புதுமைப்பித்தன் எழுதிய தீபாவளிக் கதை

 

தீபாவளியைப் பற்றி தமிழ் இலக்கியத்தில் நம் எழுத்தாளர்கள் யாராவது எழுதியிருக்கிறார்களா என்று யோசிக்கவும், அடுத்தகணமே நினைவில் வந்தது இந்தக் கதைதான். பாட்டியின் தீபாவளி. பாட்டிகள் எத்தனையோ கதைகள் சொல்லி  இருக்கிறார்கள். புதுமைப்பித்தன் இங்கு ஒரு பாட்டியைப் பற்றி கதை சொல்கிறார்.

இவர் சொல்லும் கதையில் மகனும், மருமகளும், பேத்தியும் காலராவில் இறந்து போகிறார்கள். பாட்டி பேத்திக்குச் சொல்லும் கதையில் நரகாசுரன் இறந்து போகிறான். அந்த அசுரன் ரொம்ப படுத்துவான் என்றதும், பேத்தி “என்னைப் போலவா?” என்கிறாள். இந்தக் கதையில் மிக முக்கியமான இடம் இது. சின்னதாய் ஏற்றும் தீப ஓளியில் வீட்டில் இருக்கும் தட்டுமுட்டுச் சாமான்களை பேயின் சாயல் கொண்டதாய் காட்டுகின்றன என்று கதைக்காரன் சொல்வது சாதாரணமான விவரணை இல்லை. நினைவுகள் பிசாசாய் அவளைப் படுத்துகின்றன, அதாவது நரகாசுரனைப் போல. யானை வெடியில் நரகாசுரன் மட்டும் இறந்து போகவில்லை....  இப்படி கதை போய்க்கொண்டே இருக்கிறது.

தமிழ் இலக்கியப் பரப்பில் புதுமைப்பித்தனைப் போல கடவுள்களை விமர்சனம் செய்தவர் யாரேனும் உண்டா என்பது ஒரு முக்கிய கேள்வியாக எப்போதும் இருக்கிறது. அவரது பல கதைகளைச் சொல்ல முடியும். இந்தக் கதையும் அப்படி ஒன்று. இறந்து போகும் மனிதர்களுக்கு எல்லாம் இங்கு கடவுள்கள் காரணங்கள் வைத்தா இருக்கிறார்கள்?

புதுமைப்பித்தனுக்கே உரிய நடை இந்த சின்னஞ்சிறு கதையை அடர்த்தியாக்குகிறது. புதிர்களையும், விமர்சனங்களையும் உள்ளடக்கியதாக இருக்கிறது. இன்று மொழி, உத்தி என பேசிக்கொண்டு இருப்பவர்களுக்கு அவரது இந்தக் கதையும் ஒரு சவால்தான். 1934ல், அதாவது 75 வருடங்களுக்கு முன்பே, இங்கே ஒரு எழுத்தாளன் இப்படி எல்லாம் பிரமிக்க வைத்திருக்கிறார். அவரைத் தாண்டிச் செல்வது அவ்வளவு சுலபம் அல்ல!

*

பாட்டியின் தீபாவளி

'குத்து விளக்கேற்றி கோலமிட்டு பாரேனோ.'

சங்கரிப் பாட்டியின் வீடு வெறிச்சோடிக் கிடந்தது. பாட்டியின் வாழ்க்கை திடீரென்று இந்திரப் பதவியை இழந்த நஹுஷகன் நிலைமை மாதிரி. அவள் வாழ்க்கை சுகமான கவலையற்ற முடிவை எதிர்நோக்கித் தன் பிள்ளை, மாட்டுப்பெண், குழந்தை மீனு இவர்கள் இடையில் கழிந்து வந்தது. திடீரென்று சென்ற ஐப்பசியில், அந்தக் கண்ணற்ற விதி எல்லோரையும் ஒரேயடியாகக் கொண்டு போய்விட்டது. காலராவிற்குத் தராதரம் தெரிகிறதா? அந்தக் குழந்தை, குழந்தை மீனு, அவள் என்ன பாபம் செய்தாள். கிழக்கட்டையைத் தவிக்கவிட்டுத் திடீரென்று போய்விட்டாளே.

அதன் பிறகு...

