கனம் தேவை என்று படுகிறது. அங்காடித் தெரு படத்தின் விமர்சனத்தையும் கவிதையாகவே எழுதிட, எழுத்தாளர் தமிழ்ச்செல்வன் பாராட்டியிருயிருக்கிறார்!  பத்திகள் சிறப்பாயிருக்கின்றன. பின்னூட்டங்களில் பலரும் குறிப்பிட்டு இருப்பது போல எழுத்துக்கள் நாளுக்கு நாள் மெருகேறிக்கொண்டு இருக்கின்றன.

8.ரியாஸ்

இவரது வலைப்பக்கம் நான் வாழும் உலகம். இதுவரை இருபது பதிவுகள் போல எழுதியுள்ளார். மிகுந்த ஆர்வத்தோடு கவிதைகள், உணவு வகைகள், சினிமா என பல விஷயங்களைத் தொட்டுச் செல்கிறார். தேர்ந்த வாசிப்பினால் இவரது எழுத்துக்கள் சிறப்புறும் என நினைக்கிறேன்.

9.இரா.எட்வின்

இரா.எட்வின் என்னும் பெயரிலேயே வலைப்பக்கமும் வைத்திருக்கிறார். இவரும் இருபது பதிவுகள் எழுதியுள்ளார். சமயபுரம் மேனிலைப்பள்ளியில் உதவித் தலைமை ஆசிரியராக இருக்கிறார். சாளரம் வெளியீட்டில், அந்தக் கேள்விக்கு வயது 98 என்னும் கட்டுரைத் தொகுப்பு வெளியிட்டு இருக்கிறார். அனுபவக் குறிப்புகளிலிருந்து எழுதப்படும் இவரது இடுகைகள் சுவாரசியமாகவும், நாம் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் கொண்டதாகவும் இருக்கின்றன. கல்கி பத்திரிகையில் வெளிவந்த எழுத்துக்களையும் இங்கே பதிவு செய்திருக்கிறார். நாடகக் கலைஞர் வேலு சரவணனைப் பற்றி எழுதிய ‘பள்ளியெனும் பழக்காடு’ இடுகை மிக முக்கியமானது,

10.ஜெபா

நிழலின் அருகில் நான் என்னும் வலைப்பக்கம் வைத்திருக்கிறார். 2008ல் எழுத வந்தவர், பிறகு ஒரு வருடத்திற்கும் மேலாக எழுதாமல், மிகச் சமீபமாக இரண்டு மூன்று இடுகைகளோடு மீண்டும் எழுத வந்திருக்கிறார். தான் அறிந்த விஷயங்களை மிகச் சுருக்கமாக பதிவு செய்கிறார். தேடும் ஆர்வம் இருப்பது தெரிகிறது.

11.Thouseef ahmed

தனக்காக பிறரைக் கஷ்டப்படுத்த விரும்பாத சாதாரண மனிதன் என, அறிமுகப்படுத்திக்கொள்ளும் இவரது வலைப்பக்கம் ரோமியோவின் பக்கம். இதுவரை ஆறு பதிவுகளே எழுதியுள்ளார். செய்திகளைச் சொல்வதாக ஆரம்பித்த இவர், ராவணன் படத்தின் பாடல்கள் குறித்தும் எழுதியுள்ளார். பதிவர் லோஷன் குறித்து எழுதிய இடுகை சிறப்பு.

12.ஸ்ரீவி சிவா

”சொல்றதுக்கு என்ன இருக்கு? சில வருடங்களாய் சென்னையில பொட்டி தட்டும் ஒரு சாதாரணன். மனசுல பட்டதை எழுதறேன்.” என் தன்னைப் பற்றிச் சொல்லும் ஸ்ரீவி சிவாவின் வலைப்பக்கம் ஸ்ரீவி தென்றல். கவிதை, சினிமா, பயணங்கள் என விரியும் இவரது எழுத்துக்கள் மிக இயல்பாய் ஒட்டிக்கொள்கின்றன. வாசிப்பின் துவக்க நிலையில் உள்ள இவரிடம் காதல், தனிமை தாண்டியும்  இந்த மனிதர் சொல்வதற்கு நிறைய வைத்திருக்கிறார் என்பது தெரிகிறது. வாசிப்பதற்கு சுகமாய் இருக்கிறது இவரது நடை.

13.Women's Special

”இந்த ப்ளாக்கில் நான் படித்த புத்தகங்களில் உள்ள குறிப்புகள், செய்முறைகள், சமையல், மற்றும் பலவற்றை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்” என தன்னை அறிமுகப்படுத்திக்கொள்ளும் இவரது வலைப்பக்கம் Welcome to Ladies Corner!  சின்னச் சின்னதாய் டிப்ஸ்கள் இங்கே காத்திருக்கின்றன.

