டாம் அன்ட் ஜெர்ரி

tom and jerry

வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தான் சிறுவன்.

கதவடியின் சின்ன இடைவெளிக்குள் உடலைக் குறுக்கி எலி நுழைந்து போனது. துரத்தி வந்த பூனை, வேகத்தை மட்டுப்படுத்த முடியாமல் கதவில் முட்டி அங்கே வீழ்ந்தது. நீள் மேசை சுற்றி உட்கார்ந்து சாப்பிட்டுக் கொண்டு இருந்தவர்கள் மத்தியில் தாவிய எலி, சரியாக ஒருவன் கையிலிருந்த ஸ்பூனில் மோதியது. பதறியவன் அவசரமாய் எழுந்திரிக்க, ஐஸ்கிரீம் சிதறி ஒருத்தியின் முகம் பூராவும் வழிந்தது. தெறித்த ஸ்பூனோ, ஜன்னல் வழியே வந்த பூனையின் தலையை சரியாக தாக்கியது. ஆத்திரத்தில் பூனை, ரப்பர் போல வளைந்து விருட்டென்று பாய, எலியோ சுருட்டி வைக்கப்பட்டு இருந்த ஒருத்தியின் கொண்டைக்குள் தாவிச்சென்று  ஒளிந்து கொண்டது. சாப்பாட்டு மேஜையில் விழுந்த பூனை கண்டு எல்லோரும் ஓட, களேபரமானது. எலிக்கொண்டை பார்த்து ஊன் தெரிய உர்ரென்று முறைத்த பூனை திரும்பவும் துரத்த,  தன்னைத்தான் பூனை துரத்துவதாய் அந்தப் பெண் வீல் வீலென்று கத்திக்கொண்டே ஓடி, படிகளெல்லாம் இறங்கி ஓடி, வீடு விட்டு வெளியே ஓடிக்கொண்டு இருந்தாள். கொண்டையில் இருந்தபடி ஹாஹாவென சிரித்தபடியே பூனைக்கு எரிச்சலூட்டியது எலி. மரத்தடியில் ஊஞ்சல் போட்டு தூங்கிக்கொண்டு இருந்த ஒரு குரங்கின் மீது தடுக்கி விழுந்தாள் அந்தப் பெண். விழித்த குரங்கு ‘ஐ லவ் யூ’ என கைகளை விரித்து இன்பமயமாய்ச் சொல்ல, அவள் மயங்கி விழுந்தாள். கொண்டையிலிருந்து எலி தலையெட்டிப் பார்த்தது. அதனைப் பிடித்துக் கொண்டு, “இங்கே நீ என்ன செய்கிறாய் பொடியா” என தகரக் குரலில் குரங்கு கேட்டது. துரத்தி வந்த பூனையோ, எலியைப்  பிடிக்கிறேன் என்று குரங்கின் வாலை மிதித்துவிட்டது. “மடையா” என குரங்கு துரத்தியது பூனையை. அதன் கைப்பிடிக்குள் எலி இருந்தது. குதி குதித்து பூனை ஓடியது. மரங்கள், செடிகள் எல்லாம் வண்ண வண்ணமாய் பின்னுக்கு நகர்ந்தன. ஒரே ஒட்டம்தான். கடைசியில் மலையுச்சியில் போய் நின்று பூனை விழித்தது. குரங்கும் அதனருகே வேகமாய் வந்தது. பின்னால் அருவி. “செத்தேன்” என பூனை குதித்தது. குரங்கும் அப்படியே நிலைதடுமாறி குதிக்க நீரின் வழியே கிழே பாய்ந்தனர். “ஐயோ”வென குரங்கு கைகளை விரிக்க, எலி நழுவியது. ஒருவர் பின் ஒருவராய் தண்ணீரில் விழுந்தனர். தண்ணீரில் இருந்து முதலில் தலையெட்டிப் பார்த்த எலி, அருகில் சென்ற மரக்கிளையின் மீது தாவி ஏறிக்கொண்டது. குரங்கோ ‘தப்பித்தோம், பிழைத்தோம்’ என ஒரு சின்னப் பாறையின் மீது உட்கார்ந்து கொண்டது. எலி மரக்கிளையோடு சென்று கரை ஒதுங்கியது. நிம்மதியாய் மூச்சுவிட்டது. நனைந்து போயிருந்த அதன் மேலிருந்து தண்ணீர் வழிந்தது.

இப்போது சிறுவனும் நனைந்து போயிருந்தான். அவன் முடியிலிருந்தும், மூக்கின் நுனியிலிருந்தும் நீர்த்துளிகள் சொட்டிக் கொண்டு இருந்தன. “டாம் எப்படியும் வந்துவிடும்” என அவன் வாய் முணுமுணுத்தது. அவ்வாறே நடந்தது. எங்கேயோ ஒரு இடத்தில் நீரின் மேல் சட்டென்று தலைதூக்கிய பூனை “எலியே, நீ எங்கு சென்றாலும் விடமாட்டேன்” என கறுவியது.

கருத்துகள்

9 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
  1. ரொம்ப சந்தோஷம் பிரபு!

    இந்தக் கணம் வரை வாசித்த 158 பேரில் நீங்கள் ஒருவராவது ரசித்து கருத்துச் சொன்னீர்களே! (சிரித்தீர்களே...!)

    பதிலளிநீக்கு
  2. :-))

    /அவன் முடியிலிருந்தும், மூக்கின் நுனியிலிருந்தும் நீர்த்துளிகள் சொட்டிக் கொண்டு இருந்தன./

    மிகவும் ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
  3. மாதவ் அண்ணா..
    கலக்கலான எழுத்து, மிக ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
  4. மாது,இதில் ஏதாவது..

    நடத்துங்க..

    :-))

    பதிலளிநீக்கு
  5. சரவணக்குமார்!
    மிக்க நன்றி.

    பா.ரா!
    எந்த உள்குத்துமில்ல மக்கா. என் மகனால் எனக்குள் குத்திக்கொண்டதை வெளியே எடுத்துப் பார்த்திருக்கிறேன்....!

    பதிலளிநீக்கு
  6. என்றென்றைக்கும் எனக்குப் பிடித்த கார்டூன் ‘டாம் அண்ட் ஜெர்ரி’ தான். எத்தனை அழுத்தம் இருந்தாலும் வெகு விரைவில் நம்மை அமைதிப் படுத்த இதனால் முடியும். கடைசி வரை ஜெர்ரி டாமால் கொல்லப்படவே மாட்டாது. ஜெர்ரி இல்லாத வாழ்க்கை டாமிற்கும், டாம் இல்லாத வாழ்க்கை ஜெர்ரிக்கும் இவை இரண்டும் இல்லாத கார்டூன் எனக்கும் ரொம்ப போர்தானே? அதை உங்கள் மொழியிலேயே எவ்வளவு விரைவாக அதே வேகத்தோடு எழுத முடிந்திருக்கிறது? ஆச்சர்யம். வாழ்த்துக்கள் மாதவ். நாகநாதன், திருச்சி.

    பதிலளிநீக்கு
  7. தோழன்!

    மிகுந்த சந்தோஷமாக இருக்கிறது. எதற்கு, எப்படி இந்தப்பதிவை எழுதினேனோ அதை ஏறத்தாழச் சொல்லி விட்டீர்கள். ரொம்ப சந்தோஷம்.

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!