அதன் பிறகென்ன? கிழவிக்கு நாட்கள் சென்றது தெரியாது. யோகிகள் காலம் கடந்துவிடுகிறார்கள். காலத்தின் மாறுபாடுகளை மீறி மோன நிலையில் இருந்துவிடுகிறார்களாம். அது எனக்குத் தெரியாது. சங்கரிப் பாட்டிக்கு நாட்கள் கழிந்தது தெரியாது. நடைப்பிணம்... நடையற்ற பிணமாக இருந்தாலும் தேவலை.

அன்று விடியற்காலம் தீபாவளி ஆரம்பிக்கிறது. சாயங்காலம் முதல் கிழவிக்கு துக்கம் நெஞ்சையடைத்தது. கிழக்கட்டைக்குத் தீபாவளி வேறு வேண்டியாக்கும். மடிசஞ்சி மூட்டையைத் தலைக்கு வைத்துப் படுத்துக் கொண்டாள். இரவு பூராவாகவும் துக்கம்... தூக்கமாவது மண்ணாவது!

விளக்கையாவது ஏற்றி வைக்கலாமே. கிழவி குடுகுடுவென்று நடுங்கியவண்ணம் எழுந்திருக்கிறாள். என்ன நேரம் என்று தெரியாது. வெளி எல்லாம் இருள், உள் எல்லாம் இருள். உள்ளத்திலும் இருள். எங்கோ தூரத்திலே பேச்சுக் குரல்... அர்த்தமற்ற மனிதக் குரல் அவள் காதைக் குத்துகிறது.

நெருப்புக் குச்சியைக் கிழித்து குத்துவிளக்கை ஏற்றுகிறாள். குச்சிதான் சீக்கிரம் பிடிக்கிறதா? நனைந்த தீப்பெட்டி. அடுப்பண்டை போகிறாள். குவிந்த சாம்பலில் மங்கி மடியும் கங்கு. அதைக் கரண்டியில் கொண்டுவந்து அதன் உதவியால் நெருப்புக் குச்சியைப் பற்ற வைத்து விளக்கை ஏற்றுகிறாள். விளக்கின் மங்கிய தீப ஒளி, குச்சிலில் இருக்கும் தட்டுமுட்டுச் சாமான்களைப் பேய் சாயையாகக் காண்பிக்கின்றன. அசைந்தாடும் தீபவொளி பொருள்களை அசைக்கின்றன. மூலையிலும் மோட்டிலும் பம்முகின்ற இருளையும் அசைந்தாடச் செய்கின்றன.

பாட்டிக் கிழவிக்கு மீனுவின் நினைவு உள்ளத்தைக் கவ்வியது நெஞ்சையடைத்தது. போன தீபாவளிக்கு முந்திய தீபாவளியில் அவள் கைக்குழந்தையாக, தவழும் குழந்தையாக செல்லத்தின் மடியில் சிரித்துக்கொண்டிருக்கும்போது தைத்த சட்டை, பாட்டியின் மடிசஞ்சி மூட்டையிலே, பரிசுத்தமான விபூதிச் சம்புடத்துடனும், ருத்திராட்சத்துடனும் இருந்தது. அதை மெதுவாக எடுத்து (மங்கிய கண்களின் கண்ணீர் அதை நனைக்கிறது) மீனு என்று குழறிக்கொண்டு, குத்துவிளக்கின் பாதத்தில் சமர்ப்பித்து வணங்குகிறாள். கிழவியின் பொக்கை வாயில் ஒரு பரிதாபமான சிரிப்பு. பட்டுச் சட்டையில் இரண்டு துளிகள்.

பாட்டி குத்துவிளக்கின் பாதத்தில், பட்டுச் சட்டையில் முகம் வைத்து, வணங்குகிறாள். உள்ளம் 'மீனு, மீனு' என்று ஒலி செய்கிறது.

ஏன் அப்படியே சிலையாக, குத்துவிளக்காக இருந்துவிட்டாள். உயிர்தான்...
"பாட்டி!"
குழந்தைக் குரல்... குழந்தை மீனுவின்...
கிழவி திரும்புகிறாள்.
"வாடியம்மா! கோந்தே... வாடியம்மா!"
ஆவலுடன் கையை நீட்டுகிறாள்.
"மாத்தேன் போ!" குழந்தை சிரிக்கிறது. ஆனால் கைகளைப் போட்டுத் தாவுகிறது. குழந்தை அவள் வற்றிய நெஞ்சில் தாவுகிறது. அப்பா! பால் வார்த்த மாதிரி... என்ன சுகம்!