14.ஹரிபாண்டி

இவரது வலைப்பக்கத்தின் பெயரும் HARIPANDI தான்! வாசிப்பு இல்லாதவன் என தன்னையும், கிறுக்கலகள் என தன் பதிவுகளையும் சொல்லிக்கொள்ளும் இவரது ‘அப்பா’வைப் பற்றிய பதிவுகள் நெகிழ்வானவை. சுற்றுப்புறச் சூழல், அரசியல், விளம்பரம் என பல பகுதிகளிலும் தனது பார்வைகளைச் செலுத்துவதைப் பார்க்க முடிகிறது. சின்னச் சின்னதாய் பல தகவல்களையும் பரிமாறிக் கொள்கிறார்.

15.வெறும்பய

உண்மையான பெயர் சொல்லவில்லை. வெறும்பய என்னும் பெயரில்தான் இவரது வலைப்பக்கம் இருக்கிறது. தகவல் களஞ்சியமாய் சில பதிவுகள் இருக்கின்றன. இணையம் குறித்த சில பதிவுகள். கவிதையும் எழுதிப் பார்க்கிறார். தெரிந்த விஷயங்களை பத்திகள் போல எழுதிப் பார்க்கலாம் இவர். கூடவே வாசிப்பும் தேவை எனப் படுகிறது.

பதிவர்களுக்கு வாழ்த்துக்களைச் சொல்லி வரவேற்போம். ஆதரவளிப்போம்.

(புதிய பதிவர்கள், தங்கள் வலைப்பக்க முகவரி, தங்களைப் பற்றிய சிறு குறிப்புகளை jothi.mraj@gmail.com என்னும் மின்னஞ்சலுக்கு அனுப்பினால் தீராத பக்கங்களில் அறிமுகப்படுத்த முடியும்.)

கருத்துகள்

17 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
  1. நன்றி .

    எனது வலைதளத்தை இங்கே அறிமுகம் செய்ததற்கு.

    பதிலளிநீக்கு
  2. அனைவரும் இதுவரை நான் அறிந்திராத பதிவர்கள்... ஒவ்வொன்றாய் பார்க்கிறேன்... நன்றி...

    பதிலளிநீக்கு
  3. வாழ்த்துக்கள் தொடரட்டும் உங்கள் சேவை...

    பதிலளிநீக்கு
  4. என் பதிவைப் பற்றிய உங்கள் அறிமுகத்திற்கு மிக்க நன்றி மாதவராஜ் அவர்களே .

    பதிலளிநீக்கு
  5. மிக்க நன்றி தோழர் மாதவராஜ் அவர்களே ! நமது உலகம் என்ற எனது வலைபக்கத்தை அறிமுகம் செய்ததற்கு !

    வெங்கட்

    பதிலளிநீக்கு
  6. நன்றி தலைவா!!!என் வலைப் பதிவை அறிமுகம் செய்ததற்கு...

    தெளஷீப் அஹமட்

    பதிலளிநீக்கு
  7. புய‌லுக்குப்பின் அமைதியாய் வ‌ந்திருக்கிற‌து
    இந்த‌ இர‌ண்டாம் க‌ட்ட‌ அறிமுக‌ ப‌திவு.
    வ‌ர‌வேற்று வாசித்து ம‌கிழ்வோம்.

    பதிலளிநீக்கு
  8. என் வலைப்பூவை அறிமுகம் செய்ததற்கும், உங்கள் அன்பிற்கும் மிக்க நன்றி மாதவராஜ்.
    நன்றாய் எழுத வேண்டுமென்ற பொறுப்பு கூடியிருக்கிறது.

    பதிலளிநீக்கு
  9. // க.பாலாசி said...
    அனைவரும் இதுவரை நான் அறிந்திராத பதிவர்கள்... ஒவ்வொன்றாய் பார்க்கிறேன்... நன்றி...//

    எனக்கும்தான்.. நானும்தான்.

    ரொம்ப நன்றி மாது!

    பதிலளிநீக்கு
  10. அறிமுகங்களுக்கு நன்றி சார்.

    பதிலளிநீக்கு
  11. அறிமுகத்திற்கு மிக்க நன்றி மாதவராஜ். "மிக அமைதியாய் பேசிக் கொண்டிருக்கிறேன்" என்பது முற்றிலும் உண்மை.

    பதிலளிநீக்கு
  12. என்னையும் கொஞ்சம் அறிமுகம் செய்யுங்களேன். அதற்காகவாவது நல்ல சிந்தனை மிகு கருத்துள்ள கவிதைகளை தருகிறேன்!

    பதிலளிநீக்கு
  13. நண்பர் முத்துவை அறிமுகம் செய்ததற்கு நன்றி மாதவராஜ்... நீங்கள் பரிந்துரைத்த மற்றவர்களையும் வாசிக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  14. see my blog...i wont write often

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!