"பாட்டி! பாட்டி!" என்று நெஞ்சில் குழைகிறது. நெஞ்சிடையே நெளிந்து, வளைந்து குமைகிறது.
"பாட்டி, பாப்பா வெச்சு விளையாடலாமா?"
"வாடியம்மா? மரப்பாச்சி எடுத்துண்டு வரட்டா?"

குழந்தையுடன் ஒரு மூலைப் பக்கம் திரும்புகிறாள். குழந்தை எட்டி ஒரு பொம்மையை எடுக்கிறது. கையொடிந்த மரப்பாச்சி.

"பாட்டி! நீதான் அம்பி மாமாவாம். நான் தான் பொண்ணாம். வச்சு விளையாடலாமா!"

குழந்தைக்குச் சட்டைப்போட்டுக் குத்துவிளக்கின் முன்பு மரப்பாச்சியுடன் உட்கார வைத்தாகிவிட்டது. கிழவி சோபனப் பாட்டு தனது நாதமிழந்து நடுங்கும் குரலில் பாடுகிறாள்.

"பாட்டி, கதை சொல்லு பாட்டி... அன்னிக்குச் சொன்னையே, அந்தக் கதை சொல்லு பாட்டி... நன்னா... நாந்தான் இப்படி மடிலே உக்காந்துப்பேனாம்..." மறுபடியும் குழந்தை மடியில் ஏறி உட்கார்ந்து கொண்டது. ஆடி ஆடி அசைந்து கொண்டு கேட்கிறது.

"நரகாசுரன்னு ஒத்தனாம். அவன் பொல்லாதவனாம். அக்ரமம் செய்தானாம். எல்லாரையும் அடிச்சு, குத்தி, பாடுபடுத்தினானாம்..."

"நான் படுத்துவேன்பியே அது மாதிரியா?"

"அடி கண்ணே உம்மாதிரி யார் சமத்தாட்டம் படுத்துவா?" குழந்தையைத் தழுவி முத்தம் கொஞ்சுகிறாள். "அவன் பொல்லாதவன்... அவனை கிருஷ்ணன் வந்து அம்பாலே - வில்லாலே..."

"அம்புன்னா என்ன பாட்டீ!"
"அம்புன்னா..."
"பாட்டீ ஒரு பாட்டு சொல்லு பாட்டீ!"
கிழவி பாடுகிறாள்.

"பார்க்குமிடத்திலெல்லாம் நந்தலாலா - நின்றன்
ஆசை முகம் தோன்றுதடா நந்தலாலா"

"பாட்டீ நான் ஓடறேன் பிடிப்பையோ?"
"சமத்தாட்டம் ஓடு! பிடிக்கிறேன்."

குழந்தை குதித்துக்கொண்டு வாசல் பக்கம் ஓடுகிறது. வெளியில் இருக்கும் இருள் திரையை நோக்கி ஓடுகிறது. கிழவியும் தள்ளாடிக் கொண்டு பின் தொடர்கிறாள்.

குழந்தை வாசலை நெருங்கிவிட்டது.
வெளியிலே 'டபார்' என்று ஓர் யானை வெடிச் சப்தம்.
அவ்வளவுதான்.
உலகத்திற்கு தீபாவளி ஆரம்பித்தது.
பாட்டிக்கு...?

*

கருத்துகள்

16 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
  1. `நல்ல நாளும் அதுவுமா என்ன கத எழுதி இருகக’னு அம்மா குரலில் திட்டலாமானு நெனச்சேன். கதை நல்லா இருந்தது. தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  2. thozar! இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  3. //1934ல், அதாவது 75 வருடங்களுக்கு முன்பே, இங்கே ஒரு எழுத்தாளன் இப்படி எல்லாம் பிரமிக்க வைத்திருக்கிறார். அவரைத் தாண்டிச் செல்வது அவ்வளவு சுலபம் அல்ல!//

    உண்மை மாதவ் அண்ணா..

    இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  4. பட்டாசுகளைக் கொளுத்தவே வேண்டாம் அப்படியே போட்டால் போதும், வெய்யிலே வெடித்துவிடும் போல. ஹ்ம் ... இந்த தீபாவளி இப்படி. போன தீபாவளிக்கோ வெள்ளமாக அப்படி ஒரு மழை. தீபாவளியின் ஸ்வாரஸ்யம் குறைந்து வந்து இப்போது இல்லாமலே போய்விட்டது. அதுவும் பெங்களூரில் இருப்பதால், தீபாவளி அன்று நிலவும் கனத்த மௌனம் தாங்க முடியாததாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  5. நண்பர்கள்,,குடும்பத்தார் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்..

    பதிலளிநீக்கு
  6. ஈழத்தமிழனின் மனநிலையை தங்களது எழுத்து பிரதிபலிக்கிறது.

    21-ம் நூற்றண்டில் 'வரலாற்று வடு'வாக்கிய மானிடப் பேரலவம் கண்ட ஓர் இனம் தொடர்பாக உலகெங்கிலுமான மானிட நேசிப்பாளர்கள் தகுந்த மனோவிணைப்புடனேயே அவர்களுடன் வாழ்வதை அழுத்திப் பதிவிட்டுள்ளீர்கள்.
    * தமிழ்ச் சிறுகதை எழுத்தில் புதுமைப்பித்தனும், பாடல்களில் பட்டுக்கோட்டையும் தனித்துவமான இடம் பிடித்தவர்கள்.
    -முகிலன்
    தோரணம்

    பதிலளிநீக்கு
  7. அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்!!!

    பதிலளிநீக்கு
  8. கதை பகிர்ந்தமைக்கு நன்றி!
    /அந்த அசுரன் ரொம்ப படுத்துவான் என்றதும், பேத்தி “என்னைப் போலவா?” என்கிறாள்/

    !!!

    பதிலளிநீக்கு
  9. தெரியாத்தனமாம // அதுவும் பெங்களூரில் இருப்பதால், தீபாவளி அன்று நிலவும் கனத்த மௌனம் தாங்க முடியாததாக இருக்கிறது. // என்று எழுதிவிட்டேன் ... சாயங்காலம் எங்கள் தெருவில் ...
    சரவெடி இசைநெடி
    புகைமலர் உலர்பனி ... :)

    பதிலளிநீக்கு
  10. ரொம்ப நெகிழ்வான பகிர்வு மாதவன்.முக்கியமாய்,பதிவை தொடர்ந்த சகோதரி அம்பிகாவின் பின்னூட்டம்!வீட்டில் இருந்தது போல,அம்மா குரல் கேட்டது போல,கோடிச்சட்டை வாசனை போல,"பக்கிகளா,அங்கிட்டு போய் வெடிங்க"என சிரிக்கும் பெரியவர்களின் குரல் போல...

    எல்லாமுமாக இருந்தது,மாதவன்.அன்பும் நன்றியும்.

    இங்கு,மிக உயிர்ப்பு அம்பிகா உங்களின் குரல்!நன்றி,உங்களுக்கும்.

    பதிலளிநீக்கு
  11. அம்பிகா!
    நண்பர் ராஜாராம் சொன்னதை கவனிக்கவும்.

    ரவிக்குமார்!
    நன்றி.


    சரவணக்குமார்!
    மிக்க நன்றி.


    துபாய் ராஜா!
    நன்றி


    நந்தா!
    தீபாவளி முடிந்து விட்டதா. இப்போ எப்படி? கதையை பற்றி எதவது சொல்வீர்கள் என்று பார்த்தால்....?


    முகிலன்!
    புரிதலுக்கு நன்றி.



    ஹரிஹரன்!
    நன்றி தோழர்.



    மங்களூர் சிவா!
    நன்றி.


    சந்தனமுல்லை!
    நன்றி.



    பா.ராஜாராம்!
    உங்கள் பிரியத்தில் நெகிழ்ந்து போக வைக்கிறது.

    பதிலளிநீக்கு
  12. தயவு செய்து இதுபோல எழுத்தாளர்களின் கதைகளை டைப் செய்து பதிவிடவும்,இன்று இதை காப்பி செய்து கொண்டேன்.
    உங்களுக்கு டைபிங் நன்றாக வருகிறது

    பதிலளிநீக்கு
  13. அனானி நண்பரே!
    நானும் டைப் அடிக்கவில்லை. இணையத்திலே கிடைத்ததுதான். புதுமைப்பித்தனின் பல கதைகள் கிடைக்கின்றன.

    பதிலளிநீக்கு
  14. அமிர்தவர்ஷினி அம்மா!
    மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!